சத்யதேவை நெருங்கிய ஆத்மிகாவின் கையை பிடித்து தன் பக்கம் இழுத்த ஜெயதேவ் கோபத்துடன், “என்ன செய்ற! தப்பு செய்து இருக்கிறான் தான்.. அதுக்காக இரத்தம் வர அளவுக்கு காயப்படுத்துவியா?” என்றான்.
“இதுக்கே உனக்கு இவ்வளவு கோபம் வருதே! அங்க என்னோட அக்கா உயிருக்கு போராடிட்டு இருக்கா.. அப்போ எனக்கு எவ்வளவு கோபம் வரணும்? இதெல்லாம் ரொம்பவே கம்மி தான்”
“என்ன!” என்று ஜெயதேவ் அதிர,
சத்யதேவ் மெல்லிய குரலில், “இப்போ உயிருக்கு ஆபத்து இல்லை அண்ணி” என்று கூறினான்.
அவன் பக்கம் கோபத்துடன் திரும்பியவள், “நீ வாய் திறந்த, அடுத்து வாயிலேயே போடுவேன்” என்றாள்.
ஜெயதேவ், “என்னாச்சுடா?” என்று வினவ,
அவனோ சிறு அச்சமும் தயக்கமுமாக ஆத்மிகாவை பார்த்துவிட்டு வாயை திறக்காமல் பார்வையை தாழ்த்தினான்.
ஜெயதேவ் ஆத்மிகாவிடம், “இவன் செய்த குளறுபடி உனக்கு எப்படி தெரிந்தது?” என்று கேட்டான்.
அவள் அவனை கடுமையாக முறைக்க, அவனோ அசராமல், “சொல்லு” என்றான்.
“எங்க வாழ்க்கை என்ன உங்களுக்கு ப்ளே கிரௌண்ட்டா? உருவ ஒற்றுமையை வச்சு எங்க வாழ்க்கையில் எப்படி எல்லாம் விளையாடி இருக்கிறீங்க?” என்று கோபமாக பேசியவள் சத்யதேவைப் பார்த்து,
“இனியும் இப்படி தான் விளையாடுவியா?” என்று வினவினாள்.
“ஐயோ இல்ல அண்ணி” என்று சத்யதேவ் பதற,
“ஆத்மிகா!” என்று ஜெயதேவ் குரலை உயர்த்தி அழைத்து இருந்தான்.
சத்யதேவைப் பார்த்து, “நீ விளையாடினாலும் என்னோட ஜெயை கண்டு பிடிக்க எனக்கு தெரியும்” என்றாள்.
“அவன் செய்ய மாட்டான்னு எனக்கும் தெரியும்.. ஆனா அவனோட செயல் எங்களுக்குள் எப்படிப்பட்ட பாதிப்பை கொடுக்கும்னு அவனுக்கு புரியணுமே! அதான் சொல்றேன்” என்றவள் முறைப்புடன், “நீயும் சேர்ந்து தானே ஏமாற்றின!” என்றாள்.
ஜெயதேவ், “சத்யா” என்று அழைக்க, அவனோ அமைதியாக தான் இருந்தான்.
ஜெயதேவ் பொறுமை இழந்து, “வாயை திறந்து சொல்லுடா.. என்ன தான் நடந்தது?” என்று அதட்டினான்.
அவன் அதீத தவிப்புடன் தமையனை நோக்க, அதில் துணுக்குற்ற ஜெயதேவ், “என்னடா?” என்றான் பரிவுடன்.
அப்பொழுது முதலுதவி பெட்டி மற்றும் பழைய பருத்தி புடவையின் ஒரு பகுதியுடன் வந்த மீனாட்சி கலங்கிய விழிகளை துடைக்க தோன்றாமல் நடுங்கிய கைகளுடன் காயத்தை சுத்தம் செய்ய முயற்சிக்க, அவரிடம் இருந்து பஞ்சை வாங்கிய ஆத்மிகா தானே சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.
அந்த களேபரத்திலும் அவளது அச்செயல் ஜெயதேவ் உதட்டோரம் சிறு மென்னகையை உதிக்க செய்ய,
சத்யதேவ் நெகிழ்ச்சியுடன் அவளைப் பார்த்தான்.
அவள் பஞ்சை ‘சவ்லானில்’(Savlon) நனைத்து காயத்தில் லேசாக வைக்கவும் சத்யதேவ், “ஸ்ஆ” என்றபடி பின்னால் நகர,
“அசையாம அப்படியே உட்காரனும்.. இல்ல சவ்லான் பாட்டிலை அப்படியே கௌத்திடுவேன்” என்று அவள் மிரட்டவும், அவன் வலியை பொறுத்தபடி சிலையாகி போனான்.
மீனாட்சி மனதினுள், ‘அடப்பாவி! சின்ன காயத்துக்கே எப்படி ஊரை கூட்டுவ! இப்போ இந்த பெரிய காயத்துக்கு வாயை திறக்காம இருக்கிறதை பாரு!’ என்று நினைத்துக் கொண்டார்.
ஆத்மிகாவை சராசரி மாமியாரை போல் அல்லாமல் அன்னையின் அன்போடு பார்த்ததால் அவளின் கோபம் ஜெயதேவின் கோபம் போல் தான் அவருக்கு தோன்றியது. அதுவும் அவளது தற்போதைய செயலில் ‘இவளும் ஜெயதேவ் போல் தான்’ என்று தான் அவருக்குத் தோன்றியது.
அன்னைக்கு ஆத்மிகா மீது கோபம் இருக்குமோ! அவளை தவறாக நினைத்து விட கூடாதே என்ற எண்ணத்தில் அன்னையைப் பார்த்த ஜெயதேவின் மனம் அவர் தன்னவளை கனிவுடன் நோக்கியதில் நிம்மதி கொண்டது.
காயத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த ஆத்மிகா இரத்தம் நிற்காமல் வரவும் ஜெயதேவைப் பார்த்து, “தையல் போடணும்” என்றாள்.
ஜெயதேவ் அவளை முறைக்க,
அவளோ, “மண்டை மேல கொண்டை வர அளவுக்கு அடிக்காம இத்தோட விட்டேன்னு சந்தோஷப்படு..ங்க” என்றாள். (மீனாட்சி இருப்பதால் பன்மையாக மாற்றி இருந்தாள்.)
சத்யதேவ் அவரை முறைக்க, ஆத்மிகா, “அங்க என்ன முறைப்பு!” என்று மிரட்டியபடி அந்த பருத்தி துணியை கிழித்து கட்டு போட்டாள்.
‘ஆத்தி! இவனுக்கு மேல இருப்பாங்க போலவே!’ என்று மனதினுள் நினைத்தபடி பாவமாக அன்னையை பார்க்க, அவருக்கும் அவனை பார்க்க சற்று பாவமாக தான் இருந்தது.
“என்ன அப்படியே நின்னுட்டு இருக்கிறீங்க! கார் சாவி எடுத்துட்டு வாங்க.. கிளம்பலாம்” என்று அவள் ஜெயதேவையும் மிரட்ட, சத்யதேவின் உதட்டோரம் புன்னகை பூத்தது.
‘அப்பாடி! இப்போ தான் என் மனசே குளுந்துப்போச்சு!’ என்ற கணம் சத்யதேவிற்கு.
அதை உணர்ந்தார் போல் ஜெயதேவ், “இருடி.. உன்னை வந்து கவனிச்சுக்கிறேன்” என்றுவிட்டு சாவி எடுக்கச் செல்ல, சட்டென்று சத்யதேவின் புன்னகை மறைந்தது.
சென்று கொண்டு இருந்த ஜெயதேவ் திரும்பி அன்னையிடம், “பெயின் கில்லர் எடுத்துட்டு வாங்கம்மா” என்றுவிட்டு சென்றான்.
மீனாட்சி மாத்திரையை எடுக்க விரைந்தார்.
அந்த பருத்தி துணியின் இன்னொரு பகுதியை மடித்த ஆத்மிகா அவனது காயத்தின் மீது சற்று அழுத்தி பிடித்தபடி, “இதை இப்படி அழுத்தி பிடி.. இரத்தம் வரது கொஞ்சம் அரெஸ்ட் ஆகும்” என்றாள்.
“ஹ்ம்ம்” என்றபடி போட்ட கட்டின் மீதே அந்த துணியை சற்று அழுத்தி பிடித்துக் கொண்டான்.
ஆத்மிகா, “அடிக்கடி கன்னம் பழுக்குமோ!” என்று சிறு கிண்டலுடன் வினவ,
சத்யதேவ், “ஹான்” என்றான்.
“அடிக்கடி அடி விழுமோ! பெயின் கில்லர் ரெடியா இருக்கே!”
“அப்படி எல்லாம் இல்லை” என்றவனை அவள் நம்பாமல் பார்க்க,
அவனோ மனதினுள், ‘ஒரு டெரர் பீசையே தாங்க முடியலை! இனி இந்த வீட்டில் எப்படிடா காலம் தள்ளப் போற!’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்.
ஆத்மிகா, “கஷ்டம் தான்” என்றாள்.
அவன் அதிர்ந்து விழித்தபடி, “என்ன!” என்றான்.
“இனி எப்படி இந்த வீட்டில் இருக்கிறதுனு தானே நினைச்ச?” என்று கேட்டாள்.
அவளை நோக்கி நடிகர் வடிவேல் போன்றே உதட்டை பிதுக்கி அழுவது போல் செய்தவன், அப்பொழுது மாத்திரையுடன் வந்த மீனாட்சியை, ‘எப்படி வந்து சிக்கி இருக்கிறேன் பாருங்க!’ என்பது போல் பார்த்தான்.
மீனாட்சி சிரிப்பை அடக்கியபடி மாத்திரையையும் தண்ணீர் குவளையையும் நீட்டினார்.
ஆத்மிகா, “இப்போ என்ன மைண்ட் வாய்ஸ்னு சொல்லவா?” என்று வினவ,
“நோ.. நோ.. இதுக்கு மேல சத்தியமா தாங்க மாட்டேன்” என்று கிட்டதிட்ட அலறியவன் அன்னையிடம் மாத்திரியை வாங்கி விழுங்கினான்.
பின் அருகில் நின்ற அன்னையிடம், “அவனை மாதிரியே ஒரு ஆளை பிடிச்சு இருக்கிறான் மா” என்று பாவமாக முணுமுணுக்க,
அதை கவனித்துவிட்ட ஆத்மிகா மீண்டும் முறைத்தபடி, “அவரு பிடிக்கலை.. நீ தான் எங்களை கோர்த்து விட்டு இருக்க” என்றாள்.
‘ஆத்தி! திரும்ப முதல்ல இருந்தா!’ என்று இப்போது மனதினுள் அலறியவன்,
“கிளம்பலாம்” என்றபடி மகிழுந்து மற்றும் வீட்டு சாவியுடன் வந்த ஜெயதேவிடம்,
“சாவியை எடுக்க இவ்வளவு நேரமாடா!” என்றபடி முதல் ஆளாக அவனுடன் எழுந்து ஓடினான்.
“துணியை வச்சு காயத்தை அழுத்தி பிடிச்சுக்கோங்க” என்றபடி ஆத்மிகா பின்னால் வர,
அதைக் கூற வாய் திறந்த மீனாட்சி நெகிழ்ச்சியான மென்னகையுடன் அவளுடன் சென்றார்.
பின் சின்ன சிரிப்புடன், “தப்பு செஞ்சுட்டு ஜெயாவை கண்டு தெறிச்சு ஓடுறவன் இன்னைக்கு அவன் கூட ஓடுறான்” என்றார்.
அவள் ஆச்சரியத்துடன் அவரைப் பார்க்க, அப்பொழுது சத்யதேவ் அவளை திரும்பி பார்த்தபடி சென்றான்.
அதை உணர்ந்தவள் அவன் பக்கம் திரும்பி, ‘என்ன!’ என்பது போல் புருவம் உயர்த்தி பார்த்தாள்.
“ஒன்னு சொல்லட்டுமா?”
“என்ன?”
“நீங்க என்னை ஒருமையிலேயே பேசுங்களேன்”
“எதுக்கு! காதில் இருந்து இரத்தம் வர அளவுக்கு எங்க அப்பா கிட்ட திட்டும் அட்வைஸும் வாங்குறதுக்கா! அது கோபத்தில் ஒருமை வந்துடுச்சு.. சாரி..” என்றவள் முறைப்புடன், “நீங்க என்னை பன்மையில் பேசி கிழவி ஆக்காதீங்க” என்றாள்.
“ரெண்டு பேருமே ஒருமையில் பேசிக்கலாமா?” என்று அவன் வினவ,
படி அருகே வந்திருந்த ஜெயதேவ் அவனது கையை பற்றியபடி, “முன்னாடி பார்த்து நடடா” என்று அதட்டினான்.
சத்யதேவ் அமைதியாக முன் பக்கம் திரும்பி நடக்க ஆரம்பித்தான்.
ஆத்மிகா சிறு தயக்கமும் ஆச்சரியமுமாக மீனாட்சியிடம், “உங்களுக்கு என் மேல கோபம் வரலையா?” என்று கேட்டாள்.
அவர் மென்னகையுடன், “அண்ணினா இன்னொரு தாய்.. அவன் தப்பு செய்து இருக்கிறான்.. அதான் நீ கண்டிச்சு அடிச்ச” என்றார்.
அவள் அப்பொழுதும், “இல்ல..” என்று ஆரம்பிக்க,
அவர், “காயம் பெருசுனா, அவன் செய்த தப்பும் பெருசு தானே! உன் அக்கா மேல எனக்கு கோபம் இருந்துது, ஆனா இப்போ நீ சொன்னதையும், சத்யாவோட அமைதியையும் பார்க்கிறப்ப..” என்று ஒரு நொடி நிறுத்தியவர், “சம்ருதிக்கு என்னாச்சு?” என்று கேட்டார்.