மகிழ்ச்சியுடன் தன்னவனின் தாலியை வாங்கிக் கொண்ட ஆத்மிகா அடுத்த நொடியே அவனை யோசனையுடன் பார்க்க, அவனோ இவள் பக்கம் திரும்பவே இல்லை.
‘எப்படி இவன்?
அத்தானுக்கு என்னாச்சு?
அதுவும் மாப்பிள்ளை மாறியதைக் கூட சொல்லலை!
பொண்ணு மாறியதும் இவனுக்கு தெரியலை!
என்ன தான்டா நடக்குது?’ என்று குழம்பியபடி அவனை யோசனையுடன் பார்த்தாள்.
ஜெயதேவோ உச்சக்கட்ட கோபத்தில் இருந்தான்.
பூமணி எப்படியும் மணப்பெண் மாறியதை சொல்லாமல் இருந்திருக்க மாட்டார் என்ற அனுமானம் அவனுக்கு இருக்க, அன்னை மீது அவ்வளவு கோபம் வந்தது. சம்ருதிகாவை வைத்து தானே ‘பெண் பாவம் வேண்டாம்’ என்று கூறி அவனை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார். அவளே இல்லாத போது, இந்த திருமணம் அவசியமே இல்லையே! மணப்பெண் மாறியதை மறைத்து கல்யாணத்தை நடத்திவிட்டரே! எதுக்கு இந்த அவசர கல்யாணம்! அதுவும் படித்துக் கொண்டு இருக்கும் பெண்! என்ற கோபம் அன்னை மீது.
சம்ருதிகா மீதும் அதிக கோபம் கொண்டான். இப்படி கடைசி நேரத்தில் தன்னை வேண்டாம் என்று சென்று விட்டாளே! எவ்வளவு பெரிய அவமானம்! அவள் தனது மறுப்பை முதலிலேயே சொல்லி இருந்தால், இவ்வளவு தூரம் வந்து இருக்காதே என்ற ஆதங்கமும் கோபமும் அவனுக்கு. இவன் அவளுக்காக பார்த்து செயல்பட்டு இருக்க, அவளோ அவமானத்தை அல்லவா பரிசளித்து விட்டாள். அதுவும், இரண்டாவது முறையான நிராகரிப்பு! என்ன தான் கல்லூரி காலத்தில் அவன் அந்த பெண்ணை விரும்பவில்லை என்றாலும் நிராகரிப்பு நடந்தது தானே! அதன் விளைவாக அவன் அனுபவித்த அவமானங்கள் இன்னமும் ரணமாக இருக்கிறது தானே!
இவை அனைத்திற்கும் காரணகர்த்தாவாக இருக்கும் சத்யதேவ் மீதும் கடும் கோபம் கொண்டான். அவன் மட்டும் மண்டபத்தை விட்டு செல்லாமல் இருந்து இருந்தால், இந்த சூழ்நிலையே தனக்கு வந்து இருக்காதே என்ற கோபம்.
தன்னை காதலித்துவிட்டு தம்பியை கல்யாணம் செய்துக்கத் தயாரான ஆத்மிகா மீதும் கடும் கோபம் கொண்டான். இருந்த மனநிலையில் அவனும் அதைத் தானே செய்து இருக்கிறான் என்று அந்நொடி மறந்து போனான். அவனது வலி மறக்க வைத்து விட்டதோ! ‘பெண்களில் விதிவிலக்காய் நினைத்த இவளும் பொய்த்து போனாளே!’ என்ற வலி மற்றவற்றை விட பெரிதாகவே அவனை வதைக்கிறது.
வலி, அவமானம், கோபம் என்று மொத்தத்தில் அவனது அகமும் முகமும் பாறையென இறுக்கியது.
ஆனால் ஆத்மிகாவோ அவன் மீது கோபம் கொள்ளாமல், ‘இவனும் நம்மை மாதிரி அவசர மாப்பிள்ளையா மாறிட்டான் போல!’ என்று நேர்மறையாக தான் யோசித்தாள்.
‘ஆனாலும் ஒத்த முகச் சாயலை வச்சிட்டு என்னமா கள்ளாட்டம் ஆடுறீங்கடா!’ என்றும் ‘நம்ம ஃப்ளவர் பெல் கிட்ட இருக்க நேர்மை இவன் கிட்ட இல்லையே!’ என்றும் நினைத்தவள் அடுத்த நொடியே, ‘இல்லையே! இவனை நேர்மை இல்லாதவனா யோசிக்க முடியலையே! ஒருவேளை சென்னை எக்ஸ்ப்ரெஸ் வேலையா இருக்குமோ!’ என்று யோசித்தபடி மீனாட்சியை பார்க்க, அவரோ பெரும் கலவரத்துடன் ஜெயதேவைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தார்.
அதற்கு மேல் அவளை யோசிக்க விடாமல் அடுத்தடுத்து சடங்குகளை செய்ய அழைக்கவும், அதில் கவனத்தை திருப்பினாள்.
அவள் இயல்பாக செய்ய, அவன் தான் ஒன்ற முடியாமல் இறுகிய நிலையிலேயே இருந்தான்.
சில நிமிடங்களின் கிடைத்த இடைவேளையில் அவன் பக்கம் லேசாக சாய்ந்தவள் மற்றவர்களுக்கு கேட்காத மெல்லிய குரலில், “இதெல்லாம் லைஃப்ல ஒரு முறை தான்.. சிரிக்கலனாலும் கொஞ்சம் நார்மலாவது முகத்தை வை” என்றாள்.
அவன் அவளை தீயாய் முறைக்க, மீனாட்சி தான் பதறினார்.
ஆனால் அவளோ அவனது அக்னி பார்வையில் சிறிதும் அச்சம் கொள்ளாமல் சிறு நக்கலுடன், “ஏன் இதெல்லாம் திரும்ப செய்ற ஐடியா இருக்கா என்ன?” என்று புருவம் ஏற்றி கேட்டாள்.
அவன் இப்பொழுதும் உக்கிரமாக முறைக்க,
அவளோ அருகில் இருந்த விசாலாட்சியிடம், “அத்தை இந்த ஏசி பாயிண்ட்டை கொஞ்சம் கூட்டி வைக்கச் சொல்லுங்களேன்” என்றாள்.
அவள் கூறியதை நிஜம் என்று நினைத்து அவர் யாரையோ அழைத்தபடி செல்ல, இவன் பல்லை கடித்து கோபத்தை அடக்கியபடி பார்த்தான்.
அவள் அதற்கும், “என்ன தான் குட்டிக்கரணம் அடித்தாலும் இனி உன் லைஃப் இந்த ராங்கி பட்டாசு கூட தான்.. ஸோ சீக்கிரம் யு.ஐ.யு-வில் இருந்து கே.கே-க்கு மாறு” என்றாள்.
இம்முறை முறைத்தாலும் அவன் கண்கள் யோசனையில் சிறிது சுருங்கவும்,
“உர்ருனு இருக்கிற உராங்குட்டான் போஸில் இருந்து என்னோட செல்ல கற்றாழை கண்ணழகனா மாறுனு சொன்னேன்” என்று கூறி குறும்பு புன்னகையுடன் அவள் கண்சிமிட்ட,
அவனே ஆச்சரியம் கொள்ளும் வகையில் அவளது குறும்பு புன்னகை பனிக்கட்டியாய் அவனது கோபமெனும் தழலின் வெப்பத்தை சற்றே குறைக்கத் தான் செய்தது.
இருந்தாலும் முறைப்புடன், “நான் உராங்குட்டான்னா?” என்று வினவ,
அவளோ, “ச..ச.. உர்ருனு இருக்க உராங்குட்டான்” என்றாள்.
மகளின் மலர்ந்த முகத்தையும் மருமகனின் கோப முகத்தையும் கண்ட பூமணி, “என்ன மாப்பிள்ளை? எதுவும் வேணுமா?” என்றபடி அவர்கள் அருகே வந்தார்.
பூமணியை கண்டதும், சட்டென்று குற்ற உணர்ச்சி மேலோங்க பார்வையை சுழற்றினான்.
உறவினர்கள் சற்றே விலகி இருக்கவும் அவரிடம், “நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று கூறினான்.
பூமணி, “சொல்லுங்க மாப்பிள்ளை” என்ற போது, மீனாட்சி, “என்னப்பா?” என்று இடை புகுந்தார்.
அவன் அன்னையை கடுமையாக முறைக்க, அவர் பார்வையை தாழ்த்தினார்.
ஆத்மிகா மனதினுள், ‘ரைட்டு.. சென்னை எக்ஸ்ப்ரெஸ் தான் மறைச்சு இருக்காங்க’ என்று கூறிக் கொண்டாள்.
பூமணி, “ஆமா பெரிய மாப்பிள்ளை எங்கே?” என்று வினவ,
அவன் பதில் கூறும் முன், ஆத்மிகா வெகு இலகுவான குரலில், “இதோ இருக்கிறாரே!” என்று அவனை கைகாட்டியபடி கூற, மீனாட்சி பெரிதும் அதிர, பூமணி புரியாமல், “என்ன!” என்றார்.
அவளை முறைத்தவன் பூமணியைப் பார்த்து, “இதைப் பத்தி தான் பேசணும்னு சொன்னேன் மாமா” என்றான்.
தான் நினைப்பது சரியா என்ற சந்தேகத்தில், “எனக்கு புரியலை” என்றார்.
“நான் ஜெயதேவ்.. சம்ருதிகா போனதில் சத்யா அப்செட் ஆகி கல்யாணத்தை நிறுத்தச் சொல்லிட்டு மண்டபத்தை விட்டு வெளியே போயிட்டான்.. பொண்ணு ஆத்மிகா என்றதும் நான் சத்யதேவ் மாதிரி மாப்பிள்ளை கோலத்தில் வந்து கல்யாணம் செய்துக்கிட்டேன்.. ஏன்னா எனக்கு ஆத்மிகாவை பிடிக்கும்..” என்று பழியை மொத்தமாக தன் மீது போட்டுக் கொண்டவன், ஒரு நொடி ஆத்மிகாவை நோக்கிவிட்டு பூமணி பக்கம் திரும்பினான்.
‘இவன் லுக்கே சரி இல்லையே!’ என்று அவள் நினைத்தது சரியே என்பது போல்,
“ஆத்மிக்காவுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும்.. இன்னொரு முக்கியமான விஷயம் தாலி கட்டிய போது நான் ஜெயதேவ்னு, நான் சொல்லாமலேயே அவ கண்டு பிடிச்சி சந்தோஷமா தான் நான் கட்டிய தாலியை ஏத்துக்கிட்டா” என்று கூறினான்.
‘நச்சுனு நங்கூரத்தை இறக்கி இந்த மங்கூஸ் மண்டையன் நம்மளை கோர்த்து விட்டுட்டானே!’ என்று மனதினுள் நினைத்த ஆத்மிகா அவனை முறைத்தாள்.
மீனாட்சி பெரும் அதிர்ச்சியுடன் பேச்சற்று நிற்க,
முதலில் அவன் பேசியதை கிரகித்து கோபத்துடன் அவனிடம் பேசும் முன் ஆத்மிகாவின் விருப்பத்தை பற்றி கூறி அவரது கோபத்திற்கு தடை போட்டுவிட்டான்.
கைதேர்ந்த வியாபாரிக்கு எதை எப்படி பேசணும் என்று தெரியாதா என்ன! தம்பியின் திருமண வாழ்வை எண்ணியும், அன்னைக்கு அவப்பெயர் வந்து விடக் கூடாது என்று எண்ணியும் பழியை தன் மீது போட்டுக் கொண்டவன், பூமணியின் கோபத்தை மட்டுப்படுத்தவே ஆத்மிகாவின் விருப்பத்தைப் பற்றி கூறி இருந்தான்.
திருமணத்திற்கு முன் மகள் அழுததையும், இப்போது ஜெய்தேவிடம் சிரித்து பேசியதையும் யோசித்துப் பார்த்த பூமணிக்கு அவனது கூற்று உண்மை என தான் தோன்றியது. இருப்பினும் உறுதி செய்துக்கொள்ள மகளை ‘உண்மையா?’ என்பது போல் பார்த்தார்.
ஆத்மிகா, “காதல்னு இல்லைப்பா ஆனா இவர் மேல் சின்ன விருப்பம் இருப்பது உண்மை.. அது இவருக்கும் தெரியும்.. ஆனா இவருக்கு என்னை பிடிக்கும்னு இப்போ இவர் சொல்லித் தான் எனக்கு தெரியும்..
இவர் தாலியை கையில் வாங்கினப்ப தான் இவர் முகத்தையே பார்த்தேன்.. பார்த்ததும் அத்தான் இல்லைனு கண்டுபிடிச்சிட்டேன்.. இவர் சொன்ன மாதிரி நிம்மதியா உணர்ந்து ஹப்பியா தான் இவர் கட்டிய தாலியை ஏத்துக்கிட்டேன்” என்று கடகடவென்று கூறி முடித்தாள்.
மகளின் விருப்பம் என்ற வார்த்தையில் அவரது கோபம் தடைபட்டாலும் அவருக்கு கோபம் வரத் தான் செய்கிறது. ஆனால் காலையில் இருந்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை சந்திக்கும் அவரது மூளை எதிர்வினையற்று இருக்க, மனமோ ‘என்ன இருந்தாலும் இது ஏமாற்று வேலை தான்’ என்று கூறியது.
அவர் அதே மனநிலையில் அவனைப் பார்க்க, அவரது மனநிலையை புரிந்துக் கொண்டவன் அவரது கைகளை பற்றியபடி, “என்னை மன்னிச்சிடுங்க மாமா.. பெரிய தப்பு தான்.. ஏமாற்று வேலை தான்.. ஆனா எனக்கு வேற வழி தெரியலை.. பெரிய மனதுடன் என்னை மன்னிச்சிடுங்க ப்ளீஸ்” என்று குற்ற உணர்ச்சியுடன் கெஞ்சும் குரலில் கேட்டவன்,
“கல்யாணம் நின்றால் இரு குடும்பத்துக்கும் கஷ்டம் தானே என்று யோசித்தது ஒரு காரணம் என்றாலும் முக்கிய காரணம் என்னவோ, எங்கே ஆத்மிகாவை கல்யாணம் செய்துக்க முடியாம போயிடுமோனு என்ற தவிப்பு தான்..
ஆத்மிகா தான் பொண்ணுனு தெரிந்த நொடி என் நெஞ்சில் ஏற்பட்ட வலியை வார்த்தைகளில் சொல்ல முடியாது மாமா” என்றவனின் குரல் இப்பொழுதும் அந்த வலியை வெளிபடுத்தியது தான்.
பின், “ஒருவேளை சத்யா இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்டு இருந்தா, நிச்சயம் தடுத்து இருக்க மாட்டேன், ஆனா அதுக்கு அப்புறம் என் வாழ்க்கையில் கல்யாணம் என்ற ஒன்று நடக்க வாய்ப்பே இல்லை” என்ற போது அவனது குரலில் அவ்வளவு உறுதி இருந்தது.
அவன் இந்த திருமணம் நடந்ததிற்கான முக்கிய காரணம் என்று கூறியது மட்டுமே பொய், மற்றது அனைத்தும் உண்மையே.
அவனது மன்னிப்பில் ‘நடந்தது நடந்து போச்சு.. ஆக வேண்டியதை பார்ப்போம்’ என்ற மனநிலைக்கு பூமணி வந்துவிட்டாலும், நெஞ்சின் ஓரம் ஏமாற்றப்பட்டதின் கோபம் இருக்கத் தான் செய்கிறது.
அவன் தவறே செய்யாமல் பழியை மொத்தமாக தன் மீது போட்டுக் கொண்டதில் மீனாட்சியின் கண்கள் கலங்கியது. மனம் பெரும் குற்ற உணர்ச்சியில் தவித்தது.
கலக்கமும் தவிப்புமாம தன்னைப் பார்த்த அன்னையிடம் பூமணியிடம் பேசுமாறு செய்கை செய்தான்.
அப்பொழுது தான் அந்த கோணத்தில் யோசித்தவர் பூமணியிடம், “என்னையும் மன்னிச்சிடுங்க அண்ணா.. அந்த நேரத்தில் எனக்கு என்ன செய்யனே தெரியலை.. கல்யாணம் நடந்தா போதும்னு மட்டும் தான் யோசிக்கத் தோணுச்சு.. ரொம்ப சுயநலமா யோசிச்சுட்டேன்.. உங்க கூட பிறந்த தங்கையா நினைத்து என்னை மன்னிச்சிடுங்க” என்று உண்மையான வருத்ததுடன் பேசியவர் மன்னிப்பை யாசிப்பது போல் கலங்கிய கண்களுடன் கையெடுத்து கும்பிட்டார்.
அன்னையின் யாசிப்பு ஜெயதேவிற்கு வருத்தமாக இருந்தாலும் தவறு அவரிடம் என்ற போது அவனால் தடுக்க முடியவில்லை.
மீனாட்சி கையெடுத்து கும்பிடவும், “கையை இறக்குமா” என்று உரிமையான சிறு அதட்டலுடன் கூறிய பூமணி அவர் கையை இறக்கவும், “உண்மையை மறைத்தாலும் முடிவு நல்லதா தானே இருக்குது.. விடுங்க.. ஆக வேண்டியதை பார்ப்போம்” என்றார்.
ஜெயதேவ் அவரது கையை பற்றிக் கொண்டு, “ரொம்ப நன்றி மாமா.. உண்மையில் உங்களுக்கு பெரிய மனசு.. நீங்க ரொம்ப உயர்ந்துட்டீங்க” என்றான்.
பின், “வெளியே இருந்த நேம் போர்டை அப்பவே எடுக்க சொல்லிட்டேன்.. நான் ஜெயதேவ்னு வந்திருக்கவங்களுக்கு சொல்லணும்” என்றான்.
ஆனால் அது தேவையே இல்லை என்றது போல், பதற்றமும் கலக்கமுமாக இருந்த சித்ராவை அழைத்துக் கொண்டு பரபரப்புடன் அங்கே வந்த விசாலாட்சி, “என்ன தான் நடக்குது? ‘பொண்ணு தான் மாறுச்சுனு பார்த்தா மாப்பிள்ளையும் இல்ல மாறி இருக்குது’னு பேசிக்கிறாங்க” என்றபடி பூமணி, மீனாட்சி மற்றும் ஜெயதேவையும் மாற்றி மாற்றி பார்த்தார்.
வந்தவங்களை கவனித்துக் கொண்டு இருந்த வேலவனும் சரியாக விசாலாட்சி பேச ஆரம்பித்த போது தான் அங்கே வந்தார். அவரும் கண்ணில் அதே கேள்வியுடன் நோக்கினார்.
ஆம் இவர்கள் பேசியதை இரு உறவினர்கள் கேட்டதின் பலனாக இந்த விஷயம் காட்டுத் தீயை போல் வேகமாக பரவி இருந்தது.
மூச்சை இழுத்துவிட்ட பூமணி, “ஆமா.. பெரிய மாப்பிள்ளை தான் ஆத்மிகாவை கல்யாணம் செய்து இருக்கார்.. விளக்கமா வீட்டுக்கு போய் பேசிக்கலாம்.. எல்லாம் நன்மைக்கேனு எடுத்துகிட்டு ஆக வேண்டியதைப் பார்ப்போம்” என்று கூறினார்.
மேடையின் முனைக்கு போய் நின்ற ஜெயதேவ் கைகளை கூப்பி, “கல்யாணத்துக்கு வந்த உங்க அனைவருக்கும் நன்றி” என்று விட்டு கையை இறக்கி, “உங்கள் சந்தேகம் சரி தான்.. நான் ஜெயதேவ் தான்.. ஏன்? எதற்கு? என்னாச்சு? என்ற கேள்விகளுக்கு பதில் தேவை இல்லைனு நான் நினைக்கிறேன்.. ஏன்னா இது எங்க குடும்ப விஷயம்.. அது தேவை இல்லாமல் பொதுவில் அலசப்படுவதில் எனக்கு துளியும் விருப்பம் இல்லை.. எங்கள் வாழ்வு சிறக்க வேண்டும்னு வாழ்த்தி விருந்தை ஏற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.. நன்றி” என்று ஆழுமை நிறைந்த குரலில் கூறிவிட்டு பழைய இடத்தில் வந்து நின்றான்.
கூட்டத்தில் எழுந்த சலசலப்பை இவர்கள் கண்டு கொள்ளவில்லை என்றதோடு கவனிக்கும் நிலையிலும் இல்லை என்பது தான் சரி.
“நாம வீட்டுக்கு போறவரை மாமாவை விட்டு நகராதீங்க” என்றபடி வேலவனை அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்த ஜெயதேவ், விசாலாட்சி பக்கம் திரும்பி, “அத்தையும் அம்மாவும் உங்க பொறுப்பு” என்றான்.
“சொல்லிட்டல நான் பார்த்துக்கிறேன்” என்று விசாலாட்சி கூற, அதையே ஆமோதிப்பது போல் வேலவன் அவனது தோளை ஆதரவாக தட்டினார்.
‘இவ்வளவு நேரம் மன்னிப்பை கெஞ்சியவனா இவன்!’ என்ற பிரம்மிப்புடன் தான் பூமணி அவனது ஆளுமையை பார்த்துக் கொண்டு இருந்தார்.
நடந்தது நடப்பது எதுவும் புரியவில்லை என்றாலும் கணவரின் முகத்தில் இருந்து சித்ரா நிம்மதியாக தான் உணர்ந்தார். ஆனால் பெரிய மகளைப் பற்றிய கவலை அவரை பெரிதாக அரித்துக் கொண்டு தான் இருக்கிறது.
அவன் தாலி கட்டிய நொடியில் ஆத்மிகாவின் விருப்பம் காதலாக மாறி இருக்க, இந்த நொடி அத கூட தான் செய்தது.
எல்லாம் நல்ல படியாக முடிந்ததில் மீனாட்சிக்கு மகிழ்ச்சி தான் என்றாலும் பெரிய மகனை பற்றி அறிந்தவராக அவரது நெஞ்சம் பதறிக் கொண்டு தான் இருக்கிறது.
ஆம் இரு குடும்பத்தின் நலனை மட்டுமே கருதி செயல்பட்ட ஜெயதேவின் கோபம் அப்படியே தான் இருக்கிறது. இத்தனை கால அனுபவத்தில் கோபத்தை தனது கட்டுக்குள் வைத்து கொண்டு இருப்பவனிடம் தனிமையில் சத்யாவோ, சம்ருதிகாவோ, மீனாட்சியோ, ஆத்மிகாவோ சிக்கினால்!!!!!!!!!!