“முத்த சரித்திரம் படைக்க வேண்டிய நேரத்தில் ரத்த சரித்திரம் பார்த்துட்டு இருக்குது பாரு!” என்று முணுமுணுத்த ஆத்மிகா, “நீ மங்கூஸ் மண்டையனே தான்” என்றும் சேர்த்து கூறிக் கொண்டாள்.
ஜெயதேவ் மடிக்கணினியுடன் மெத்தையில் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டு இருக்க, ஆத்மிகா அவன் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்து டேபிள் மேட் மீது புத்தகத்தை வைத்து படித்துக் கொண்டு இருந்தாள். நேர் எதிராக இல்லாமல் அவளது பக்கவாட்டு தோற்றம் அவனுக்கு தெரிவது போல் அமர்ந்து இருந்தாள். சில நிமிடங்கள் முன் பேனாவை எடுக்க கட்டில் அருகே சென்ற போது தான் அவன் என்ன படம் பார்த்து கொண்டு இருக்கிறான் என்றதை கவனித்து இருந்தாள்.
‘பார்க்கிற படத்தைப் பார்! இது தேறாது.. தேறவே தேறாது!’ என்று நினைத்தபடி படிப்பதை தொடர்ந்தாள்.
படித்து முடித்து அவனை திரும்பி பார்க்க, அவனது கவனமோ இவள் பக்கம் திரும்பவே இல்லை.
அப்பொழுது தான் அவ்வாறு முணுமுணுத்தாள்.
சில நொடிகள் கன்னத்தில் கை வைத்தபடி அவனையே பார்த்தவள், அவன் திரும்புவதாக இல்லை என்றதும் இருக்கையில் இருந்து எழுந்து அவன் அருகே வந்து அவனது காதில் மாட்டி இருந்த செவிப்பொறியை எடுத்து விட்டாள்.
அவன், “படிச்சு முடிச்சிட்டியா?” என்று கேட்க, அவள் முறைத்தாள்.
ஒரு நொடி மடிக்கணினியில் பார்வையை பதித்தவன், “நீயும் பார்க்க வரியா?” என்று கேட்டான்.
“எனக்கு இந்த படம் பிடிக்காது”
“அதுக்கு?”
அவள் இன்னும் முறைக்க,
அவனோ, “உன் கூட சேர்ந்து பார்க்கும் போது காதல் ரசம் சொட்டுற படமா பார்க்கிறேன்.. இப்போ நீ போய் படி” என்றான்.
அவள் அப்படியே நிற்கவும்,
“நான் இங்கே இருக்கிறது உனக்கு டிஸ்டர்பா இருக்குதா? நான் வேணா ஹாலுக்கு போறேன்” என்றபடி அவன் எழப் பார்க்க,
அவன் தோளில் கை வைத்து அமர செய்தவள் அவனை முறைத்தபடி, “மங்கூஸ் மண்டையா” என்று கூற,
அவன் புன்னகையுடன், “படிச்சு முடிச்சிட்டியா?” என்று கேட்டான்.
“ஹ்ம்ம்”
“ப்ராஜெக்ட் வைவா?”
“அதுக்கு தான் இன்னும் ஒரு வாரம் இருக்குதே!”
“ஸோ அதுக்கு இன்னும் ப்ரிபர் செய்யலை”
‘சரியான தத்தி’ என்று மனதினுள் கூறிவிட்டு அவனிடம், “அந்த டைம் படிச்சுப்பேன்” என்று கூறி நகர்ந்தவள், என்ன நடந்தது என்று உணரும் முன் அவனது அணைப்பில் அவன் மடியில் அமர்ந்து இருந்தாள்.
ஆம், மடி கணினியை மூடி மெத்தை மீது வைத்தவன் சட்டென்று அவளது கையை பற்றி இழுத்து, இடையோடு அவளை இறுக்கி பிடித்து அணைத்தபடி தன் மடியில் அமர வைத்து இருந்தான்.
அவளது காதோடு உதடு உரசினார் போல், “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன சொன்ன?” என்று கிசுகிசுப்பான குரலில் கேட்டான்.
அவனது அதிரடி தந்த அதிர்ச்சியோடு, அவனது நெருக்கம் ஏற்படுத்தும் மாற்றங்களும் சேர்ந்துக்கொள்ள, அவள் கிட்டதிட்ட உறைந்த நிலையில் தான் அமர்ந்து இருந்தாள்.
“என்ன பேச்சைக் காணும்?”
அவளது மூளை, ‘பதில் சொல்லு’ என்று எடுத்துரைக்க, அவளோ ‘வெறும் காத்து தான் வருது மாமா!’ என்ற நிலையில் தான் அமர்ந்து இருந்தாள்.
“கற்றாழை குளுமையில் பட்டாசு நமத்து போச்சா?” என்று அவன் சன்ன சிரிப்புடன் கூற,
அவன் உதட்டால் தீண்டியும் தீண்டாமலும் அவளை இம்சித்ததில், உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அவளுள் சிலிர்ப்பு ஓட, அதை அவனாலும் உணர முடிந்தது.
அவளது கன்னத்தில் உதட்டால் பட்டும் படாமலும் உரசினார் போல் ஊர்வலம் நடத்தியவன், “ராங்கி பட்டாசு” என்று மோகமும் தாபமும் கலந்த கிறங்கிய குரலில் அழைத்தான்.
‘அய்யோ இவன் முத்தம் கொடுத்தா கூட பரவா இல்லை போலவே’ என்று நினைத்தவள், “ஹ்ம்ம்” என்றபடி கண்களை மூடி அவனது தோளில் தலை சாய்க்க, அவனது உதடுகள் அவளது கழுத்தோரம் இடம் பெயர்ந்து இருந்தது.
அவளுள் என்னென்னவோ செய்ய, தாள முடியாமல் அவன் மீது அழுத்தமாக சாய்ந்தாள்.
இன்னும் கிறங்கியவன், “ராங்கி பாட்டாசு” என்று காற்றாகிய குரலில் அழைக்க, இன்னும் இன்னும் என்னவோ செய்ய மூச்சடைப்பது போல் உணர்ந்தவளின் கரம் மெத்தை விரிப்பை கசக்கியது.
அவளது நிலையை உணர்ந்தவன் சட்டென்று பிடியை தளர்த்தி முகத்தை லேசாக விலக்கியபடி, “ரிலாக்ஸ்டா” என்றான்.
சில நொடிகள் கழித்தே இயல்பிற்கு திரும்பியவள் நேராக அமர்ந்தாள். இன்னமும் அவனது கை வளைவிற்குள் அமர்ந்து இருந்தவளுக்கு அவனது முகத்தை பார்க்கவே முடியவில்லை.
தன்னவளின் வெட்கத்தை ரசித்தவனின் மனம் அவளை மொத்தமாக அள்ளிக்கொள்ள கூற, மூளையோ அவளது படிப்பு முடியவில்லை என்றதை அறிவுறுத்தியது.
‘மொத்தமா வேணாம்.. முத்தம் மட்டும்.. கொஞ்சமா ஸ்டார்டர் மாதிரி எடுத்துக்கிறேன்’ என்ற ஆசை கொண்ட மனமே வெல்ல, அவளது நாடியில் ஒற்றை விரலை வைத்து அவள் முகத்தை நிமிர்த்தினான்.
முகத்தை நிமிர்த்தினாலும் அவனது முகத்தை பார்க்காமல் பார்வையை தாழ்த்தியவள் வெட்க புன்னகையுடன் மெல்லிய குரலில், “பட்டாசு நமத்து தான் போச்சு போல” என்றாள்.
வாய்விட்டு சிரித்தவன் அவளது நெற்றியை முட்டியபடி, “இதுக்கேவா!” என்றான்.
அதிகரித்த வெட்கத்துடன் அவள் அவனது நெஞ்சில் முகத்தை மறைக்க,
“வெட்க போர்வை விலக்கி
உன்னில் முக்குளிக்க ஆசை தான்..
நான் உன்னில் தேர்வெழுத
உன் தேர்வு தடையாய்..
மொத்தம் வேணாம் பெண்ணே
முத்தம் மட்டும் போதும்..
முத்த சரித்திரம் படைப்போமா அன்பே!” என்று அவளது காதில் அவன் கவி பாட, அவள் முகத்தை அவன் நெஞ்சில் புதைத்தாள்.
மெல்ல அவளது முகத்தை நிமிர்த்த பார்க்க, அவளோ மறுப்பாக தலை அசைத்து இன்னும் இன்னும் அவனுள் முகத்தை புதைத்தாள்.
ஆனால் அவளோ உதட்டோர வெட்க புன்னகையுடன் கண்களை மூடி தான் இருந்தாள்.
அவளது மூடிய விழிகள் மீது முத்தமிட்டு, “கண்ணை திற பட்டூ” என்றதில் சட்டென்று கண்களை திறந்தவள் ‘இது என்ன பெயர்?’ என்பது போல் பார்த்தாள்.
அவளது அபிநயத்தை ரசித்தவன் மென்னகையுடன் பெருவிரலால் அவளது கன்னத்தை வருடியபடி, “பட்டு மாதிரி சாப்ட்டா இருக்கிற பட்டாசோட ஷார்ட்பார்ம் பட்டூ” என்றவனின் உதடுகள் முடித்தபோது அவளது பட்டு கன்னத்தில் அழுத்தமாக பதிந்தது.
பின் கரங்களில் அவளது கன்னங்களை பற்றி அவள் முகம் தாங்கியவன் விழியோடு விழி கலக்கியபடி புருவம் ஏற்றி இறக்கி சம்மதம் கேட்டான்.
‘இதுக்கெல்லாம் அனுமதி கேட்பாயா!’ என்று விழிகளில் அவள் மிரட்ட,
மென்னகைத்தவன் காதலுடன் அவள் விழிகளை நோக்கியபடி அவளது இதழில் இதழ் பதித்தான். முதலில் லேசாக இதழணைத்தவன் பின் மேல் இதழையும் கீழ் இதழையும் தனி தனியாக ரசித்து சுவைக்க ஆரம்பித்தான்.
சுவாசத்திற்காக அரை வினாடிக்கும் குறைவாக இடைவெளி விட்டவனின் முத்த தேடல் நொடிகளை தாண்டி நிமிடங்கள் கடந்தது. அவனது இடது கரம் அவளது பின்னதலையை தாங்கி பிடிக்க, வலது கரம் மெல்ல கீழ் இறங்கி சல்வாரினுள் சென்று அவளது வெற்றிடையை பற்றி அவளை தன்னுடன் சேர்த்து அணைத்தது.
அவளுள் சிலிர்ப்புடன் கூடிய சிறு அதிர்வலை ஓட, பெண்ணவளின் அச்சம் உணர்ந்து முத்த தேடலை நிறுத்தி அவள் முகம் நோக்கினான்.