அவளுள் எழுந்த உணர்வலைகளில் திண்டாடியவளின் விழிகள் மூடி இருக்க, கரங்கள் அவனது சட்டையின் கழுத்துப் பட்டையை இறுக்கமாக பற்றி இருந்தது.
உணர்வுகளின் பிடியில் சிக்கி இருந்தவளின் இதழ்களின் பிளவு அவனை முத்தமிடவே அழைத்தது. இருப்பினும் அவளது படிப்பு மூளையின் ஒரு மூலையில் மின்னி மறைய, முதல் நாளே பயம் காட்ட வேண்டாம் என்ற எண்ணமும் சேர்ந்துக் கொள்ள, கூடவே போதை ஊட்டும் அவளது இதழ்களை மீண்டும் தீண்டினால் மோக சுழலில் சிக்கிக் கொள்ளும் அபாயம் இருப்பதும் புரிய, தனது ஆசை கொண்ட மனதை அடக்கியவன் வலது கரத்தை மட்டும் விலக்கி கொண்டான்.
அவளது முகத்தின் மீது தென்றலாய் காற்றை ஊத, மெல்ல கண்களை திறந்தவள் வெட்கத்துடன் முகத்தை அவனது தோளில் மறைத்தாள்.
ஆர்பாட்டமாக சிரித்தவன், “வெறும் பேச்சு தான்” என்றான்.
“ஹான்.. பஸ்ட் டைம்.. அதான்” என்று அவள் ரோஷத்துடன் அவன் முகம் பார்த்து கூற,
“அப்போ இன்னொரு முறை முத்தம் தந்தா வெட்கப்பட மாட்ட!” என்றவனின் பார்வையே அவளை வெட்கம் கொள்ள செய்ய,
அதை ரசித்து சிரித்தவன் அவளது கன்னத்தை பெருவிரலால் மயில் இறகால் வருடுவது போல் மிக மென்மையாக வருடியபடி, “நான் நெருங்கினா மட்டும் ராங்கி பட்டாசு அனிச்சம் பூவா மாறிடும்” என்றான்.
அவளும் வெட்கப்பட கூடாது என்று தான் நினைக்கிறாள் ஆனால் முடியவில்லை.
அவளது நெற்றியில் முட்டியவன் புன்னகையுடன், “இனி வெட்கப்பட வைக்க தெரியலைனு சொல்லுவியா?” என்று கேட்டான்.
அவளோ, “சில கதை டீசர் நல்லா இருக்கும்.. ஆனா மெயின் பிக்சர்!” என்று நிறுத்தி உதட்டை பிதுக்க,
பிதுக்கிய உதட்டை லேசாக பிடித்து இழுத்தபடி, “ஹஹான்!” என்றான்.
‘முழுசா ரெமோவா மாறி இருக்கிறவன் கிட்ட வாய் விடாத’ என்று எச்சரித்த மனசாட்சியை மீறி உதட்டை விடுவித்தபடி, “ஹ்ம்ம்” என்றாள்.
“பார்க்கலாம்” என்று அவன் கூற,
அவளும், “பார்க்கலாம்” என்றாள்.
“தூங்குவோமா?”
“அதுக்கு முதல்ல என்னை விடனும்”
லேசாக உடல்கள் உரசினார் போல் அணைத்தவன், “தூங்குறதுக்கு எதுக்கு விடனும்?” என்றான்.
சட்டென்று தடுமாறியவள், “இப்படி உட்கார்ந்தே எப்படி தூங்க?” என்று சமாளித்தாள்.
இடது கரத்தால் மடிக்கணினியை எடுத்து அருகில் இருந்த சின்ன மேசை மீது வைத்து, குழல் விளக்கை அணைத்து விடிவிளக்கை போட்டவன், நொடி பொழுதில் அவளை அணைத்தவாக்கில் தூக்கி மெத்தையில் கிடத்தி, அவளை பின் புறம் இருந்து அணைத்தபடி படுத்து இருந்தான்.
‘ஒரு நாளைக்கு எத்தனை ஷாக்கை தான்டா கொடுப்ப!’ என்று நினைத்தவள், ‘அச்சோ! இப்படியே கட்டிபிடிச்சிட்டு எப்படி தூங்குறது!’ என்று திணறித் தான் போனாள்.
அவனோ அவளது காதினுள், “பட்டூமா.. வேற எதுவும் செய்ய மாட்டேன்.. தூங்கு” என்றான்.
“இப்படியேவா!” என்று மெல்லிய அதிர்வுடன் அவள் வினவ,
“இனி பழகிக்கோ” என்று இலகுவாக கூறியவனோ அவளது பின்னங்கழுத்தில் முகத்தை புதைத்தபடி கண்களை மூடிக் கொண்டான்.
இடையை அவன் கரம் பற்றியிருக்க, அவனது மூச்சுக் காற்று கழுத்தை தீண்டிக் கொண்டு இருக்க, அவள் தான் திணறி திண்டாடிப் போனாள்.
மூச்சை இழுத்து விட்டு தன்னை சம நிலைக்கு கொண்டு வர அவள் முயற்சிக்க, அவளது அவஸ்தை புரிந்தாலும் அவன் இருந்த நிலையில் மாற்றம் இல்லை.
மீண்டும் அவள் காதினுள், “இன்னைக்கு ஒரு நாள் தான்.. அப்புறம் பழகிடும்..” என்றவன் அவளது கன்னத்தில் முத்தமிட்டு, “குட் நைட் ஸ்வீட் கற்றாழை ட்ரீம்ஸ்” என்றான்.
‘ஓ காட்!’ என்று மனதினுள் கூறிக் கொண்டவளுள், ‘ரெமோவையே மிஞ்சிடுவான் போலவே! இவன் வேகம் தாங்குவேனா!’ என்ற பயம் கூட மெலிதாக தோன்றியது.
சிறிது நேரம் கழித்து அவனது கை வளைவினுள் இருந்தபடியே வேகமாக திரும்பியவளின் உதடுகள் அவனது உதட்டை தீண்ட, அப்பொழுது தான் தூங்க ஆரம்பித்து இருந்தவன் விழித்து, “என்னடா?” என்றான்.
எதிர்பாரா இதழ் தீண்டலில் பேச வந்ததையே ஒரு நொடி மறந்தவள், “ஹான்” என்று விழித்தாள்.
“இப்படியெல்லாம் பார்த்த! உன்னோட கற்றாழை ரொம்ப பாவம்” என்றவன் அவளது கன்னத்தில் இதழ் பதித்து கிறங்கிய குரலில், “யூ ஆர் டிரைவிங் மீ க்ரேஸி” என்றான்.
பின், “ஓய் பட்டூ” என்றான்.
அதில் சுயம் பெற்றவள், “ஹான் ஞாபகம் வந்துடுச்சு” என்று கூற, அவளது பாவனையில் அவன் சிரித்தான்.
அவள் முறைப்புடன் அவனை அடித்தபடி, “எல்லாம் உன்னால் தான்” என்றாள்.
அவனோ சிரிப்புடன், “நானா இப்போ..” என்று ஆரம்பிக்க, அவனது வாயை அவசரமாக மூடியவள், “ஓகே நான் தான்.. இப்போ என்னை பேச விடு” என்றாள்.
அதற்கும், “நான் லிப் லாக் செய்யவே இல்லையேமா! உன் வாய் ப்ரீயா தானே இருக்குது” என்றான் விஷம புன்னகையுடன்.
“ரெமோவே தோத்துடுவான் போ! ஆனா வெளியே சொன்னா யாரும் நம்ப தான் மாட்டாங்க”
“நீ ஏன் வெளியே சொல்ற? உனக்குள்ளேயே என்னை பொத்தி வச்சுக்கோ”
“இதில் எதுவும் டபிள் மீனிங் இருக்கா?”
தோள் குலுக்கியபடி சிரித்தவன், “அது நீ எடுத்துக்கிறத பொருத்து” என்றான்.
அவள் அவசரமாக, “நான் சிங்கிள் மீனிங்லேயே எடுத்துக்கிறேன்” என்று கூற, அதற்கும் சிரித்தான்.
சிரிக்கும் வாயின் மீதே சிறு அடி போட்டவள், “சேட்டை சேட்டை.. அவ்ளோ சேட்டை செய்ற!” என்றாள்.
“நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை”
“எது!”
“நீயே டீசர்னு தானே சொன்ன!” என்று கூறி கண் சிமிட்டினான்.
‘ஆத்தி!’ என்று மனதினுள் அவள் லேசாக அலற, அதை அவளது கண்களில் படித்தவன், மென்னகையுடன், “என்னோட அனிச்சம் பூவை கசக்காம முகர எனக்கு தெரியும்” என்றான்.
“இப்போ புரியுது”
“என்ன?”
“என் படிப்பு முடிய நீ ஏன் காத்திருக்கிறனு”
விரிந்த புன்னகையுடன் அவளது நெற்றியில் முட்டியபடி, “புரிந்தா சரி” என்றவன், “என்ன கேட்க இப்படி அவசரமா திரும்பின?” என்று கேட்டான்.
அப்பொழுது தான் நினைவு வந்தவளாக, “நீ முத்த சரித்திரம்னு சொன்ன தானே!” என்று கேட்டாள்.
“நான் படத்தையே பார்க்கலை.. இன்பக்ட், என்ன படம் ஓடுதுன்னு கூட தெரியாது.. சவுண்டும் மியூட்டில் தான் இருந்தது.. நீ சொன்னப்ப தான் ரத்த சரித்திரம் படம் ஓடுதுனே கவனிச்சேன்.. சும்மா ஒரு வீடியோ கிளிக் செய்து இருந்தேன்.. அது ஏதோ சூர்யா படங்களில் வர சூப்பர் சீன்ஸ் ஓடிட்டு இருந்து இருக்கும் போல”
“நான் பேசினதை எப்படி கவனிச்ச? நான் உன்னை தானே பார்த்துட்டு இருந்தேன்! நீ லேப்டாப் தான் பார்த்துட்டு இருந்த”
“மொபைல் கேமரா வழியா உன்னை தான் பார்த்துட்டு இருந்தேன்” என்று அவன் விஷம சிரிப்புடன் கூற,
“அடப்பாவி கேடி கே.கே” என்றவள் லேசாக வாயை திறந்படியே அவனை நோக்க,
“இப்படி மீன் குஞ்சு மாதிரி வாயை திறக்காத” என்றபடி அவளது வாயை விரல் கொண்டு மூடினான்.
“ஏன்?”
“அப்புறம் வைவா மார்க் கம்மியாகிடுச்சுனு என்னை குத்தம் சொல்ல கூடாது” என்றவனின் பார்வையில் மீண்டும் அவசரமாக திரும்பியவள், “ஆத்மி தூங்கிட்டா” என்று கூறி கண்களை மூடிக் கொண்டாள்.
வாய்விட்டு சிரித்தவன் பழையபடி அவளது பின்னங்கழுத்தில் முகம் புதைத்தபடி கண்களை மூடிக் கொண்டான்.
மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் இருவரும் நித்திரை கொண்டனர்.