ஆத்மிகாவின் கல்லூரி விடுமுறை நாட்கள் வேகமாக நகர்ந்து நாளை கல்லூரி என்ற நிலையில் வந்து நின்றது.
இந்த நாட்களில் அந்த வீட்டின் இன்றியமையாதவளாக மாறி இருந்தாள். ஒரு இடத்தில் இருக்காமல் வண்ணத்துப்பூச்சியாய் சிறகடித்து பறந்து கொண்டே இருப்பவளால் அந்த வீடே வண்ணமயமாக மாறி இருந்தது.
மீனாட்சியுடன் சேர்ந்து லூட்டி அடிப்பது, சமையல் செய்கிறேன் என்று தினமும் புதிதாக எதையாவது செய்து சத்யதேவை சோதனை எலியாக மாற்றி இருந்தாள். அவனும் தன் காதலுக்கு உதவுவதாக அவள் கொடுத்த வாக்கிற்காக அவள் எள் எனும் முன் எண்ணெயாய் நிற்கிறான்.
ஆம், அவள் இங்கே வந்த இரண்டு நாட்களிலேயே சத்யதேவை அழைத்து, “சத்தியத்துக்கு வந்த சோதனை என்னவோ! வொய் திஸ் சோக கீதம்?” என்று கேட்டாள்.
“ஒன்னுமில்லையே அண்ணி”
“இல்லையே!”
“நானும் அதைத் தான் சொல்றேன்”
“அப்போ என்னை நீங்க இந்த வீட்டில் ஒருத்தியா நினைக்கலையா?”
“அய்யோ அண்ணி! அப்படி எல்லாம் இல்லை”
“அப்போ சொல்லுங்க”
“கோபப்பட கூடாது”
புருவ முடிச்சுடன் பார்த்தவள், “என்ன விஷயம்?” என்று கேட்டாள்.
முன்னெச்சரிக்கையாக அவள் அருகே இருந்த பூஜாடியை எடுத்துக் கொண்டவன், “சம்யுவை நான் விரும்புறேன்” என்றான்.
“சரி.. அதுக்கு ஏன் இந்த சோக கீதம்?” என்று வெகு சாதாரணமாக கேட்டவளை கண்கள் தெறித்து விடுவது போல் பார்த்தான்.
அன்று அவன் தன் தந்தையிடம் சம்ருதிகாவை பார்க்க கெஞ்சிய விதத்தில் இருந்தும், அவன் மறைத்ததாக நினைத்த அவனது கண்ணீரை கண்டதில் இருந்தே இதை யூகித்து இருந்தவளுக்கு இன்று அவனது கூற்று அதிர்ச்சியாக இல்லை.
முதலில் ‘இவ்வளவும் செய்து சமியை படுத்திவிட்டு காதல்னு வந்து நிற்பானாமா!’ என்ற கோபம் அவளுக்கு இருந்தது தான் ஆனால் இரண்டு நாட்கள் முன்பு(அதாவது இங்கே வந்த அன்று) ஜெயதேவ் சத்யதேவ் பற்றி பேசியதில் இருந்து, அந்த கோபம் மறைந்து விட்டது. சத்யதேவ் சம்ருதிகாக்காக தானே முன் வந்து தன் தவறுகளை ஒத்துக்கொண்டு, மொத்த கோபத்தையும் தன் மீது திருப்பிக் கொண்டதில் அவன் மீது நன்மதிப்பு வந்து இருக்க, ‘நடந்தது நடந்து விட்டது.. இனி நடப்பதை பார்ப்போம்’ என்ற மனநிலைக்கு வந்துவிட்டாள்.
“ஷாக்கை குறைங்க நாரே! ஐ மீன் கொழுந்தனாரே!”
“இது.. உங்களுக்குத் தெரியுமா?”
“தெரியும்”
“எப்படி?”
“ஸ்னேக் லெக் ஸ்னேக் னோ”
“ஹான்!” என்று அவன் விழிக்க,
“பாம்பின் கால் பாம்பு அறியும்னு சொன்னேன்”
“ஓ” என்றவன், “அப்போ நிஜமாவே நீங்க ஜெயாவை விரும்புறீங்களா? அது உங்க அப்பாவை சமாளிக்க சொன்னது இல்லையா?” என்று கேட்டான்.
“எங்க அப்பாவை என்னனு நினைச்சீங்க! எங்களோட அசைவை வைத்தே நாங்க சொல்றது உண்மையா பொய்யானு கண்டு பிடிச்சிடுவாங்க.. நான் சொன்னது உண்மைங்கிறதால் மட்டுமே கல்யாணத்தன்னைக்கு எதுவும் சொல்லலை..” என்றவள், “நான் மட்டுமில்லை உங்க அண்ணாவும் என்னை காதலிக்கிறார்” என்றாள்.
“நிஜமாவா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டான்.
“எதுக்கு இவ்ளோ ஷாக்? ஏன் அவர் காதலிக்கக் கூடாதா?”
“இல்லை.. அப்படி இல்லை..” என்றவன் அவளது கையை பற்றியபடி பெரும் ஆனந்தத்துடனும் நிம்மதியுடனும், “ரொம்ப சந்தோஷமாவும் நிம்மதியாவும் இருக்குது அண்ணி.. தேங்க்ஸ் அ லாட்” என்றான்.
“நாங்க காதலிக்கிறதுக்கு நீங்க ஏன் தேங்க்ஸ் சொல்றீங்க?”
“இல்ல.. அது..” என்று சற்று இழுத்து நிறுத்தியவன், “நாங்க செய்த வேலையில் தானே உங்க ரெண்டு பேருக்கும் திடீர்னு கல்யாணம் நடந்தது.. அதுவும் நீங்க இன்னும் படிப்பை கூட முடிக்கலை.. நீங்க வேற ரெண்டு மாசம் உங்க அப்பா வீட்டில் இருந்தீங்க.. ரொம்ப பயந்துட்டு இருந்தேன்.. உங்க ரெண்டு பேர் வாழ்க்கையை கெடுத்துட்டேனோனு ரொம்ப கஷ்டமாவும் குற்ற உணர்ச்சியாவும் இருந்தது” என்றான்.
பின் சிறு சந்தேகத்துடன், “நீங்க நிஜமா தானே சொல்றீங்க?” என்று மீண்டும் கேட்டான்.
அவள் இடுப்பில் கை வைத்து முறைக்கவும்,
“இல்ல.. உங்க ரெண்டு பேரையும் பார்த்தா அப்படி தெரியலை.. அதான்..” என்றான்.
“அதுக்காக ப்ரீ ஷோவா காட்ட முடியும்?”
ஒரு நொடி அதிர்ந்தவன் பின் மெல்லிய குரலில், “இல்ல.. ஜெயாவை பார்த்தா அப்படி தெரியவே இல்லை.. அதான்” என்று இழுத்து நிறுத்தினான்.
“அவர் இன்னும் அவரோட காதலை என் கிட்ட சொல்லலை.. ஆனா அவர் காதலிப்பது உண்மை” என்றாள்.
“ஏன்?”
“அது எங்க பெர்சனல்.. உங்க மன நிம்மதிக்காகத் தான் இதையே சொன்னேன்” என்றவள் குரல் ‘இதற்கு மேல் கேட்காதே’ என்றது.
அதை புரிந்து கொண்டவன் மென்னகையுடன், “ஓகே” என்றான்.
“எங்க கதையை விடுங்க.. உங்க காவியத்துக்கு வாங்க.. இப்படியே வாழ்வே மாயம் ரேஞ்சில் சுத்தினா எல்லாம் சரி ஆகிடுமா?”
“எனக்கு மட்டும் ஆசையா! உங்க அப்பா தான் என்னை சம்யு கிட்டயே நெருங்க விட மாட்டிக்கிறாரே!”
“இல்லையே! நேத்து அவளை கோவிலில் தூண் பின்னாடி இருந்து பார்த்து இருக்கிறீங்களே!”
அவன் பெரிதும் அதிர,
அவளோ, “என்னோட விழுதுகள் நிறைய பேர் அங்கே இருக்காங்க.. சமியை இயல்புக்கு கொண்டு வர, கோவிலுக்கு தனியே அப்பா அனுப்பினாலும், எனக்கு என்னவோ அவ பாதுகாப்பு முக்கியம்னு தோணுச்சு.. அதான் அவளை கண்காணிச்சுட்டு இருக்கிறேன்” என்றாள்.
“ஓ” என்றவன், ஆச்சரியம் கலந்த தயக்கக் குரலில், “என் மேல் உங்களுக்கு கோபம் வரலையா?” என்று கேட்டான்.
“உங்க தவிப்பை கண் கூட பார்க்கிறேனே! அண்ட் அந்த ஞானவேல் மாதிரி அவளை டார்ச்சர் செய்ய மாட்டீங்கனும் நம்பிக்கை இருக்குது” என்றவள், “இல்லனாலும் நான் வாலாட்ட விட மாட்டேன் என்பது வேற விஷயம்” என்று அவள் மறைமுகமாக அவனை எச்சரிக்கை செய்ய,
அவனோ கையெடுத்து கும்பிட்டபடி, “உங்க நம்பிக்கையை தும்பிக்கை போல ஸ்ட்ராங்காவே வச்சுக்கோங்க அண்ணி.. அதை நான் உடைக்க மாட்டேன்” என்றான்.
லேசாக சிரித்தவள், “நேத்து ஏன் அவ கிட்ட பேசலை?” என்று கேட்டாள்.
“அது.. அவ என் மேல கோபத்தில் இருப்பா, என்னை பார்த்ததும் டென்ஷன் ஆகி அவ உடம்புக்கு எதுவும் ஆகிட கூடாதேனு தான் பேசலை”
“மிஸ்டர் இதயம் முரளி! உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லவா?”
‘என்ன?’ என்பது போல் அவன் பார்க்க,
“சமியை பொறுத்தவரை நீங்க சிங்கிள் இல்லை.. மிங்கிள் ஆன அங்கிள்”
“எது! அங்கிள்ளா!” என்றவன் பின் அதிர்வுடன், “என்ன! மிங்கிள்ளா!” என்றான்.
“இதானா சார் உங்க டக்கு!”
அவன் முறைக்க, அவளோ குறுஞ்சிரிப்புடன் புருவம் ஏற்றி இறக்கினாள்.
அவன் வேறு வழி இல்லாம, “ப்ளீஸ் அண்ணி உங்க காலில் வேணா விழுறேன்.. ஹெல்ப் மே ப்ளீச்” என்றான்.
“எப்டி! உங்க நிழலை விட வேகமா விழுவீங்களா?”
அவன் ‘ஞை’ என்று விழிக்க,
அவளோ, “நீங்க அங்கிளே தான்” என்றாள்.
அவன் பாவமாக பார்க்க,
அவளோ செல்ல முறைப்புடன், “யூத் லங்வெஜில்(language) அப்டேட்டடாவே இல்லையே நீங்க! நான் சொன்னது ‘இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்’ படத்தில் வர டயலாக்” என்றாள்.
“இதானா சார் உங்க டக்குனு சொன்னது புரிஞ்சுது தானே!”
“ஒன்னே ஒன்னு புரிந்ததை வைத்து எல்லாம் ஒத்துக்க முடியாது.. நீங்க அங்கிள் தான்” என்று அவள் உறுதியான குரலில் கூற,
அவன் முறைப்புடன், “நான் அங்கிள்னா ஜெயாவும் அங்கிள் தான்” என்று கூறி ‘எப்படி!’ என்பது போல் பார்த்தான்.