விசாலாட்சி மற்றும் வேலவனிடம் அவர்களை கவனித்துக் கொள்ள ஜெயதேவ் கூறி இருந்தாலும், மண்டபத்தை விட்டு செல்லும் வரை மூவரும் தன் அருகிலேயே இருக்குமாறு தான் பார்த்துக் கொண்டான்.
“என்னப்பா பெரிய பொண்ணு எங்க போனா?”
“என்ன சித்ரா இப்படி சின்ன பொண்ணுக்கு கல்யாணத்தை செய்துட்ட! பெரியவ அப்படி எங்க தான் போனா? ஏதும் லவ்வோ?”
“ஏன் மாப்பிள்ளையும் மாறி போச்சு? பெரியவளுக்கு சின்னவரை பேசிட்டு கடைசி நேரத்தில் சின்னவளுக்கு பெரியவரை முடிச்சு இருக்கியே மணி! என்ன விஷயம்?”
“ரெண்டு பக்கமும் பிச்சுகிட்டு போய்டுச்சுங்களே! ஏதும் குறையா இல்லை லவ் தானா?”
“இவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணி ஏதும் கசமுசா ஆகி விஷயம் வெளியே தெரிறதுகுள்ள இதுங்களுக்கு கல்யாணம் செய்துட்டியா?” போன்ற கேள்விகள் அனைத்திற்குமே ஜெயதேவ் தான் பதில் கூறினான்.
பூமணி மற்றும் சித்ராவை நோக்கி வீசப்பட்ட கேள்விகளுக்கு,
“தெரிந்து என்ன செய்யப் போறீங்க?” என்றும்,
“விஷயம் தெரிந்தா தான் சாப்பிட்டது ஜீரணம் ஆகுமா?”, என்றும்,
“ஏன் குறை இருந்தா, அதை நீங்க சரி செய்ய போறீங்களா?” என்றும் தீர்க்கமான பார்வையுடன் அழுத்தமான குரலில் கேட்க, கேள்வி கேட்டவர்கள் வாயை மூடிச் சென்று விட்டனர்.
“அக்கறையில் கேட்டது குத்தமா!” என்று ஒரு சிலர் முனங்கலாக கூறியபடி செல்ல,
அதற்கும், “உங்க அக்காரவடிசல் தேவையே இல்லைனு தான் சொல்றேன்” என்று கூறினான்.
மீனாட்சியை நோக்கி வீசப்பட்ட கேள்விகளுக்கு,
“அப்படி என்ன ஆகி போச்சு?”
“அந்த பொண்ணு ஓடிப் போனதை நீங்க பார்த்தீங்களா?”
“சத்யா எப்போ எங்க போனா உங்களுக்கு என்ன?”
“நீங்க வந்து பிரசவம் பார்க்கப் போறீங்களா?” என்று பதில்களை கூறி அவர்களை ஓட விட்டான். அதுவும் இவனைப் பற்றி தெரிந்தவர்கள் தெறித்து ஓடினர்.
பூமணி சிறு தயக்கத்துடன் அவனைப் பார்க்க,
அவன், “உண்மையான அக்கறையுடன் விசாரிக்கிறவங்க கிட்ட மட்டும் மெதுவா தேவையானதை எடுத்து சொல்லுங்க.. புரிஞ்சுப்பாங்க” என்றான்.
அவர் அப்பொழுதும் தயக்கத்துடன், “இல்லை.. உங்களை..” என்று இழுத்து நிறுத்த,
உதட்டோர சின்ன சிரிப்புடன் பார்த்தவன், “திமிர் பிடித்தவன், மரியாதை தெரியாதவன்னு என்னை சொல்லுவாங்களா! சொல்லிட்டுப் போகட்டும்.. இந்த பெயர்கள் எல்லாம் என்னோட போகட்டும்.. பின்னாடி தேவைனா நீங்க ‘மாப்பிள்ளை இருக்கப்ப என்னால் பேச முடியலை’னு சொல்லிக்கலாம் பாருங்க” என்றவன்,
“இதை விட அதிகமா என்னோட பத்தொன்பதாவது வயதிலேயே கேட்டுட்டேன்.. இப்படி பேசுறவங்க யாரும் நமக்கு தேவையான நேரத்தில் நம்ம கூட இருக்கப் போறது இல்லை.. என்னைக்குமே நம்மை புரிஞ்சுக்கிறவங்களுக்கு நாம் எதையும் நிரூபிக்கணும்னோ விளக்கனும்னோ அவசியம் இல்லை” என்றான்.
இந்த வயதில் அவனது பக்குவமான பேச்சு அவரை வியக்கச் செய்தது.
ஒருவழியாக சடங்குகளை முடித்து, மதியம் இரண்டு மணிக்கு மண்டபத்தை காலி செய்து இரு வீட்டினரும் கிளம்பினர்.
கிளம்பும் முன், “வேற சடங்கு எதுவும் இப்போ வேணாம் மாமா.. நீங்களும் சம்ருதிகாவை பார்க்கணும், நானும் சத்யாவை பார்க்கணும்” என்று ஜெயதேவ் கூற,
அவர், “நைட்.. அது பொண்ணு வீட்டில்..” என்று இழுக்க,
விசாலாட்சி, “சாந்தி முகூர்த்தம் பொண்ணு வீட்டில் தான்டா நடக்கணும்” என்று பட்டென்று கூறி இருந்தார்.
அவனோ, “கல்யாணம் தான் அவசரமா முடிஞ்சுது.. மற்றதை நிதானமா நாங்க பார்த்துக்கிறோம்” என்று முடித்து விட்டான்.
பூமணி, “நாளைக்கு மறுவீடு இருக்கே.. பெரியவளை நினைத்து சின்னவளை விட முடியாதே” என்றார்.
“ரெண்டு நாள் கழிச்சு கூட வச்சுக்கலாம் மாமா.. நீங்க முதல்ல சம்ருதிகாவை பாருங்க.. இப்போ நாங்க வீட்டுக்கு கிளம்புறோம்” என்றவன் வேலவன் மற்றும் விசாலாட்சியைப் பார்த்து, “நீங்க மாமா கூட இருங்க.. அவங்களுக்கு உங்க துணை இப்போ ரொம்ப அவசியம்” என்றான்.
இப்படி பார்த்துப் பார்த்து செய்யும் அவனது புரிதலான செயலில் பூமணியின் மனதில் உயர்ந்த நிலைக்கு சென்றான். ஆனால் பின் மாலையில் சத்யதேவின் செயல் தெரிந்த பிறகும் இதே மதிப்பும் மரியாதையும் இவன் மீது அவருக்கு இருக்குமா!
வேலவன், “நான் இங்கே பார்த்துக்கிறேன்.. நீ சத்யாவை கவனி” என்று கூற,
“எதுவும் தேவைனா கூப்பிடுங்க மாமா” என்று வேலவன் மற்றும் பூமணியிடம் கூறியே கிளம்பினான்.
அவர்கள் கிளம்பும் போது சித்ராவின் கன்னங்களில் கண்ணீர் ஆறாக ஓட,
அவரை தோள் சாய்த்த ஆத்மிகா, “ஹே சிட்டுக் குருவி! என்ன இது! என்னை என்ன நாடா கடத்திட்டாங்க! பக்கத்தில் தானே போறேன்.. என்னை ரொம்ப மிஸ் செய்தா நம்ம ஃப்ளவர் பெல் கிட்ட சொல்லு, வண்டி எடுத்து ஒரு மிதி மிதிச்சா ஜஸ்ட் அரை மணி நேரத்தில் என்னை வந்து பார்த்திடலாம்” என்று தேற்றினாள்.
அதை பார்த்தவர்களுக்கு யார் மகள்! யார் அன்னை! என்று தான் தோன்றியது.
ஜெயதேவ் கூட கோபங்களை மீறிய உதட்டோர சின்ன கீற்றுடன் பார்த்துக் கொண்டு இருந்தான்.
பூமணிக்கும் கண்கள் கலங்க பார்த்தது தான், ஆனால் கட்டுப்படுத்திக் கொண்டு மென்னகையுடன் மகளின் தலையை வருடியவர், “உன்னோட சிட்டுக் குருவியை நான் பார்த்துக்கிறேன்.. நீ கவலைப் படாம சந்தோஷமா இருடா” என்றார்.
“என்னோட சிட்டுக் குருவி, உங்களோட லவ் பேர்ட்” என்று கூறி கண்சிமிட்ட,
செல்லமாக முறைத்தவர், “வாலுத் தனத்தை எல்லாம் இங்கேயே மூட்டை கட்டி வச்சிட்டு போ.. அங்கே பொறுப்பா நடந்துக்கணும்” என்றார்.
அவள் எல்லா பக்கமும் தலையை ஆட்ட,
அவர், “ஆத்மி!” என்று சிறு கண்டிப்புடன் அழைத்தார்.
அவளோ, “எங்கேயும் எப்போதும் ஆத்மி ஒரே மாதிரி தான் இருப்பா.. டோன்ட் வொர்ரி ப்பா.. உங்க காதுக்கு வர அளவுக்கு வச்சுக்க மாட்டேன்” என்றாள்.
பூமணி அதற்கும் ஏதோ கூறப் போக,
அதற்குள் ஜெயதேவ், “விடுங்க மாமா.. அவளைப் பத்தி எனக்குத் தெரியும்.. என்னைப் பற்றியும் அவளுக்குத் தெரியும்.. அவ அவளா இருக்கட்டும்.. அதான் எனக்கும் பிடிக்கும்” என்று கூறி அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
ஒருவாறு அவர்கள் கிளம்ப, மகிழுந்தில் ஏறும் முன், “ஒரு நிமிஷம்” என்று கூறி தந்தை அருகே சென்றவள், “அப்பா சமி கண்டிப்பா தப்பு செய்து இருக்க மாட்டா.. கோபப்படாம கொஞ்சம் என்னனு பாருங்க ப்பா” என்று தவிப்புடன் கூறினாள்.
சின்ன மகளுக்காக பெரியவள் மீது இருக்கும் கோபத்தை மறைத்தபடி, “நீ கவலைப் படாம சந்தோஷமா போடா.. நான் பார்த்துட்டு சொல்றேன்” என்றார்.
சிறு தயக்கத்துடன், “ரூபாவதி சித்தப்பா போலீஸ் தான்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அவங்க கிட்ட பேசினேன்.. நீங்க பேசினா தான் சரி வரும்னு சொன்னாங்க.. அன்அஃபிஷியலா தேட ஹெல்ப் செய்வாங்க.. அவங்க நம்பர் உங்களுக்கு வாட்ஸ்அப் செய்து இருக்கிறேன்” என்றாள்.
“நான் பார்த்துக்கிறேன்டா.. நீ மனசைப் போட்டு குழப்பிக்காத.. அவளைப் பற்றி யோசிக்கிறதை விடு.. அவளுக்காக இல்லனாலும் உனக்காக அவளை தேடுறேன்”
“அவளுக்காகவே தேடுங்க”
“சரி.. அவளுக்காகவே தேடுறேன்” என்றவர், “முதல் முறையா புகுந்த வீட்டுக்கு போகும் போது இப்படி சஞ்சலத்துடன் போகக் கூடாது.. சந்தோஷமா தான் போகணும்.. அப்பா மேல நம்பிக்கை வைத்து, உன்னோட வாழ்க்கையைப் பற்றி மட்டும் யோசித்து சந்தோஷமா இரு” என்று கூறி அனுப்பி வைத்தார்.
ஜெயதேவ் வண்டியை ஓட்டிக் கொண்டிருக்க, அவன் அருகே ஆத்மிகா அமர்ந்து இருக்க, பின்னாடி மீனாட்சி அமர்ந்து இருந்தார்.
சற்றே கீற்றுடன் இருந்த அவனது முகம் ஆத்மிகா இறுதியாக சம்ருதிகா பற்றி பேசியதில் மீண்டும் இறுகியது.