“பக்கத்தில் ஏதாவது கிளினிக் இருந்தா இவருக்கு தையல் போட்டுட்டு போகலாம்” என்று ஆத்மிகா கூற,
கண்ணாடி ஊடே அவளைப் பார்த்த ஜெயதேவ், “எனக்கு தெரியும்” என்றான். அவனது தோரணையில் அவள் உதட்டை சுளித்து முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அவள் மீது கோபம் இருந்தாலும் அவளது அச்செயலை அவனது மனம் ரசிக்கவே செய்தது. மனதினுள் ‘ராங்கி பட்டாசு’ என்று முணுமுணுத்துக் கொண்டான்.
ஆத்மிகா மீனாட்சியிடம், “உங்க சின்ன பையன் போட்ட திட்டத்துக்கு சமி.. சம்ருதி சம்மதித்து கல்யாணத்துக்கு தயாரா தான் இருந்து இருக்கா..
ஏற்கனவே இவங்க கல்யாணம் பிக்ஸ் ஆகி ஒரு வாரம் இருந்த நேரத்தில்.. சரியா சொல்லணும்னா முகூர்த்தப் புடவை எடுத்த அன்னைக்கு முந்தின நாள் நைட், அவளை ஒருதலையா காதலிச்ச அவளோட காலேஜ் மேட் ஞானவேல் அவளுக்கு போன் போட்டு அவளை தன்னோட காதலை ஏற்கச் சொல்லி கெஞ்சினான். அப்போ, அந்த போன் வந்தப்ப நானும் அவ கூடத் தான் இருந்தேன்.. அவ தனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லைனு சொல்லி போனை வச்சிட்டா.. நான் அவனோட நம்பரை ப்ளாக் செய்துட்டேன்.. முதல்ல அப்பா கிட்ட அதை பத்தி சொல்லலாமானு தான் நினைத்தேன்.. அப்புறம் திரும்ப போன் வந்தா பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன்..
உங்களுக்கே தெரியும்.. அக்கா என்னை மாதிரி கிடையாது.. ரொம்ப சாப்ட் டைப்.. பயந்த சுபாவமும் கூட.. அடுத்த நாள் இவர் இவரோட திட்டத்தை சொல்லி இருக்கார்” என்றவள் சத்யதேவை முறைத்தபடி, “யாரிடமும் சொல்ல கூடாதுனு வேற சொல்லி இருக்கார்” என்றவள் மீனாட்சியை பார்த்து தொடர்ந்தாள்.
“இவர் ஒரு உருக்கமான காதல் கதையை அடிச்சி விட்டு இருக்கார்.. ஸோ இவரோட காதல் நிறைவேற இவரோட திட்டபடி உங்க பெரிய மகனை கல்யாணம் செய்துக்க சம்மதிச்சு இருக்கா.. அதுவும் சில நாட்கள் கழித்து ஒரு வித குழம்பிய நிலையில் தான் ஓகே சொல்லி இருக்கா..
அவ முகத்தில் நான் கல்யாண களையை பார்க்கவே இல்லை அத்தை.. ஒருவித குழப்பத்திலோ, டென்ஷனிலோ தான் சுத்தினா.. நான் எவ்வளவோ கேட்டும், அவ எதுவும் சொல்லவே இல்லை..
அப்பாக்கு ரொம்பவே பயப்படுவா.. அந்த ஞானவேல் திரும்ப கூப்பிட்டா அப்பா கிட்ட விஷயத்தை சொல்லிடலாம்னு நான் சொல்லி இருந்தேன்.. அதனால், எங்க இந்த விஷயத்தை நான் அப்பா கிட்ட சொல்லிடுவேனோனு நினைத்து என் கிட்டயும் சொல்லாம தனக்குள்ளேயே வச்சு மருகிட்டு இருந்து இருக்கா..
நான் கூட அந்த ஞானவேல் தான் திரும்ப கூப்பிட்டு பேசினானோனு நினைத்தேன் ஆனா இப்படி ஒரு மெண்டல் டார்ச்சரில் இருந்து இருப்பானு நான் நினைக்கவே இல்லை..
அந்த ஞானவேலும் சும்மா இல்ல.. புது புது நம்பரில் இருந்து கூப்பிட்டுட்டே தான் இருந்து இருக்கான்.. இவ எந்த புது நம்பர் போனையும் அட்டென்ட் செய்யலை..
ஆனா கல்யாணத்துக்கு அஞ்சு நாள் இருந்த நேரத்தில் இவளோட பிரெண்ட் நம்பரில் இருந்து போன் போட்டவன், இவ எடுத்ததும் ரொம்ப கெஞ்சியும் மிரட்டியும் இருப்பான் போல.. இவ ஒரு கட்டத்தில் உன்னோட லவ் உண்மைனா என்னை நிம்மதியா இருக்க விடு, எனக்கு இனி போன் போடாதனு சொல்லவும்.. அவனும் என்னால் உன் நிம்மதி கெடாது.. இனி உன்னை கூப்பிட மாட்டேன்னு சொல்லிட்டு வச்சிட்டான்.. அதுக்கு அப்புறம் போனும் செய்யலை.. ஆனா அவன் காதல், இவர் காதல்னு, இந்த காதல்ங்கிற விஷயம் அவளோட மனசை ரொம்பவே கஷ்டபடுத்தி இருக்குது..
இன்னைக்கு அதிகாலை ரெண்டு மணி போல அவளுக்கு போன் போட்ட ஞானவேலோட பிரெண்ட், அந்த ஞானவேல் கையை அறுத்துகிட்டான்னும், ஹாஸ்பிடலில் உயிருக்கு போராடிட்டு இருக்கிறான்னும், டாக்டர் அவனுக்கு உயிர் வாழ்ற எண்ணமே இல்லனும் ட்ரீட்மென்ட்கு ஒத்துழைக்க மாட்டிக்கிறானும் அங்களால் எதுவும் செய்ய முடியலைனும் சொன்னதா சொல்லி, இவளை வந்து அவனிடம் பேசச் சொல்லி கெஞ்சி இருக்கிறான்..
அவனோட உயிரை காப்பாத்தச் சொல்லி கெஞ்சி இருக்கிறான்.. இவ வந்து பேசினா கண்டிப்பா அவன் உயிர் பிழைத்து வந்திருவான்னு கெஞ்சி இருக்கிறான்..
ஒரு உயிரை காப்பத்துற எண்ணத்தில் இவளும் சரின்னு சொல்லவும், மண்டபத்து வாசலில் இருந்து போன் போட்ட அந்த பிரெண்ட் உடனே இவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு கிளம்பிட்டான். ஒரு மணி நேரத்தில் தன்னை மண்டபத்தில் கொண்டு வந்து விட்டுறணும்னு சொல்லி தான் கிளம்பி இருக்கா..
ஆனா இவ ஐ.சி.யு உள்ள போகவும் அவன் உயிர் போய்டுச்சு.. அவனோட அம்மா இவளை பார்த்ததும் ஆவேசத்துடன் இவளை பிடிச்சு உலுக்கியபடி ‘என்னோட பையனை கொன்னுட்டியே’னு சத்தம் போட்டு இருக்காங்க.. அந்த பிரெண்ட் அந்த அம்மாவை தடுத்துட்டு இருந்த நேரம் இவ வெளியே வந்துட்டா..” என்றவள் ஒரு நொடி நிறுத்தி தவிக்கவும் அவளது கையை மீனாட்சி ஆதரவாக பிடித்துக் கொண்டார்.
அவள் குரல் கரகரக்க, “பித்து பிடிச்ச மாதிரி ஹாஸ்பிடலை விட்டு வெளியே வந்தவளை வேகமா வந்த தண்ணி லாரி..” என்று கன்னங்களில் கண்ணீர் இறங்கியபடி நிறுத்தினாள்.
அவளை தன் தோள் மீது சாய்த்து அரவணைத்துக் கொண்ட மீனாட்சி, “ஒன்னும் ஆகாதுடா.. அக்கா சீக்கிரமே நல்லாகிடுவா” என்று தேற்றினார்.
ஜெயதேவ் ஒரு கையினால் வண்டியை ஓட்டியபடி முன் பக்கம் இருந்த தண்ணீர் பொத்தலை எடுத்து பின் பக்கம் நீட்டினான்.
அதை வாங்கிய மீனாட்சி, “தண்ணி குடி” என்றார்.
தண்ணீர் அருந்தி தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டவள், “இவர் அந்த நேரத்தில் எப்படி அங்கே வந்தார்னு தெரியலை.. இவர் தான் அவளை அதே ஹாஸ்பிடலில் சேர்த்து இருக்கார்” என்று சத்யதேவை சுட்டி காட்டினாள்.
ஜெயதேவ் சத்யதேவை பார்க்க, அவன் மெல்லிய குரலில், “நான் மண்டபத்தில் இருந்து கிளம்பி என்னோட பிரெண்ட் மதன் வீட்டுக்குத் தான் போனேன்.. பால்கனியில் இருந்து அம்மாக்கு போன் பேசிட்டு செல்லை ஸ்விட்ச்-ஆஃப் செய்து பாக்கெட்டில் வச்சப்ப தான் சம்ருதி காரில் போறதை பார்த்தேன்..
அந்த நேரத்தில் அவ எங்க போறானு அவசரமா வண்டியை எடுத்துட்டு அந்த காரை பின் தொடர்ந்து போனேன்.. நான் வண்டியை நிறுத்திட்டு ஹாஸ்பிடல் உள்ள போறதுக்குள்ள சம்ருதியை நான் மிஸ் பண்ணிட்டேன்.. எந்த ரூமில் யாரை பார்க்க வந்தானு தெரியாம நான் அவளை தேடிட்டு இருந்தேன்.. நான் முதல் மாடியில் தேடிட்டு இருந்தப்ப, எதேர்ச்சையா காரிடர் ஜன்னல் வழியா பார்த்தப்ப, ஏதோ யோசனையில் அவ நடு ரோட்டில் தனியா போறதை பார்த்து அவசரமா ஓடினேன்” என்றவன், “அப்போ.. அப்போ.. என் கண் முன்னாடியே அந்த.. லாரி அவளை தூக்கி வீசிட்டு நிற்காம போய்டுச்சு” என்று கதறிவிட்டான்.
சில நொடிகள் அவனை அழ விட்டவன், பின் அவனது முகத்தை வலுகட்டாயமாக நிமிர்த்தி தன்னை பார்க்க செய்து, “இங்க பாரு.. சம்ருதிகா இப்போ இருக்கிற நிலைமைக்கு நீ காரணம் இல்லை” என்றான்.
கண்ணில் சிறு ஒளியுடன் தமையனை அவன் பார்க்க,
ஜெயதேவ், “நிஜமா தான் சொல்றேன்.. உனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. அவளா தானே அவனை பார்க்கப் போனா.. அப்போ எப்படி நீ காரணம் ஆவ? இன்பாக்ட் இப்போ அவ உயிரோட இருக்கிறதே உன்னால் தான்.. ஸோ நீ தான் அவளை காப்பாற்றி இருக்கிற” என்றான்.
கண்ணீருடன் தமையனை பார்த்தவன், “இல்லடா.. அந்த நொடி.. இன்னும்.. என் கண்ணுக்குள்ளேயே நிற்குது.. சம்யு.. என்னால முடியலைடா” என்று மீண்டும் கதறினான்.
‘அது எப்படி இவன் காரணம் இல்லைனு முழுமையா சொல்ல முடியும்! இவன் பிரச்சனை செய்யாம அவளுடன் இணக்கமா இருந்து இருந்தா, ரெண்டு பேருக்கும் நடுவில் ஒரு பாண்டேஜ் இருந்து இருக்குமே! ஞானவேல் பேசியதை இவனிடம் சொல்லி இருப்பாளே!
ஏன், இன்னைக்கு காலையில் இவன் கூடவே கூட போய் இருக்கலாம்! காதல்னு இவனும் தானே படுத்தி இருக்கிறான்.. எவ்ளோ மெண்டல் டார்ச்சர் அவளுக்கு! இவனால் தானே!’ என்று மனதினுள் நினைத்த ஆத்மிகா சூழ்நிலை கருதி அமைதியாக தான் இருந்தாள்.
ஒருவாறு சத்யதேவை தேற்றிய ஜெயதேவ் அருகில் இருந்த சிறு மருத்துவமனையில் அவனது காயத்திற்கு தையல் போட்ட பிறகு சம்ருதிகா இருக்கும் மருத்துவமனைக்கு வண்டியை செலுத்தினான்.
அவசரசிகிச்சை பிரிவிற்கு இவர்கள் நால்வரும் சென்றதும், ஓடி வந்த ஆத்மிகாவை அணைத்தபடி சித்ரா சத்தமின்றி அழ,
அவள் அழுகையை கட்டுபடுத்தி அன்னையின் முதுகை வருடியபடி, “ஒன்னுமில்லைமா” என்றாள்.
மீனாட்சியும், “சம்ரு சீக்கிரம் சரி ஆகிடுவா அண்ணி” என்றார்.
சத்யதேவ் தவிப்புடன் அந்த அவசர சிகிச்சை அறையின் கதவை பார்த்தபடி சுவரில் சாய்ந்து நின்றுவிட,
கோபத்துடன் தங்களை முறைத்துக் கொண்டிருந்த பூமணி அருகே ஜெயதேவ் சென்றான்.
அவரோ அடக்கப்பட்ட கோபத்துடன், “உங்க மேல அவ்ளோ மரியாதை இருந்துது.. ஆனா.. ஒரே கல்லில் ரெண்டு மாங்காங்கிற மாதிரி, உங்க தம்பி செய்ததை எல்லாம் மூடி மறைச்சு, அவர் பெயரையும் காப்பாற்றி, என்னையும் ஏமாற்றி என்னோட பொண்ணையே கல்யாணம் செய்துட்டீங்களே!
உண்மை தெரிஞ்ச பிறகு பொண்ணு தர மாட்டேன்னு தானே வாய்ப்பை விடாம ஆத்மியை கல்யாணம் செய்துகிட்டீங்க!
உருவ ஒற்றுமையை வைத்து எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை!” என்றவர், “சை!” என்றபடி அருவெறுப்பு கலந்த கோபமும், ஏமாற்றப்பட்ட வலியுமாக முகத்தை திருப்பினார்.
ஜெயதேவ் அவரது குற்றசாட்டிலும், முக திருப்பலிலும் பேச்சற்று ஸ்தம்பித்து நின்றான்.