சில நாட்களுக்கு பிறகான தன்னவளின் நெருக்கத்தை அணுஅணுவாக ரசித்தவன் இம்முறை தனது ரசனையை மறைக்காமல் கண்களில் தவழவிட, முதல் முறையாக ஆத்மிகாவின் விழிகளில் வெட்கப் பூக்கள் பூத்தது.
அதை கண்டு தன்னையும் அறியாமல், “வாவ்!” என்றிருந்தான்.
அதில் இன்னும் கூடுதலாக அவள் வெட்கம் கொள்ள,
வெட்கம் கொள்ளும் தன்னவளின் கொள்ளை அழகை புன்னகையுடன் கைபேசியில் படம் பிடித்தவன் அதை மனதினுள் பொக்கிஷமாக கருதினாலும் வெளியே கிண்டல் குரலில், “அரிய வகை போட்டோ.. ராங்கி பட்டாசு முகத்தில் வெட்கம்! மெடிக்கல் மிராக்கிள்!” என்றான்.
அவளோ, “என்னை வெட்கப்பட வைக்க உனக்கு தெரியலை” என்றாள்.
புருவத்தை ஏற்றி இறக்கியபடி வரவழைத்த சிறு ஆச்சரிய குரலில், “ஹஹான்” என்றவன் சவாலிடும் குரலில், “இன்னும் நாலு மாசம் கழித்து இதை சொல்ல முடியுதானு பார்” என்றான்.
கண்களை விரித்தபடி அவனை அவள் நோக்க, அவன் முதல் முறையாக அவளைப் பார்த்து கண் சிமிட்டினான்.
அதில் இன்னும் பெரிதாக கண்களை விரித்தவள் நெற்றியில் கையை வைத்து லேசாக ஆடியபடி, “எனக்கு மயக்கம் வர மாதிரி இருக்குது” என்றாள்.
“அதிர்ச்சி மயக்கம் தானே! இன்னொரு அதிர்ச்சி கொடுத்தா சரி ஆகிடும்” என்றவன் கண்ணில் விஷமத்துடன், “மருத்துவ முத்தம் மாதிரி கன்னத்தில் அதிர்ச்சி முத்தம் தரவா?” என்றான்.
இரண்டு நொடிகள் பேச்சற்று நின்றவள், “எனக்கு நிஜமாவே மயக்கம் வர மாதிரி இருக்குது” என்றாள்.
பார்வையை சுழற்றிய ஆத்மிகா, “என் வெட்கமா ரேர் பீஸ்! உன்னோட இந்த சிரிப்பு தான் உலகத்திலேயே ரேர் பீஸ்.. சுத்திப்பார்.. வேலையாட்கள் எட்டாவது அதிசியத்தை பார்த்த மாதிரி நிற்கிறாங்க” என்றாள்.
“நான் உன் பக்கத்தில் இருக்கும் போது நீ ஏன் அவங்களை பார்க்கிற?”
ஒரு நொடி நடையை நிறுத்தி அவனை பார்த்தவள், பின் நடையை தொடர்ந்தபடி, “நிஜமாவே உனக்கு என்னவோ ஆகிடுச்சு” என்றாள்.
‘ஆமா ராங்கி பட்டாசு எனக்குள்ளே புகுந்துட்டா.. நான் அவளுக்குள் புக தான் இன்னும் நாலு மாசம் இருக்குது’ என்று மனதினுள் மட்டும் கூறிக் கொண்டவன் அவளைப் பார்த்து தலை கோதியபடி வசீகர புன்னகையை உதிர்த்தான்.
இப்போது, “வாவ்” என்று சொல்வது அவளது முறையாகிற்று.
பின் நினைவு வந்தவளாக, “அது என்ன நாலு மாச கணக்கு? தொழிலதிபர் கணக்கு தப்பா இருக்குதே!” என்றாள்.
அவள், “பின்றியே கண்ணழகா!” என்றதை கவனிக்காதது போல்,
“ப்ராஜெக்ட் வைவா முடிந்ததுக்கு அப்புறம் ஸ்டடி ஹாலிடேஸ்.. அப்புறம் மூனே நாள் தான் எக்ஸாம்.. அப்போ கணக்கு சரி தானே!” என்றான்.
“அப்போ எக்ஸாமுக்கு நான் படிக்க வேணாமா?”
“நீ தான் மாடல் எக்ஸாம் அப்பவே படிச்சிருவியே!” என்று அலட்டிக் கொள்ளாமல் அவன் கூற,
அவள் தான் வாயில் கைவைத்தபடி, “அடபாவி கேடி கற்றாழை.. இனி உன்னை கே.கேனு சொல்லாம ட்ரிப்பில் ‘கே’னு தான் சொல்லணும் போல” என்றாள்.
அவன் சிரிக்க, “எப்படி தெரியும்?” என்று கேட்டாள்.
“தெரியும்”
“ஹே! சொல்லு” என்று கண்ணை சுருக்கியபடி அவள் கேட்க,
அதில் மதி மயங்கியவன், “உன் பிரெண்ட் ரூ தான் சொன்னாங்க” என்றான்.
அவள் சிறு அதிர்வுடன், “அவ கூட நீ பேசினதே இல்லையே!” என்று கூற,
“நான் பேசனும்னு அவசியம் இல்லை.. உன்னை பற்றிய விஷயம்னா எனக்கு எப்படியும் தெரிஞ்சிடும்” என்றான்.
“எப்படி!” என்று முணுமுணுத்தபடி யோசித்தவள், “ஹே! சிசிடிவி-யில் எங்களை கவனிச்சு, லிப் ரீடிங் செய்தியா?” என்று கேட்டாள்.
அவன் தோள்களை குலுக்க,
“போன வாரம் ரெஸ்டாரென்ட் வந்து இருந்தப்ப தான் ப்ராஜெக்ட், படிப்பு பத்தியெல்லாம் பேசினோம்.. அப்போ தான் ரூ அப்படி சொன்னா.. அதைத் தான் சொல்றியா?” என்று கேட்டாள்.
அவனது சிரிப்பே ‘ஆம்’ என்று சொல்லாமல் சொன்னது.
அவர்கள் மீனாட்சி மற்றும் சத்யதேவ் அருகே வந்து இருக்க, அவள் வாய் அசைத்து, “ஐ லவ் யூ கே.கே” என்றாள். அவன் தான் தன் உணர்வுகளை மறைக்க சற்றே திணறிப் போனான். அதை ரசித்து அவள் ரகசிய சிரிப்பை உதிர்க்க, அவன் கண்களால் அவளை மிரட்ட, அதற்கும் சிரித்தபடி கண்ணடித்தாள்.
அந்த நாளிற்கு பிறகு ஆத்மிகா பழையபடி அவனை சீண்ட ஆரம்பித்து இருக்க, சில நேரங்களில் அவனும் தனது பதில்களின் மூலம் அவளை வாயடைக்க செய்து விடுவான்.
வெகு சில நேரங்களில், “இன்னும் கொஞ்ச நாள் தான்.. அப்புறம் நான் உன்னோட வாயடைக்கிற விதமே வேறு” என்று கூறி அவளை வெட்கத்தில் ஆழ்த்தி ரசிப்பான்.
ஜெயதேவ் ஆத்மிகாவின் காதல் அழகிய காவியமாய் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே இருக்க, இருவரும் வாழ்க்கையை மிகவும் ரசித்து வாழ்கின்றனர்.
ஆனால் சத்யதேவின் காதலோ இன்னமும் ஒருதலை காதலாக தான் சென்று கொண்டு இருக்கிறது.
சம்ருதிகாவை கோவிலில் சந்தித்தவன், “உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான்.
அவள் யோசனையுடன் பார்க்கவோ, மறுக்கவோ, ஆச்சரியப்படவோ இல்லாமல் அமைதியாக கிளம்ப,
“ப்ளீஸ் இங்கே கொஞ்சம் உட்காருங்க.. ஜஸ்ட் அஞ்சு நிமிஷம் தான்” என்று கெஞ்சும் குரலில் கேட்டான்.
ஏனோ அவனது கெஞ்சும் குரலை மீறி செல்ல முடியாமல் அங்கே அமர்ந்தாள்.
இடைவெளி விட்டு அமர்ந்தவன், அவளது முகம் தெரிவது போல் தனது கைபேசியில் காணொளி பதிவு செய்யும் பொத்தானை இயக்கி தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டான்.
பின், “உங்க மனசில் என்ன ஓடுதுன்னு என்னால் புரிஞ்சுக்க முடியுது.. ஏன்னா நானும் இப்படி ஒரு நிலையில் இருந்து இருக்கிறேன்” என்றான்.
அவளிடம் எந்த மாற்றமும் இல்லை.
“காலேஜ் படிச்சிட்டு இருந்தப்ப என்னை ஒரு தலையா காதலிச்ச ஒரு பொண்ணு நான் இல்லைனா அவளால் வாழவே முடியாதுனு சொல்லிட்டே இருந்தா.. காதல் கட்டாயத்தில் வராதே! அதனால் நான் அவளை கண்டுக்கவே இல்லை.. ஆனா ஒரு நாள், நான் அவளுக்கு ஓகே சொல்லலைனா மாடியில் இருந்து குதிச்சிடுவேன்னு மிரட்டினா” என்றவன் இரண்டு நொடிகள் வருந்துவது போல் இடைவெளி விட்டு அவளைக் கவனிக்க, இப்பொழுது அவளது கண்ணில் ஒரு வித பரபரப்பு தெரிந்தது.
‘ஸோ நான் கெஸ் செய்தது சரி தான்’ என்று மனதினுள் கூறிக் கொண்டவன் வரவழைத்த சோக குரலில், “எப்போதும் போல் தான் மிரட்டுறானு நான் நினைச்சு அசால்ட்டா நின்னா..” என்று மீண்டும் ஒரு நொடி நிறுத்தியவன் மெல்லிய குரலில், “என் கண்ணு முன்னாடியே காலேஜ் டெரஸில்(terrace) இருந்து குதிச்சு ஸ்பாட்லேயே இறந்துட்டா” என்று முடித்தவனின் கண்கள் உண்மையிலே கலங்கி இருந்தது. தன்னவளின் கண்களில் தோன்றிய அலைப்புறுதலுடன் கூடிய பரிதவிப்பே அந்த கண்ணீருக்கு காரணம்.