பூமணி மனதளவில் திடமாகும் வரை அனேக நேரம் அவருடனேயே மருத்துவமனையில் இருந்தவன், அதன் பிறகு மாலையில் மட்டும் வர ஆரம்பித்து அவருடன் தங்கினான்.
சம்ருதிகா தனி அறைக்கு மாற்றப்பட்டதும் தனது வருகையை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என்றும், வாரத்திற்கு ஒரு முறை என்றும் குறைத்துக் கொண்டவன் அவள் வீட்டிற்கு சென்றதும் மொத்தமாக நிறுத்திக் கொண்டான். அதுவும் ஆத்மிகா கல்லூரிக்கு சென்றிருக்கும் நேரத்தில் தான் சென்று வருவான்.
இதற்கிடையில் ஜெயதேவ், வேலவன் மற்றும் விசாலாட்சி மூலம் சொந்தங்கள் மத்தியில், ‘சம்ருதிகா ஒரு உயிரை காப்பாற்ற சென்ற இடத்தில் விபத்து நேர்ந்து விட்டது’ என்ற உண்மையை பரவச் செய்து அவள் மீது நல் எண்ணத்தை விதைத்து இருந்தான். அன்று தப்பாக பேசியவர்களே இன்று அவளுக்காக பரிதாபப்படுவதும், ஆதரவாகவும் சற்று பெருமையாகக் கூட பேசுகின்றனர். இதை அவன் அவளுக்காக செய்யவில்லை, பூமணி என்ற நல்ல மனிதருக்காக செய்து இருந்தான்.
சம்ருதிகா சற்று தேறி வந்த பிறகு ஆத்மிகாவின் வாழ்க்கையை நினைத்து சித்ரா பெரிதும் கலங்க, பூமணிக்கும் அந்த தவிப்பு இருந்தாலும் தானே சென்று பேச சற்று தயக்கமாக இருந்தது.
ஆனால் ஜெயதேவிற்கு எந்த வித தயக்கமும் இல்லை. ஒரு நாள் அவனே பூமணியை அழைத்து பேசிய போது, “இந்த செம் எக்ஸாம்ஸ் இன்னும் ஒரு வாரத்தில் ஆரம்பிக்குது தானே.. எக்ஸாம் நேரத்தில் இட மாற்றம், உங்களை பற்றிய கவலைனு அவ கஷ்டப்பட வேண்டாம்.. படிப்பு பாதிக்கப்பட வேண்டாம்.. அடுத்த செம் ஆரம்பிக்கும் போது ஒரு நல்ல நாள் பார்த்து கூட்டிட்டு வாங்க” என்று கூறினான்.
அதன் பிறகே நிம்மதி அடைந்த சித்ரா அன்று மட்டுமின்றி அந்த வாரம் முழுவதும் ஜெயதேவ் புகழ் பாடி தள்ள, ஆத்மிகாவோ அவனை மனதினுள் வறுத்துக் கொண்டு இருந்தாள். அவன் தன்னை தவிர்ப்பதால் வந்த கோபம் அது.
இவர்கள் நிலை இப்படி இருக்க, சம்ருதிகா மீதான காதலை உணர்ந்து இருந்த சத்யதேவின் நிலை தான் மோசமாக இருக்கிறது.
சத்யதேவை சம்ருதிகாவை பார்க்கவே பூமணி அனுமதிக்கவில்லை. கோபமாக பேசி இருந்தால் கூட சத்யதேவ் மீறி இருப்பானோ என்னவோ! தன்மையுடன் தனது மறுப்பை வெளிப்படுத்துபவரிடம் எதுவும் பேச முடியாமல் திரும்பி வந்து விடுவான்.
ஜெயதேவ் அவனுக்கு பரிந்து பேசவில்லை என்றதோடு அவனுமே தமையனை இதில் இழுக்க விரும்பவில்லை.
சம்ருதிகாவை வீட்டிற்கு அழைத்து செல்லும் முன்தினம் மருத்துவமனைக்கு சென்ற சத்யதேவ் பூமணியிடம், “ஒரே ஒரு முறை அவளை பார்க்க விடுங்க ப்ளீஸ்.. ரத்த வெள்ளத்தில் அவளை என் கைகளில் ஏந்தியது தான் இன்னும் என் கண்ணுக்குள்ளேயே நிற்குது.. ப்ளீஸ் ஒரே ஒரு முறை அவளை பார்த்துட்டு போயிடுறேன்.. அவ என்னை பார்க்கிறதை தானே நீங்க விரும்பலை.. அவ தூங்கும் போது பார்த்துட்டு, டிஸ்டர்ப் செய்யாம அமைதியா போயிடுறேன்.. அவ நல்லா இருக்கிறதை எனக்கு பார்க்கணும்.. ப்ளீஸ்” என்று கெஞ்சியபோது மறுக்க முடியாமல் சம்ருதிகா உறங்கிக் கொண்டு இருந்த போது பார்க்க அனுமதித்தார்.
இரண்டு நிமிடங்கள் அவள் முகத்தை தன்னுள் நிறைத்துக் கொண்டவன் கலங்கிய கண்களை யாருக்கும் காட்டாமல் வெளியேறிவிட்டான்.
அதன் பிறகு அவளை பார்க்க முடியாமல் பெரிதும் தவித்துக் கொண்டு தான் இருக்கிறான்.
தம்பியின் தவிப்பு புரிந்தாலும் இப்பொழுது எதுவும் செய்ய முடியாத நிலை என்பதால் ஜெயதேவும் அமைதியாகத் தான் இருக்கிறான்.
இப்படி ஒருத்தன் தனக்காக உருகி தவிக்கிறான் என்பதை அறியாத சம்ருதிகாவோ கடந்த இரண்டு மாதங்களில் முற்றிலும் அமைதியாகிப் போனாள்.
மருத்துவர், “அவங்களுக்கு ஸ்ட்ரெஸ் கொடுக்காதீங்க” என்று கூறி இருக்க, யாரும் நடந்ததைப் பற்றி அவளிடம் பேசவில்லை.
அவள் சுயநினைவு வந்து குற்ற உணர்ச்சியுடன் அழுதபடி மன்னிப்பு கேட்ட போதும், பூமணி, “விடு மா.. நீ நல்லது தான் நினைச்சனு அப்பாக்கு புரியுது.. இப்போ எதைப் பற்றியும் யோசிக்காம உடம்பை கவனி.. அப்பாக்கு நீ தான் முக்கியம்” என்று முடித்துவிட்டார்.
அதில் அவளுக்கு நிம்மதி தான் என்றாலும் தந்தைக்கு தன்னால் ஒரு தலை குனிவு என்ற குற்ற உணர்ச்சி இருக்கிறது தான். ஆத்மிகா சொல்வது போல் தந்தை பாசமானவர் தான் என்பதை இந்த நாட்களில் நன்றாக புரிந்து கொண்டாள்.
மருத்துவமனையில் இருந்தவரை அதிக நேரம் மருந்தின் வீரியத்தில் உறக்கத்திலேயே தான் அவளது நேரம் சென்றதால் பெரிதாக எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. யாரும் கல்யாணத்தன்று நடந்ததை பற்றியே பேசாததால், சத்யதேவ் கூறிய காதல் கதை பொய்யாக புனையப்பட்ட கதை என்றதும் தெரியவில்லை, ஜெயதேவ் ஆத்மிகா திருமணமும் அவளுக்குத் தெரியவில்லை.
பாதி நேரம் மயக்கத்திலோ உறக்கதிலோ இருப்பதால் ஆத்மிகாவின் தாலியை அவள் கவனிக்கவும் இல்லை. அது மட்டுமின்றி ஆத்மிகாவும் அங்கேயே இருந்ததால் அவளுக்கு எந்த வித்யாசமும் தெரியவில்லை.
அவ்வபோது கல்யாணம் நின்றதாக நினைத்து, ஜெயதேவிற்காக கவலை கொண்டவளுக்கு என்ன நடந்தது என்று யாரிடமும் கேட்கும் துணிவு தான் இல்லை. அவள் விழித்து இருந்த நேரம் இரண்டு முறை ஜெயதேவ் அறையினுள் வந்த போது, அவன் முகத்தை பார்க்க தைரியமின்றி கண்களை மூடி தூங்குவது போல் இருந்து கொண்டாள்.
வீட்டிற்கு வந்து ஒரு வாரம் கடந்த நிலையில் சம்ருதிகா சற்று தேறிய பிறகே, மெல்ல ஆத்மிகாவின் திருமணம் பற்றி அவளிடம் சொல்லப்பட்டது. ஆள்மாறாட்டம் பற்றி எதுவும் கூறாமல் கல்யாணத்தை பற்றி மட்டுமே கூறினர்.
தங்கையின் கல்யாணத்தில் பெரிதும் அதிர்ந்தவள் தங்கைக்காக வருந்தி கலங்கித் தவித்தாள். தன்னால் தான் தங்கைக்கு இந்த நிலை என்ற குற்ற உணர்ச்சி அவளை பெரிதும் தாக்கியது.
அழுகையுடன் ஆத்மிகாவிடம் மன்னிப்பை வேண்ட, அவளோ புன்னகையுடன், “நீ பீல் செய்ற அளவுக்கு எதுவுமே நடக்கலை.. நான் அவரை விரும்பித் தான் கல்யாணம் செய்துக்கிட்டேன்.. கல்யாணத்துக்கு முன்னாடி அவர் மேல எனக்கு ஒரு பிடித்தம் இருந்தது.. இப்போ அது காதலா மாறி இருக்குது” என்றபோது அவளது கண்களில் காதல் வெளிப்பட்டது.
அதில் நிம்மதி கொண்ட சம்ருதிகா தயங்கிய குரலில், “அவருக்கு உன்னை பிடிக்குமா?” என்று கேட்டாள்.
ஆனால் அதில் நம்பிக்கை இன்றி, “அப்புறம் ஏன் இங்கேயே இருக்க?” என்று கேட்டாள்.
“நீயே இப்போ தானே வீட்டுக்கு வந்து இருக்க.. இந்த செம் முடிந்ததும் ஒரு நல்ல நாளில் அங்கே போயிடுவேன்.. அப்புறம் என்னோட தொல்லை இல்லாம நீ தனிகாட்டு ராணியா ராஜாங்கம் செய்யலாம்” என்று கூறி கண் சிமிட்டினாள்.
முறைப்புடன், “நீ எனக்கு தொல்லையா!” என்ற சம்ருதிகா, “உன்னை மிஸ் பண்ணுவேன்” என்று சிறிது சோகத்துடன் கூறினாள்.
“எனக்கு தெரியாதா! சும்மா கலாட்டா செய்தேன்”
“நிஜமாவே அவருக்கும் உன்னை பிடிக்கும் தானே! ஏன் கேட்கிறேனா! அவர் உன்னை வந்து பார்க்கிறதே இல்லையே!”
“நீ ஹாஸ்பிடலில் இருக்கும் வரை அப்பாக்கு ஃபுல் சப்போர்ட் அவர் தான்.. சேர்த்து வச்சு இப்போ வொர்க்கில் பிஸி”
அப்பொழுதும் சிறு சந்தேகத்துடன், “எனக்காக சொல்லலையே!” என்று தான் கேட்டாள்.
“உனக்கு மட்டும் இப்படி ஆகாமல் இருந்து இருக்கலாம்.. மற்றபடி அந்த ஞானம் இல்லாத ஞானவேல் எனக்கும் அவருக்கும் நல்லது தான் செய்து இருக்கிறான்” என்றாள்.
அவனது பெயரை கேட்டதும் சட்டென்று சம்ருதிகாவின் முகம் சுருங்கியது. கூடவே, “இறந்தவங்களை கிண்டல் செய்து பேசாத ஆத்மி” என்று வேறு கூறினாள்.
ஆத்மிகா சிறு தோள் குலுக்கலுடன் அதை விட்டு விட்டாள் ஆனால் சம்ருதிகாவினால் அப்படி கடக்க முடியவில்லை.
ஞானவேலின் இறப்பு அவளை பெரிதும் பாதிக்கிறது என்பது தான் உண்மை. தன்னால் தான் அவன் இறந்துவிட்டான் என்ற குற்ற உணர்ச்சி அவளை அரித்து கொண்டு இருக்கிறது. ஞானவேல் அன்னை பேசியது அவளது காதில் ஒலித்துக் கொண்டே இருக்க, அவ்வபோது அவள் கண்ட ஞானவேலின் இறுதி நொடியும் அவளை வதைக்கிறது. இதைப் பற்றி யாரிடமும் அவள் பகிராததால் அவளது குற்ற உணர்ச்சி கூடிக் கொண்டே வருவதோடு அவளுக்கு ஒருவித மன அழுத்தத்தையும் தருகிறது. அதன் விளைவு, பெரும்பாலான நேரம் அமைதியாகவே இருக்கிறாள்.
ஞானவேல் தன்னைப் பற்றி மட்டும் யோசித்து தனது முடிவை அவனே தேடிக் கொண்டான். அதனால் இருப்பவர்கள் தான் வேதனையையும் வலியையும் அனுபவிக்கிறார்கள்.
அவன் உயிருடன் இருந்த போதும் காதலிக்க சொல்லியும், ‘நீ இல்லாமல் என்னால் உயிர் வாழவே முடியாது’ என்று கூறியும் சம்ருதிகாவிற்கு அழுத்தம் கொடுத்தான். இறந்த பிறகும் அவளுக்கு குற்ற உணர்ச்சியை கொடுத்து கஷ்டப்படுத்துகிறான்.
நாம் விரும்பும் நபர் நம்மை விரும்பவில்லை என்றால், அவரை தொந்தரவு செய்யாமல் விலகி இருந்து, அவரது நல்வாழ்வை விரும்புவது தானே உண்மையான காதலுக்கு அழகு! அதை செய்யத் தவறிய ஞானவேலால் அவதிப்படுவது சம்ருதிகா தான்.
பொதுவாகவே சம்ருதிகா அமைதி தான் என்றதோடு விபத்திற்கு பிறகு அவளது பேச்சும் குறைந்து இருக்க, அவளது இந்த மௌனம் கவனிக்கபடாமலேயே போனது. ஆத்மிகாவிற்கு தேர்வு நேரம் என்றதோடு அவளது எண்ணம் அவளவனை பற்றியே இருப்பதாலும் அவளும் கவனிக்க தவறினாள்.