எப்பி கொஞ்சம் சின்னது.. ரொம்ப இல்லை, கொஞ்சம் தான் சின்னது.. நேற்று எதிர்பாராமல் முக்கியமான வேலை வந்ததால் எப்பி எழுத முடியவில்லை.. ஆனால் உங்களை ஏமாற்ற விரும்பாமல் இன்று காலை 4.30 மணிக்கு எழுந்து டைப் செய்து இருக்கிறேன்.. அதனால் ப்ளீஸ் அட்ஜஸ்ட்..
சமையல் வேலை நடுவே ஸ்பெல் செக் செய்து இருக்கிறேன்.. ஸோ மிஸ்டேக்ஸ் இருந்தால் மன்னிச்சுசுசுசு…..
சித்தம் 23
உறங்க சென்ற சத்யதேவின் மனம் முழுவதும் அவனவளே நிறைந்து இருந்தாள். இன்றைய அவளது ஒவ்வொரு அசைவுகளையும் அசை போட்டவனின் மனதிற்கு அவளுக்கு ஏதோ பிரச்சனை இருப்பதாகவே தோன்றியது.
அது என்ன என்று பல விதமாக யோசித்தான். முதலில் அவளுக்கு தன்னை பிடிக்கவில்லையோ என்று யோசித்தவன், ‘இல்ல.. அவளோட முகத்தில் வெறுப்பு தெரியலையே! அப்படி பிடிக்கலைனா நின்னு பேசியே இருக்க மாட்டாளே!’ என்று நினைத்து அது இல்லை என்ற முடிவிற்கு வந்தான்.
அடுத்து அவளுக்கு தன் மேல் கோபமா என்று யோசித்தவன் அதுவும் இல்லை என்ற முடிவிற்கே வந்தான்.
யோசிக்க யோசிக்க, தனது பேச்சு அனைத்திற்குமே அவளிடம் பெரிதாக எந்த வித எதிர்விணையும் இல்லை என்றதோடு ஏதோ பற்றற்ற நிலையில் இருந்தது போல் தான் தோன்றியது.
‘கல்யாணம் நின்றதா? வீட்டில் திட்டி இருப்பாங்களா? சுத்தி இருக்கிறவங்க ஏதும் குத்திக்காட்டி பேசி இருப்பாங்களா?’ என்று பலவிதமாக யோசித்தவனின் மனக்கண்ணில் அன்று பித்துபிடித்தார் போல் ரோட்டில் நடந்து சென்ற சம்ருதிகா தோன்றினாள்.
‘ஒருவேளை அந்த ஞானவேல் இறந்தது தன்னால் தான்னு யோசிக்கிறாளோ? குற்ற உணர்ச்சியில் தவிக்கிறாளோ!’ என்று சரியாக கணித்தான்.
அவனுக்கு அந்த ஞானவேல் மீது அளவுகடந்த கோபம் வந்தது. அவன் அன்னை மீதும் கோபம் வந்தது.
தன்னவள் மனதை காயப்படுத்தாமல் தன் காதலை எப்படி புரிய வைக்கிறது என்ற கவலையும் வந்தது.
முதலில் அவளது மனதை அழுத்தும் விஷயத்தை அறிந்து, அதை அகற்றி அவளை இயல்பிற்கு கொண்டு வந்த பிறகே தனது காதலை சொல்ல வேண்டும் என்ற முடிவிற்கு வந்தவன், ஆத்மிகா உதவி இன்றி தானே இதை சரி செய்ய வேண்டும் என்றும் நினைத்தான். அது தான் தனது காதலுக்கு அழகும் மரியாதையும் என்று நினைத்தான்.
அது மட்டுமில்லை, ஒருவேளை அவள் தன்னை விரும்பவில்லை என்றால், அவளை கஷ்டபடுத்தாமல் என்றுமே அவளுக்கு நல்ல நலம்விரும்பியாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான்.
அடுத்து எவ்வாறு தன்னவளை அணுக வேண்டும் என்று சிந்தித்த பிறகே அவனால் நிம்மதியாக உறங்க முடிந்தது.
அங்கே ஜெயதேவ் அறையில், விழி மூடி மெய் சிலிர்க்க நின்றிருந்தவளின் சற்றே பிரிந்து இருந்த இதழ்களின் இடைவெளியை தன் இதழ் கொண்டு நிரப்பும் பேராவல் மேலோங்க, தன்னை மறந்த மோகன மோன நிலையில் இதழணைக்க நெருங்கியும் விட்டான், ஆனால் கடைசி வினாடியில் சுவர் கடிகாரத்தின் ஒலியில் சட்டென்று சுதாரித்து பதறி விலகினான்.
அவனது அசைவில் கண் விழித்தவள் குறும்பு புன்னகையுடன் கண்ணடித்தாள்.
முழுதாக மனம் சமன்பட்டு இராத நிலையில் அவனை அசரடிக்கும் அவளது இச்செயலில் இன்னும் அவள் மீது பித்தம் கொள்ள, சித்தம் கலங்கிப் போய் தான் நின்றான். ஆனாலும் முகத்தில் தன் நிலையை அவன் சிறிதும் வெளிகாட்டவில்லை என்றதால் அவனது மனதினுள் வீசிக் கொண்டு இருக்கும் காதல் சூறாவளியை அவள் அறியவில்லை.
“நாட் பேட்.. ஆனா ராங்கி பாட்டாசோட கற்றாழை கண்ணழகனா இருக்க முயற்சிக்கிறனு வேணா சொல்லலாம்.. ஏன்னா இதெல்லாம் பத்தாது.. நான் சின்ன முத்தம்னு சொன்னா, நீ இறுக்கி அணைச்சு நச்சுனு உம்மா கொடுத்து இருக்க வேணாமா?” என்றாள்.
“அது என்ன பின்னாடி?” என்றபடி அவளும் படுக்க ஆயுத்தமாக,
குழல் விளக்கை அணைத்து விடிவிளக்கை போட்டவன், “குட் நைட்” என்று கூறி அவளுக்கு முதுகு காட்டி படுத்துவிட்டான்.
“ஸ்வீட் ட்ரீம்ஸ் சொல்ல மாட்டியா?” என்று அவள் சீண்ட, அவன் பதில் கூறவில்லை.
“நீ சொல்லலைனா என்ன! நான் சொல்றேன்.. குட் நைட் ஸ்வீவீட்ட்ட்ட் ராங்கி பட்டாசு ட்ரீம்ஸ்” என்றாள்.
அவனிடம் பதில் இல்லை என்றதும், “ரொம்ப தான்” என்றவள் கண் மூடி படுத்துக் கொண்டாள்.
இருவரின் மனமும் முத்த தீண்டலில் தான் சஞ்சரித்து கொண்டு இருந்தது.
அவள் பெரிதாக எதிர்பார்க்கவில்லை என்றதால் அவளுக்கு பாதிப்பு பெரிதாக இல்லை. முத்தத்தின் தாக்கம் அவளுள் இருந்தாலும் அது ரசிப்பு தன்மையோடு நின்றுவிட்டது. இன்னும் இன்னும் வேண்டும் என்ற ஏக்கமோ, மோகமோ அவளை ஆட்கொள்ளவில்லை.
ஆனால் ஜெயதேவின் நிலையோ அதற்கு நேர் எதிராக இருந்தது.
இதழ் கொண்டு அவளை தீண்டத் துடித்த மனதை அடக்க பெரிதும் போராடியவன், ‘அப்படி என்ன கண்ட்ரோல் இல்ல உனக்கு! இத்தனை வருஷம் கட்டுக்கோப்பா தானே இருந்த!’ என்று தன்னைத் தானே கோபம் கொண்டு கடிந்து கொள்ள,
காதல் கொண்ட மனமோ, ‘அப்போ என்னோட ராங்கி பட்டாசு என் கூட இல்லையே! முத்தமும் கொடுத்தது இல்லையே’ என்று சிணுங்கலோடு வாதிட்டது.
நேற்று வரை மனதை கட்டுப்படுத்தியவனால் இன்றோ அது அவ்வளவு சுலபமாக இல்லை. ஒருகட்டத்தில் மூச்சு முட்டுவது போல் இருக்கவும் எழுந்துவிட்டான்.
அவள், “என்னாச்சு?” என்று வினவ,
“தண்ணி குடிச்சிட்டு வரேன்.. நீ தூங்கு” என்றவன் அறையை விட்டு வெளியேறினான்.
‘ரொம்ப தான் சீண்டி படுத்துறோமோ!’ என்று மனதினுள் நினைத்தவள் அமைதியாக படுத்து இருந்தாள்.
தண்ணீர் அருந்த சென்றவன் வருவதாக தெரியவில்லை என்றதும் மெல்ல எழுந்து சென்று எட்டிப் பார்த்தவள் அவன் கூடத்தில் நடை பயின்று கொண்டு இருக்கவும், வந்த சுவடு தெரியாமல் அமைதியாக வந்து படுத்துவிட்டாள்.
குளிர்ந்த நீரை பருகி ஓரளவிற்கு மனதை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தவன் அவள் உறங்கிய பிறகு செல்லும் எண்ணத்தில் கூடத்தில் நடை பயின்று கொண்டு இருந்தான்.
கிட்டத்திட்ட ஒரு மணி நேரம் கழித்து தங்கள் அறைக்கு சென்றவன் சில நொடிகள் விடிவிளக்கின் ஒலியில் தன்னவளின் முகத்தையே பார்த்தபடி நின்றிருந்தான்.
இவ்வளவு நேரம் அவனுக்காக காத்திருந்தவள் அப்பொழுது தான் உறக்க நிலைக்கு செல்ல ஆரம்பித்து இருந்தாள்.
அவள் ஆழ்ந்த நித்திரைக்கு சென்றுவிட்டாள் என்று நினைத்து அவள் அருகே அமர்ந்து, “ராங்கி பட்டாசு” என்றபடி அவளது நெற்றியில் முத்தமிட்டான்.
அவனது முத்தத்தின் ஸ்பரிசத்தில் முழிப்பு தட்டிவிட்டாலும் விழிகளை திறக்காமல் அமைதியாக தான் இருந்தாள்.
அவளது தலையை மயில் இறகை போல் மென்மையாக வருடியவன், “உன்னோட கற்றாழை பாவம் இல்லையா! ரொம்ப சீண்டி தவிக்க விடுறடி ராங்கி பட்டாசு..
நீ பட்டாசு மாதிரி என்னோட இறுக்கங்களை மட்டும் தூள் தூளாக்கி நீக்கலை, என்னோட பத்து வருஷ கட்டுப்பாட்டையும் சேர்த்து உடைக்கிற.. சும்மாவே உன்னை கிட்ட வச்சுக்கிட்டு மனசை அடக்குறது கஷ்டம், இதில் நீ வேற சீண்டி தீண்டி கொல்றடி.. தறிகெட்டு ஓடும் மனதை அடக்க பெரும் பாடா இருக்குதுடி..
பயமறியா என்னுள் பயத்தை விதைத்து இருக்கிற.. எஸ், எங்கே என்னோட கட்டுப்பாட்டை இழந்து இப்பவே உன்னை மொத்தமா எடுத்துப்பேனோனு ரொம்பவே பயமா இருக்குது.. ஆனா உன்னை விட்டுட்டும் இருக்க முடியலை.. முதல் ரெண்டு மாசத்தை கடக்க சிரமமா இருந்தாலும் பெருசா தெரியலை ஆனா இனி நீ இல்லாம நிச்சயமா முடியாது..
எஸ்.. இந்த கொஞ்ச நாளிலேயே நீ இன்றி நானில்லை என்ற நிலைக்கு வந்துட்டேன்.. ஒவ்வொரு நாளும் என்னோட விடியலும் அந்தியும் உன் முகத்தில் தான் ஆரம்பித்து முடியனும்..
என் சோர்வை போக்க பட பட பட்டாசா நிறுத்தாம பேசுற உன்னோட பேச்சு வேணும், நான் சுவாசிக்க இந்த அறையில் நிறைந்து இருக்க உன்னோட வாசம் வேணும், நான் ரசிக்க குறும்பில் மின்னும் உன்னோட கண்கள் வேணும், புத்துணர்ச்சி தர உன்னோட புன்னகை வேணும், மொத்தத்தில் நான் நானா இருக்க உன்னோட அருகாமை எனக்கு வேணும்.
என்னால் உன் படிப்பு கெடக் கூடாதுனு தான் உன்னை விட்டு விலகி இருக்கிறேன்.. ‘இதில் என்ன! என்னால் படிக்க முடியும்’னு நீ சுலபமா சொல்லலாம் ஆனா படிப்பை பாதியில் நிறுத்திய எனக்குத் தான் அதோட அருமை முழுமையா தெரியும்.. என்னோட காதலால், நெருக்கத்தால் உன் படிப்பில் சின்னதா சரிவு ஏற்பட்டா கூட என்னை என்னாலேயே மன்னிக்க முடியாது” என்றவன் சின்ன சிரிப்புடன்,
“ஆனாலும் ரொம்ப தான் சீண்டுற.. பின்னாடி என்னோட வேகத்தை எப்படி தாங்கப் போறியோனு தெரியலை” என்றான்.
“சில நேரம், யோசித்து பார்த்தா நானா இதுனு எனக்கே சந்தேகமா இருக்கும்.. அந்த அளவுக்கு என்னை மாத்தி வச்சிருக்க.. செல்ல ராங்கி பாட்டாசு! இப்போ கூட பாரு, இப்படி தனியா பேசிட்டு இருக்கிறேன்..
என்னை என்னடி செய்து வச்சு இருக்க! இப்படி உன்னில் பித்தாகி நிற்பேன்னு நினைக்கவே இல்லை! ஆனா ரொம்ப பிடிச்சு இருக்குது.. அதுவும் உன்னால் காதலிக்கப் படுவது ரொம்ப ரொம்ப பிடிச்சு இருக்குது.. அந்த பீல் இருக்குது பார்! அப்படியே மனசு ஜிவ்வுன்னு சிறகில்லாமல் பறக்கும்..
ஒரு நேரம் மாய கண்ணனா குறும்பு செய்து மனதை மயக்குறவ, இன்னொரு நேரம் பொறுப்பா சிந்தித்து பிரம்மிக்க வைக்கிற.. உன்னோட ஒவ்வொரு சின்ன சின்ன அசைவுகளும் எனக்கு அவ்ளோ பிடிக்கும்..” என்று இன்னும் ஏதேதோ பேசியவன், இறுதியில் தனது ஏக்கத்தை வெளிபடுத்தினான்.
“ப்ச்.. நீ கொஞ்சம் சீக்கிரம் பிறந்து இருக்க கூடாதா! ரொம்ப இல்ல, ஜஸ்ட் ஒரே ஒரு வருஷம் முன்னாடி பிறந்து இருக்கலாம்! இந்நேரம் உன்னில் கலந்து ஈருயிர் ஓருயிரா சங்கமித்து இருப்போம்!” என்று ஏக்க மூச்சை பெரிதாக வெளியிட்டவன் மீண்டும் அவளது நெற்றியில் முத்தமிட்டு படுத்துவிட்டான்.
பெண்ணவளோ நெஞ்சை முட்டும் அவனது காதலில் மெய் சிலிர்க்க வாயடைத்துப் போனாள். அவன் தன்னை காதலிப்பது தெரிந்தாலும் இந்தளவிற்கு ஆழமான காதலை அவள் எதிர்பார்க்கவில்லை.
‘இதை விட அழகா காதலை யாரால் சொல்ல முடியும்!’ என்றும், ‘என்னை விட நீ தான்டா என்னை அதிகமா காதலிக்கிற! என்றும் தான் அவளுக்கு தோன்றியது.
தான் அவளில் பித்தாகி இருக்கும் விதத்தை சொல்லிச் சொல்லியே அவளை அவனில் இன்னும் இன்னும் பித்தாக மாற்றி இருந்தான்.
அவனது ஏக்கங்களும் பயமும் புரிய, இனி அவனை சீண்டக் கூடாது என்ற முடிவிற்கு வந்தவள் அடுத்து வந்த நாட்களில் அதை கடை பிடிக்கவும் செய்தாள்.
அவனுடன் கேலியும் கிண்டலுமாக பேசியதோடு நிறுத்திக் கொண்டவள், பேச்சிலோ செயலிலோ நெருக்கத்தை காட்டி அவனை சீண்டவில்லை. அதில் அவன் தான் பெரிதும் பாதிக்கப்பட்டான்.
ஆம், அவளது சீண்டல்கள் இல்லாமல் அன்றைய நாளே முழுமை பெறாதது போல் உணர்ந்தான்.