இரவு பதினொரு மணியை நெருங்கி கொண்டு இருக்க, வீட்டிற்கு செல்ல பெரிதாக நாட்டமின்றி ஃபுட்டீஸ் ஹெவன் உணவகத்தில் ஜெயதேவ் தனது அறையில் அமர்ந்து இருந்தான்.
ஆம் ஆத்மிகா இல்லாத வீட்டிற்கு செல்ல ஆர்வமின்றி அமர்ந்து இருக்கிறான். கடந்த இரண்டு மாதத்தில் அவனது மனம் அவளை அதிகம் தேடுகிறதில் அவனே பெரிதாக ஆச்சரியம் கொண்டான். இதற்கும் வீட்டில் அவளுடன் அவன் செலவழித்த நிமிடங்கள் சொற்பமே என்றதோடு அவனது அறையில் ஒருமுறை கூட அவளுடன் அவன் நேரத்தை கழிக்கவில்லை, இருப்பினும் அவளைத் தான் அவனது மனம் தேடுகிறது.
ஒரே நாளில் பிடித்ததை காதலாகி கசிந்துருகும் அளவிற்கு மாற்ற முடியுமா? என்று கேட்டால், ஜெயதேவ் ஆம் என்றே கூறுவான். ஆம், கல்யாணம் ஆன ஒரே நாளில் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தி ஜெயதேவின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து விட்டாள் அவனது ராங்கி பட்டாசு.
அவள் மீது இருக்கும் கோபங்களை மீறி அவள் மீதான விருப்பம் விருச்சமாக அவனுள் வளர்ந்து நிற்கிறது.
ஆனால் தனது மனதை சிறிதும் அவளிடம் அவன் வெளிப்படுத்தியது இல்லை என்றதோடு இப்போது வெளிப்படுத்தும் எண்ணமும் அவனுக்கு சிறிதும் இல்லை. அவளது படிப்பு முடிந்த பிறகு தனது காதலை கூறும் எண்ணத்தில் இருப்பவன் தனது காதலையும், தவிப்பையும், தேடலையும் தன்னுள்ளேயே புதைத்துக் கொண்டான்.
பத்து ஆண்டுகளாக உணர்ச்சிகளை கடந்து தன்னுள் இறுகியவனை, ஆத்மிகா மொத்தமாக புரட்டிப்போட்டு மாற்றி இருந்தாள். ஆசை, சிரிப்பு, மகிழ்ச்சி, அச்சம் என்று அவனது உணர்ச்சிகள் அனைத்தையும் தட்டி எழுப்பி இருந்தாள்.
ஆம்! அவளுடன் காதலுடன் ரசித்து வாழ ஆசை கொள்கிறான், அவளைப் பற்றி நினைத்தாலே உதட்டில் அவனது அனுமதி இன்றியே புன்னகை பூக்கிறது, அவளால் காதலிக்கப் படுவதை நினைத்து நினைத்து மகிழ்கிறான், எங்கே தனது கட்டுப்பாட்டை இழந்து காதலை அவளிடம் வெளிப்படுத்தி விடுவானோ என்று அச்சம் கொள்கிறான்.
எங்கே அவளிடம் பேசினால் தனது மனதை வெளிப்படுத்தி விடுவானோ என்ற அச்சத்தில் அவளுடன் சரியாக பேசுவதும் இல்லை. பாதி நேரம் அவளது அழைப்பை எடுக்காமல் விடுபவன் சில நேரம் எடுத்து இறுக்கத்துடனே பேசிவிட்டு வைத்து விடுவான். அவளது அழைப்பை தவிர்ப்பதற்கு மற்றொரு காரணமும் உண்டு. இவன் தொடர்ந்து இரு நாட்கள் அழைப்பை எடுக்கவில்லை என்றால் மூன்றாவது நாள் ஆத்மிகா தனது நண்பர்கள் அல்லது வானர பட்டாளத்துடன் உணவகத்திற்கு வந்துவிடுவாள். அவளை காணும் ஆசையிலேயே சில முறை அழைப்பை தவிர்த்து இருக்கிறான்.
சம்ருதிகா மருத்துவமனையில் இருக்கும் வரை மருத்துவமனை சென்று பூமணிக்கு துணையாக இருந்தவன் பிறர் அறியாமல் பார்வையால் ஆத்மிகாவைத் தொடர்வான். சம்ருதிகா வீட்டிற்கு சென்றதும் ஒருமுறை மட்டுமே அன்னையுடன் சென்றவன் அதன் பிறகு செல்லவில்லை. சம்ருதிகா மீது இருக்கும் கோபமே அதற்கு காரணம்.
அன்று, சம்ருதிகா கண் விழித்ததும் மருத்துவர் அவளை பரிசோதித்து எல்லாம் சரியாக இருக்கிறது என்ற பிறகு, பூமணி, சித்ரா மற்றும் ஆத்மிகா மட்டுமே அவளை பார்க்க அனுமதிக்கப் பட்டனர். மூவரும் பார்க்க சென்ற நேரம் சம்ருதிகா உறக்கத்திற்கு சென்று இருந்தாள்.
இவர்கள் பார்த்து விட்டு வந்த சிறிது நேரத்தில் சத்யதேவ் மற்றும் அன்னையை ஜெயதேவ் வீட்டிற்கு கிளம்ப கூறினான். சம்ருதிகாவை பார்க்க துடித்த சத்யதேவை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி இருந்தான்.
அன்று இரவு அவன் பூமணிக்கு துணையாக அங்கேயே இருந்து விட்டான். பூமணி கிளம்ப கூறியதை அவன் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. “என்னை உங்க மருமகனா பார்க்க முடியலைனா விடுங்க.. ஹாஸ்பிடலுக்கு வந்து இருக்கும் யாரோ ஒருத்தனா நினைச்சுக்கோங்க” என்று முடித்துவிட்டான்.
அவனது இருப்பு அவருக்கு தனி பலம் தந்தது உண்மை தான் என்றாலும் அதை அவர் காட்டிக் கொள்ளவில்லை. அவனும் அதை எதிர்பார்க்கவில்லை.
சத்யதேவ் சம்ருதிகாவை பார்ப்பதில் பூமணிக்கு கிஞ்சிதமும் விருப்பம் இல்லை. அவனது வருகையைக் கூட அவர் விரும்பவில்லை என்பது தான் உண்மை. அதை உணர்ந்த ஜெயதேவ், மெல்ல பூமணியை சமாதானம் செய்ய முயற்சிப்பதாக கூறியே தம்பியின் வரவை தடுத்து நிறுத்தி இருந்தான்.
ஆம் அடுத்த நாள் வந்த சத்யதேவிடம் பூமணி, “ப்ளீஸ் என் பொண்ணை நானே பார்த்துக்கிறேன்” என்று கூறி மறைமுகமாக அவனை வர வேண்டாம் என்று கூறிவிட்டார்.
அவன் பாவமாக தமையனைப் பார்க்க, அவனது தோளை தட்டிக் கொடுத்த ஜெயதேவ், ‘பார்த்துக்கலாம்.. இப்போ கிளம்பு’ என்பது போல் செய்கை செய்தான். சத்யதேவும் வேறு வழி இல்லாமல் தவிப்பும் ஏமாற்றமுமாக கிளம்பி சென்றுவிட்டான்.
திருமணம் முடிந்த அடுத்த நாள் இரவு தான் விஷயம் அறிந்து வேலவனும் விசாலாட்சியும் மருத்துவமனைக்கு வந்தனர்.
“எங்க கிட்ட சொன்னா என்ன! அந்த அளவுக்கா வேண்டாதவங்களா போயிட்டோம்!” என்றபடி தான் விசாலாட்சி வந்தார்.
“அப்படி எல்லாம் இல்லை க்கா” என்று பூமணி கூற,
ஜெயதேவ் தான், “ஏன் அத்தை! மாமா பத்தி உங்களுக்கு தெரியாதா! நேத்து இருந்த நிலைமையில் எங்களையும் தான் கூப்பிடலை.. அந்த நேரத்தில் பொண்ணை பத்தி கவலை பட்டு பிராத்தனை செய்துட்டு இருப்பாங்களா! உங்களுக்கு போன் போடணும்னு நினைப்பாங்களா?” என்றான்.
“உன் மாமனாரை நான் எதுவும் சொல்லலப்பா”
“இப்பவும் மாமா சொல்லித் தான் நான் உங்களுக்கு போன் போட்டேன்.. சார்ஜ் இல்லாம செல் ஸ்விட்ச் ஆஃப் ஆகிடுச்சு.. உங்களுக்கு சொல்லணும்னு சொல்லிட்டு இருந்தாங்க.. அதான் நான் சொன்னேன்”
லேசாக சிரித்த விசாலாட்சி, “டேய்! எனக்கு உன்னையும் தெரியும்.. அவனையும் தெரியும்” என்றார்.
அப்பொழுதும் மிடுக்குடன், “அதான் தெரியுது தானே! அப்புறம் எதுக்கு இந்த பேச்சு?” என்றான்.
“அது அப்படி தான்” என்று அவர் கூற,
வேலவன், “நீ சம்ருவை பார்க்க வந்தியா! வாயாட வந்தியா?” என்று கேட்டு, அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
சம்ருதிகா பற்றி விசாரித்த பிறகு, “சித்ராவும் ஆத்மியும் எங்க?” என்று கேட்டார்.
“இப்போ தான் வீட்டில் விட்டுட்டு வரேன்.. ” என்று ஜெயதேவ் கூறினான்.
வேலவன், “சம்ருவை ரூமுக்கு ஷிப்ட் செய்ற வரை நமக்கு ஒரு ரூம் கேட்க முடியாதா?” என்று கேட்டார்.
பூமணி, “ஹாஸ்பிடலில் எப்படி அத்தான்?” என்று கூற,
ஜெயதேவோ, “பொதுவா அப்படி தர மாட்டாங்க.. நான் எனக்கு தெரிந்தவர் மூலம் ஹாஸ்பிடல் டீன் கிட்ட கேட்டு இருக்கிறேன்.. நாளைக்கு காலையில் ரூம் தர வாய்ப்பு இருக்குது” என்றான்.
ஜெயதேவின் ஒவ்வொரு செயலிலும் அவனது அக்கறையும், எதையும் ஆராய்ந்து சிந்தித்து செயல் படும் விதமும் பூமணிக்கு புரிகிறது தான். இவன் மீது தவறு இல்லை என்பதும் புரிகிறது தான். முன்தினம் இருந்த கோபமும் வெறுப்பும் இப்போது இவன் மீது இல்லை என்றாலும் இயல்பாக பேச முடியாமல் ஏதோ ஒன்று அவரை தடுக்கிறது. ஆனால் அவரது தயக்கத்தை பொருட்படுத்தாமல் அவன் இயல்பாகத் தான் பேசுகிறான்.
அன்று இரவு பூமணிக்கு துணையாக வேலவன் தங்குவதாக கூற, “இல்லை மாமா.. உங்களுக்கு மூட்டுவலி இருக்குது.. உங்களால் சேரில் உட்கார்ந்து தூங்க முடியாது.. நான் பார்த்துக்கிறேன்” என்று கூறி அவரை அனுப்பி வைத்துவிட்டு அவன் தான் அன்றும் தங்கினான்.
அன்று மட்டுமில்லை சம்ருதிகாவை தனி அறைக்கு மாற்றும் வரை பூமணிக்கு துணையாக மருத்துவமனையில் தான் தங்கினான்.
அவன் கூறியது போல் அடுத்த நாள் அவர்களுக்கு தனி அறை ஒதுக்கப்பட, சித்ராவும் ஆத்மிகாவும் அன்று தங்குவதாக கூற,
ஜெயதேவோ, “சம்ருதிகா ரூமுக்கு வந்த பிறகு தங்குங்க.. இப்போ உங்க உதவி அவங்களுக்கு தேவைப்படாது.. ஸோ வீட்டுக்கு கிளம்புங்க.. வேலவன் மாமாவும், விசா அத்தையும் உங்களுக்கு துணைக்கு இருப்பாங்க” என்று திட்டவட்டமாக கூறி விட்டான்.
ஆத்மிகா, “நாங்களே இருந்துப்போம்.. இத்தனை வருஷம் இருக்கிற வீடு தானே!” என்று முறுக்கிக்கொள்ள,
பூமணி கூட, ‘அவர்கள் எதற்கு?’ என்பது போல் தான் பார்த்தார்.
ஆத்மிகாவின் மறுப்பை பொருட் படுத்தாதவன் பூமணியிடம், “நம்ம வீட்டு பொண்ணு மேல தப்பு இல்லை தான், ஆனா சத்யா பேச்சில் இருந்து அந்த ஞானவேல் வீட்டில் நம்ம பொண்ணு மேல கோபமா இருப்பதா தான் தெரியுது.. வீட்டுக்கு வந்து கலாட்டா செய்ய வாய்ப்பு இல்லை தான்.. இருந்தாலும் நாம பாதுகாப்பா இருப்பது நல்லது தானே! எதுக்கு ஆண் துணை இல்லாம தனியா இருந்துட்டு!” என்றான்.
அதற்கு மேல் பூமணி மறுக்கவில்லை.
ஆத்மிகா முறைத்தபடி கிளம்ப, அதை கண்டு கொள்ளாதவன், “கவனத்துடன் ஜாக்கிரதையா இருக்கணும்.. ஏதும்னா போன் செய்” என்று கூறியே அனுப்பினான். அவள் முறைப்புடன் உதட்டை சுளித்துவிட்டு சென்றாள்.
அங்கே அனைத்திலும் அவனது முடிவுகள் தான் செயல்படுத்தப்பட்டு கொண்டிருந்தது. அதை பூமணியும் உணர்ந்தார் தான். ஆனால் அவன் கூறுவது அனைத்தும் சரியாக இருக்கும் போது அவரும் தான் எப்படி மறுப்பதாம்!
இந்த மூன்று நாட்களிலேயே அவனது ஆளுமையையும் குணத்தையும் நன்றாக அறிந்து கொண்டார். இந்த சிறு வயதிலேயே தனிப்பட்ட முயற்சியில் மட்டுமே எப்படி இந்த உயரத்திற்கு சென்று வெற்றிக்கனியை சுவைத்தான் என்பதும் புரிந்தது.
அவருக்கு பக்கபலமாக இருப்பதோடு, தம்பிக்காகவும் அன்னைக்காகவும் ஆதரவாக அவன் ஒரு வார்த்தை பேசாததில் இருந்து அவனது நேர்மையும் புரிய, கூடவே அவர்களை விட்டுக் கொடுக்காமல் தன்னையும் சேர்த்தே மன்னிக்குமாறு கேட்டதில் இருந்து அவனது பாசபிணைப்பும் புரிய, அவன் மீது மதிப்பும் மரியாதையும் கூடியது.