அடுத்த நாள் மாலை சம்ருதிகாவை கோவிலில் சந்தித்த சத்யதேவ் அவர்கள் எப்பொழுதும் அமரும் இடத்தில் அமர்ந்தபடி, “உன் கிட்ட ஒரு உண்மையை சொல்லணும் சம்யு” என்றான்.
“என்ன?”
“அது.. வந்து.. ஒரு பொண்ணு என்னை ஒருதலையா காதலிச்சு என் கண்ணு முன்னாடி குதிச்சு இறந்ததா சொன்னது எல்லாமே என்னோட கற்பனை கதை தான்.. ப்ளீஸ் கோபப்படாத.. உனக்காக தான் சொன்னேன்”
“ஓ”
“சம்யு” என்று அவன் தவிப்புடன் அழைக்க,
அவள் அமைதியான உணர்ச்சியற்ற குரலில், “முதலில் உங்க அண்ணாக்காக கதை சொன்னீங்க.. இப்போ எனக்காக.. அடுத்து யாருக்காக?” என்றாள்.
“இனி இப்படி கதை சொல்ல மாட்டேன்”
“அப்போ வேற மாதிரி சொல்லுவீங்களா?”
“இல்லைமா.. கதையே சொல்ல மாட்டேன்னு சொல்ல வந்தேன்”
“இதை நம்ப சொல்றீங்களா?”
“ப்ளீஸ் சம்யு”
“உங்க மேல தப்பு இல்லை.. ஆரம்பத்தில் இருந்தே நீங்க சொல்றதை எல்லாம் நம்புறேன் பார்த்தீங்களா! என் மேல் தான் தப்பு”
“சாரிடா” என்றபடி அவளது கையை அவன் பற்ற போக, அவசரமாக கையை விலக்கி கொண்டவள், “நான் கிளம்புறேன்” என்று கூறி எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.
“ப்ளீஸ் சம்யு.. நான் சொல்றதை கொஞ்சம் கேளேன்” என்று கெஞ்சியபடி அவன் பின்னால் வர,
நடையை நிறுத்தி அவனை திரும்பி பார்த்தவள், “ப்ளீஸ் மத்தவங்களுக்கு காட்சி பொருளா இருக்க வேண்டாம்” என்றாள்.
அவன் தவிப்புடன் அவளை நோக்க, அவனை உணர்ச்சியற்ற பார்வை பார்த்தவள் சென்று விட்டாள்.
வீட்டிற்கு வாடிய முகத்துடன் வந்த சத்யதேவை வரவேற்ற ஆத்மிகா, “என்னாச்சு?” என்று கேட்டாள்.
அவன் சோகமாக நடந்ததை சொல்லி முடிக்க,
“ரெண்டு நாள் ப்ரீயா விடுங்க.. அமைதியா யோசிச்சா புரிஞ்சுப்பா”
“ப்ச்”
“சோக பி.ஜி.எம் வாசிக்கிறதை விட்டுட்டு, அவ கோபம் போனதும் ரொமான்டிக்கா எப்படி லவ்வை சொல்றதுனு யோசிங்க” என்றவள், “இருந்தாலும் நான் ஜவ்வு மிட்டாய்னு பெயர் வச்சதுகாக காதலை சொல்ல இப்படி ஜவ்வா இழுக்க கூடாது நீங்க” என்று கிண்டல் செய்தாள்.
“நீங்க வேற அண்ணி! அந்த தாக்கத்தை விட்டு அவளை முழுசா வெளியே கொண்டு வரவே ரெண்டு மாசம் ஆகிடுச்சு.. அந்த ஞானவேல் அம்மா மட்டும் திரும்ப வரலை ஒரு மாசத்தில் சரி ஆகி இருப்பா” என்றவனின் பேச்சை இடையிட்டவள்,
“அதான் அந்த லேடியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி சமி மனசில் இடம் பிடிச்சுட்டீங்களே!”
[ஆம், மனநல மருத்துவரின் உதவியுடன் சம்ருதிகா மெல்ல தேறி வந்து கொண்டு இருந்த நேரத்தில் கோவிலில் ஞானவேல் அன்னையை சந்திக்க, அவர் அன்று போலவே திரும்ப பேசவும் சத்யதேவ் பொங்கிவிட்டான்.
“சும்மா நிறுத்துமா.. அன்னைக்கு ஏதோ புள்ளயை பறிகொடுத்த துக்கத்தில் பேசுறனு விட்டா இப்பவும் அப்படியே பினாத்திட்டு இருக்க!
உன் பையன் அறிவில்லாம செய்தா, எங்க வீட்டு பொண்ணை குத்தம் சொல்லுவியா? உனக்கும் ஒரு பொண்ணு இருக்குது தானே! அந்த பொண்ணை அவளோட விருப்பத்துக்கு மாறா ஒரு பையன் காதலிக்க சொன்னா, இப்படி தான் பேசுவியா?
காதலிக்க சொல்லி உன் பையன் இவளை எவ்ளோ டார்ச்சர் செய்து இருக்கான் தெரியுமா? அதுவும் கல்யாணம் முடிவான, அவன் மீது கொஞ்சமும் விருப்பம் இல்லாத பொண்ணை அவ்ளோ டார்ச்சர் செய்து இருக்கிறான்.. அவன் மட்டும் இப்போ உயிரோட இருந்து இருந்தான், கம்பி எண்ணிட்டு தான் இருந்து இருப்பான்.. தப்பிச்சிட்டான்..
இத்தனை வருஷம் தூக்கி வளர்த்த அப்பா அம்மாவைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காம சுயநலமா யோசிச்ச அவனுக்காக எங்க வீட்டு பொண்ணை பேசுவியா? இனி ஒரு முறை தப்பா எதுவும் சொன்ன! போலீஸில் கம்ப்ளைண்ட் கொடுத்து உள்ள தூக்கி வச்சிடுவேன்.. என் பிரெண்டோட மாமா தான் கமிஷ்னர்.. அவர் கிட்ட இப்பவே பேசவா?” என்றபடி அவன் கைபேசியை எடுக்க,
“அய்யோ தம்பி.. இனி உங்க பக்கமே வர மாட்டேன்.. ஏதோ பையனை இழந்த துக்கத்தில் தெரியாம பேசிட்டேன்.. மன்னிச்சுக்கோங்க.. நீயும் மன்னிச்சிடுமா” என்று அலறியவர், உண்மையிலேயே ஆணையர் அவனது நண்பனின் மாமா என்று நம்பி ஓடியேவிட்டார்.
ஆனால் அந்த சம்பவத்திற்கு பிறகு சம்ருதிகா மீண்டும் பழைய நிலைக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டுவிட, சத்யதேவும் மருத்துவரும் ஒரு மாதம் போராடி அவளை முழுவதுமாக மீட்டனர்.]
“நீங்க சரியான ஜவ்வு மிட்டாய் தான்” என்று கூற, அவளது மனசாட்சி, ‘அப்போ உன்னோட கற்றாழை!’ என்றது.
‘அவனை இவர் கூட கம்பேர் செய்யாத.. என் படிப்பு இல்லைனா இந்நேரம் தொட்டில் கட்டுற வேலையை பார்த்து இருப்பான்’ என்று கூறி அதை அடக்கியவள் கவனத்தை சத்யதேவிடம் பதித்தாள்.
“என் நிலைமை அப்படி அண்ணி”
“வாய்ப்புகள் அமையாது.. நீங்க தான் அமைச்சுக்கனும்”
“என்னவோ உங்க சாமர்த்தியம் எல்லாம் எனக்கு சுட்டு போட்டாலும் வாராது”
“அதான் தெரியுமே” என்றபடி வந்த மீனாட்சி, “நான் போய் பொண்ணு கேட்கிறேன்னு சொன்னாலும் வேணாம்னு சொல்ற” என்றார் முறைப்புடன்.
“சம்யு என்னை எனக்காக ஏத்துக்கணும் ம்மா.. வீட்டில் சொல்றதுக்காக இல்லை”
“ரைட்.. சம்ருவா காதலை சொன்னா தான் உண்டு.. இல்லை உனக்கு அறுபதாம் கல்யாணம் தான்” என்று அவர் நக்கல் குரலில் கூற, ஆத்மிகா சிரித்தாள்.
இருவரையும் முறைத்தபடி, “உங்க கிட்ட வந்து சொன்னேன் பாருங்க!” என்று கூற,
ஆத்மிகா, “செருப்பை எடுத்துட்டு வந்து தரவா?” என்று கேட்டாள்.
“சரி பொழச்சு போங்க” என்றவள் அவன் எழுந்து செல்லவும், “சத்யா” என்று அழைத்தாள்.
அவன் திரும்பி பார்க்க, அவள் மென்னகையுடன், “சமி நிச்சயம் உங்க காதலை புரிஞ்சுப்பா.. இவ்ளோ நாள் பொறுமையா இருந்த நீங்க, இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க” என்றாள்.
மென்னகையுடன், “தன்க்யூ அண்ணி.. இப்போ உங்க கூட பேசினதுக்கு அப்புறம் நான் ஓகே தான்” என்றான்.
“குட்” என்றபடி கட்டைவிரலை உயர்த்தி காட்ட,
விரிந்த புன்னகையுடன், “தேங்க்ஸ் அகேன்” என்று கூறி தனது அறைக்கு சென்றான்.
அவன் சென்றதும் மீனாட்சி சிறு கவலையுடன் ஆத்மிகாவை பார்க்க, அவரது கையை பற்றியவள், “சமியும் இவரை காதலிக்கிறா அத்தை.. மே பி, முன்னாடி இவர் சொன்ன கதையில் அவ தவிச்சதால் இவரை இப்போ தவிக்க விடுறாளோ என்னவோ!” என்று கூறி புன்னகைக்க,
நிம்மதி மூச்சை வெளியிட்டவர், “அப்போ இவனுக்கு இது தேவை தான்.. நல்ல தவிக்கட்டும்” என்றார்.
பின், “அப்போ கல்யாண வேலையை நான் ஆரம்பிக்கலாம்னு சொல்ற!” என்றார்.
“ஹ்ம்ம்.. சமி ஓகே சொன்னதுக்கு அப்புறம்” என்று கூறி அவள் கண்சிமிட்ட,
அவரும் புன்னகையுடன், “ஐ அம் வெயிட்ங்” என்றார்.
அடுத்த ஒரு வாரம் ஜெயதேவிற்கு ஆமை வேகத்திலும் ஆதிம்காவிற்கு முயல் வேகத்திலும் நகர, சத்யதேவிற்கு நத்தை வேகத்திலும் சம்ருதிகாவிற்கு அணில் வேகத்திலும் நகர்ந்தது.
அன்று மாலை, இறுதி ஆண்டு செயல் திட்டத்திற்கான பரிட்சையை(வைவா) முடித்துவிட்டு மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்த ஆத்மிகாவின் மகிழ்ச்சியை கூட்டுவது போல் அவளை வரவேற்றது அவளது கற்றாழை கண்ணழகன் தான்.
“ஹே! வாட் அ ப்ளசன்ட் அண்ட் லவ்லி சர்ப்ரைஸ்” என்று ஆர்பாட்டமாக கத்தியபடி தான் உள்ளே வந்தாள்.
அதற்கு எதிர்பதமாக அவனது முகத்தில் சிறு புன்னகை மட்டுமே வீற்றிருந்தது.
“சேட்டை எல்லாம் பெட்ரூமில் மட்டும் தானே!” என்று அவள் முணுமுணுக்க,
“இப்ப என்ன! இங்கேயே கட்டி பிடிச்சு நச்சுனு கிஸ் அடிக்கவா?” என்று அவன் அவள் காதில் முணுமுணுக்க,
‘அடப்பாவி’ என்றபடி அவள் நிற்க,
மீனாட்சி, “என்னாச்சு ஆத்மி?” என்று வினவியதில் சுயம் பெற்றவள் அவனை பார்க்க,
அவனோ அன்னை அறியாமல் அவளை பார்த்து கண்ணடித்து உதட்டசைவில் முத்தம் கொடுத்தான்.
‘இருடி!’ என்று மனதினுள் நினைத்தவள் மீனாட்சியிடம், “உங்க பையன் என்னை பார்த்து கண்ணடிக்கிறார் அத்தை.. அதான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்” என்று நடிகர் வடிவேல் போல் கூறி முடித்தவள் அவனை பார்த்து புருவம் உயர்த்த,
அவனோ அலட்டிக் கொள்ளாமல், “அடுத்து செய்ததையும் சொல்லு” என்று அவளை மாட்டி விட்டான்.
“ஹான்” என்று ஒரு நொடி திணறியவள், “நான் ரெப்ரெஷ் ஆகிட்டு வரேன்” என்றபடி எழுந்து ஓடினாள்.