அரை மணி நேரத்திற்கு மேல் அவனை காத்திருக்க வைக்க முடியாமல் ஏவலர் மூலம் அழைத்துவிட்டார்.
உள்ளே சென்றதும், “தேங்க்ஸ்” என்றபடி அமர்ந்தவன், “டிஸ்டர்ப் செய்றதுக்கு சாரி.. ஆனா எனக்கு வேற வழி இல்லை.. இதை உங்க கிட்ட பேசுறது தான் சரி.. பேசித் தான் ஆகணும்” என்று திடமான குரலில் கூறினான்.
இதுவரை அவனிடம் கண்டிராத நிமிர்விலும் திடத்திலும் சிறு ஆச்சரியம் கொண்டவர், “என்ன பேசணும்?” என்று கேட்டார்.
“நான் சொல்லப் போறது ரொம்ப சென்ஸிடிவ்வான விஷயம்.. டென்ஷன் ஆகாம கேளுங்க.. சம்யு பத்தி பேச தான் வந்தேன்” என்றவன் அவரது முகத்தில் வந்த கடினத்தில் அவசரமாக, “அவளோட மனநிலை பத்தி பேச வந்தேன்.. ப்ளீஸ் கோபமோ டென்ஷனோ ஆகாம கேளுங்க.. சம்யு இப்போ டிப்ரெஷன் ஸ்டேட்டில் இருக்கா..” என்றவனின் பேச்சை இடையிட்டவர் கோபத்தை அடக்கிய குரலில்,
“என் பொண்ணை பார்த்துக்க எனக்குத் தெரியும்” என்றார்.
“உங்களுக்காகவே இதை எடுத்தேன்” என்றபடி தனது கைபேசியை அவர் முன் நீட்டி, அந்த காணொளியை ஓட விட்டான்.
“எவ்வளவு தைரியம் இருந்தா என் பொண்ணை வீடியோ எடுத்து இருப்ப?” என்று அவர் எகிற,
அவனோ அழுத்தமான குரலில், “தப்பான வீடியோவா இருந்தா இப்படி உங்க முன்னாடி உட்கார்ந்து காட்டிட்டு இருக்க மாட்டேன்.. முதல்ல பாருங்க.. அப்புறம் கோபப்படுங்க” என்று அதட்டினான்.
அவனது அதட்டலில் அவர் ஆச்சரியம் கலந்த அதிர்வுடன் அவனைப் பார்க்க,
அவன், “அன்னைக்கு என் மேல தப்பு இருந்ததால் மட்டுமே தழைந்து போனேன்.. மற்றபடி நான் கோழையோ அமைதியானவனோ இல்லை.. பேச வேண்டிய இடத்தில் சரியா பேசத் தெரியும்” என்றான்.
பின், “கிட்ட திட்ட நாலு மாசமா சம்யு மன உளைச்சலில் இருந்துட்டு இருக்கா.. யாருமே கண்டு பிடிக்கலை.. முதல் இரண்டு மாசமாவது ஹாஸ்பிடல் மருந்து மயக்கம் தூக்கம்னு போய் இருக்கும்.. ஆனா அதுக்கு அப்புறமும் அவளோட அமைதியை எப்படி கவனிக்காம விட்டீங்கனு தெரியலை.. அமைதினு இல்ல, அவளது பேச்சிலேயே வித்யாசம் தெரியுதே..
சில நாட்களுக்கு முன்னாடி கோவிலில் அவ கிட்ட பேசினதுமே எனக்கு வித்யாசம் தெளிவா தெரிஞ்சுடுச்சு.. அண்ணி மட்டும் அவ கூட இருந்து இருந்தா நிச்சயம் கண்டு பிடிச்சு இருப்பாங்க” என்றவன், “ப்ளீஸ் தப்பா எடுத்துக்காதீங்க.. நான் உங்களை குறை சொல்லலை.. என்னோட ஆதங்கத்தைச் சொன்னேன்.. இந்த வீடியோ பாருங்க.. உங்களுக்கே புரியும்” என்றான்.
அவர் அமைதியாக அந்த காணொளியை பார்க்க ஆரம்பித்தார். பார்க்க பார்க்க அவரது கண்கள் கலங்க ஆரம்பிக்க, இறுதியில் கண்ணீர் வடிந்தே விட்டது. துக்கத்தில் அவருக்கு பேச்சே வரவில்லை. ‘நான் என்ன அப்பா!’ என்று தோன்ற, தன் மீதே கோபம் கொண்டார்.
சத்யதேவின் முகத்தை பார்க்காமல், “சாரி” என்று அவர் கூற,
அவனோ, “ப்ளீஸ் பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க.. என்னால் புரிந்துக்க முடியுது.. சம்யு அண்ணி மாதிரி கிடையாது.. உங்களுக்கும் அவளுக்கும் இடைவெளி அதிகம்.. அதனால் உங்களால் கண்டுபிடிக்க முடியாம போய் இருக்கலாம்.. இப்போ அதை விடுங்க.. அடுத்த என்ன செய்யனு பார்க்கலாம்..
முதல் முறை அவ கிட்ட பேசினப்ப வித்தியாசம் தெரிந்தாலும் எனக்கு என்னனு முதல்ல சரியா தெரியலை.. அப்புறம் வீட்டுக்கு போய் யோசிச்சப்பவும் குழப்பம் தான்.. இப்படி இருக்குமோனு சந்தேகம் மட்டும் தான் இருந்தது.. நேத்து பேசினதுக்கு அப்புறம் தான் உறுதியாச்சு.. நான் சம்யு கிட்ட சொன்னது கதை தான்.. திரும்பவும் கதையானு டென்ஷன் ஆகாதீங்க ப்ளீஸ்.. அவளோட மனசில் இருப்பதை வெளியே கொண்டு வர எனக்கு இந்த வழி தான் தோனுச்சு..
வீடியோ எடுத்ததுக்கு ரொம்ப சாரி.. ஆனா அது இல்லாம சம்யு எந்தளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கானு கண்டிப்பா உங்களுக்கு புரிய வைத்து இருக்க முடியாது.. என் மேல் கோபத்தில் இருக்க நீங்க நான் சொல்றதை சரியா கேட்பீங்களானு கூட எனக்கு சந்தேகமா இருந்தது.. அதான் வீடியோ எடுத்தேன்” என்றான்.
அவன் முகத்தை பார்த்தவர், “புரியுது.. ரொம்ப நன்றி.. வேற என்ன சொல்லனு எனக்கு தெரியலை” என்றார் தளர்ந்த குரலில்.
“நன்றி சொல்லி என்னை அன்னியப்படுத்தாதீங்க ப்ளீஸ்.. இது என்னோட கடமை”
அவர் சட்டென்று கூர்விழிகளுடன் அவனை நோக்க,
அவன், “என்னால் தான் சம்யு இப்படி இருக்காளோனு எனக்கு குற்ற உணர்ச்சி இருக்குது.. ஒருவேளை நான் குழப்பம் செய்யாம இருந்து இருந்தா, எங்களுக்குள் நிச்சயம் மனசளவில் நெருக்கம் இருந்து இருக்கும்.. அப்போ ஞானவேல் முதல்ல பேசினப்பவே என் கிட்ட சொல்லி இருப்பா தானே, பிரச்சனை இந்த அளவுக்கு வராம தடுத்து இருக்கலாம் தானே!” என்று மிகவும் வருந்திய குரலில் கூறினான்.
“ஒரு விஷயம் நடந்ததுக்கு அப்புறம், அப்படி நடந்து இருந்தா, இப்படி நடந்து இருந்தானு பேசி பிரயோஜனம் இல்லை.. மன வருத்தம் மட்டும் தான் மிஞ்சும்.. எல்லாம் விதி.. அவரவர் அனுபவிக்க வேண்டிய கர்மானு கூட சொல்லலாம்.. விடுங்க.. இப்போ ஆக வேண்டியதை மட்டும் பார்ப்போம்”
“இன்னொரு சாரி சொல்லிக்கிறேன்.. ப்ளீஸ் கோபப்படாதீங்க.. என்னோட பிரெண்டோட அப்பா ஒருத்தங்க சைகாட்ரிஸ்ட்டா இருக்காங்க.. இந்த வீடியோவை அவங்க கிட்ட காட்டினேன்” என்று கூறி அவர் முகத்தை தயக்கத்துடன் நோக்கினான்.
அவனது நோக்கம் புரியவும் அவன் மீது அவரால் கோபப்பட முடியவில்லை. அதுவும் யாரும் கவனிக்காத தன் மகளின் நிலையை அவன் தான் கண்டு பிடித்து, தனி ஆளாக சரி செய்யவும் முயற்சிக்கிறான் என்றதில் அவன் மீது இருந்த பழைய கோபம் கூட வெகுவாக குறைந்து இருக்க, அவனது காதலின் ஆழம் கூட அவருக்கு புரிகிறது தான். அதுவும் இந்த நேரத்தில் தனது காதலைப் பற்றி பேசாமல், தன்னை நல்லவனாக கூட காட்டிக் கொள்ளாமல் அவன் செய்த தவறை பற்றி தான் பேசுகிறான் என்றதில் அவன் மீது நல்லெண்ணம் தோன்றியது.
அவர் அமைதியான குரலில், “அவர் என்ன சொன்னார்?” என்று கேட்டார்.
“பெருசா ஒன்னும் பிரச்சனை இல்லைனு தான் அங்கிள் சொன்னாங்க.. இது ஆரம்ப கட்டம் தான்.. ரெண்டு இல்ல மூணு கவுன்சிலிங் கொடுத்தா போதும்னு சொன்னாங்க”
“எனக்காக சொல்லலையே?”
“நிஜமா தான் சொல்றேன்.. இது ஆரம்ப கட்டம் தான்.. அதனால் தான் நான் பேசியதுக்கே யோசிக்க ஆரம்பிச்சுட்டா.. ஆனா தெளியாம வேவரிங்(wavering) மைண்டா ஆசிலேட் ஆகிட்டு இருக்கிறா.. அதை முழுசா சரி செய்யத் தான் கவுன்சிலிங்” என்றவன், “இதை கேளுங்க” என்றபடி முன் தினம் இரவில் அவளிடம் பேசிய இரு பதிவுகளை ஓட விட்டான்.
இறுதியில் அவன் சொன்ன ‘லவ் யூடி தங்கம்மா’ என்றதை கேட்டு பெரிதும் அதிர்ந்தவன் அவரை சிறு பயத்துடன் தான் பார்த்தான். அவனையும் அறியாமல் சொல்லி இருந்த காதலை இப்போது கேட்கும் போது தான் அவனே தெரிந்து கொண்டான். மீண்டும் கோபம் கொண்டு மலை ஏறி விடுவரோ என்ற பயத்தில் அவரை அவன் நோக்க,
அவரோ, “நீங்க சைகாட்ரிஸ்ட்க்கு படிச்சு இருக்கலாம்” என்றார்.
அப்பொழுதும் தயங்கியபடி அவரை பார்த்தவன், “அது அங்கிள்.. வந்து.. நான்” என்று திணற,
“ஹாஸ்பிடலில் வச்சே உங்க துடிப்பில் இருந்தே உங்க காதல் எனக்கு புரிந்தது.. ஆனா அப்போ கோபம் தான் அதிகமா இருந்தது”
“அப்போ இப்போ?” என்று கண்கள் மின்ன அவன் வினவ,
அவர் சிறு மென்னகையுடன், “சம்ருதிக்கு ஓகேனா எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என்றார்.
அவரது கையைப் பற்றியவன் ஆனந்த கண்ணீருடன், “ரொம்ப தேங்க்ஸ் மாமா” என்றான்.
‘அங்கிள்’ ‘மாமா’ ஆனதை கவனித்தவர் தனக்குள் சிரித்துக் கொண்டார்.
சாரி மக்களே.. நாளை அப்டேட் இல்லை.. இறுதி அத்தியாயம் திங்கள் அன்று.. இன்று வெளியே போற வேலை இருக்கிறது.. நாளை ஸ்கூல் மற்றும் ஆபீஸ் லீவ்.. அப்புறம் வீக்-எண்டு ஹாலிடேஸ்.. ஸோ இறுதி அத்தியாயம் திங்கள் அன்று தான்.. ப்ளீஸ் அட்ஜஸ்ட்ட்ட்ட்ட்