அவனது மாற்றத்தை கவனித்தவள், “இன்னைக்கு ஒரு நாள் டிரைவர் வச்சு இருக்கலாமே!” என்று அவனிடம் பேச்சு கொடுத்தாள்.
அவன் பதில் கூறாமல் வண்டியை ஓட்டுவதில் மட்டும் கவனத்தை வைத்து இருக்கவும்,
“மிஸ்டர் ஹல்க் உங்க கிட்ட தான் கேட்டேன்” என்றவளை அவன் திரும்பி பார்த்து முறைக்க,
மீனாட்சி கடவுளை வேண்ட ஆரம்பித்து விட்டார்.
அவன் அருகே சற்றே நகர்ந்தவள் மெல்லிய குரலில், “உராங்குட்டான்னு சொன்னா அத்தை பீல் பண்ணுவாங்களேனு டீசென்ட்டா ஹல்க் சொன்னேன்” என்று கூறி கண் சிமிட்டினாள்.
“இம்சை செய்யாம வாயை மூடிட்டு வா”
நேராக அமர்ந்தபடி, “அது மட்டும் முடியாதே” என்றவள், “ரொம்ப தான் செய்ற! ஸோ நான் மனசை மாத்திக்கிட்டேன்” என்றுவிட்டு பின் பக்கம் திரும்பி மீனாட்சியிடம்,
“உங்க பையனுக்கு என்னலாம் பட்டப்பெயர் இருக்குதுனு சொல்லவா?” என்று கேட்டாள்.
அவர் மகனையும் இவளையும் மாற்றி மாற்றி பார்த்தபடி பயத்தில் திருதிருவென்று விழித்தார்.
அவளோ, “இவரை விடுங்க.. நான் சொல்றதை கேளுங்க.. நான் வச்ச பெயரில் ஒன்னு மட்டும் உங்களுக்குத் தெரியும்” என்றதும் அவர் யோசனையுடன் பார்க்க,
“மறந்துட்டீங்களா?” என்று கேட்டாள்.
அவர் அப்பொழுதும் புரியாமல் பார்க்க,
அவனைப் பார்த்து சந்தேகமாக, “நம்ம பஸ்ட் மீட் அத்தைக்கு தெரியாதா?” என்று கேட்டவள், “ஒழுங்கா பதிலை சொல்லிடுங்க.. இல்லை விட மாட்டேன்” என்று ஆள் காட்டி விரலை ஆட்டியபடி மிரட்டும் குரலில் கூறினாள்.
“அப்பா பயமா இருக்கே!” என்று அவன் நக்கல் குரலில் கூற,
அவளும், “ஆமா ஆமா நீங்க ரொம்ப பயந்தவர் தான்” என்று அதே நக்கல் குரலில் கூறினாள்.
மீனாட்சி பயத்தையும் மீறி ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தார்.
ஜெயதேவ், “நம்ம பஸ்ட் மீட் பத்திலாம் தெரியும், ஆனா நீ தான் அந்த ராங்கி பட்டாசுனு தான் தெரியாது” என்றதும் மீனாட்சியின் கண்கள் அதிர்ச்சியுடன் பெரிதாக விரிந்துக் கொண்டது.
“ஓ!” என்றவள், “ஏன் சொல்லலை?” என்று அடுத்த கேள்வியை கேட்டாள்.
அவனோ முறைப்புடன், “லொட லொடனு கேள்வி கேட்டுட்டே இருக்காத.. என்னை வண்டி ஓட்ட விடு” என்றான்.
“நீங்க தான் திறமைசாலி ஆச்சே! காதையும் வாயையும் எனக்கு கொடுத்துட்டு கண்ணை மட்டும் ரோட்டுக்கு கொடுங்க”
அவன் தலையை இருபுறமும் லேசாக அசைத்து மூச்சை வாயால் வெளியிட,
அவளோ, “என்ன! இப்பவே கண்ண கட்டுதா!” என்றாள்.
அவன் அமைதியாக வண்டியை ஓட்ட, “தம்பி இன்னும் பதில் வரலை” என்றாள்.
“இந்த வீட்டில் பொண்ணே வேணாம்னு தெறிச்சு ஓடிடுவாங்கனு தான் சொல்லலை”
“அப்படியா அத்தை?” என்றபடி மீனாட்சி பக்கம் திரும்பியவள், “இன்னுமா நீங்க அதிர்ச்சியில் இருந்து வெளி வரலை?” என்று கேட்டாள்.
சட்டென்று சுயம் பெற்றவர், “நீ இன்னும் இவனுக்கு வச்ச பட்டப் பெயர்களை சொல்லலை” என்றார்.
அவள் புன்னகையுடன், “இத்தனை நாளில் உங்களை கொஞ்சமே கொஞ்சம் புரிஞ்சு வச்சு இருக்கிறேன்னு நினைக்கிறேன்.. நீங்க என்னை மாதிரி ஜாலி டைப் தானே!” என்றாள்.
“இல்லனா என்ன செய்வ?”
“முதல் நாளே பஞ்சாயத்துனா மிஸ்டர் ஃப்ளவர் பெல் தாங்க மாட்டாங்க.. ஸோ பட்டப் பெயர்களை சொல்ல மாட்டேன்”
“இவ்ளோ பயம் இருக்கிறவ ஏன் சொல்லட்டானு கேட்ட?”
“பயமா! அது எந்த கலரில், எப்படி இருக்கும்?” என்று கண்ணில் மட்டும் குறும்பை தேக்கி அவள் வினவ, அவர் சிரித்துவிட்டார்.
“இவரை கலாட்டா செய்ய தான் சொல்லட்டானு கேட்டேன்.. ஆனா இவர் கண்டுக்கவே இல்லை, ஸோ நிஜமாவே சொல்ற முடிவுக்கு வந்துட்டேன்”
“சரி சொல்லு” என்றவரின் கண்களில் ஆர்வம் இருந்தது.
“முதல்ல வச்சது மங்கூஸ் மண்டையா.. அடுத்து கஞ்சி டப்பா.. அடுத்து பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கு அய்யாசாமி.. அடுத்து இவர் மேல க்ரஷ் வந்ததும் இல்லை இல்லை க்ரஷ்கும் லவ்வுக்கும் நடுவில் ஒரு ஸ்டேட்டில் இருக்கும் போது கற்றாழை கண்ணழகா” என்றவளின் கண்ணிலும் குரலிலும் காதல் வெளிப்படையாகவே தெரிந்தது.
அந்த குரலில் அவனையும் அறியாமல் அவன் சட்டென்று அவளை திரும்பி பார்க்க, அவள் காதலுடன் அவனைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். சில நொடிகள் அந்த பார்வையில் கட்டுண்டு இருந்தவன் வாகனத்தின் சத்தத்தில் சுதாரித்து பார்வையை சாலையில் திருப்பினான்.
அவளும் மென்னகையுடன் மீனாட்சி பக்கம் திரும்பி, “இன்னைக்கு காலையில் கல்யாணம் முடிந்த கொஞ்ச நேரத்தில் யு.ஐ.யு(UIU) அதாவது உர்ருனு இருக்க உராங்குட்டான்.. அப்புறம் இப்போ ஹல்க்” என்றாள்.
“போதுமா?”
“இன்னும் வரலாம்.. அது உங்க மகன் நடந்துக்கிறதை பொருத்து”
“எல்லாத்துக்கும் பெயர் காரணத்தை சொல்லு”
“முதல் ரெண்டு உங்களுக்கே தெரியும்.. அய்யாசாமி, நான் ஒருமையில் பேசாம ரொம்ப மரியாதை கொடுத்து பேசுறேன்னு சொன்னாரா உடனே வரேன்டா அய்யாசாமினு சொன்னேன்..
அடுத்து இவரோட குணத்துக்காக கற்றாழை கண்ணழகானு வைத்தேன்.. எப்போதும் முகத்தில் ஒரு இறுக்கத்துடன் சுத்தற இவரோட செயல்களில் இவர் முள் மாதிரி தெரிந்தாலும், உள்ளுக்குள்ளே இவர் ரொம்ப நல்லவர், பாசமானவர்.. அதான் கற்றாழை.. அண்ட் அதிகமா வாய் திறந்து பேசாம கண்ணால் பேசுறதால் கண்ணழகா.. ஸோ கற்றாழை கண்ணழகா” என்றவள் கண்சிமிட்டியபடி, “எப்படி?” என்று கேட்டாள்.
அவளது புரிதலில் பெரிதும் ஆச்சரியம் கொண்டவர் மகிழ்ச்சியுடன், “ரொம்ப சரியாவும் அழகாவும் இருக்குது” என்றார்.
புன்னகையுடன், “உங்களுக்கு கூட ஒரு பெயர் வச்சு இருக்கிறேன்” என்றவள், “சென்னை எக்ஸ்ப்ரெஸ்.. அந்த படத்தில் ஷாருக் தீபிக்காவை மீனாம்மானு தான் கூப்பிடுவான்” என்றாள்.
“தப்பிச்சேன்.. எங்கே மங்கூஸ் மண்டையன், ஜவ்வு மிட்டாய் மாதிரி ஒரு தினுசா வச்சிருப்பியோனு பயந்தேன்” என்று புன்னகையுடன் கூறியபடி மகனை பார்த்தவர் அவனது இறுகிய முகத்தில் தனது தவறை உணர்ந்து மானசிகமாக தலையில் அடித்துக் கொண்டார்.
ஆம் ‘ஜவ்வு மிட்டாய்’ என்ற பெயர் அவனை கோபத்தை தத்தெடுக்க வைத்து இருந்தது.
வீட்டிற்கு முன் வண்டியை நிறுத்தி, அவன் இறங்கப் போக,
அவள், “இருங்க நான் கேட்டை திறக்கிறேன்” என்று கூறி இறங்கிச் சென்றாள்.
மீனாட்சி தயக்கமும் சிறு பயமுமாக, “ஜெயா..” என்று அழைக்க,
அவன் இறுகிய குரலில், “உள்ளே போய் பேசிக்கலாம்” என்று கறாரான குரலில் முடித்துவிட்டான்.
அவர் மனதினுள், ‘உன் வாய் இருக்கே வாய்!’ என்று திட்டிக் கொள்ள,
அவரது மனசாட்சியோ, ‘ஆமா இல்லனைனா மட்டும் உன்னை கொஞ்சவா போறான்!’ என்றதும்,
சுருங்கிய முகத்துடன், ‘அதுவும் சரி தான்’ என்று கூறிக் கொண்டார்.
பின், ‘திட்டை பகிர்ந்துக்க சத்யாவும் இல்லை’ என்று நினைக்க,
மீண்டும் அவரது மனசாட்சி, ‘அடியே இது எல்லாத்துக்கும் மூலகாரணமே அவன் தான்’ என்றது.
‘ஆமா’ என்றுவிட்டு, ‘எது எப்படியோ நான் விரும்பியபடியே ராங்கி பட்டாசை கல்யாணம் செய்துகிட்டான்.. அதில் மீ ஹப்பி’ என்று தனக்குள் பேசிக் கொண்டு இருந்தவரிடம்,
“இறங்குற ஐடியா இல்லையா?” என்று கேட்டான்.
அப்பொழுது தான் வண்டி வீட்டிற்குள் வந்ததை கவனித்தவர் அவசரமாக இறங்கி சென்று கதவை திறந்தபடி, “ஒரு நிமிஷம் ரெண்டு பேரும் வெயிட் பண்ணுங்க.. ஆரத்தி எடுத்துட்டு வரேன்” என்றுவிட்டு கிட்டதிட்ட ஓடினார்.
“மெதுவா போங்க” என்று இருவரும் ஒன்றாக குரல் கொடுக்க,
“சரி சரி” என்றபடி வேகத்தை குறைத்து சமையல் அறைக்கு சென்றார்.
சொன்னது போல் ஒரு நிமிடத்தில் ஆரத்தியுடன் வந்தவர் இருவருக்கும் ஆரத்தி எடுத்து, “ரெண்டு பேரும் சீரும் சிறப்புமா சந்தோஷமா இருக்கணும்” என்று வாழ்த்தியபடி திலகமிட்டார்.
பின், “உள்ள போங்க.. நான் இதை தெருவில் ஊத்திட்டு வரேன்” என்றுவிட்டு சென்றார்.
அவள் மென்னகையுடன் கையை நீட்ட, அதை பற்றாமல் அவனால் இருக்க முடியவில்லை. தனது கோபத்தை ஒதுக்கி வைத்து விட்டு அவளது கையை பற்றினான்.
நகர போனவனின் கையை அழுத்தி பிடித்து தடுத்தவள், “ஸ்மைல் ப்ளீஸ்” என்றாள்.
“ஸ்விட்ச் போட்ட மாதிரி சட்டு சட்டுன்னு என்னால் மாற முடியாது.. ப்ளீஸ் படுத்தாத”
உள்ளே நுழையும் போது வாதிட விரும்பாமல், “ஓகே உனக்கும் சேர்த்து நானே சிரிக்கிறேன்” என்றவள் விரிந்த புன்னகையுடன், “வெல்கம் ஆத்மி.. வெல்கம் டு யுவர் ஹோம் ஸ்வீட் ஹோம்” என்றபடி அவனுடன் சேர்ந்து வீட்டினுள் அடி எடுத்து வைக்க, அவனையும் அறியாமல் அவனது உதட்டோரம் சிறு புன்னகை உதிக்கத் தான் செய்தது.
அதை ஓரப்பார்வையால் பார்த்தவளின் புன்னகை இன்னும் விரிந்தது.