ஜெயதேவ் பின்னால் சென்ற ஆத்மிகா தங்கள் அறைக்கு சென்றதும், “நான் சொன்னதுக்காகவா?” என்று கேட்டாள்.
முதலில் மறுக்க நினைத்தவன் அவள் முகத்தில் கண்ட மகிழ்ச்சியை கெடுக்க விரும்பாமல் சிறு தோள் குலுக்கலுடன் குளிக்க ஆயுத்தமானான்.
இடுப்பில் கை வைத்தபடி அவன் முன் வந்து நின்றவள், “உண்மையை ஒத்துக்கிட்டா தான் என்னவாம்!” என்று இரு பொருள் பட கூற,
அவனும், “எதை எப்போ சொல்லணும்னு எனக்குத் தெரியும்” என்று இரு பொருள் படவே கூறினான்.
“ஏன் ஆமானு சொல்றதுக்கு என்ன? நான் சந்தோஷப்படுவேன் தானே!”
அவளை அழுத்தமாக பார்த்தவன், “முதல்ல படிச்சு முடி” என்றான்.
கண்ணில் மட்டும் குறும்புடன், “நான் சொன்னேன்னு தான் சீக்கிரம் வீட்டுக்கு வந்தனு ஒத்துக்கிறதுக்கும் என் படிப்புக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டாள்.
எப்பொழுதும் அவளது இந்த பாவனையில் தன்னை தொலைப்பவன் தறிகெட்டு ஓடிய மனதை இழுத்து பிடித்தபடி, “டெய்லி இப்படியே வருவேன்னு எதிர் பார்க்காதே” என்றான்.
‘அதெல்லாம் வருவ’ என்றது போல் பார்த்தவள், “நான் கேட்டதுக்கு இது பதில் இல்லையே!” என்றபடி புன்னகையுடன் புருவம் ஏற்றி இறக்கினாள்.
முதல் முறையாக பதில் சொல்ல முடியாமல் திணறியவன், “ராங்கி பட்டாசு” என்று கூறிவிட்டு குளியல் அறையினுள் புகுந்துக் கொண்டான்.
அவனது திணறலை ரசித்தவளின் முகம் புன்னகையில் விரிந்தது.
குளித்து முடித்து இரவு உடையில் வெளியே வந்தவன் ஒப்பனை மேசை முன் நின்று தலை முடியை வாரிக் கொண்டு இருக்க,
கண்ணாடியில் தெரிந்த அவனை பார்த்தபடி,
“ஆண்கள் மேலே மையல் உண்டு
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
நீ தானே மழை மேகம் எனக்கு
என் ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு
உண்மை சொல்லி நேசிப்பாயா” என்று வார்த்தைகளை மாற்றி போட்டு பாடினாள்.
அவளது காதல் பார்வையும் குரலும் அவனை மொத்தமாக புரட்டிப் போட, தன் காதலை மறைக்க பெரிதும் போராடியவன் கோபம் என்னும் முகமூடியை அணிந்து, “ஆத்மிகா!” என்று கோபக் குரலில் அழைத்தான்.
அதில் சிறிதும் பாதிக்கபடாமல், “என்ன!” என்றாள்.
“நான் என்ன சொன்னேன்! நீ என்ன செய்துட்டு இருக்க?” என்று கோப குரலிலேயே கேட்டான்.
“என்ன செய்துட்டு இருக்கேன்?”
அவன் முறைக்க,
அவளோ, “நான் இப்படி தான் இருப்பேன்னு சொன்னேன் தானே!” என்றாள்.
“இருந்தாலும் இது அதிகம் தான்”
“ ‘உண்மை சொல்லி நேசிப்பாயா’னு தானே பாடினேன்! அடுத்த லைனையும் சேர்த்தா பாடினேன்!” என்றவள், “அடுத்த லைன், ‘மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா!’” என்று பாட,
‘ராங்கி பாட்டாசு!’ என்று சிறு தாபம் கலந்த காதலுடன் மனதினுள் கூறிக் கொண்டவன் வெளியே முறைத்தபடி, “உன்னை அப்புறம் கவனிச்சுக்கிறேன்” என்றுவிட்டு நகர,
அவளோ, “ஏன் இப்பவே கவனியேன்! நான் வேண்டாம்னு சொல்லலையே!” என்றாள்.
“உன் பேச்சே இன்னைக்கு சரி இல்லை”
“நான் சாதரணமா தான் பேசுறேன்.. உன் மனசுக்குள்ள குறுகுறுத்தா நான் ஒன்னும் செய்ய முடியாது”
“ஆமா அது என்ன ஆண்கள் மேல் மையல் கொண்டேன்!” என்று பேச்சை மாற்றியவன் உண்மையாகவே முறைத்தான்.
“ஏன்! பசங்க மட்டும் தான் சைட் அடிக்கனுமா?”
“நான் சைட் அடிச்சது இல்லை”
“அது.. நீ கொஞ்சம் மேனுபேக்சர்(manufacture) டிஃபெக்ட்”
அவன் முறைக்க, அவளோ உதட்டோர புன்னகையுடன், “பொறாமை!” என்றாள்.
இம்முறை முறைப்புடன், “ஏன் இருக்கக் கூடாதா?” என்று ஒத்துக் கொண்டான்.
“இருக்கலாமே!” என்றவள், “நானும் யாரையும் சைட்லாம் அடிச்சது இல்லை.. என் பிரெண்ட் ரூ.. ரூபாவதி சைட் அடிப்பா.. அவ கூட சேர்ந்து சும்மா பேசுவேன் ஆனா உன்னைத் தவிர யாரையும் என் கண்ணோ மனசோ தீண்டியது இல்லை” என்றாள்.
அவளை கட்டி அணைத்து முத்தமிட துடித்த கைகளையும் இதழ்களையும் அடக்கியவன், “சாப்பிட போகலாம்” என்றபடி நடக்க,
தனிமையை தவிர்த்து வெளியே ஓடுபவனை கண்டு சிரித்தபடி மனதினுள், ‘இன்னும் எத்தனை நாள்னு பார்க்கிறேன்!’ என்று கூறிக் கொண்டவள் அவனுடன் சேர்ந்து நடந்தபடி, “இந்த விளையாட்டு எனக்கு பிடிச்சு இருக்குது” என்றாள்.
“என்ன விளையாட்டு?” என்று அறியாதவன் போல் அவன் வினவ,
“காதல் விளையாட்டு தான்” என்றவள், “ஆனா ஒன்னு.. இந்த விளையாட்டில் யார் ஜெயித்தாலும் பைனலா ரெண்டு பேருமே தான் ஜெயித்து இருப்போம்” கூறி கண் சிமிட்டினாள்.
அவளது கூற்றில் தடுமாறி நின்றவனை காப்பது போல் சத்யதேவ் வரவும், வேறு பேசியபடி சென்று உணவை உண்டனர்.
அவள் இப்படி தினமும் அவனை சீண்டிக் கொண்டே இருக்க, அவளை சமாளிக்க முடியாமல் திணறினாலும் அவளது சீண்டல்களை மிகவும் ரசிக்கத் தான் செய்கிறான்.
அவள் கூறினாள் என்பதற்காகவே இத்தனை வருட பழக்கத்தை மாற்றி, தினமும் இரவில் உணவு நேரத்திற்கே வீட்டிற்கு வர ஆரம்பித்து இருந்தான். அவளுடன் கழியும் ஒவ்வொரு நிமிடமும் அவனது வாழ்வில் வண்ணம் சேர்த்து அழகு மயமாக மாற்றி கொண்டே இருக்க, அவள் மீதான காதல் பித்தாக மாறிக் கொண்டே வருகிறது.
அவனது தொழிலும் சில மாற்றங்களை கொண்டு வந்து இருந்தாள். ஒரு நாள் அவனுடன் அவனது பண்ணைக்கு சென்றவள் அங்கு இருந்தவர்களிடம் விவசாயத்தைப் பற்றி நிறைய கேட்டு தெரிந்து கொண்டாள். அன்று இரவு, “ஃபார்ம்ல கொஞ்ச இடம் காலியா இருந்துதே! அதில் எதுவும் பிளான் வைத்து இருக்கிறியா?” என்று கேட்டாள்.
“உன்னோட பிளான் என்ன?” என்ற அவனது கேள்வியில் மென்னகைத்தவள்,
“இன்றைய தலைமுறையினர் பலருக்கு விவசாயம் பற்றி எதுவுமே தெரியாது.. நானும் கூட இன்னைக்கு தான் தெரிஞ்சுக்கிட்டேன்.. ஆனா தெரிந்துக்கிறது ரொம்ப அவசியம் இல்லையா?
ஆனா நாம சும்மா சொன்னா, யாரும் காதிலேயே வாங்க மாட்டாங்க.. அதையே ஒரு டூரிஸ்ட் ஸ்பாட் மாதிரி ரெடி செய்து சொன்னா! பிரமிப்பா கேட்டு தெரிஞ்சுப்பாங்க..
ஸோ நம்ம ஃபார்மை டூரிஸ்ட் ஸ்பாட்டா மாத்தலாம்னு ஒரு யோசனை.. இதுல நமக்கு பிஸ்னெஸ் அண்ட் நம்மால் முடிந்த அளவுக்கு விவசாயத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.. என்ன சொல்ற?” என்று கேட்டாள்.
“அதுக்கு என்ன செய்யணும்னு நினைக்கிற? ஐ மீன் உன் ஐடியா என்ன?”
“காலியா இருக்க இடத்தில் ஒரு பக்கம் சின்ன ப்ளே ஏரியா, இன்னொரு பக்கம் சின்னதா ஃபுட் கோர்ட் போடலாம்.. தனியா ஒரு சைட் கிரியேட் செய்து, குறைந்த அளவு என்ட்ரி சார்ஜ் போட்டு ஒன் டே பிக்னிக் மாதிரி ப்ரொமோட் செய்யலாம்.. இயற்கை விவசாயம், அவங்களே பறித்து கொடுக்கும் காய்கறியில் சமைத்த உணவை சாப்பிடலாம்.. இப்படி ப்ரொமோட் செய்யலாம்.. வெப்சைட் போக, நம்ம ரெஸ்டாரென்ட் மெனு கார்டில் கூட இதை பத்தி போடலாம்.. பாமிலியை அட்ராக்ட் செய்ய கிட்ஸ்கு ப்ளே ஏரியா.. ஃபார்மை சுத்தி காட்டியபடி விவசாயத்தை பற்றி சொல்லலாம்.. எப்படி?”
“ஹ்ம்ம்.. சவுண்ட்ஸ் குட்.. கண்டிப்பா செய்யலாம்” என்றவன் அடுத்த நாளே அதை நடைமுறை படுத்தும் செயலில் இறங்கி விட்டான்.