அன்று பின் மதியம் மூன்று மணியளவில் ஜெயதேவ் தனது வீட்டை நெருங்கிய போது, தலை கவசம் அணிந்த ஒருவன் சுற்றும் முற்றும் பார்த்தபடி பதுங்கியபடி தனது வீட்டின் தெருவாசல் கதவை திறந்து கொண்டு உள்ளே செல்வதை பார்த்ததும் வண்டியை அதி வேகமாக செலுத்தி வீட்டின் முன் நிறுத்தியவன், நொடிகளில் இறங்கிச் சென்று அவனை பின் பக்கமாக இருந்து இறுக்கி பிடித்தபடி தலை கவசத்தை அகற்றினான்.
“டேய் ஜெயா! சத்யாடா.. அடிச்சிறாத” என்று அவன் பதறி கத்தியதில், சிறு ஆசுவாசத்துடன் சகோதரனின் கழுத்தை சுற்றி இருந்த கையை எடுத்த ஜெயதேவ்,
“எதுக்குடா இப்படி திருடன் மாதிரி வர?” என்று கேட்டான்.
நெஞ்சை நீவிவிட்டுக் கொண்ட சத்யதேவ், “இந்த நேரத்தில் நீ இங்கே என்ன செய்ற?” என்று கேட்டான்.
ஜெயதேவின் முறைப்பில், “ஓகே.. ஓகே.. நீ தான் முதலில் கேள்வி கேட்ட.. நானே பதில் சொல்றேன்.. இன்னைக்கு டீம் அவுட்டிங் ‘வைல்ட் ட்ரைப்’(‘Wild Tribe’) போறதா சொன்னேனே! ரேஷ்மியும் வந்து இருந்தா” என்று இழுத்து நிறுத்தினான்.
ஜெயதேவ் ‘அப்படியா!’ என்பது போல் கிண்டலாக புருவம் ஏற்றி இறக்கிவிட்டு வீட்டின் அழைப்பு மணியை அடித்தான்.
‘எப்படித் தான் கண்ணுலேயே பேசுறானோ!’ என்று மனதினுள் புலம்பிய சத்யதேவ், “நிஜமா பயம்லாம் இல்லைடா.. அவ ஒரு இம்சை.. எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன்! விடாம துரத்தி துரத்தி லவ் டார்ச்சர் செய்து கொல்றா..” என்றான்.
இவர்களின் அன்னை மீனாட்சி வந்து கதவை திறக்கவும்,
“பொளீர்னு கன்னத்தில் ஒன்னு வை.. அதுக்கு அப்புறம் உன் பக்கம் என்ன! நீ இருக்கிற திசை பக்கம் கூட வர மாட்டா” என்றபடி அவன் உள்ளே செல்ல,
“அப்புறம் அவ மட்டும் இல்லை, எந்த பொண்ணும் நான் இருக்கிற திசை பக்கம் வர மாட்டாங்களே!” என்றபடி சத்யதேவும் உள்ளே சென்றான்.
ஜெயதேவ் பார்த்த பார்வையில் சத்யதேவ் பல்லைக் காட்டி இளிக்க,
அவனோ, “என் தம்பினு வெளியே சொல்லிடாத” என்றபடி மெத்திருக்கையில் அமர்ந்தான்.
“நீயும் என் ஆபீஸ் பக்கம் வந்துடாதடா.. என்னை சைட் அடிக்கிற ஒன்னு ரெண்டு பிகரும் தெறிச்சு ஓடிரும்” என்றபடி சகோதரன் அருகே அமர்ந்தான்.
சத்யதேவை கேவலமான பார்வை பார்த்த ஜெயதேவ் அன்னையைப் பார்த்து, “அம்மா சூடா ஒரு கப் காஃபி” என்றதும்,
“என்னாச்சு ப்பா தலை வலியா?” என்று அக்கறையுடன் மீனாட்சி கேட்க,
“லைட்டா தான்மா” என்றான்.
சத்யதேவைப் பார்த்து, “உனக்குடா?” என்று கேட்ட மீனாட்சி, அவன், “வேணாமா” என்றதும் சமையல் அறை நோக்கி சென்றார்.
சத்யதேவ், “அந்த கேஸ் டென்ஷன் தான் முடிஞ்சுதே! என்ன தலைவலி?” என்று அக்கறையுடன் கேட்டான்.
“கேஸ் விஷயத்தில் எனக்கென்ன டென்ஷன்! ஆறுமுகம்(அந்த பெரியவரின் தங்கை மகன்) கொடுத்த வாக்கு மூலம், அவன் டூப்ளிகேட் எண்ணெயை எம்ப்டி ஒரிஜினல் பாட்டிலில் ஊத்திய சிசிடிவி புட்டேஜ், சமைத்த பூட் சாம்பிள்ஸ், அதையெல்லாம் சமைத்த சிசிடிவி புட்டேஜ்னு இவ்ளோ ப்ரூஃப்ஸ் இருக்குதே! கேஸ் நம்ம பக்கம் தான் ஜெய்க்கும்னு எனக்கு நூறு சதவிதம் நம்பிக்கை இருக்குது.. அவனுக்கு எப்படியும் குறைந்தது ஆறு மாசம் ஜெயில் தண்டனை கிடைக்கும்”
“அது ஓகே தான்.. அந்த *** அண்ட் *** ஹோட்டல்காரன்க மீடியாவில் ரெஸ்டாரன்ட் பெயர் கெடுற மாதிரி இந்த விஷயத்தை திரிச்சு நியூஸ் ஸ்ப்ரெட் செய்ததை நீ சரி செஞ்சிட்ட தான்.. இருந்தாலும் அதில் திரும்ப எதுவும் பிரச்சனையோனு கேட்டேன்”
லேசாக தோள்களை குலுக்கியவன், “அந்த பிரச்சனை எல்லாம் முடிஞ்சுதுடா” என்றான்.
[ஆம்.. அன்று ஜெயதேவின் செயலாளர் சந்திரன் மறைகாணி பதிவின் நகலுடன் தான் அவர்கள் உணவகத்தின் அருகே இருந்த காவல் நிலையத்திற்கு சென்று அவ்விருவர் மீது புகார் கொடுத்தான். புகார் கொடுத்த அரை மணி நேரத்தில் அவ்விருவரும் கைது செய்யப்பட, அதே நேரத்தில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்தில் இருந்து ஆட்கள் வந்து அந்த எண்ணெயையும், அதை பயன்படுத்தி சமைத்த உணவுகளை பரிசோதிக்க எடுத்துச் சென்றனர். அந்த வழக்கு நடந்து கொண்டு தான் இருக்கிறது என்றாலும், உறுதியாக இவனுக்கு சாதகமாக தான் தீர்ப்பு வழங்கப்படும் என்ற நிலையில் தான் வழக்கு சென்று கொண்டு இருக்கிறது. முக்கிய குற்றவாளிக்கு குறைந்தது ஆறு மாதங்கள் சிறை தண்டனையும், துணை போனவனுக்கு எச்சரிக்கையுடன் கூடிய மன்னிப்போ அல்லது ஒரு மாத சிறை தண்டனையோ வழங்கப்பட இருக்கிறது.
இந்த சம்பவத்தினை சிலர்(இவனது போட்டி உணவகத்தை சேர்ந்தவர்கள்) ஊடகத்தில் இவனது உணவகத்திற்கு எதிராக வெளியிட, இவனோ அதை உணவகத்திற்கான இலவச விளம்பரமாக மாற்றி இருந்தான். ‘தரத்தை முக்கியமாக கருதும் ‘ஃபுட்டீஸ் ஹெவன்’ உணவகத்தின் உரிமையாளர்’, ‘எண்ணெயில் கலப்படம் செய்த ஊழியரை போலீஸில் பிடித்துக் கொடுத்து ‘தரமே எனது தாரக மந்திரம்’ என்று நிரூபித்த ‘ஃபுட்டீஸ் ஹெவன்’ உணவகத்தின் உரிமையாளர்’, ‘பணம் எனக்கு முக்கியம் இல்லை, உணவின் தரத்துடன் கூடிய சுவையும் வாடிக்கையாளர்களின் உடல் நலம் தான் எனக்கு முக்கியம் என்ற ‘ஃபுட்டீஸ் ஹெவன்’ உணவகத்தின் உரிமையாளர்’ போன்ற வாசகங்களை தனது நண்பர்கள் மூலம் இணையத்தில் வெளியிட்டு அதன் கீழ் அவனது நண்பர்களை வைத்தே வாடிக்கையாளர்கள் போல் உணவின் சுவையை பற்றியும் தரத்தைப் பற்றியும் கருத்துக்களை பதியச் செய்ய, அதன் பிறகு நிறைய வாடிக்கையாளர்கள் தங்களின் உண்மையான கருத்துக்களை இவனுக்கு சாதகமாகவே பகிர ஆரம்பித்தனர். அதன் விளைவு, இரண்டே நாட்களில் இவனது உணவகம் இன்னும் பிரபலம் ஆனது.]
சத்யதேவ், “அப்புறம் என்ன தலைவலி?” என்று வினவ,
சகோதரனை முறைத்த ஜெயதேவ், “தலைவலி என்ன காரண காரியத்தோடவா வரும்! ஒரு மனுஷனுக்கு தலைவலி வரது சகஜம் தானே!” என்றான்.
ஜெயதேவ், “ரெஸ்டாரென்ட் வானு உன்னை எத்தனை நாள் கூப்டுட்டு இருக்கிறேன்!” என்றான்.
‘ஆரம்பிச்சுட்டியா!’ என்பது போல் பார்த்த சத்யதேவ், “நீ மட்டும் என்னோட கம்பனிக்கு வந்து இருக்கிறியா?” என்றான்.
‘லூசா நீ!’ என்பது போல் பார்த்த ஜெயதேவ், “அது நீ வேலை பார்க்கிற கம்பெனி.. ஆனா இது நம்ம ரெஸ்டாரென்ட்” என்றான்.
“நம்ம இல்ல உன்னோட ரெஸ்டாரென்ட்”
ஜெயதேவ் கடுமையாக முறைக்க, சத்யதேவ் கண்டு கொள்ளவே இல்லை.
காபியுடன் வந்த மீனாட்சி, ‘என்னாச்சு?’ என்பது போல் சத்யதேவை பார்க்க, அவனோ அலட்சியமாக தோளை குலுக்கினான். அவனது செயலில் இருந்தே இருவரும் எதைப் பற்றி விவாதித்து இருப்பார்கள் என்பதை கண்டுகொண்டவர் காபியை ஜெயதேவிடம் கொடுத்தார்.
இந்த ஒரு விஷயத்தில் மட்டும் சத்யதேவ் ஜெயதேவின் கோபத்திற்கு அஞ்சுவதோ அதை கண்டுகொள்வதோ கிடையாது. உணவகம் முழுக்க முழுக்க சகோதரனின் உழைப்பில் உருவானதால் அது அவனுக்கு மட்டுமே சொந்தமானது என்பதில் அவன் உறுதியாக இருக்கிறான். ஆனால் ஜெயதேவோ அதை குடும்ப சொத்தாகத் தான் பார்க்கிறான்.