அவரோ அவளது கைகளை பற்றியபடி, “கொஞ்சம் யோசிச்சு சொல்லு.. ரெண்டு குடும்பத்தோட மானமே இப்போ உன் கிட்ட தான் இருக்குது” என்றார்.
தந்தை வெளித் தோற்றத்தில் திடமாக இருப்பது போல் தெரிந்தாலும் அவரது குரலே அவரது குன்றலையும் தவிப்பையும் காட்டிக் கொடுக்க, முடிவெடுக்க முடியாமல் திணறினாள். உருகி காதலில் கசிந்துருகி என்று இல்லை என்றாலும் அண்ணன் மீது நாட்டம் கொண்டுவிட்டு தம்பியை எப்படி கல்யாணம் செய்துக் கொள்வது? அதுவும் தனது நாட்டம் ஜெயதேவிற்கு தெரியும் என்ற நிலையில்! என்று தவித்தவளால் முடியாது என்றும் கூற முடியவில்லை சரி என்றும் கூற முடியவில்லை.
வலியை மனதினுள் மறைந்தவள் தவிப்பும் கலக்கமுமாக தந்தையை பார்க்க, கண்ணீர் அவளது கன்னங்களில் இறங்கியது.
விவரம் தெரிந்த வயதில் இருந்து அழுதே பார்த்திராத இளைய மகளை இந்த நிலையில் பார்க்க முடியாமல் பூமணியின் மனம் கனத்தது. மெல்ல பிடியை தளர்த்தி மகளின் கையை விடுவித்தவர் தொய்வுடன் இருக்கையில் அமர்ந்தார்.
கணவரை அந்த நிலையில் பார்க்க முடியாமல் சித்ரா, “அவ கல்யாணத்துக்கு சம்மதிப்பாங்க.. நீங்க ஆக வேண்டிய காரியத்தை பாருங்க” என்று திடமான குரலில் கூறினார்.
அப்பொழுதும் ஆத்மிகாவின் நிலையில் மாற்றம் இல்லை.
பூமணி, “வேணா சித்ரா.. பாப்பாவை கட்டாயப்படுத்தாத” என்றபடி கண்களை மூடிக் கொண்டார்.
நீண்ட வருடங்களுக்கு பிறகான அவரது பாப்பா என்ற விழிப்பும், இந்த நிலையில் மற்ற தந்தைகளை போல் அல்லாமல் தனக்காக பேசும் தந்தையின் அன்பில் உடைந்தவள் சட்டென்று தரையில் அமர்ந்து அவரது கால்களை கட்டிக் கொண்டு அழுதுவிட்டாள். பூமணி கண்களை மூடிய நிலையிலேயே மகளின் தலையை ஆதுரமாக வருடினார். அவரது நெஞ்சம் விம்மி தவிக்க, அவரால் பேச முடியவில்லை.
சித்ராவின் கண்கள் மீண்டும் உப்பு நீரை சுரக்க ஆரம்பித்தது. இவர்களின் நிலையை புரிந்து கொண்ட விசாலாட்சியால் இதற்கு மேல் பேச முடியாமல் கலங்கிய கண்களை கட்டுபடுத்தியபடி நின்றிருந்தார்.
சில நிமிடங்கள் தனது கற்றாழை கண்ணழகனை இழக்கப் போவதை நினைத்து அழுதவள், பின் கண்களை துடைத்துக் கொண்டு, “ஓகே ப்பா.. நான் அத்தானை கல்யாணம் செய்துக்கிறேன்” என்று திடமான குரலில் கூறினாள்.
சட்டென்று பூமணி கண்களை திறக்க, அவரது கண்களில் குளம் கட்டியது. ‘பாப்பா’ என்று அவர் பேச நினைக்க அவ்வார்த்தைக்கு அவரால் உருவம் கொடுக்க முடியவில்லை. தனக்காக பார்க்கும் மகளின் பாசத்தில் மனம் நெகிழ்ந்ததை விட, மகளை இந்த இக்காட்டன சூழ்நிலைக்கு தள்ளி விட்டதில் வலியும் வேதனையும் குற்ற உணர்ச்சியும் தான் அதிகமாக இருந்தது.
தந்தையின் நிலையை தெளிவாக புரிந்துக் கொண்ட ஆத்மிகா சட்டென்று சூழ்நிலையை தனது கையில் எடுத்தாள்.
ரணத்தை மனதினுள் புதைத்தவள் வரவழைத்த உற்சாக குரலில், “ஆத்மி கல்யாணம் சும்மா அதிரனும்! மசமசன்னு உட்காராம சுறுசுறுப்பா வேலையை பாருங்க” என்று மூவரையும் விரட்டினாள்.
விசாலாட்சியும் அவளுக்கு ஏற்றார் போல், “ஆமா.. கண்ணை துடைச்சிட்டு ரெண்டு பேரும் சிரித்த முகமா வேலையைப் பாருங்க” என்றார்.
ஆத்மிகா அன்னையின் கண்களை துடைத்தபடி, “சிட்டுக் குருவி நிஜமாவே குருவி மாதிரி செயல் படனும்.. என்ன!” என்றாள்.
சித்ரா சிறு மென்னகையுடன் மகளின் கன்னத்தை பற்ற, பூமணி மகளின் தலையை வருடினார்.
பூமணி தயக்கத்துடன், “அக்கா சம்பந்தி இதுக்கு ஒத்துக்கணுமே!” என்று கூறினார்.
“அந்த கவலை எதுக்கு உனக்கு? நான் பார்த்துக்கிறேன்” என்றவர், “ஆத்மி.. போ சீக்கிரம் குளிச்சு ரெடி ஆகு.. பியூட்டிஷியன் வர நேரமாச்சு பாரு” என்று கூறி அவளை குளிக்க அனுப்பிவிட்டு தம்பிக்கும் தம்பி மனைவிக்கும் வேறு வேலைகளை கூறிவிட்டு மீனாட்சியை பார்க்க சென்றார்.
என்ன தான் அடுத்தடுத்து வேலைகளும் சடங்குகளும் மூவரையும் விழுங்கிக் கொண்டாலும், சம்ருதிகா பற்றிய எண்ணம் ஒவ்வொரு விதத்தில் அவர்களின் நெஞ்சை அழுத்திக் கொண்டு தான் இருக்கிறது.
சரியாக ஜெயதேவ் திருமணதிற்கு சம்மதித்துவிட்டு சென்ற அடுத்த நிமிடம் விசாலாட்சி மீனாட்சி அறைக்கு சென்று விஷயத்தை கூறினார்.
முதலில் திகைத்து நின்ற மீனாட்சி, “ப்ளீஸ் என்னை மன்னிச்சிடு மீனா” என்றதில் சுயம் பெற்று,
“நீ ஏன் மன்னிப்பு கேட்கிற! நீ நல்லது நினைத்து தானே செய்த! விடு எல்லாம் விதி”
“கவலைப் படாத.. ஆத்மி தான் உனக்கு மருமகளா வரணும்னு ப்ராப்தம் இருக்குது.. ஆத்மி வந்தா உன் வீடு கண்டிப்பா கலகலனு இருக்கும்.. நான் வேணா சத்யா கிட்ட பேசட்டுமா?”
“இல்ல வேணா” என்று பதறியவர், “நானே.. நானே சொல்லிக்கிறேன்” என்றார்.
பின், “ஜெயா கிட்டயும் இப்போ எதுவும் சொல்ல வேணாம்” என்றும் கூறினார்.
“சரி நீ பார்த்துக்கோ” என்றுவிட்டு அவர் கிளம்பப் பார்க்க,
மீனாட்சி, “விசா ஒரு நிமிஷம்.. இந்த சகுனப்பார்வை சடங்கு வேணாமே! இப்படி மாறி இருக்கிற நிலையில் சங்கடம் தானே.. தேவை இல்லைனு நினைக்கிறேன்” என்றார்.
“அதுவும் சரி தான்.. நான் மணி கிட்ட சொல்லிடுறேன்” என்றுவிட்டு நிம்மதியுடன் வெளியேறினார்.
[சகுனப்பார்வை சடங்கு – முகூர்த்த புடவை மற்றும் பட்டு வெட்டி சட்டை அணிந்த பிறகு, நல்ல நேரத்தில் மணமக்கள் இருவரும் சில நிமிடங்கள் நேர் எதிரே அமர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்த பிறகே மணமேடைக்கு செல்வர். அந்த காலத்தில் இந்த சடங்கில் தான் மணமக்கள் தங்கள் துணையை பார்த்துக் கொள்வர்.]
அதன் பிறகு சடங்குகள் வேகமாக நடக்க, ஆத்மிகா ஒவ்வொரு நொடியையும் முள்ளின் மேல் இருப்பது போல் தான் கடந்தாள். நடுவில் சில முறை சம்ருதிகாவிற்கு அவள் அழைத்துப் பார்க்க, கைபேசியோ அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
முகூர்த்த புடவை அணிந்து மணமேடையில் அமர்ந்தவள் குனிந்த தலை நிமிராமல் தான் அமர்ந்து இருந்தாள். ஜெயதேவ் அய்யரிடம் இருந்து தாலியை வாங்கிய நிமிடம் தான் அவனைப் பார்த்தாள். பார்த்த நொடியில் மணமகன் தனது கற்றாழை கண்ணழகன் என்பதை கண்டு கொண்டவளால் தான் காண்பது கனவா நிஜமா என்று பிரித்தறிய முடியாத நிலையில் கண்சிமிட்டாமல் அவனைத் தான் பார்த்தது பார்த்தபடி இருந்தாள்.
நேருக்கு நேர் சந்தித்த நொடி இருவரின் விழிகளும் அதிர்வுடன் நோக்க, உதடுகளோ ‘ராங்கி பட்டாசு’ ‘கற்றாழை கண்ணழகா’ என்ற பெயர்களை உச்சரித்து இருந்தது.
“எவ்ளோ நாழி தான் கையிலே வச்சிண்டு இருப்படா அம்பி.. தாலியை கட்டு” என்ற அய்யரின் குரலில் இருவரும் சுயம் பெற்றனர்.
ஆத்மிகாவின் விழியோரம் ஆனந்த கண்ணீர் துளிர்க்க, ஜெயதேவோ கல்லென இறுகிய முகத்துடன் தான் தாலியை கட்டினான்.