உங்களுக்காகத் தானே கல்யாணத்துக்கு ஓகே சொன்னேன்! ஆனா நீங்க!!!!
இப்போ எதுக்கு இந்த கல்யாணம்? தேவையே இல்லையே!
பெண் பாவம் அது இதுனு சொல்லித் தானே என்னை சம்மதிக்க வச்சீங்க! ஆனா அந்த பொண்ணே இல்லாதப்ப எதுக்கு இந்த கல்யாணம்?
அதுவும் படிக்கிற பொண்ணை கல்யாணம் செய்து வச்சு இருக்கிறீங்க!
அதுவும் உண்மையை மறைச்சு!
அந்த மனுஷன் எவ்ளோ நேர்மையா இருக்கார்.. ஆனா நாம!
இன்னும் சத்யா செய்தது தெரிய வரப்ப என் மூஞ்சியை எங்க கொண்டு போய் நான் வைப்பேன்!
அவன் ஒரு பக்கம் படுத்தினா, நீங்க இன்னொரு பக்கம் உங்களால் முடிந்ததை செய்திட்டீங்க!
இதைத் தான் நம்ம அப்பா சொல்லி கொடுத்தாங்களா?” என்று ஜெயதேவ் பத்து நிமிடங்களுக்கு மேலும் மீனாட்சியை பேச விடாமல் தோரணம் கட்டிக் கொண்டே போனான்.
சும்மாவே இவனிடம் பேச முடியாது, இதில் தப்பை தன் பக்கம் வைத்துக் கொண்டு அவர் எங்கே வாயை திறக்க!
உள்ளே வந்ததும் ஆத்மிகாவிடம் தனது அறையை சுட்டிக் காட்டியபடி, “அதான் நம்ம ரூம்.. கொஞ்ச நேரம் நீ அங்கே ரெஸ்ட் எடு.. நான் அம்மா கிட்ட பேசிட்டு வரேன்” என்றான்.
அவனது குரலில் இருந்தே அவன் அன்னையுடன் தனியாக பேச விரும்புகிறான் என்பதை புரிந்து, “சரி” என்றுவிட்டு சென்றாள்.
சரியாக அப்பொழுது உள்ளே வந்த மீனாட்சி, “ஆத்மி எங்கப்பா?” என்று கேட்டார்.
“நான் தான் ரூமுக்கு போகச் சொன்னேன்.. உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.. வாங்க” என்றபடி அவன் அவரது அறை நோக்கிச் செல்ல, மீனாட்சியினுள் பயப்பந்து உருள ஆரம்பித்தது.
அறையினுள் சென்றவன், “அம்மா” என்று அழைக்கவும், அவர் அவசரமாக உள்ளே வந்தார்.
அவர் வந்ததும் கதவை மூடிவிட்டு ஆரம்பித்தவன் தான் இன்னமும் முடிக்கிற வழியை காணும்!
அதே நேரத்தில் தங்கள் அறைக்கு சென்றிருந்த ஆத்மிகா கைப்பையில் இருந்து தனது கைபேசியை எடுத்துப் பார்க்க, அவளது வானர பட்டாளத்தின் பெற்றோர் எண்களில் இருந்து விடுபட்ட அழைப்புகள் இருந்தன. அனைவருமே தேர்வு நேரம் என்பதால் திருமணத்திற்கு வர முடியாமல் பள்ளிக்கு சென்றிருந்தார்கள். ஆனால் திருமணத்திற்கு வந்திருந்த அவளது நெருங்கிய கல்லூரி நட்புகள் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அமைதியாக வாழ்த்திவிட்டு சென்றிருந்தனர்.
‘ஸ்கூல் விட்டு வந்து விஷயம் தெரிஞ்சிருச்சு போல!’ என்று மனதினுள் நினைத்தபடி கிஷோரை(வவ்வால்) அழைத்தாள்.
அழைப்பு எடுக்கப்பட்டதும்,
“சம்ரு க்கா கல்யாணத்துக்கு வர முடியலைனு பீல் செஞ்சுட்டு இருந்தா, உன் கல்யாணமே முடிஞ்சு போச்சு!”
“ஹாப்பி மேரிட் லைஃப் க்கா”
“என்ன இருந்தாலும் எங்களை விட்டுட்டு நீ கல்யாணம் செய்து கிட்ட.. அதுக்கு பெனாலிட்டி உண்டு”
“கல்யாணம் முடிந்ததும் எங்களை மறந்துட்டியா கா?”
“அன்னைக்கு செய்த கலாட்டாவில் மாமா இன்னும் கோபமா இருப்பாங்களா? எங்களை உன் கூட பேச விடுவாங்களா?” என்று அனைத்து வானரங்களும் ஒரே நேரத்தில் பேச,
“அடேய் அப்ரென்டீஸ்களா எனக்கு எதுவுமே புரியலை.. ஒவ்வொருத்தரா பேசுங்க” என்று இவள் குரலை உயர்த்தி கத்தவும் தான் அமைதி ஆகினர்.
சில நொடிகள் மௌனத்தில் கழிய, இவள், “அடேய்” என்றதும்,
“ஒன்.. டூ.. த்ரீ” என்று ஒன்றாக கூறி, “ஹாப்பி ஹாப்பீபீபீபீபீபீபீபீ மேரிட் லைஃப் க்கா” என்று மீண்டும் ஒன்றாக கத்தினர்.
இவள் புன்னகையுடன், “தன்க்யூ வாலுங்களா” என்றாள்.
பின், “இப்போ ஒவ்வொருத்தரா கேள்வி கேளுங்க” என்று கூற,
கிஷோர், “அதை விடு க்கா.. இந்த மேரேஜில் நீ ஹாப்பி தானே?” என்று கேட்டான்.
“ஹாப்பி தான்டா” என்றவள், “உனக்குத் தெரியாதா!” என்று சேர்த்து கூறினாள்.
“தெரியும் தான், இருந்தாலும் என்ன சூழ்நிலையில் மேரேஜ் நடந்ததோ!”
“பார் டா! நம்ம வவ்வால் பொறுப்பு பருப்பா பேசுறதை!”
“அக்கா!”
“ஓகே ஓகே” என்றவள், “என்ன நடந்தது எப்படி நடந்ததுனு கேட்காதீங்க.. ஏன்னா எனக்கே இன்னும் முழுசா தெரியலை.. இப்போதைக்கு ஒன்னே ஒன்னு தான் சொல்ல முடியும்.. கல்யாணம் பிக்ஸ் ஆன ரெண்டு பக்கிகள் செய்த குளறுபிடியில் எனக்கும் உங்க மாமாக்கும் கல்யாணம் ஆகிடுச்சு” என்றாள்.
“மாமாக்கு எங்க மேல கோபம் இருக்குமா க்கா?”
“அதெல்லாம் இல்லடா.. எக்ஸாம் முடிந்ததும் ஒரு நாள் எல்லோரும் வீட்டுக்கு வாங்க”
“அக்கா ட்ரீட்?”
“உங்களுக்கு இல்லாமலா! எக்ஸாம் முடியட்டும்”
“இனி நீ எல்லோருக்கும் ப்ரீயா ட்ரீட் தரலாம் க்கா” என்று கூறி ஒரு வாண்டு சிரிக்க, அதை மற்றவர்கள் ஆமோதித்தனர்.
“ஹ்ம்ம்.. என்ன இருந்தாலும், உன் கல்யாணத்தை பார்க்க முடியலைனு தான் க்கா ஒரே பீலிங்க்ஸ்ஸா இருக்குது”
“ஹ்ம்ம்.. ஆமா க்கா”
“வெத்து பேப்பரை கொடுத்துட்டு வந்ததுக்கு உன் கல்யாணத்துக்காது வந்து இருக்கலாம்”
“ஆமா.. விருந்து சாப்பாடோட உன் கல்யாணத்தை பார்த்து இருக்கலாம்”
“இப்போ கூட சாப்பாட்டை விடுறாளா பாருக்கா”
“எதா இருந்தாலும் சோறு முக்கியம் தானே க்கா” என்று கேலியும் கிண்டலுமாக பேச்சு நீண்டது.
அங்கே மீனாட்சியின் அறையில், ஒரு கட்டத்தில் ஜெயதேவ் கோபமும் ஆதங்கமுமாக, “ஒருவேளை நீங்களும் என்னை எவளும் கல்யாணம் செய்துக்க மாட்டானு தான் இந்த முடிவுக்கு வந்தீங்களா?” என்று வினவ,
மீனாட்சி பெரும் அதிர்வுடன், “ஜெயா!” என்று ஆட்சேபிக்கும் குரலை எழுப்பி இருந்தார்.
அவனது அக்கேள்வி அவரது நெஞ்சில் அப்படி ஒரு வலியைத் தர, அவர் கலங்கிய கண்களுடன் நடுங்கிய குரலில், “அம்மா அப்படி நினைப்பேனா ப்பா!” என்றார்.
அவரது குரலில் இருந்தே தனது கேள்வி அவரை எந்தளவிற்கு பாதித்து இருக்கிறது என்பது அவனுக்குப் புரிந்தது.
மீனாட்சி அவன் அருகே சென்று சற்றே நடுங்கிய கைகளால் அவன் தலையை தனது வயிற்றுடன் சேர்த்து லேசாக அணைக்க, அவன் கைகள் அவரை கட்டிக் கொள்ளவில்லை என்றாலும் அந்த அணைப்பை ஏற்று அமைதியாகவே இருந்தான்.
எத்தனை நீண்ட வருடங்களுக்கு பிறகான அணைப்பு! மீனாட்சியின் கன்னங்களில் கண்ணீர் கடகடவென்று இறங்கியது. அவரது நெஞ்சம் வெம்பி தவித்தது.
அவன் முகத்தை நன்றாக தன்னுடன் அணைத்தவர் சில நொடிகள் கழித்து, “ஏன் இப்படிலாம் பேசுற! உனக்கு என்னப்பா குறை!” என்றார்.
அவன் அமைதியாக இருக்க, அவர், “ஜெயா” என்று அழைத்தார்.
‘அந்த பொண்ணுங்க என்னை வேண்டாம்னு போனதை விட நீங்க ஏமாற்றியதைத் தான் என்னால் ஜீரணிக்கவே முடியலை ம்மா..
என்னோட பத்தொன்பதாவது வயதில் இருந்து இப்ப வரை நான் சந்தித்த, சந்திக்கிற பெண்களில் அனேக பேர் ஏமாற்றுக்கார்களும் சுயநலவாதிகளும் தான்.. அதை எல்லாம் மீறி நான் ரொம்ப நம்பிய இரண்டு பெண்கள் நீங்களும் ராங்கி பட்டாசும் தான்.. ஆனா நீங்க ரெண்டு பேருமே என்னை ஏமாத்திட்டீங்க!
கோபம் அதிகமா இருந்தாலும் அதை விட வலி இன்னும் அதிகமா இருக்குது.. அதை நான் வெளி படித்தினா நீங்க தாங்க மாட்டீங்க’ என்று மனதினுள் அவருடன் பேசியவன் அவரது அணைப்பில் இருந்து விலகியபடி,
“ப்ச் விடுங்க ம்மா” என்று கூறி எழுந்து கொண்டான்.
“இந்த கல்யாணத்தை நடத்த நான் முடிவெடுத்ததுக்கு ஒரே ஒரு காரணம், என் மகனோட மகிழ்ச்சி மட்டும் தான்.. கல்யாணத்தை வெறுத்து ஒதுங்கிய நீயே சம்மதித்த நேரத்தில் கிடைத்த வாய்ப்பை தவற விட எனக்கு மனசு வரலை.. பொண்ணு மாறியது தெரிஞ்சா நீ கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டனு எனக்கு தெரியும்.. அதான் சொல்லலை..
அம்மா ஏமாற்றியதா நீ நினைக்கலாம்.. ஆனா நான் உன்னோட நலனை மட்டுமே நினைத்து அப்படி செஞ்சேன்.. அந்த இடத்தில் நான் சுயநலவாதியா இருந்தேனே தவிர ஏமாற்றுகாரியா இல்லை ப்பா.. அப்போ உன்னைப் பத்தி, உன்னோட மனநிலையை பற்றி மட்டும் தான் அம்மா யோசிச்சேன்..
சும்மாவே கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கிறவன், நீ சம்மதித்து அது நின்னு.. அப்புறம் இன்னொரு முறை நீ கல்யாணத்துக்கு சரி சொல்லுவங்கிற நம்பிக்கை எனக்கு துளியும் இல்லை.. அதான் அப்படி செய்தேன்.. என்னை மன்னிச்சிடு ப்பா”
“அதான் விடுங்கனு சொல்லிட்டேனே! எதுக்கு இவ்ளோ எக்ஸ்ப்ளைன் செய்து மன்னிப்பு கேட்கிறீங்க!” என்று அவன் முறைப்புடன் கோபக் குரலில் கூற,
அவனது கோபத்திற்கு பின் இருக்கும் அன்பை புரிந்து கொண்டவரின் மனம் நெகிழ்ந்தது.
அவர் நம்பவில்லை என்பதில் அவரை முறைத்துவிட்டு அவன் கிளம்ப பார்க்க,
அவனது கையை பற்றியவர் தீர்க்கமான குரலில் பேச ஆரம்பித்தார்.
“அம்மா இப்போ சொல்றதை மனசில் நல்ல பதிய வச்சுக்கோ.. கல்லுக்கும் வைரத்துக்கும் வித்யாசம் தெரியாத சில தறுதலைங்க உன்னை விட்டு போனா, உன் கிட்ட குறைனு அர்த்தம் இல்லை.. கடவுள் உன்னோட உயர்ந்த குணத்துக்கு ஏற்ற ஒரு பொக்கிஷத்தை உனக்காகவே தேர்வு செய்து வைத்து இருக்கார்னு அர்த்தம்.. அதான் இவ்வளவு குழப்பங்களையும் மீறி, பொக்கிஷமா உன்னோட ராங்கி பட்டாசு உனக்கு கிடைச்சு இருக்கா” என்றார்.
அவரது கரத்தை தனது பிடிக்குள் மாற்றியவன், பிடியில் சிறு அழுத்தம் கொடுத்தபடி, “எனக்கு எந்த தாழ்வு மனப்பான்மையும் இல்லை ம்மா.. அது, இருந்த கோபத்தில் ஒரு வேகத்தில் அப்படி கேட்டுட்டேன்.. அதை கேட்ட பிறகு தான் அது உங்களை எவ்வளவு பாதிக்கும்னு புரிந்தது.. ரொம்ப சாரிமா.. உடனே சாரி கேட்காததுக்கு இன்னொரு சாரி.. என்னை மன்னிச்சிடுங்க ம்மா” என்று வருந்தும் குரலில் கேட்டான்.
“என் பையனை எனக்கு தெரியும்.. இன்னைக்கு எல்லாமே உன்னை டென்ஷன் செய்து, கோபப்படுதற மாதிரி தானே நடந்தது” என்றவர், “என்னை சொல்லிட்டு நீ எத்தன சாரி சொல்ற!” என்றார்.
“நான் சொல்வேன்.. நீங்க தான் சொல்லக் கூடாது” என்று மிடுக்குடன் கூறியவன், “உங்க உத்தம புத்திரன் இன்னும் மொபைலை ஆன் செய்தானானு தெரியலை.. கடைசியா மண்டபத்தில் வச்சு நான் கூப்பிட்டப்ப ஆன் ஆகலை.. அவனோட பிரெண்ட்க்கு போன் போட்டு அவன் இன்னும் அரை மணி நேரத்தில் இங்கே இருக்கணும்னு சொல்லுங்க.. இல்லை அப்படியே எங்கேயாவது போய்ட சொல்லுங்க” என்றான்.
“அவன் எண்ணம் நல்லதா இருந்தாலும் செயல்முறை ரொம்பவே தப்பு.. உடன்பிறப்பு என்றாலும் சிலதுக்கு வரைமுறை எல்லை இருக்குது தானே! என்னோட விருப்பம் இல்லாம என் வாழ்க்கையில் ஒரு பெண்ணை எப்படி அவன் திணிக்கலாம்? அதுவும் நான் செய்யாதனு சொன்ன ஒன்னை செய்து இருக்கிறான்..
என்னையாவது விடுங்க, அவன் கூட பிறந்தவன்.. ஆனா இன்னொருத்தரோட பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும் உரிமையை இவன் எப்படி தன் கையில் எடுக்கலாம்? அதுவும் யாருக்கும் தெரியாம கமுக்கமா வேலை பார்த்து இருக்கிறான்” என்றான்.
அவரை கடுமையாக முறைத்தவன், “சப்பக் கட்டு கட்டாதீங்க.. மத்தவங்களை திருத்துறது என் வேலை இல்லை.. எனக்கு என் தம்பி சரியா இருக்கனும்” என்றவன் இன்னும் முறைத்தபடி, “எல்லாத்தையும் ஆரம்பிச்சு வைச்சது இவன் தான்ங்கிறதை மறந்துறாதீங்க” என்றான்.
“கொஞ்சம் பொறுமையா…” என்றவர் அவனது பார்வையில் அப்படியே இழுத்து நிறுத்த,
“இந்த உண்மை அவங்க வீட்டில் தெரியும் போது என்ன நடக்குமோ! அதுவும் உங்க மருமக லேடி டானாவே மாறிடுவா.. முடிஞ்சா அவ கிட்ட இருந்து உங்க புள்ளைய காப்பாத்துங்க” என்றவன், “இன்னும் அரை மணி நேரத்தில் அவன் இங்கே இருக்கணும்” என்று கடின குரலில் முடித்தான்.
பின், “அந்த ராங்கி பட்டாசு என்ன செஞ்சிட்டு இருக்கானு பார்த்துட்டு வரேன்” என்றுவிட்டு வெளியேறினான்.
இளைய மகனை நினைத்து கவலைக் கொண்ட அவரது மனம் பெரிய மகனை நினைத்து மகிழ்ந்தது. ஆம், என்ன தான் கோபம் இருந்தாலும், ‘ராங்கி பட்டாசு’ என்று சொல்லும் நொடி பெரிய மகனின் முகம் அவனையும் மீறி வசீகரிப்பதை கண்டு தான் அந்த தாய் உள்ளம் மகிழ்ந்தது.
அப்பொழுது யாரோ அறையும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு வெளியே வேகமாக விரைந்தார்.
கூடத்தில் வைத்து ஜெயதேவ் தான் சத்யதேவை அறைந்து இருந்தான்.
ஜெயதேவ் அன்னையின் அறையை விட்டு வெளியே வந்த நேரம் தான் சத்யதேவ் வீட்டினுள் வந்தான். சத்யதேவ் இருந்த மனநிலைக்கு வீட்டின் அழைப்பு மணியை அடிக்கத் தோன்றாமல் தானியங்கி கதவை தன்னிடம் இருந்த சாவி கொண்டு திறந்து உள்ளே வந்து இருந்தான்.
அவனைக் கண்டதும் எழுந்த கோபத்தில் அடிக்க கையை வீசி இருந்த ஜெயதேவ், தம்பியின் கன்னத்தில் கண்ட விரல் தடத்தில் அதிர்ந்து கடைசி வினாடி கையின் வேகத்தை குறைத்தும் அடி சற்று பலமாக தான் பட்டது.
மீனாட்சி, “ஜெயா!” என்று பதறியபடி வர,
அவனோ தம்பியின் நாடியை பிடித்து கோபத்துடன், “யாருடா உன்னை அடித்தது?” என்று கேட்டான்.
அதே நேரத்தில் ஒரு பூ ஜாடி பறந்து வந்து சத்யதேவின் நெற்றியை பதம் பார்க்க, இரத்தம் பீரிட்டு வெளியேறியது.
“அய்யோ ரத்தம்!” என்று பதறிய மீனாட்சி கட்டு போடுவதற்கு துணியை எடுக்க விரைந்தார்.
பூ ஜாடி வந்த திசையை சகோதரர்கள் பார்க்க, அங்கே ஆத்மிகா காளி அவதாரம் எடுத்தபடி நின்றிருந்தாள்.
துணியை எடுக்க சென்ற போது ஆத்மிகா நின்ற தோரணையை கண்டதும் அதிர்வுடன் ஒரு நொடி அவரது நடை தடைப்பட்டு பின் சீரானது. ஜெயதேவ் அவளைப் பற்றி கூறியது அழையா விருந்தாளியாக அவருக்கு நினைவு வர, அவர் மனமோ, ‘வரும் போது நம்ம கூட பேசிட்டு வந்தவளா இது! ஆண்டவா ரெண்டு சிங்கத்தை இந்த வீடு தாங்குமா!’ என்று தான் நினைத்தது.
ஜெயதேவ் கோபத்துடன், “ஆத்மிகா!” என்று கத்த,
அவளோ அதை கண்டுகொள்ளாமல் அதே கோபத்துடன், “என் அக்கா லைஃபை டிசைட் பண்ண நீ யாரு?” என்று கேட்டபடி சத்யதேவை நெருங்கி இருந்தாள்.
அவளைக் கண்டதும் சத்யதேவ் வலியை மீறி பெரிதும் அதிர்ந்தான். ஆத்மிகா தான் சம்ருதிகாவின் தங்கை என்றதை அறிந்து கொண்ட அதிர்ச்சி அது.