“இது தேறாத கேஸ் க்கா.. இதயம் முரளி கூட இவர் கிட்ட தோத்துடுவான்” என்று கைபேசி வாயிலாக கிஷோர் ஆத்மிகாவிடம் கூற,
“சமி வரவும் பிடிச்சு தள்ளி விடுடா” என்றாள்.
“சரி க்கா”
அன்று ஆத்மிகாவிடம் பேசிய பிறகு மூன்று முறை கோவிலில் சம்ருதிகாவை தனிமையில் சந்தித்த சத்யதேவ், பேச வாய்ப்பு கிடைத்தும் அவளிடம் சென்று பேசாமல் தூண் மறைவில் இருந்தபடி அவளை பார்த்துவிட்டு வீடு திரும்பிவிட்டான். அதனால் இன்று ஆத்மிகா களத்தில் இறங்கிவிட்டாள்.
சம்ருதிகா கடவுளை வணங்கிவிட்டு சத்யதேவ் இருக்கும் பக்கம் வரவும், கிஷோர் சத்யதேவை தள்ளி விட, அவன் சரியாக அவள் காலில் போய் விழுந்தான்.
யாரோ என்று நினைத்து சம்ருதிகா பதறி பின்னால் நகர, கையை தட்டியபடி எழுந்த சத்யதேவ், “சாரிங்க.. கால் தடுக்கி விழுந்துட்டேன்” என்றான்.
பின் அப்பொழுது தான் அவளை பார்த்தது போல், “ஹே! எப்படி இருக்கிறீங்க?” என்று கேட்டான்.
இவனை கண்டதும் அவளது முகத்தில் பெரிதாக எந்த பாவனையும் இல்லை, “நீங்க?” என்று கேள்வியாய் நிறுத்தினாள்.
அவன் அதிர்ச்சியுடன், “என்னங்க! அதுக்குள்ளே மறந்துட்டீங்களா?” என்று கேட்டான்.
அப்பொழுதும் அதே முக பாவனையுடன் மறுப்பாக தலை அசைத்தவள், “உங்க நேம்” என்று கேட்டாள்.
“ஓ! சத்யாவா ஜெயாவானு தெரியாம கேட்டீங்களா!” என்று நிம்மதி மூச்சை வெளியிட்டு, “நான் சத்யதேவ்” என்றவன், “உங்களுக்கு பார்த்த மாப்பிள்ளை” என்று சேர்த்து கூறி அவளது மனநிலையை கணிக்க முயற்சித்தான்.
அவளோ, “சரி நான் கிளம்புறேன்” என்று கூறி கிளம்ப,
சிறு யோசனையும் குழப்பமுமாக அவளை பார்த்தவன் அவளுடன் நடந்தபடி, “என் மேல் கோபமா?” என்று கேட்டான்.
மறுப்பாக தலை அசைத்தவள் அவனை திரும்பி பார்க்கவும் இல்லை, நடையை நிறுத்தவும் இல்லை. இவன் அங்கேயே நின்றுவிட, இவன் நின்றது கூட அவளது மனதில் பதியவில்லை. அவள் சென்று கொண்டே இருந்தாள்.
நேரே வீட்டிற்கு சென்றவன் மீது பூ இதழ்களை தூவி வரவேற்ற ஆத்மிகா புன்னகையுடன், “ஒருவழியா பேசிட்டீங்க போல!” என்றாள்.
பின் அவனது முக பாவனையை கண்டு விளையாட்டை கைவிட்டு, “என்னாச்சு சத்யா? எதுவும் பிரச்சனையா?” என்று கேட்டாள்.
ஒரு கரண்டி பால்கோவாவை எடுத்து வாயில் போட்டவன் கண்களை விரித்து, “நிஜமாவே சூப்பர் அண்ணி” என்றான்.
பின் கிண்டல் குரலில், “நிஜமா நீங்க தான் செய்தீங்களா?” என்று கேட்க,
“அந்தளவுக்கு நல்லா இருக்குதா?” என்றபடி ஒரு கரண்டி பால்கோவாவை எடுத்தவள் வாய் அருகே கொண்டு சென்று, “இல்ல.. நான் செய்ததை என்னையே சாப்பிட வைக்க இப்படி சொல்றீங்களா?” என்று கேட்டாள்.
சிரித்தவன், “இல்ல அண்ணி.. நிஜமாத் தான் சொல்றேன்” என்றான்.
அப்பொழுதும், “சத்தியத்தை நம்பி சாப்பிடலாமா?” என்று கேட்டபடி தான் வாயில் போட்டாள்.
பின் கண்களை விரித்தவள் ஒரு கரண்டி பால்கோவாவை மீனாட்சிக்கு கொடுத்தபடி, “நிஜமாவே நல்லா இருக்குது அத்தமா” என்றாள்.
“நான் தான் சொன்னேனே! செய்யச் செய்ய வந்திடும்னு” என்றபடி சாப்பிட்டவர் அவரது கையை குலுக்கியபடி, “சூப்பர்டா” என்றார்.
இருவரும் மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டு இருக்க சத்யதேவோ இருவரையும் முறைத்துக் கொண்டு இருந்தான்.
அதை முதலில் கவனித்த மீனாட்சி, “என்னடா?” என்றார்.
அவன் முறைப்புடன், “அப்போ இத்தனை நாள் நான் மட்டும் தான் சாப்டுட்டு இருந்தேனா!” என்றான்.
இப்படியே கேலியும் கிண்டலுமாக நேரத்தை இனிமையாக கழித்தாலும் சத்யதேவின் மனம் தன்னவளைப் பற்றியே சிந்தித்து கொண்டும் இருந்தது.
என்ன தான் சிரித்து பேசினாலும் சில நொடிகள் அவன் முகம் காட்டிய முக பாவனையில் இருந்தே அதை ஆத்மிகாவும் உணர்ந்தாள் தான். ஆனால் அதை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
சிறிது நேரத்தில் ஜெயதேவ் வரவும் கண்கள் ஜொலிக்க, “ஹாய்” என்றாள்.
இரு நொடிகள் மட்டுமே அவளை பார்த்து, “ஹாய்” என்றவன் காலோடை(shoe) அகற்ற ஆரம்பித்தான்.
சத்யதேவ், “பல நாள் கழிச்சு இப்ப தான் ரெண்டு பேரும் பார்த்துக்கிறாங்க” என்று அன்னையிடம் மெல்லிய குரலில் கூற,
ஜெயதேவை பார்த்தபடி, “இருங்க அன்னைக்கு செய்த பிஸிபேளாபாத்தை நாளைக்கு செய்து தரேன்” என்றாள்.
“லுக்கு அங்க ஆப்பு இங்கயா!”
“யா” என்றவளின் பார்வை அப்பொழுதும் காலுறையை கழட்டிக் கொண்டு இருந்த ஜெயதேவிடம் தான் இருந்தது.
“அவன் உங்களை கவனிக்கவே இல்லை.. நீங்க மட்டும் எப்படி இப்படி!”
“அவர் என்னை கவனிக்கலையா!” என்றவள், “கண்ணை மூடுங்க” என்றாள்.
“எதுக்கு?” என்று கேட்டாலும் கண்களை மூடி இருந்தான்.
“சும்மா ஒரு கேம்” என்றவள், அறைக்கு செல்லப் போன ஜெயதேவை, “ஜெய் ஒரு நிமிஷம்” என்று தடுத்து நிறுத்தி, “கண்ணை மூடுங்க” என்றாள்.
அவன் ஏன் என்று கூட கேட்காமல் கண்களை மூடினான்.
“சத்யா இப்போ உங்களுக்கு ஒரு கேள்வி.. கிட்ட திட்ட ரெண்டு மணி நேரம் என் கூட அரட்டை அடிச்சி இருக்கிறீங்க.. நான் என்ன கலரில் ட்ரெஸ், தோடு, வளையல் போட்டு இருந்தேன்னு சொல்லுங்க” என்றாள்.
சிறிது யோசித்தவன், “எல்லோ ட்ரெஸ்.. தோடும் எல்லோ.. வளையல் தெரியலை” என்றான்.
“ஜெய் இப்போ உங்க டர்ன்” என்றதும்,
“சின்ன சின்ன ப்ளூ கலர் பூ போட்ட எல்லோ டாப் வித் ப்ளூ பண்ட் அண்ட் ஷால்.. எல்லோ அண்ட் வைட் ஸ்டோன்ஸ் இருக்க தோடு.. எல்லோ அண்ட் ப்ளூ வளையல் மிக்ஸ் பண்ணி போட்டு இருக்க”
அதிர்ச்சியுடன் கண்களை திறந்த சத்யதேவ் ஆத்மிகாவை பார்த்து இன்னும் அதிர, அவளோ ‘எப்புடி!’ என்பது போல் பெருமையும் மகிழ்ச்சியுமாக புருவம் ஏற்றி இறக்கினாள்.
சத்யதேவ், “ஏன்டா பொட்டை மட்டும் விட்டுட்ட?” என்று கிண்டலாக கூற,
வாயை திறந்தபடி அமர்ந்து இருந்த சத்யதேவின் வாயை ஆத்மிகா மூட,
அவன் இன்னமும் அதிர்ச்சி விலகாமல், “காலையில் அவன் கிளம்பியதுக்கு அப்புறம் தானே நீங்க ட்ரெஸ் செய்து கிளம்பினீங்க?” என்று கேட்டான்.
அவள் மென்னகையுடன் ‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்ட,
அவனோ, “ஒரு நிமிஷம் கூட அவன் உங்களை பார்க்கலை” என்றான்.
“சமி என்ன போட்டு இருந்தானு யோசிங்க” என்றுவிட்டு தங்கள் அறைக்கு சென்றாள்.
சம்ருதிகாவை மன கண்ணில் கொண்டு வந்து, ‘ட்ரெஸ் கலர் மட்டும் தானே நம்ம மைண்டில் நிற்குது!’ என்று நினைத்தவன், “ஆனாலும் புத்தர் மாதிரி இருந்துட்டு இந்த லவ் டூ மச்டா” என்று வாய்விட்டே கூற,
அவனது பொடதியில் லேசாக அடித்த மீனாட்சி, “கண்ணு போடாதடா” என்றுவிட்டு சமையல் அறைக்கு சென்றார்.
“இந்த வீட்டில் டோட்டல் டெபாசிட் காலிடா உனக்கு” என்று கூறியவன் அன்னைக்கு உதவ தானும் சமையல் அறைக்கு சென்றான்.
அங்கே அறையினுள் நுழைந்த ஆத்மிகாவை பார்த்த ஜெயதேவ், “அது என்னோட க்ராஸ்பிங் பவர்” என்றான்.
குறுஞ்சிரிப்புடன், “நான் எதுவும் கேட்கலையே!” என்றவளை பார்த்து தோள் குலுக்கிவிட்டு அவன் குளியல் அறை நோக்கி நகர,
“அத்தை அண்ட் சத்யா போட்டு இருந்த ட்ரெஸ் பத்தி டிஸ்கிரைப் செய்” என்றாள்.
ஒரு நொடி அதிர்ந்தவன் பின் சமாளித்து, “சத்யா க்ரீன் ஷர்ட்.. அம்மா மெரூன் புடவை” என்றான்.
“சரி தான்.. சத்யா ஷர்ட்டில் கட்டம் இருந்ததா கோடு போட்டு இருந்ததா? அத்தை புடவையில் என்ன டிஸைன் இருந்தது?”
அவன் தெரியாமல் விழிக்க,
“இன்னையில் இருந்து புது சட்டம் அமுலுக்கு வருது.. இந்த காதல் விளையாட்டில் நடக்கும் குட்டி குட்டி போட்டியில் தோற்பவங்க ஜெயித்தவங்க சொல்றதை செய்யணும்” என்றபடி அவனை நெருங்க,
‘ஓடிருடா ஜெய்!’ என்று எச்சரித்த மனசாட்சியை சட்டை செய்யாமல் எதிர்பார்ப்பு கலந்த சிறு பதற்றத்துடன் நின்றிருந்தான். எங்கே அவளது நெருக்கத்தில் தனது கட்டுப்பாட்டை இழந்து விடுவனோ என்ற பதற்றம் தான்.
நூலிழை இடைவெளியில் நின்றவள் அவன் விழிகளை காதலுடன் நோக்க, அவளை அணைக்க துடித்த கரங்களை கட்டுப்படுத்தியவனால் கண்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
ஆம் அவனும் காதலுடன் அவளை நோக்கி இருந்தான். மின்விசிறியின் காற்றில் பறந்த அவளது துப்பட்டா அவனது கரத்தை தீண்ட, அவன் தனது கட்டுப்பாட்டை மெல்ல இழக்க ஆரம்பித்தான். மூச்சை இழுத்து பிடித்து தன் உணர்வுகளை அடக்க அவன் போராட,
அவள் போதை ஊட்டும் கிறங்கிய குரலில், “இதே குரலில் ராங்கி பட்டாசுனு கூப்பிடு” என்றாள்.
அதே கிறங்கிய குரலில், “ராங்கி பட்டாசு” என்றவனின் கைகள் அவளை அணைக்க உயர்ந்த நிலையில், கரடியாக அவனது கைபேசி அலற, சட்டென்று சுதாரித்து விலகி இருந்தான்.
‘ச்ச.. ஜஸ்ட் மிஸ்” என்று அவள் முணுமுணுக்க, அவன் அடக்கப்பட்ட சிரிப்புடன் கைபேசியுடன் உப்பரிகைக்கு சென்று பேசினான்.
அதன் பின் இரவு உணவின் போது அவள் செய்த பால்கோவாவை அவள் அவனுக்கு பரிமாற, இன்று அதை எடுத்து வாயில் போட்டு சுவைத்தவன், “ஓகே லெவல்” என்றான்.
சத்யதேவ், “டேய்! நிஜமாவே சூப்பரா இருக்குது” என்று கூற,
அவனோ, “இத்தனை நாள் விஷத்தை போன்றதை சாப்பிட்ட உனக்கு இது அமிர்தமா தான் தெரியும்” என்றான்.
ஆத்மிகா அவனை முறைக்க, அவனோ அதை கண்டு கொள்ளவே இல்லை.
மீனாட்சி, “பெரிய செஃப்! ரொம்ப தான் செய்ற!” என்று கூற,
அவனோ, “அதே தான்.. சீஃப் செஃப் மனைவி பிரம்மாதமா சமைக்கணும்” என்றான்.
“பிரம்மாதமா சமைத்துக் காட்டுறேன்” என்று ஆத்மிகா ரோஷத்துடன் கூற,
“ஆல் தி பெஸ்ட்” என்றுவிட்டு உணவை உண்ணத் தொடங்கினான்.
சத்யதேவ் ஆத்மிகாவிடம், “உங்க முடிவை மறுபரிசிலனை செய்யக் கூடாதா?” என்று பாவம் போல் கேட்க,
புன்னகையுடன், “வாய்ப்பே இல்லை ராஜா.. வாய்ப்பே இல்லை” என்றாள்.
ஜெயதேவ், “உன் பெயரில் ஒரு லைஃப் இன்ஷுரென்ஸ் எடுக்கலாம்னு இருக்கிறேன்” என்று சிரியாமல் கூற,
சத்யதேவ், “புருஷனும் பொண்டாட்டியும் நல்லா வருவீங்கடா” என்றதும், இருவரும் ஒன்றாக, “தன்க்யூ” என்றனர்.
உணவை முடித்த பிறகு பண்ணையில் செய்து கொண்டு இருக்கும் மாற்றங்களை பற்றி வீட்டினரிடம் பகிர்ந்தவன், “இன்னும் ரெண்டு நாளில் வேலை முடிஞ்சிடும்” என்றான்.
மீனாட்சி, “நல்லதுப்பா.. அப்பா இருந்து இருந்தா, ரொம்ப பெருமையா சந்தோஷப்பட்டு இருப்பாங்க” என்றார்.
ஆத்மிகா, “இப்பவும் பெருமையோட சந்தோஷப்பட்டுட்டு தான் இருப்பாங்க அத்தமா” என்றாள்.
அவரும் அதை ஆமோதிப்பது போல் புன்னகைத்தார்.
இரவு உறங்கும் முன் படுக்கை விரிப்பை சரி செய்தபடி, “சீஃப் செஃப் மனைவி அவர் லெவலுக்கு பிரம்மாதமா சமைக்கணும்னா” என்று இழுத்து நிறுத்தி அவனை நோக்கியவள், “ராங்கி பாட்டாசு லெவலுக்கு கற்றாழை கண்ணழகனும் இருக்கணும் தானே!” என்றாள்.
‘ரைட்டு இன்னைக்கு ஒரு முடிவோட தான் இருக்கா’ என்று மனதினுள் நினைத்தவன் கெத்தை விடாமல், “அஃப்கோர்ஸ்” என்றான்.
பின் அவள் பேசும் முன், “சாப்பிட போறதுக்கு முன்னாடி நீ சொன்னதை செய்தேனே!” என்று கூறி தப்பிக்க பார்க்க,
அவளோ, “அதெல்லாம் டீசருக்கு டீசர் மாதிரி” என்றாள்.
காதல் கொண்ட மனதின் எதிர்ப்பார்ப்பை அடக்க முடியாமல், “என்ன செய்யணும்?” என்று கேட்டவனின் மனசாட்சி, ‘இருந்தாலும் உனக்கு தைரியம் ஜாஸ்தி தான்’ என்றது.
“பெருசா ஒன்னுமில்லை.. சின்னதா கன்னத்தில் முத்தம் கொடுத்து குட் நைட் சொல்லு”
அவனது மனசாட்சி சிரித்தபடி, ‘செத்தான்டா சேகர்’ என்று கூற,
அவள் ‘என்ன!’ என்றது போல் புருவத்தை ஏற்றி இறக்கினாள்.
காதல் கொண்ட மனம் ஆசையுடன், ‘சின்ன முத்தம் தானே! அதுவும் கன்னத்தில் தானே!’ என்று முத்தமிட துடிக்க, மனசாட்சியோ, ‘அத்தோட உன்னால் நிறுத்த முடியுமா! இந்த விஷ பரிட்ஷை வேணாம்டா’ என்று எச்சரித்தது.
அவன், “காதல் வந்த பிறகு முத்தம் தரேன்” என்றான்.
அவளோ அலட்டிக் கொள்ளாமல், “உனக்கு என்னை பிடிக்கும் தானே! அந்த பிடித்தம் காதல் இல்லைனு நீ சொன்னாலும், க்ரஷ் இல்லைனு சொல்ல முடியாது தானே!” என்று கேட்டாள்.
அவன் ‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்ட,
“அப்போ முத்தம் கொடுக்கலாம் தப்பில்லை” என்றபடி அவள் அவனை நெருங்க,
இம்முறை காதல் கொண்ட மனமே வெல்ல, பட்டும் படாமல் முத்தமிட நினைத்தவனின் உதடுகள் அவளது கன்னத்தை தீண்டிய நொடி அவன் பேச்சை கேட்காமல் அழுத்தமாக பதிந்து இருந்தது.
உதட்டை விலக்கி, அவளது விழிகளை நோக்கியவன் காதலுடன், “கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுடடி கண்ணமா” என்றபடி மறு கன்னத்திலும் முத்தமிட, அவள் மெய் சிலிர்க்க விழி மூடியபடி நின்றிருந்தாள்.