இரவு 11.45 மணிக்கு வீட்டிற்கு வந்த ஜெயதேவ் தன்னிடம் இருந்த சாவியை கொண்டு வீட்டை திறந்து உள்ளே வந்தான்.
கூடத்தில் அமர்ந்து இருந்த தாயை கண்டதும் கோப குரலில், “என்னமா இது!” என்றான்.
“ஒரு நாள் கண் முழிக்கிறதால் ஒன்னும் ஆகிடாது” என்றபடி எழுந்தவர், “இன்னைக்கு ரொம்ப தாமதம் ஆகிருச்சே!” என்றார்.
தாமதத்திற்கான காரணத்தை சொல்ல முடியாமல் முறைப்புடனே, “இனி இப்படி உட்காராதீங்க.. நேரத்துக்கு தூங்குங்க” என்றான்.
“நீயும் இனி இப்படி லேட்டா வராத” என்றவர், “பால் தரவா?” என்றார்.
“வேண்டாம் ம்மா” என்றவன், “ப்ளீஸ் இனி எனக்காக காத்திருக்காதீங்க” என்றான்.
‘சரி’ என்பது போல் தலை அசைத்து தனது அறைக்கு சென்றார்.
தனது அறை கதவை திறந்து உள்ளே சென்ற ஜெயதேவ் மெத்தையில் கண் மூடி படுத்திருந்த ஆத்மிகாவை கண்டு ஒரு நொடி அதிர்ந்து நின்று விட்டான். ‘அவளை பற்றியே நினைப்பதால் கற்பனையா நம்ம கண்ணுக்குத் தெரிகிறாளோ!’ என்று கூட அவனுக்குத் தோன்றியது.
அவன் கண்ணை மூடித் திறக்க, அங்கே அவள் இல்லை. ஆனாலும் அவனுக்கு சந்தேகம் தான். சத்தமின்றி மெல்ல நான்கு அடிகள் எடுத்து வைத்தவனின் கண்ணில் துப்பட்டாவின் முனை லேசாக தென்பட்டதும் தன்னவளின் கலாட்டாவில் சிரிப்பு வந்தது.
சிரிப்பை அடக்கியவன் தீர்க்கமான குரலில், “நான் கற்பனை உலகில் வாழ்பவன் இல்லை.. ஸோ உங்க டெஸ்ட் ஃபெயிலியர்.. வெளியே வாங்க மேடம்” என்றான்.
கட்டில் அடியில் இருந்து வெளியே வந்த ஆத்மிகா கிண்டலாக பார்த்தபடி, “அதான் கண்ணை கசக்கி பார்த்தீங்களா சார்?” என்றாள்.
“நான் சாதாரணமா தான் கண்ணை மூடித் திறந்தேன்”
“ஓ! ஆனா என்னோட டெஸ்ட் ஃபெயிலியர்னு எப்படி சொல்ற? நான் எதையும் ப்ரூவ் பண்ண டெஸ்ட் வைக்கலையே! நீ என்னை மிஸ் செய்தியானு தெரிந்துக்க நினைச்சேன்.. ரிசல்ட் நெகடிவ்வோ பாசிடிவ்வோ! ரிசல்ட்னு ஒன்னு வந்தாலே டெஸ்ட் சக்செஸ் தானே!”
“என்ன தெரிந்தது?”
“அது எதுக்கு உனக்கு?”
“என்னைப் பற்றி நீ தெரிந்து வைத்திருப்பது சரியானு தெரிந்துக்க தான்”
“தெரிந்து என்ன செய்யப் போற?”
“ஒன்னுமில்லை”
“அப்போ அது உனக்கு தேவை இல்லாத ஆணி.. அதை விடு” என்றவள், “ரெப்ரெஷ் ஆகிட்டு வா.. உன் கிட்ட பேசணும்” என்றாள்.
“ஆமா நீ என்ன வரதை பற்றி சொல்லவே இல்லை! அதுவும் எக்ஸாம் முடிஞ்ச அன்னைக்கே வந்து இருக்க! மாமாவும் அம்மாவும் கூட சொல்லலையே!”
“பார் டா! என் எக்ஸாம் இன்னைக்கு முடியுதுனுலாம் தெரிஞ்சு வச்சு இருக்க! ஸோ என்னைப் பற்றிய டிடேல்ஸ் பிங்கர் டிப்பில் வச்சு இருக்க!” என்றவள் அவனது பதிலை எதிர்பார்க்காமல், “நான் வரதைப் பற்றி உன் கிட்ட சொல்ல வேண்டாம்னு நான் தான் சொன்னேன்.. அவங்க கிட்ட சொன்ன ரீசன், உனக்கு சர்ப்ரைஸ்.. ஆனா உண்மையான காரணம், முன்னாடியே தெரிந்தால் என்னை வர விடாம செய்றதுக்கான சான்ஸை உனக்கு கொடுக்கக் கூடாதுனு தான் சொல்லலை” என்றாள்.
“நான் ஏன் உன்னை வர விடாம செய்யப் போறேன்?”
“அதை நீ தான் சொல்லணும்”
“நான் தான் அப்படி எதுவும் இல்லைனு சொல்றேனே”
“அப்படியா?” என்று சவாலிடும் குரலில் அவள் வினவ,
‘நம்புறதும் நம்பாததும் உன் இஷ்டம்’ என்பது போல் தோளை குலுக்கியவன் அலமாரியில் இருந்து துண்டையும் இரவு ஆடையையும் எடுத்துக் கொண்டு குளியல் அறைக்கு சென்று விட்டான்.
‘தள்ளி இருக்கும் போதே ஆட்டம் காட்டுவா! இனி எப்படி இவளை சமாளிக்க போறேன்! இன்னும் ஒரு செம் இருக்குதே! கிட்ட திட்ட ஆறு மாசத்தை ஓட்டனுமே!’ என்று மனதினுள் நினைத்தபடியே குளித்து முடித்து இரவு உடையில் வெளியே வந்தான்.
மனதின் போராட்டத்தை சிறிதும் வெளிக்காட்டாமல் மிடுக்குடன், “என்ன பேசணும்?” என்று கேட்டபடி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.
“இங்க வந்து உட்காரு” என்று மெத்தையில் தன் அருகே கை வைத்து காட்டினாள்.
“இப்படியே சொல்லு”
“பயப்படாத.. உன் கற்புக்கு நான் கேரன்ட்டி” என்று கண்சிமிட்டியபடி அவள் கூற,
‘ஆரம்பிச்சுட்டா!’ என்று மனதினுள் நினைத்தவன் வெளியே சற்றே உடலை முன் பக்கம் கொண்டு வந்து, “அடிங்க!” என்று மிரட்டுவது போல் கூறினான்.
“எதால் அடிப்ப?” என்று கண்ணில் குறும்புடன் அவள் வினவ,
அவளது பார்வையில் இருந்தே அவளது கேள்வியில் ஏதோ வில்லங்கம் இருப்பதை உணர்ந்து, “என்ன?” என்றான்.
‘அடபாவி!’ என்று மனதினுள் நினைத்தவன் வெளியே முறைத்தபடி வரவழைத்த கோப குரலில், “ஆத்மிகா!” என்றான்.
அவளோ அலட்டிக் கொள்ளாமல், “என்ன?” என்றாள்.
“என்ன பேச்சு இது?”
“நீ என் ஹஸ்பண்டு தானே!”
“அதுக்கு…”
“உன் கிட்ட இப்படி பேசலைனா தான் தப்பு”
“அப்படின்னு யாரு சொன்னா?”
“நான் தான்” என்றவள், “ஏன் உனக்கு என்னை பிடிக்காதா?” என்று சவாலிடும் பார்வையுடன் கேட்டாள்.
“பிடிக்கும் தான்.. ஆனா பிடித்தம் மட்டும் வாழ்க்கை ஆரம்பிக்க போதாது.. காதல் வேணும்”
“நான் வாழ்க்கையை இப்பவே ஆரம்பிக்கணும்னு சொல்லவே இல்லையே!” என்றபடி புருவத்தை ஏற்றி இறக்கினாள்.
பின், “ஸோ உனக்கு என் மேல் காதல் இல்லைனு சொல்ற!” என்று கேள்வியாய் நிறுத்தினாள்.
பொய் கூற மனமின்றி, “எனக்கு கொஞ்சம் டைம் கொடு” என்றான்.
‘சும்மா கூட இல்லைனு சொல்ல முடியலை.. கற்றாழை கண்ணழகன் சோ ஸ்வீட்’ என்று மனதினுள் அவனை கொஞ்சியவள் வெளியே தீர்க்கமான பார்வையுடன், “எவ்ளோ நாள்?” என்று கேட்டாள்.
“ஆறு மாசம்”
‘ஸோ என் படிப்புக்காக தான் உன் காதலை மறைக்கிற!’ என்று சரியாக அவனை கணித்தவள், “சரி.. ஆனா நான் இப்படி தான் பேசுவேன்.. உனக்கு தான் என் மேல் காதல் இல்லை.. எனக்கு உன் மேல வானம் அளவுக்கு காதல் இருக்குது.. ஸோ என் பேச்சு இப்படித் தான் இருக்கும்” என்று போதையூட்டும் காதல் பார்வையுடன் கூறினாள்.
‘கொல்றாளே ராங்கி பட்டாசு!’ என்று மனதினுள் புலம்பியவன், “என்ன பேசணும்?” என்று பேச்சை மாற்றினான்.
அவன் பேச்சை மாற்றுவது புரிந்தாலும் எதுவும் சொல்லாதவள் சட்டென்று பார்வையை மாற்றியபடி, “உனக்கு என் மேல என்ன கோபம்?” என்று கேட்டாள்.
“எனக்கு என்ன கோபம்?”
அவள் அவனை தீர்க்கமாக பார்க்க,
அவன், “ஹே! நிஜமாவே உன் மேல எனக்கு கோபம் எதுவும் இல்லை” என்று உண்மையாக தான் கூறினான்.
“இப்போ இல்லாம இருக்கலாம்.. ஆனா இருந்தது தானே?”
அவள் கேட்பது புரியவும், “ஹ்ம்ம்.. என்னை காதலிச்சுட்டு என் தம்பியை கல்யாணம் செய்ய எப்படி ஒதுக்கிட்டனு கோபம் இருந்தது.. அப்புறம் யோசிக்கும் போது உன்னோட சூழ்நிலை புரிஞ்சுது” என்றான்.
“சூழ்நிலை மட்டும் தான் புரிஞ்சுதா?”
அவன் புருவ சுளிப்புடன், “புரியலை” என்றான்.
“நீயும் அதையே தான் செய்தனு தோணலையா?”
தனது தடுமாற்றத்தை மறைத்தவன், “நான் உன்னை காதலிக்கலையே!” என்றான்.
“பிடித்தம் இருந்தது தானே!”
“அது மாமாக்காக சொன்னது” என்றவன் அவளது ஆழ்ந்த தீர்க்கமான பார்வையில் பொய் கூற விரும்பாமல், “ஓகே அப்பவே உன்னை எனக்கு பிடிக்கும் தான்.. ஆனா..” என்றவனின் பேச்சை இடையிட்டவள்,
“ஆனா ஆவன்னாலாம் தேவை இல்லை.. ரெண்டு பேரும் குடும்பத்துக்காக தான் செய்தோம்.. ஸோ அது டலி ஆகிடுச்சு.. ரைட்!” என்று கறாராக கூறினாள்.
வேறு வழி இல்லாமல் ‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்டியவன், “இன்னொரு கோபமும் இருந்தது.. நீ சத்யாவை அடித்தது தப்பு.. தனி ஒரு மனிஷியா உன் செயல் வேற.. ஆனா இந்த வீட்டோட மூத்த மருமகளா, ஹஸ்பண்டோட தம்பியை அதுவும் மாமியார் முன்னாடி அடித்தது ரொம்பவே தப்பு தான்..
ஆனா அம்மாவும் சத்யாவுமே அதை பெருசா எடுத்துக்கலை என்றதோடு நீயும் சின்ன பொண்ணு தானே, மெல்ல தான் குடும்ப பொறுப்பு வரும்னு விட்டுட்டேன்.. ஆனா இனி இப்படி செய்யாத” என்று கண்டிக்கும் குரலில் முடித்தான்.
சற்று யோசித்தவள், “ஓகே மாத்திக்க முயற்சி செய்றேன்” என்றாள்.
“முயற்சி தானா!” என்று அவன் முறைப்புடன் கூற,
“தப்புனா உடனே ரியாக்ட் செய்தே பழகிட்டேன்.. ஆனா நீ குடும்பத்துக்குள்ள இடம், பொருள், ஏவல் பார்த்து ரியாக்ட் செய்னு சொல்ற.. ஹ்ம்ம்.. மாத்திக்கிறேன்.. ஆனா சட்டுன்னு உடனே மாத்திக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்.. அதான் அப்படி சொன்னேன்” என்றவள், “மூத்த மருமகளா இந்த பொறுப்பு பருப்பெல்லாம் கொஞ்சம் கஷ்டம் தான் போல!” என்று முடிக்க, அவன் முறைத்தான்.
அவளோ அதை கண்டு கொள்ளாமல், “அப்புறம் உனக்கு யாரும் சைல்டு மேரேஜ் செய்து வைக்கலை” என்றாள்.
ஒரு நொடி விழித்தவன் பின் புரிந்ததும் உதட்டோர மென்னகையுடன், “நான் ஒன்னும் உன்னை குழைந்தைனு சொல்லலையே! சின்ன பொண்ணுனு தான் சொன்னேன்” என்றான்.
“சின்ன பொண்ணு இல்லைனு டெமோ காட்டட்டுமா?” என்று அவள் விஷம புன்னகையுடன் வினவ,