அந்த இரவு நேரத்தில் மறைகாணி பதிவின் வழியே உணவகத்தை பார்த்து கொண்டிருந்த ஜெயதேவின் முகம் குறிப்பிட்ட ஒரு மேசையை பார்த்ததும் மலர்ந்தது. அது வெற்று மேசையாக தான் காட்சி அளிக்கிறது, ஆனால் அவனது மனக்கண்ணில் அவனது ராங்கி பட்டாசு தோன்றினாள்.
அவனது எண்ண ஓட்டம் இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்றது.
அன்று காலை பதினொரு மணிக்கு தோழி ரூபாவதியுடன் உணவகத்திற்கு வந்த ஆத்மிகா அந்த மேசையில் தான் அமர்ந்தாள். சிறிது நேரம் கழித்தே அவளுக்கு ஜெயதேவ் உணவகத்தில் இல்லை என்பது தெரிய வந்தது. உடனே அவனை கைபேசியில் அழைத்துவிட்டாள்.
பொதுவாக அவள் இந்த நேரத்தில் அழைத்தது இல்லை என்றதால் ஜெயதேவும் அழைப்பை தவற விடாமால் எடுத்தான்.
அவன் அழைப்பை எடுத்ததும், “நீ எங்க இருக்க?” என்று தான் கேட்டாள்.
“ஃபார்ம்(farm) வந்து இருக்கிறேன்.. ஏன்?” என்று தனது தவிப்பை மறைத்தபடி கேட்டான்.
“ஓ!” என்று சுருதி இறங்கியபடி அவள் கூறவும்,
“ரெஸ்டாரென்ட் வந்து இருக்கிறியா?” என்று கேட்டான்.
“நான் எதுக்கு அங்க வரணும்? அதுவும் என்னைப் பற்றி நினைப்பே இல்லாத உன்னை பார்க்க ஏன் நான் வரணும்?”
உதட்டோர புன்னகையுடன், “சரி எதுக்கு போன் போட்ட?” என்று கேட்டான்.
இத்தனை நாட்கள் ஓரிரு வார்த்தைகளில் பேச்சை முடித்து விடுபவனின் மனம் இன்று அவனையும் மீறி அவளுடன் பேச விளைந்தது. இந்த நேரத்தில் வந்த அழைப்பில் ‘என்னவோ ஏதோ!’ என்று பதற்றம் கொண்ட அவனது மனம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள நினைத்ததோ!
“ஹன்.. போனில் பேலன்ஸ் இருக்கானு செக் பண்ண போன் போட்டேன்”
இடத்தை சுற்றி பார்த்தவள், நினைவு வந்தவளாக நெற்றியில் அடித்தபடி, “மொபைலில் சிசிடிவி புட்டேஜ் பார்த்துட்டு இருக்கியா?” என்று கேட்டாள்.
ஆம் அவள் உணவகம் வந்திருப்பதை அறிந்ததும் ஆள் அரவமற்ற இடத்திற்கு சென்றவன் செவிபொறி மூலம் பேசியபடி மறைகாணி பதிவை திறந்து இருந்தான். அவள் உடுத்தி இருக்கும் சல்வாரில் புத்தரின் படம் இருக்கவே, ‘ஆத்மிக புத்தரே!’ என்று அழைத்து இருந்தான்.
“பல்ப் எரிஞ்சு கொண்டையை கண்டு பிடிச்சுட்டீங்க போலவே!” என்றவனின் குரல் அவனையும் மீறி மகிழ்வை வெளிப்படுத்த, அதை அவளும் கண்டு கொண்டாள்.
அந்த நேரத்தில் இவர்களை சேர்த்தே நான்கு மேசையில் தான் ஆட்கள் அமர்ந்து இருந்தனர். அதுவும் இவளுக்கு பின் புறம் இருந்த மேசைகளில் தான் ஆட்கள் இருந்தனர்.
பார்வையை சுழற்றியவள் அவளுக்கு முன்பு யாரும் இல்லை என்றதும், “எனக்கு நேரா இருக்கிற கேமராவை பாரு” என்றவள் அந்த மறைகாணியை நோக்கி கண்ணடித்தபடி உதட்டை அசைத்து முத்தம் கொடுத்து இருந்தாள்.
‘எதுக்கு?’ என்று கேட்க வந்தவன் அப்படியே அசைவற்று நின்றுவிட்டான்.
“ஹெலோ மிஸ்டர் கேகே! லைனில் இருக்கிறீங்களா?” என்று கிண்டலுடன் அவள் வினவ,
சட்டென்று சுதாரித்தவன், “இருக்கிறேன்.. சொல்லு.. எதுக்கு அந்த கேமரா பார்க்க சொன்ன? இங்க ஒருத்தர் கிட்ட பேசிட்டு இருந்தேன்” என்று சமாளித்தான்.
“அப்போ நீ கேமரா பார்க்கலை!” என்று இழுத்தவள், “இப்போ பாரு” என்றுவிட்டு மீண்டும் கண்ணடித்தபடி உதட்டை அசைத்து முத்தம் கொடுக்க, அவன் மனம் சிறகுள் இன்றி அவளிடம் பறந்து சென்றுவிட்டது.
“ஹெலோ”
“ஹ்ம்ம்”
“இப்பவும் பார்க்கலையா?” என்று குறும்பு புன்னகையுடன் வினவ,
“ராங்கி பட்டாசு” என்று அவனையும் அறியாமல் சற்றே கரகரத்த குரலில் கூறி இருந்தான்.
அடுத்த நொடியே சுதாரித்தவன், “இதோ வரேன்” என்று சத்தமாக கூறிவிட்டு அவளிடம் பேச வாய் திறக்கும் முன்,
“என்ன வேலை வந்துடுச்சா?” என்று கிண்டல் குரலில் கேட்டு இருந்தாள்.
அவள் தன்னை கண்டு கொண்டதை அறிந்தும் அறியாதவன் போல், “ஆமா.. நான் வைக்கிறேன்” என்றான்.
அவள் புன்னகையுடனே, “சரி.. சரி.. ஆளே இல்லாத கடையில் டீ ஆத்தப் போங்க” என்றாள்.
வைக்கும் முன், “இனி இப்படி செய்யாதே!” என்று அவன் கூற,
அவளோ அறியாதவள் போல், “எப்படி?” என்று கேட்டாள்.
“உனக்கு தெரியும்னு எனக்கு தெரியும்” என்றவன் கடின குரலில் மீண்டும், “இனி இப்படி செய்யாத” என்றான்.
“அப்போ நம்ம ரூமில் ஓகேயா? ஆனா அங்க இப்படி எல்லாம் தர மாட்டேன்” என்றவள், “எப்படி தருவேன்னு சொல்லவா?” என்று கிசுகிசுப்பான குரலில் வினவ,
வரவழைத்த கடின குரலில், “ஆத்மிகா! மனசை கண்டபடி அலைபாய விடாம நாளானைக்குள்ள எக்ஸாமுக்கு ஒழுங்கா படிக்கிற வேலையை மட்டும் பாரு” என்று கூறி அழைப்பை துண்டித்துவிட்டான்.
அவனது கடின குரலில் சிறிதும் பாதிக்கப்படமால் அவள் புன்னகையுடன் தான் கிளம்பினாள்.
“லவ் பண்றவங்களுக்கு பிரெண்ட்டா மட்டும் இருக்க கூடாதுனு ஏன் சொல்றாங்கனு இப்போ தான்டி புரியுது” என்று புலம்பிய தோழியை கண்டு கொள்ளாமல் அன்று முழுவதும் மகிழ்ச்சியுடன் தான் சுற்றினாள்.
அன்று ஜெயதேவ் மனதை கட்டுக்குள் கொண்டு வர சற்றே சிரமபட்டான் தான். ஏன் இன்று கூட அதை நினைத்து பார்க்கும் போதே அவனது மனம் ஜிவ்வென்ற உணர்வுடன் இறகு போல் மிதக்கிறதே!
அன்று, அதற்கு மேல் பண்ணையில் கவனத்தை செலுத்த முடியாமல் உணவகத்திற்கு சென்றுவிட்டான். அவனது அறையை திறந்து உள்ளே சென்றவனை கீழே கிடந்த மெல்லிழைத் தாள் வரவேற்றது.
அதில் “4pm tomorrow” என்று எழுதி மறுநாள் மாலை நான்கு மணிக்கு வர போவதை அறிவித்து இருந்தாள். அந்த நேரத்தில் அவன் அங்கே இருக்க வேண்டும் என்ற மறைபொருளும் அடங்கி இருந்தது.
ஆனால் அவனோ இன்று அதிகமாக பேசிவிட்டதால் அவளை சற்று விலக்கி வைக்கும் எண்ணத்தில் வேண்டுமென்றே அவள் வரும் நேரத்தில் வெளியே சென்று விட்டு ஆறு மணிக்கு தான் வந்தான்.
அப்போதும் அவனை ஒரு மெல்லிழைத் தாள் வரவேற்றது.
அதில் இரு கோப முகவடிகளுக்கு இடையே “மங்கூஸ் மண்டையனுக்கு மண்டை கனம் ஜாஸ்தி” என்று எழுதி இருந்தாள்.
“ராங்கி பட்டாசு” என்று ரசனையுடன் கூறியவனின் முகம் புன்னகையில் விரிந்து வசீகரித்தது.
இன்றும் கூட இவற்றை நினைத்துப் பார்த்தவனின் அகமும் முகமும் மலர்ந்து விட, இதழ்களோ காதலுடன் ரசனையாக “ராங்கி பட்டாசு” என்று தான் முணுமுணுக்கிறது.