அவளது கண்கள் கலங்கவும், தனது கண்களை துடைத்துக் கொண்டு அவளது கைகளை மென்மையாக பற்றியபடி, “ரிலாக்ஸ் சம்யு” என்றான்.
“என்னால் தான் அந்த பொண்ணு இறந்துட்டானு ரொம்ப கில்டியா இருந்துச்சு.. அப்போ அந்த டைமில், என்னால் தூங்கவே முடியாது.. கண்ணை மூடினாலே அவள் இறந்தது தான் கண்ணு முன்னாடி வந்து நிற்கும்”
அவள் அவனது கையை இறுக்கமாக பற்ற, அவளது கன்னங்களில் கண்ணீர் கடகடவென்று இறங்க ஆரம்பித்தது. பார்வையை சுழற்றியவன் அங்கே அந்த நேரத்தில் யாரும் இல்லை என்றதும் தான் நிம்மதி கொண்டான்.
அவளது முதுகை ஆதரவாக மெல்ல வருடியபடி சில நிமிடங்கள் அவளை அழ விட்டவன் பின், “ஆனா நான் டாக்டரை போய் பார்த்தப்ப, அவர் அவளோட இறப்புக்கு நான் காரணமே இல்லைனு சொல்லி புரிய வைத்தார்” என்று கூறி நிறுத்தினான்.
சட்டென்று அழுகையை நிறுத்தி அவனை நிமிர்ந்து பார்த்தவள், “அப்போ.. அப்போ.. நான்.. ஞானவேல் இறப்புக்கு காரணம் இல்லையா?” என்று கேட்டாள்.
அவளை தனது கைவளைவுக்குள் கொண்டு வந்து ஆறுதல் கூறத் துடித்த மனதையும் கலங்க துடித்த கண்களையும் அடக்கியவன், “இல்லம்மா.. நீ காரணம் இல்லை” என்றான்.
அந்த நொடி அவளது கண்ணில் வந்த நிம்மதியை அவனது வாழ் நாளில் அவனால் மறக்கவே முடியாது.
பின், “தன்க்யூ.. ரொம்ப தேங்க்ஸ்” என்றவள், “நான் கிளம்பட்டுமா?” என்று கேட்டாள்.
“என்னோட நம்பர் இருக்குது தானே! ஏதாவது பேசனும்னாலோ, சந்தேகம் வந்தாலோ இல்லை மனசு டிஸ்டர்ப்டா இருந்தாலா தயங்காம எந்த நேரமா இருந்தாலும் போன் செய்து பேசு” என்றான்.
“ஹ்ம்ம்” என்றவள் மீண்டும், “தேங்க்ஸ்” என்று கூறி கிளம்பினாள்.
கண்ணில் இருந்து மறையும் வரை அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன், அவள் சென்றதும் கைபேசியை எடுத்து காணொளியை நிறுத்தி கைபேசியை சட்டை பையில் வைத்தான். பின் தன்னவளுக்காக கடவுளிடம் வேண்டிவிட்டு கிளம்பினான்.
அடுத்து மனநல மருத்துவராக இருக்கும் தனது நண்பனின் தந்தையை சென்று பார்த்தவன் தனது சந்தேகங்களை கேட்டு தெரிந்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றான்.
அன்று இரவு அவன் உறங்க ஆயுத்தமான போது சம்ருதிகாவிடம் இருந்து அழைப்பு வந்தது.
அவசரமாக அழைப்பை எடுத்தவன் அந்த அழைப்பை பதிவு செய்யத் தவறவில்லை.
“சொல்லு சம்யு”
“நீங்க சொன்னது உண்மையா?”
“எதை கேட்கிற?”
“கோவிலில் சொன்னது”
“அது தான் எதை கேட்கிற? என்னை பற்றி சொன்னதா?”
“ஹ்ம்ம்”
“இப்போ என்ன திடீர்னு சந்தேகம்?”
“இல்ல.. என்னக்காக சும்மா சொல்றீங்களோனு” என்று இழுத்து நிறுத்தினாள்.
மௌனம் எனும் கூட்டை விட்டு வெளியே வந்து அவள் யோசிக்க ஆரம்பித்ததில் பெரிதும் மகிழ்ந்தவன் அதை அவளிடம் காட்டிக் கொள்ளாமல், “என் பிரெண்ட்ஸ் கிட்ட வேணா கேட்டு பார்க்கிறியா?” என்றான்.
“இல்ல.. இல்ல.. வேணாம்” என்றவள் மீண்டும், “ஆனா.. அந்த பொண்ணை தடுக்காததால் அவ இறப்புக்கு..” என்று இழுத்து பாதியிலேயே நிறுத்தினாள்.
“நான் தான் காரணம்னு சொல்றியா?”
ஒரு நொடி அமைதியாக இருந்தவள், “சாரி..” என்று ஆரம்பிக்க,
அவன், “நானும் இதைத் தான் டாக்டர் கிட்ட கேட்டேன்.. ஆனா அவர் இல்லைனு ஸ்ட்ராங்கா சொன்னார்.. அவ மேல தான் முழு தப்புனும், அவ மட்டுமே அவளோட இறப்புக்கு காரணம்னும் சொன்னார்.. நான் அவளை காதலிச்சு தான் ஆகணும்னு அவ சொன்னது பெரிய தப்புனும், அதனால் எனக்கு மன உளைச்சல் தந்தது தான் தப்புனும் சொன்னார்.. அவளோட முடிவை அவ எடுத்துகிட்டா, அதில் என் பங்கு எதுவுமே இல்லைனு சொன்னார்” என்றான்.
“அப்போ நிஜமாவே ஞானவேல் இறப்புக்கு நான் காரணம் இல்லை தானே!” என்று தவிப்பும் எதிர்பார்ப்புமாக கலங்கிய குரலில் கேட்டாள்.
“நிச்சயம் இல்லை.. என் கிட்ட சொல்லிட்டு, என் கண்ணு முன்னாடியே அந்த பொண்ணு விழுந்ததுக்கே நான் காரணம் இல்லாதப்ப.. அவன் கையை அறுக்க எடுத்த முடிவு கூட உனக்கு தெரியாதப்ப, நீ எப்படி அதுக்கு காரணம் ஆவ?”
“தேங்க்ஸ்.. தேங்க்ஸ் அ லாட்”
“எதையும் பத்தி யோசிக்காம நிம்மதியா தூங்குடாமா”
“ஹ்ம்ம்.. குட் நைட்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தவள் அடுத்து அரை மணி நேரத்திலேயே மீண்டும் அழைத்து இருந்தாள்.
அழைப்பை எடுத்தவன் அதை பதிவு செய்ய ஆரம்பித்தபடி, “சொல்லுடா” என்றான்.
“என..க்கு.. எனக்கு.. தூங்க முடியலை” என்று கண்ணீர் குரலில் கூறினாள்.
“அவன் இறந்த நொடியே கண் முன்னாடி வருதா?” என்று கனிவுடன் அவன் வினவ,
“ஹ்ம்ம்” என்றாள்.
“ரூம் கதவை மூடி இருக்கிறியா?”
“இல்ல”
“தாழ்பாள் போடாம வெறுமென மூடிட்டு வந்து ஸ்பீக்கர் போடு”
அவ்வாறே செய்தவள், “போட்டுட்டேன்” என்றாள்.
“மொபைலை பெட்டில் வச்சிட்டு கண்ணை மூடிப் படு.. நீ தூங்குற வரை நான் பாடுறேன்.. பாத்ரூம் சிங்கர் மட்டும் தான்.. அதான் கழுதை வந்திரக் கூடாதுனு முன்னெச்சரிக்கையா கதவை மூடச் சொன்னேன்”
பல நாட்கள் கழித்து மனதார லேசாகச் சிரித்தாள்.
அவளது அமைதியில், “என்ன?” என்றான்.
“ஒன்னுமில்லை” என்றவளின் குரலில் அவளது சிரிப்பு லேசாக தெரியவும் பெரிதும் நிம்மதி கொண்டவன், “சரி படு” என்றான்.
அவள் அமைதியாக படுத்தாள்.
“படுத்திட்டியா?”
“ஹ்ம்ம்”
“கண்ணை மூடு”
“ஹ்ம்ம்”
“மூடிட்டியா?”
“ஹ்ம்ம்”
“குட்” என்றவன் மெல்லிய குரலில் மெல்லிசை பாடல்கள் ஒவ்வொன்றாக பாட ஆரம்பித்தான்.
தொடர்ந்து முக்கால் மணி நேரம் பாடியவன், “சம்யு” என்று இரண்டு முறை அழைத்துப் பார்த்தான். அவளிடம் பதில் இல்லை என்றதும் உறங்கிவிட்டாள் என்று புரிந்து கொண்டு, “லவ் யூடி தங்கமா” என்று கூறி அழைப்பை துண்டித்தவன் நிம்மதியாக உறங்கினான்.
அடுத்த நாள் காலையில் எழுந்ததும் அவளை அழைக்க, அழைப்பை எடுத்தவள் தூக்க கலக்கத்துடன், “ஹெலோ” என்றாள்.
“குட் மார்னிங் சம்யு.. சத்யா பேசுறேன்”
சட்டென்று கண்களை திறந்து எழுந்து அமர்ந்தவள், “குட் மார்னிங்” என்றாள்.
“நல்ல தூங்குனியா?”
“இப்போ தான் எந்திக்கிறேன்.. ரொம்ப தேங்க்ஸ்.. ரொம்ப நாள் கழிச்சு நல்ல தூக்கம்” என்றாள்.
“குட்.. இன்னைக்கு கோவில் வரியா?”
“நேத்து தானே கோவில் போனேன்.. அடுத்து வெள்ளிக்கிழமை தான் வருவேன்”
“சரி.. ஹாப்பி மார்னிங்.. ஹவ் அ ப்ளசன்ட் டே”
“உங்களுக்கும் ஹாப்பி மார்னிங் அன்ட் ப்ளசன்ட் டே”
“தன்க்யூ.. நான் ஆபீஸ் கிளம்பணும்”
“ஓகே பை” என்று கூறி அழைப்பை துண்டித்தவள் அன்றைய நாளை சிறு உற்சாகத்துடன் தான் தொடங்கினாள்.
அவளிடம் அலுவகத்திற்கு கிளம்ப வேண்டும் என்ற சத்யதேவோ அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்துவிட்டு பூமணியை சந்திக்கச் சென்றான். முதலில் நண்பனின் தந்தையை கைபேசியில் அழைத்து, சம்ருதிகாவுடன் பேசியதைப் பற்றி பேசிவிட்டு கிளம்பிச் சென்றான்.
வங்கிக்கு சென்றவன் அனுமதி பெற்றுக் கொண்டு பூமணியின் அறையினுள் சென்று, “நான் சத்யதேவ்” என்று ஆரம்பிக்கவுமே,
பூமணி, “தப்பா எடுத்துக்காதீங்க.. இன்னைக்கு வேலை ரொம்ப அதிகம்” என்றார்.
“நான் வெயிட் பண்றேன்”
“இல்லை.. ரொம்ப லேட் ஆகும்.. நீங்க வேணா கிளம்புங்களேன்” என்றார்.
“பரவாயில்லை.. ரொம்ப முக்கியமான விஷயம் பேசணும்.. எவ்வளவு நேரம் ஆனாலும் வெயிட் பண்றேன்.. நீங்க வேலை முடிந்ததும் பியூன் கிட்ட சொல்லி அனுப்புங்க” என்று கூறி வெளியேறியவன் வாடிக்கையாளர்கள் அமரும் இடத்தில் அமர்ந்துவிட்டான்.