ஞாயிறு அன்று, அந்த நண்பகல் வேளையில் சூரியனின் அனல் வீச்சை தோற்கடிக்கும் அளவிற்கு சம்ருதிகா கொலைவெறியுடன் தங்கையை உக்கிரமாக முறைத்துக் கொண்டு இருக்க,
பார்வையை தொலைகாட்சியில் பதித்து இருந்த ஆத்மிகாவோ முறுக்கை உண்டுக் கொண்டே நீட்டியிருந்த கால்களை ஆட்டியபடி, “சும்மா முறைக்காம சமையல் கத்துக்கிற வேலையை பார்.. போற இடத்தில் உதவியா இருக்கும்” என்று கூற,
“பிசாசு.. பிசாசு” என்று கூறியபடி சம்ருதிகா அவளை அடிக்க ஆரம்பித்தாள்.
“இன்னும் என்னடி சின்ன பிள்ளைங்க மாதிரி சண்டை போட்டுட்டு இருக்கிறீங்க!” என்று சித்ரா சமையல் அறையில் இருந்து குரல் கொடுத்தார்.
“இவ தான்மா”, “இல்லை இவ தான்மா” என்று கூறியபடி சண்டையை சகோதரிகள் தொடர்ந்தனர்.
“அங்க வந்தேன்! ரெண்டு பேரையும் மொத்தப் போறேன்”
அன்னையின் பேச்சிற்கு செவி சாய்க்காமல் சண்டையிட்டு கொண்டிருந்த சகோதரிகள் அன்னை அங்கே வரவும் சண்டையை நிறுத்தி பிரிந்தனர்.
சம்ருதிகா இன்னும் தங்கையை முறைத்தபடி இருக்க, அவளோ சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் தொலைக்காட்சி அலைவரிசையை மாற்றிக் கொண்டு இருந்தாள்.
இருவரையும் முறைத்த சித்ரா, “மொட்டை மாடிக்கு போய் இந்த கூழ் வத்தல் போட்டுட்டு வாங்க” என்றபடி ஒருத்தி கையில் வெள்ளை வேட்டி மற்றும் கருப்பு குடையையும், இன்னொருத்தி கையில் பதமாக அரைத்த பழைய சாதத்துடன் சிறிதாக அறிந்த சின்ன வெங்காயமும், பச்சை மிளகாயும், உப்பும், காயமும் சேர்த்திருந்த கலவை அடங்கிய பாத்திரத்தை கொடுத்தார்.
இருவரும் ஒன்றாக அன்னையை முறைக்க,
அவரோ, “போய் போட்டுட்டு வாங்கடி” என்றுவிட்டு சமையல் வேலையை தொடர சென்றுவிட்டார்.
இருவரும் தலையில் மாட்டக்கூடிய சிறு குடையை அணித்துக் கொண்டு மொட்டை மாடிக்கு சென்று அன்னை கொடுத்த வேலையை செய்ய ஆரம்பித்தனர்.
கை அதுபாட்டுக்கு வேலையை செய்ய, “செய்றதை செய்துட்டு எப்படி இப்படி ஒன்னுமே தெரியாத பாப்பா மாதிரி இருக்க!” என்று சம்ருதிகா பொருமினாள்.
ஆத்மிகாவும் வேலையை செய்தபடியே, “படிச்சு முடிச்சுட்டு வெட்டியா தானே வீட்டில் இருக்க! இங்க சும்மா இருக்கிறதை வேற வீட்டுக்கு போய் செய்” என்றாள்.
“நான் வெட்டியா இருக்கிறேன்! இல்ல வேலையா இருக்கிறேன்! அதில் உனக்கு என்னடி பிரச்சனை?”
“இப்போ கல்யாணம் செய்துக்கிறதில் உனக்கு என்ன பிரச்சனை?” என்று கேட்டவள் கூர்விழிகளுடன் தமக்கையை பார்த்தபடி, “யாரையும் காதலிக்கிறியா?” என்று கேட்டாள்.
“இந்த லவ்வெல்லாம் எனக்கு செட் ஆகாது.. அதுவும் அப்பாவை எதிர்த்து! சான்சே இல்லை”
“மிஸ்டர் ப்ளவர் பெல் காதலுக்கு எதிரினு உனக்கு யார் சொன்னது?”
“அப்பாவோட கண்டிப்பில் இருந்தே தெரியலையா?”
“நீ அப்பாவை புரிஞ்சுகிட்டது அவ்ளோ தான்”
“ஆமா நீ தான் ரொம்ப புரிஞ்சுக்கிட்ட! போடி” என்றவள், “டாபிக் மாத்தாத” என்று முறைப்புடன் முடித்தாள்.
“இப்போ நீ லபோ திபோனு குதிக்கிறதாலோ, தலை கீழா நின்னாலோ, இல்லை என்னை மொத்துறதாலோ அப்பா முடிவை மாத்த முடியுமா?”
“எல்லாம் உன்னால் தான்”
“சும்மா புலம்பாம கல்யாணத்துக்கு மனசை தயார் செய்.. அதான் ஒரு வருஷம் ஹாயா காலை ஆடிட்டு உட்கார்ந்து இருந்துட்ட தானே!” என்றவள், “வேலைக்கு போக விருப்பம் இல்லைனா எதுக்குடி M.E வரை படிச்ச?” என்று கேட்டாள்.
அவள் முறைப்புடன், “எனக்கு படிக்க பிடிக்கும் படிச்சேன்” என்று கூற,
“என்ன டிஸைன்னோ” என்றவள் சிறு தோள் குலுக்கலுடன், “ஆல்ரைட்.. அது உன் விருப்பம்” என்று கூறி, “அப்பா உனக்கு கல்யாணம் செய்யாம உன்னை வீட்டோடவே வச்சுக்க போறாங்களா என்ன?” என்று கேட்டாள்.
“இப்பவே கல்யாண பேச்சை எடுத்து, இன்னைக்கே கிளம்பி தரகர் வீட்டுக்கு போய் இருக்க மாட்டாங்க” என்றவள், “எல்லாம் நீ வினய் பத்தி சொன்னதால் தான்.. அவன் உன்னை மாட்டி விட்டு ரெண்டு வாரம் ஆச்சு.. அதை அப்படியே விட வேண்டியது தானே பக்கி! எதுக்குடி பாலால் அவன் மண்டையை உடைச்ச! நீ மூடிட்டு சும்மா இருந்து இருந்தா, அவன் அப்பா வந்து சண்டை போட்டு இருக்க மாட்டார், நீயும் அவன் எனக்கு நூல் விட்டதை சொல்லி இருக்க வேணாம்.. அப்பாவும் கல்யாண பேச்சை ஆரம்பித்து இருக்க மாட்டாங்க” என்றாள்.
“அவன் என்னை மாட்டி விட்ட அன்னைக்கு அவனை தேடினாலும் பெருசா எதுவும் பிளான் செய்யலை.. அதான் அவன் என் கிட்ட சிக்கலைனதும் விட்டுட்டேன்.. ஆனா ஒன்னு.. இன்னைக்கு அங்கிள் வந்து பிரச்சனை செய்யலைனாலும் அப்பா கிட்ட இந்த விஷயத்தை நான் சொல்லி இருப்பேன்” என்றவள், “நீ சொல்லலைனா அவன் உன் கிட்ட இன்னும் வம்பு செய்துட்டு இருக்கது எனக்கு தெரியாதுனு நினைச்சியா!” என்று உதட்டை வளைத்தபடி முடிக்க,
சம்ருதிகா சிறு அதிர்வுடன், “உனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டாள்.
“இந்த தெரு முழுவதும் என்னோட விழுதுகள் இருக்கும் போது எனக்கு விஷயம் தெரியாம போகும்னு எப்படி நினைச்ச!”
“நம்ம தெருவில் வச்சு அவன் என் கிட்ட பேசவே இல்லையே!”
“சின்ன திருத்தம்.. அவன் உன் கிட்ட பேசலை.. உன்னை மிரட்டி இருக்கிறான், அதுவும் ரெண்டு முறை..
ரெண்டு நாள் முன்னாடி நீ அண்ணாச்சி கடைக்கு போனப்ப, ‘உன் தங்கச்சி என்ன பெரிய பருப்பா! உன்னை என் கிட்ட இருந்து எப்படி காப்பாத்துறானு பார்க்கிறேன்’ னு மிரட்டினவன் நேத்து நீ பிள்ளையார் கோவில் போற வழியில், ‘நான் சும்மா சொல்றேன்னு நினைக்காத.. நீ எனக்குத் தான்.. ஆமாடி நான் இன்னொரு பொண்ணை காதலித்தேன் தான் ஆனா இனி அந்த ஆண்டவனே நினைத்தாலும் உன்னை என் கிட்ட இருந்து யாரும் காப்பாத்த முடியாது.. நீ என்னைத் தான் கல்யாணம் செய்துக்கிற!’னு மிரட்டி இருக்கிறான்.. முதலில் மிரட்டியதை போண்டாவும், நேத்து மிரட்டியதை வவ்வாலும் என் கிட்ட சொன்னான்க..
நான் அவனை தைரியமா எதிர்கொள்வேன் ஆனா நீ!” என்று அரை நொடி நிறுத்தியவள், “என்ன தான் வேகம் இருந்தாலும் விவேகமும் இருக்கனும்.. அதான் இந்த விஷயம் அப்பா கிட்ட சொல்றது பெட்டர்னு எனக்கு தோனுச்சு.. அங்கிள் முன்னாடி அவன் வம்பு செய்தான்னு மட்டும் தான் சொன்னேன் ஆனா அப்பா கிட்ட தனியா அவன் பேசியது எல்லாத்தையுமே சொல்லிட்டேன்” என்று நீண்ட விளக்கத்தை முடித்தாள்.
[போண்டா – மணிகண்டன் என்ற பெயர் நம் ஆத்மிகாவினால் ‘போண்டா மணி’, ‘போண்டா’ என்று உருமாறி இருக்கிறது. அவனுக்கு 15 வயது.
வவ்வால் – கிஷோர் என்ற 16 வயது பையன் சர்வசாதரணமாக தலை கீழாக தொங்கும் திறமையால் இப்பெயரை பெற்றுள்ளான்.
ஆக இவளது VVS(வருத்தப்படாத வாலிபர்/வாலிபி சங்கம்) வானர கூட்டத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் 14யில் 17 வயதிற்கு உட்பட்ட பசங்க பொண்ணுங்க தான். அது என்ன வாலிபி-னு கேட்கப்பிடாது.. இது ஆத்மிகா கொடுத்த விளக்கம்]
சிலையாக அமர்ந்து இருந்த தமக்கையை உலுக்கியபடி, “வத்தல் கூட சேர்ந்து நீயும் வெயிலில் காய போறியா! நான் கீழ போறேன்” என்றவள் கீழே சென்றுவிட்டாள். பெருமூச்சை வெளியிட்ட சம்ருதிகாவும் கீழே சென்றாள்.