அவனோ, “அண்ணி என்னை அங்கிள்னு சொல்றாங்க மா” என்று புகார் செய்தான்.
அவர், “பின்ன இப்படி எல்.கே.ஜி பாப்பா மாதிரி வந்து கம்பளைன்ட் செய்தா!” என்று கூற,
வாய் விட்டு சிரித்த ஆத்மிகா, “அப்படி சொல்லுங்க அத்தமா” என்றபடி அவருடன் கை அடித்து கொண்டாள்.
அவன் இருவரையும் முறைக்க, மீனாட்சி, “போ.. போ.. இங்க நின்னு வெட்டியா முறைக்கிறதுக்கு பதிலா என் மருமக மனசக்குள்ள எப்படி நுழையறதுனு யோசி” என்றார்.
அவன் அதிர்வுடன், “அம்மா!” என்று அழைக்க,
அலட்டி கொள்ளாமல், “மொச பிடிக்கிற நாய் மூஞ்சியை பார்த்தா தெரியாதா!” என்றவர் ஆத்மிகாவிடம், “நீ புதுசா ஒரு ரிசிபி செய்யணும்னு சொன்னியே! வா நாம அந்த வேலையை பார்க்கலாம்” என்றார்.
“ஹ்ம்ம்.. வாங்க அத்தமா” என்றபடி மீனாட்சியுடன் சென்றாள்.
சமையல் அறை வாயிலில் நின்றபடி, “முதல்ல நீங்க மிங்கிள் ஆன அங்கிள் இல்லை.. மிங்கிள் ஆக துடிக்கும் அங்கிள்னு சமி கிட்ட சொல்லுங்க.. என்ன புரியலையா! நீங்க சொன்ன காதல் கதை வெறும் கதை மட்டும் தான்னு அவளுக்கு இன்னும் தெரியாது” என்றாள்.
அவன் அதிர்வுடன் நோக்க,
அவளோ, “இதுக்கே ஷாக் ஆனா எப்புடி! இன்னும் நீங்க எவ்வளவோ சந்திக்கணுமே! நீங்க சொன்னது பொய்னு தெரிந்ததும் உங்க மேல வர கோபத்தை போக்கணும்.. அப்புறம் காதல் என்ற வார்த்தையை கேட்டாலே தெறிச்சு ஓடும் நிலையில் இருக்கிறவ மனசில் இடம் பிடிக்கணும்.. எங்க அப்பாவை சமாளிக்கணும்.. உங்க அண்ணாவை வேற சமாளிக்கணும்” என்றவள், அவனது முக பாவனையில், “என்ன மயிலு தல கிறுகிறுன்னு சுத்துதா! ஆல் தி பெஸ்ட்” என்றுவிட்டு சென்றுவிட்டாள்.
சில நொடிகளில் சமையல் அறைக்கு சென்ற சத்யதேவ், “அண்ணி” என்றபடி அவள் பின்னாடியே வால் பிடித்து சுற்ற,
மீனாட்சி, “இப்போ உனக்கு என்னடா வேணும்? சும்மா தொணதொணக்காம இடத்தை காலி செய்” என்றார்.
அவன் அவரை முறைக்க,
ஆத்மிகா புன்னகையையுடன், “இனி தினமும் நான் செய்றதை சாப்பிட வசமா ஒரு சோதனை எலி சிக்கி இருக்குது” என்றாள்.
ஒரு நொடி அவளை பீதியுடன் பார்த்தவன், “சிக்கிட்டேன்! வேற வழி” என்றான்.
பெண்கள் சிரிக்க, முறைக்க முயற்சித்து அவனுமே சிரிக்கத் தான் செய்தான்.
பின் மனதார, “தேங்க்ஸ் அண்ணி” என்றான்.
“உங்க காதலுக்கு நீங்க தான் போராடனும்.. சமி மனசை எல்லாம் நான் கரைக்க மாட்டேன்.. அது உங்க வேலை மட்டும் தான்.. வேணா அவ மனநிலையை பற்றி உங்களுக்கு சொல்வேன்.. அப்புறம், அப்பா கிட்டயும் உங்க அண்ணா கிட்டயும் நான் பேசுறேன்”
“நான் இதுக்காக தேங்க்ஸ் சொல்லலை அண்ணி.. உங்க கிட்ட பேசிய இந்த கொஞ்ச நேரத்திலேயே, ரெண்டு மாசமா என் மனசை அழுத்திட்டு இருந்த பாரம் எல்லாம் நீங்கி மனசு லேசா இருக்குது.. நீங்க இந்த வீட்டுக்கு கிடைத்த பொக்கிஷம்” என்று அவன் உணர்ச்சி பூர்வமாக கூற,
லேசாக சிரித்தபடி, “நீங்க இருக்கிறீங்களே அண்ணி!” என்றவன், “உங்களை இந்த ஜெயா எப்படித் தான் சமாளிக்கிறானோ!” என்றான்.
“அதெல்லாம் உங்க அண்ணா ரிஸ்க் எடுக்கிறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரினு தூசி தட்டி போய்கிட்டே இருப்பார்”
“அப்போ ரிஸ்க் எடுத்து தான் உங்க கூட குடும்பம் நடத்துறான்னு சொல்றீங்க!” என்று அவன் கிண்டலாக கூற,
அவளோ, “பின்ன! ஆத்மினா சும்மாவா!” என்றாள்.
பிறகு சமைத்ததை சத்யதேவை சாப்பிட்டு பார்க்க கூறினாள்.
அந்த பதார்த்தத்தை வாயில் போட்டவன் பெரும் சிரமத்துடன் விழுகிவிட்டு, “சூப்பர் அண்ணி” என்றான்.
அவளோ முறைப்புடன், “உண்மையை சொல்லணும்.. இல்லை முழுவதையும் சாப்பிட வச்சிடுவேன்” என்று மிரட்ட,
அவளை பீதியுடன் பார்த்தவன், “ரொம்பவே சுமாரா தான் அண்ணி இருக்குது” என்றான்.
“சாப்பிட முடியாத லெவல்னு உங்க மூச்சி போன போக்கில் இருந்தே தெரிந்தது” என்று இலகுவாக கூறியவள், “சாரி அத்தமா.. வேஸ்ட்டா போச்சு” என்று வருந்திய குரலில் கூறினாள்.
“விடுடா.. செய்ய செய்யத் தான் சரியா வரும்” என்று அவளை ஊக்கப்படுத்தினார்.
“லவ் யூ அத்தமா” என்றபடி அவரை அனைத்து கன்னத்தில் முத்தமிட்டபடி திரும்பியவள் கண்டது தன்னையே பார்த்தபடி கதவில் சாய்ந்தபடி நின்றிருந்த ஜெயதேவைத் தான்.
அருகில் இருந்த சத்யதேவ் கையில் நறுகென்று கிள்ளியவள், அவன் “ஆஆ” என்று அலறியதும், “உண்மை தான்” என்றுவிட்டு ஜெயதேவை பார்த்து, “என்ன அதிசயமா இவ்ளோ சீக்கிரம் வந்து இருக்கிறீங்க!” என்றாள்.
அப்பொழுது தான் அவனை கவனித்த மீனாட்சி மற்றும் சத்யதேவ் ஆச்சரியமாக பார்த்தனர்.
உணர்ச்சியற்ற முகபாவத்துடன் காணப்பட்ட ஜெயதேவோ புன்னகை ததும்பிய தன்னவளின் முகத்தை அணுஅணுவாக ரசித்தபடி, “சும்மா தான்” என்றுவிட்டு நகர போக,
அவள் தான் செய்ததை அவனிடம் நீட்டியபடி, “நான் செய்தது” என்றாள்.
அவனோ, “ரிஸ்க் எடுக்கிறது பிடிக்கும் தான்.. ஆனா உசுரு முக்கியம் பிகிலு” என்று கூறி சென்றுவிட்டான்.
“உங்களை!” என்றபடி அவள் அவன் பின்னால் செல்ல,
சத்யதேவ் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன், “நம்ம ஜெயாவா இது!” என்றான்.
மீனாட்சி புன்னகையுடன், “ஹ்ம்ம்.. ஆத்மி வந்த ரெண்டே நாளில் நம்ம பழைய ஜெயா திரும்பிட்டே வரான்டா” என்றார்.
“அண்ணி செமல ம்மா”
“ஹ்ம்ம்” என்றவர், “ஜெயாக்கு ஆத்மியை பிடிக்கும்னு நான் முதல்லேயே சொன்னேன்.. நீ தான் நம்பலை” என்றார்.
“ஹ்ம்ம்.. நம்பி இருக்கணும்” என்று கூறியவன் மனதினுள், ‘நம்பி இருந்தா எந்த குளறுபடியும் செய்யாம இருந்து இருப்பேன், என் சம்யுவும் இந்நேரம் என் மனைவியா இருந்து இருப்பா!’ என்று பெருமூச்சை வெளியிட்டான்.
பின், ‘ஆனாலும் எப்படி தான் முகத்தில் எதையுமே காட்டாம லவ் பண்றானோ!’ என்று நினைத்துக் கொண்டான்.
அன்று மட்டுமில்லை இன்று வரை ஜெயதேவ் அவள் செய்ததை உண்டதே இல்லை. வாசனையை வைத்தே, “ரிஜெக்டட்” என்ற ஒற்றை வார்த்தையில் முடித்து சென்றுவிடுவான்.