பூமணியின் குற்றச்சாட்டில் ஆத்மிகா சட்டென்று நிமிர்ந்து ஜெயதேவை பார்க்க, அவனோ முதற்கட்ட அதிர்ச்சி விலகிய பின்பும் அமைதியாக தான் நின்றிருந்தான். உண்மையை கூற வந்த மீனாட்சியையும் கண்ணசைவில் பேச விடாமல் தடுத்து விட்டான்.
அதை கவனித்த ஆத்மிக்கா, “இல்லை ப்பா.. அவருக்கு நான் தான் பொண்ணுனு தெரியாது” என்றாள்.
மீனாட்சி மற்றும் ஜெயதேவ் சிறு அதிர்வுடன் அவளை பார்த்தனர்.
மகள் பக்கம் திரும்பிய பூமணியின் பார்வையில் சிறு சந்தேகம் இருந்தது. தனது காதல் கணவனுக்காக மகள் பேசுகிறாளோ என்ற சந்தேகம் தான் அது.
தந்தையை அறியாதவளா ஆத்மிகா!
அவரை நேர்பார்வை பார்த்தவள் தீர்க்கமான குரலில், “உருவ ஒற்றுமையை வைத்து ஆள் மாறாட்டம் செய்தது பெரிய தப்பு தான்.. அந்த கோபம் எனக்கும் இருக்குது.. ஆனா ஒன்றை நான் உறுதியா சொல்வேன் ப்பா.. அவர், பொண்ணு நான் தான்னு தெரியாம தான் மேடையில் அமர்ந்தார்.. இதை இப்பவரை அவர் என்கிட்டே சொல்லலை.. ஆனா எனக்குத் தெரியும்..
உங்களை எப்படி சரியா உணருறேனோ அதை மாதிரி அவரையும் என்னால் உணர முடியும் ப்பா.. அப்படித் தான் மேடையில் அவரை பார்த்த நொடியே சரியா அடையாளம் தெரிஞ்சுக்கிட்டேன்.. என்னை மேடையில் பார்த்த நொடி அவர் கண்ணில் வந்து போன அதிர்ச்சியே சொல்லிடுச்சு, அவருக்கு பொண்ணு மாறிய விஷயம் தெரியாதுனு..
என்னோட யூகம் சரினா, தம்பி செய்த தவறை சரி செய்ய மட்டுமில்லாம, கல்யாணம் நின்றால் சமியோட நிலையை யோசிச்சும் தான், சமியை கல்யாணம் செய்துக்க சரினு சொல்லி இருப்பார்.. அதையும் உண்மையை சொல்லியே செய்யத் தான் சொல்லி இருப்பார்.. அத்தை அவரை கன்வின்ஸ் செய்து இருப்பாங்க..
மே பி அத்தை பயத்தில், கல்யாணம் முடிந்த பிறகு சொல்ல நினைத்து இருக்கலாம்.. இவர் ஓகே சொன்னதுக்கு அப்புறம் தான் அத்தைக்கு பொண்ணு மாறின விஷயம் தெரிய வந்து இருக்கலாம்..
தனி ஒரு மனிஷியா அவங்களும் எவ்ளோ தான் சமாளிப்பாங்க ப்பா! ரெண்டு மகன்களையும் அவங்க பார்க்கணுமே! பதற்றமும் பயமும் ஒரு பக்கம், ஒரு மகன் செய்த குளறுபடியை எப்படி உங்களிடம் சொல்லனு தவித்தும் பயந்தும் இருக்கலாம்! ஒரு முறை அனுபவித்த வலியே ஆறா வடுவா இருக்க, பெரிய மகன் கஷ்டப்பட்டு தலை எடுத்து நிமிர்த்திய குடும்ப மானம் கேள்விக்குறி ஆகணுமானு யோசித்து இருக்கலாம்! மகன் மேடை ஏற ஒத்துக் கொண்ட பிறகு பொண்ணு வேறனு சொல்லி மேடையை விட்டு இறக்க மனம் இல்லாம இருந்து இருக்கலாம்..
இதெல்லாம் என்னோட யூகங்கள் தான்” என்று அவள் முடித்த பொழுது அவளை கட்டிக் கொண்டு மீனாட்சி அழுதுவிட்டார்.
ஜெயதேவ் ‘என்ன பொண்ணுடா இவ!’ என்று பேச்சற்ற நிலையில் தான் நின்றான். தன்னை சரியாக புரிந்து கொண்டதோடு, தான் கூட யோசிக்காத தனது தாயின் பக்கத்தை எவ்வளவு அழகா எடுத்து கூறிவிட்டாள் என்று தான் பார்த்தான். ‘அம்மா சொன்ன மாதிரி இவள் ஒரு பொக்கிஷம் தான்’ என்று அவனது மனம் கூறிக் கொண்டது.
என்ன தான் ஆத்மிகா சொன்னது புரிந்தாலும், இரு பெண்களை பெற்ற தந்தையாக அவற்றை ஏற்கத் தான் பூமணியால் முடியவில்லை.
சிறு விரக்த்தியும் பெருமையும் கலந்த உதட்டோர புன்னகையுடன், “உன்னை வக்கீலுக்கு படிக்க வச்சு இருக்கலாம் பாப்பா” என்றார்.
சிறு வலியுடன் கூடிய உதட்டோர புன்னகையை உதிர்த்தவளின் ஒரு கரம் அன்னையை அரவணைத்து இருக்க, மறு கரம் மாமியாரை அரவணைத்து இருந்தது.
அதிர்ந்த நிலையில் இருந்த சத்யதேவும் ஆத்மிகாவை பிரம்மிப்புடன் தான் பார்த்தான். பின் தமையனுக்கு ஆதரவாக பேச வர,
அவனை இறுகிய முகத்துடன் பார்த்த பூமணி, “ப்ளீஸ் என்னை பேச வைக்காதீங்க.. நீங்க சுய வாக்குமூலம் கொடுத்ததால் மட்டும் நீங்க செய்தது எல்லாம் சரின்னு ஆகிடாது.. என் பொண்ணு உயிரை காப்பாற்றிய ஒரே காரணத்தால் மட்டுமே நீங்க இப்போ இங்கே நின்னுட்டு இருக்கிறீங்க” என்றவர், “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுனு சொல்றதை மெய்பிப்பது போல, ‘நீங்க யாரு என் பொண்ணு வாழ்க்கையை முடிவு செய்ய?’ என்ற கோபத்தில் அப்போ உங்க மேல கை நீட்டிட்டேன்.. என்னை மன்னிச்சிடுங்க” என்றபடி கை கூப்ப,
“அய்யோ மாமா என்ன செய்றீங்க!” என்று பதறிய சத்யதேவ் அவரது கையை கீழே இறுக்கியபடி, “இப்படியெல்லாம் மன்னிப்பு கேட்டு எனக்கு பாவம் சேர்க்காதீங்க! ஏற்கனவே செய்த பாவத்தை என்ன செய்து! எங்க போய் கரைக்கனு தெரியாம இருக்கிறேன்” என்று கலங்கிய கண்களுடன் கரகரத்த குரலில் கூறினான்.
பின், “நீங்க என்னை அடித்தது சரி தான்.. ஜெயதேவ் அந்த இடத்தில் இருந்து இருந்தால் உங்களை மாதிரி ஒரு அடியோட நிறுத்தி இருக்க மாட்டான், வெளுத்து இருப்பான்” என்றான்.
அந்த ஒற்றை வரியில் தனது தமையன் நேர்மையானவன் என்றதை மறைமுகமாக கூறி இருந்தான். அதை பூமணியும் புரிந்துகொண்டார் தான் ஆனால் எதுவும் மறுமொழி கூறவில்லை.
இதற்குள் அழுகையை கட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தி இருந்த மீனாட்சி பூமணி அருகே சென்று கையெடுத்து கும்பிட்டபடி, “என்னை மன்னிச்சிடுங்க அண்ணா.. ஆத்மி சொன்னது எல்லாமே ரொம்ப சரி.. என்னோட மனம் அவ சொன்னது போல தான் யோசிச்சு தவிச்சுது.. என்ன தான் விளக்கம் சொன்னாலும் அந்த நேரம் நான் சுயநலமா யோசிச்சது தப்பு தான்..
ஆனா, மன்னிப்பை தவிர வேற என்ன கேட்கனு தெரியலை.. தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க அண்ணா” என்றவர் இறுகி போய் நின்றிருந்த ஜெயதேவை சுட்டிக் காட்டியபடி,
“இவன் எங்க குலச்சாமி அண்ணா.. பத்தொன்பது வயசில் குடும்ப பாரத்தை சுமந்தவன் இப்போ தப்பே செய்யாம மொத்த பழியையும் சுமந்துட்டு நிற்கிறான்.. எனக்கு தண்டனை வேணாலும் கொடுங்க, அவனை மட்டும் தப்பா நினைக்காதீங்க” என்ற போது அவரது கண்கள் மீண்டும் கலங்கி கன்னங்களில் கண்ணீர் இறங்கியது.
“அம்மா!” என்ற கண்டன குரலை எழுப்பியபடி அவர் அருகே வந்த ஜெயதேவ் அவரை அரவணைத்து பற்றிக் கொண்டான்.
அங்கே நிலவிய கனமான மௌனத்தை கலைப்பது போல் செவிலியர் ஒருவர் சத்யதேவ் மற்றும் ஜெயதேவை குழப்பத்துடன் பார்த்தபடி, “மிஸ்டர் சத்யதேவ்!” என்று இழுத்து நிறுத்தினார்.
“நான் தான்” என்ற சத்யதேவ் அருகே சென்று மருந்து சீட்டை கொடுத்தவர்,
“உங்க வைஃப்க்கு இந்த மெடிசன்ஸ் உடனே வாங்கிட்டு வாங்க.. கீழ பேஸ்மென்ட்டில் பார்மசி இருக்குது” என்றுவிட்டு சென்றார்.
பூமணி சத்யதேவை உக்கிரமாக முறைக்க, சித்ரா அதிர்வுடன் பார்க்க, மற்ற மூவரும் ‘இன்னும் என்னலாம்டா செய்து வைத்து இருக்க?’ என்பது போல் பார்த்தனர்.
யார் முகத்தையும் பார்க்காமல் பார்வையை தாழ்த்திய சத்யதேவ், “அந்த ஞானவேல் பிரெண்ட் தான் இப்படி சொல்லிட்டான்.. மண்டபத்தில் இருந்த பேனர் பார்த்து இப்படி சொல்லிட்டான்..
அப்போ இருந்த மனநிலையில் நான் அதை கவனிக்கலை.. ஹெட் இஞ்சுரி.. உடனே சர்ஜரி செய்றதுக்கு சைன் கேட்டப்ப என்ன ஏதுனு பார்க்காம சொன்ன இடத்தில் எல்லாம் சைன் போட்டுட்டேன்..
சத்தியமா அப்போ இருந்த மனநிலையில் சுத்தி என்ன நடக்குதுனே எனக்கு தெரியலை.. சம்யு மட்டும் தான் என் கண்ணுக்கு தெரிஞ்சா.. ஆபரேஷன் முடிஞ்சு டாக்டர்ஸ் சம்யு அவுட் ஆஃப் டேஞ்சர்னு சொன்ன அப்புறம் தான் கொஞ்சம் கொஞ்சமா சூழ்நிலையே எனக்கு புரிய ஆரம்பிச்சுது..
அந்த பையன் கூடவே இருந்ததை கூட அதுக்கு அப்புறம் தான் உணர்ந்தேன்.. அவன் தான் ஞானவேல் பத்தி எல்லாம் சொன்னான்.. அப்புறம் ஞானவேல் இறுதி சடங்கில் கலந்துக்க அவன் போயிட்டான்..
அதுக்கு அப்புறம் தான் சம்யு பத்தி உங்க கிட்ட சொல்லணும்னே எனக்கு உறைச்சுது.. உதறல் எடுத்தாலும் சொல்றது தான் சரினு, உங்களை இங்க வர வச்சு எல்லா உண்மையையும் சொன்னேன்” என்றான்.
ஆக, பூமணி அல்லது சித்ரா மூலம் ஆத்மிகாவிற்கு விஷயம் தெரிந்து இருக்கும் என்று சரியாக யூகித்தான் ஜெயதேவ். ஆம், சித்ரா தான் அழுதபடியே ஆத்மிகாவிடம் கைபேசி மூலம் விஷயத்தை கூறி இருந்தார்.
மீண்டும் அங்கே வந்த அந்த செவிலியர், “இன்னும் வாங்க போகலையா நீங்க!” என்று கூற,
“இதோ” என்றபடி சத்யதேவ் கிளம்ப போக,
சட்டென்று அவன் கையில் இருந்த மருந்து சீட்டை பறித்துக் கொண்ட பூமணி, “என் பொண்ணு விஷயத்தை நானே பார்த்துக்கிறேன்” என்று அழுத்தி கூறிவிட்டு சென்றார்.
செல்லும் முன் ஆத்மிகாவைப் பார்த்து, ‘அம்மாவை பார்த்துக்கோ’ என்று கண்ணசைவில் சொல்லிவிட்டே சென்றார்.
அந்த தளத்தின் தலைமை செவிலியர் வந்து, “கூட்டம் போடாம கிளம்புங்க.. ஒருத்தர் இல்ல ரெண்டு பேர் மட்டும் அங்க உட்காருங்க” என்று சற்று தள்ளி போடப்பட்ட இருக்கைகளை காட்டியவர், “மத்தவங்க கீழ ரிசெப்ஷனில் உட்காருங்க” என்றார்.
ஆத்மிகா, “அக்கா எப்படி இருக்கா? நாங்க இப்போ போய் பார்க்கலாமா?” என்று வினவ,
“இப்போ ஆபத்தான கட்டத்தை தாண்டிட்டாங்க.. கண் முழிச்ச அப்புறம் சீஃப் டாக்டர் செக் செய்த அப்புறம் உங்களை பார்க்க விடுவாங்க.. அதுவும் எல்லோரையும் இல்லை.. ரெண்டு இல்ல மூணு பேர் தனி தனியா ஒரு நிமிஷம் பார்க்கலாம்”
“அக்கா எப்போ கண்ணு முழிப்பா?” என்று கேட்ட பொழுது அவசரமாக கதவை திறந்து வந்த செவிலி பரபரப்புடன், “சிஸ்டர் ஹெட் இஞ்சுரி பேஷன்ட்கு காண்ஸ்ஷியஸ் வந்துடுச்சு” என்றார்.
“சீஃப் டாக்டருக்கு சொல்லிட்டியா?”
“இல்ல”
“முதல்ல அதை செய்” என்றவர் இவர்களிடம், “முதல்ல கிளம்புங்க.. சீஃப் டாக்டர் பார்த்தா எங்களைத் தான் திட்டுவாங்க” என்றுவிட்டு வேகமாக அவசர சிகிச்சை பிரிவின் உள்ளே சென்றார்.
ஜெயதேவ் ஆத்மிகாவிடம், “நீயும் அத்தையும் இங்க உட்காருங்க.. நான் போய் மாமாவை அனுப்புறேன்” என்றுவிட்டு சத்யதேவைப் பார்த்து, “நீயும் அம்மாவும் ரிசெப்ஷனில் உட்காருங்க” என்று கூறி கூட்டிச் சென்றான்.
சத்யதேவ் மனமே இல்லாமல் அந்த அவசர சிக்கிச்சை பிரிவின் கதவை திரும்பி திரும்பி பார்த்தபடியே சென்றான்.
தம்பியின் துடிப்பு மற்றும் தவிப்பில் இருந்தும், ‘சம்யு’ என்ற பிரெத்தியேக அழைப்பில் இருந்தும் அவனது மனதை ஜெயதேவ் புரிந்துக் கொண்டான். ஆம், சத்யதேவின் மனம் குற்ற உணர்ச்சி மற்றும் மனிதாபிமானத்தை மீறி சம்ருதிகாவை விரும்ப ஆரம்பித்து இருந்தது. அதை அவனே இன்னும் முழுதாக உணரவில்லை.
அன்னை மற்றும் தம்பியை வரவேற்பில் அமர வைத்தவன் கீழே மருந்தகத்திற்கு விரைந்தான்.
அங்கே வரிசையில் நின்றிருந்த பூமணி அருகே சென்றவன், “மாமா.. சம்ருதிகா கண் முழிச்சுட்டாங்கலாம்.. சீஃப் டாக்டர் செக் செய்ததும் உங்களை ஒரு நிமிஷம் பார்க்க விடுவாங்களாம்.. நீங்க மேல போங்க.. நான் இதை வாங்கிட்டு வரேன்” என்றான்.
அவர் அப்பொழுதும் இறுகிய முகத்துடன், “இல்ல நான் வாங்கிட்டே போறேன்” என்றார்.
“நான் சத்யதேவ் இல்ல.. ஜெயதேவ்”
“உங்க பேச்சில் இருந்தே தெரியுது” என்று பிடிவாதத்துடன் நின்றவரை பார்க்க அவனுக்கு வருத்தமாக இருந்தது. அந்த நொடி, தாங்கள் எந்தளவிற்கு அவரது மனதை காயப்படுத்தி இருக்கிறோம் என்பதை தெளிவாக புரிந்து கொண்டான்.
“ப்ளீஸ் மாமா.. அங்கே ஆத்மிகாவும் அத்தையும் தனியா இருக்காங்க.. சிஸ்டர் ரெண்டு பேர் தான் இருக்கலாம்னு சொல்லி மத்தவங்களை கிளம்ப சொல்லிட்டாங்க.. அம்மாவும் சத்யாவும் ரிசெப்ஷனில் உட்கார்ந்து இருக்காங்க” என்றவன், “உங்க மனசை ரொம்பவே காயப்படுத்தி இருக்கோம்னு புரியுது.. ரொம்ப சாரி.. முடிஞ்சா எங்களை மன்னிக்க முயற்சி செய்யுங்க.. இல்லைனாலும் என்னால் புரிஞ்சுக்க முடியும்.. ஆனா இப்போ நீங்க மேல போங்க ப்ளீஸ்” என்று பணிவுடன் கெஞ்சவே செய்தான்.
அவன் முகத்தை பார்க்காமல் மருந்து சீட்டை கொடுத்துவிட்டு இரண்டாவது தளத்திற்கு விரைந்தார்.