ஜெயதேவ் காப்பியை அருந்தியபடி, “உழைப்பு என்னோடதா இருந்தாலும் ஊரில் இருந்த நிலத்தை விற்றுத் தானே இந்த தொழிலை ஆரம்பிச்சேன்” என்றான்.
சத்யதேவ் ஒற்றை விரலால் காதை குடைய,
ஜெயதேவ், “டேய்!” என்று சற்றே குரலை உயர்த்தினான்.
‘என்ன!’ என்ற பார்வையுடன் ஜெயதேவ் பக்கம் திரும்பி சத்யதேவ், “என்னை படிக்க வச்சது யாரு ராசா?” என்று நிதானமாக கேட்டான்.
அரை நொடி அமைதியாக இருந்த ஜெயதேவ், “நிலத்தை விற்று தானே படிக்க வைத்தேன்” என்றான்.
“ஸோ அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு.. அக்சுவளி சரியா போச்சுனு கூட சொல்ல முடியாது.. ஏன்னா நீ உன்னோட படிப்பை நிறுத்திட்டு குடும்ப பொறுப்பை உன் கையில் எடுத்து, என்னையும் படிக்க வச்சு இருக்க” என்ற சத்யதேவ்,
“நம்மோட சொத்துக்களை பற்றிய விவரங்கள் முழுசா எனக்கு தெரியாது தான்.. ஆனா B.E மட்டும் தான் அப்பா காசில் படித்தேன்னும், M.E படித்ததிற்கு செலவானத்தில் முக்கால்வாசி பணம் உன் உழைப்பில் வந்ததுனும் எனக்குத் தெரியும்.. ஸோ இனி இதைப் பற்றி என்னிடம் பேசாத” என்று திட்டவட்டமாக கூறி முடித்தான்.
ஜெயதேவ் முறைத்தபடி அமர்ந்து இருக்க,
சத்யதேவ், “இன்னைக்கு நடந்ததை பற்றி இன்னும் உன் கிட்ட சொல்லலையே!” என்று பேச்சை மாற்ற முயற்சித்தான்.
ஜெயதேவ் பதில் சொல்லவில்லை என்றாலும் இவனே கூற ஆரம்பித்தான்.
“இன்னைக்கு என்னை பாலோ செய்து வீட்டை கண்டுபிடித்து அம்மா கிட்ட பேசப்போறதா ரேஷ்மி அவளோட பிரெண்ட் கிட்ட பேசிட்டு இருந்ததை கேட்டதால் தப்பிச்சேன்.. என்னை பாலோ செய்து வந்துட்டு இருந்தவ கிட்ட இருந்து தப்பிச்சு வரதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு”
மீனாட்சி, “பொண்ணு எப்படி இருப்பாடா? போட்டோ காட்டுனு எத்தனை நாளா நானும் கேட்கிறேன்!” என்றதும்,
சத்யதேவ், “அம்மா!” என்று அலறிவிட்டான்.
மீனாட்சி உதட்டை சுளித்தபடி, “நீ கடைசி வரை சிங்கிள் தான்டா” என்றதில் சத்யதேவ் கொலைவெறியுடன் அவரை முறைக்க, ஜெயதேவ் உதட்டோரம் சிறு மென்னகை பூத்தது.
பின் ஜெயதேவ் நக்கல் குரலில், “ஸோ இனி தினமும் இப்படித் தான் திருடன் போல வீட்டுக்கு வரப் போற!” என்றான்.
“விட்டா என்னை திருடன்னு முத்திரை குத்திடுவடா!”
“சச.. அதுக்கெல்லாம் தைரியம் வேணும்”
சத்யதேவ் முறைக்க, இவனோ அலட்டிக் கொள்ளாமல், “இன்னும் நீ பதிலை சொல்லலை” என்றான்.
சத்யதேவ், “ஒரே ஆபீஸ்னாலும் வேற வேற ப்ளோர்.. ஸோ அவளுக்குத் தெரியாம கிளம்பிடுவேன்” என்று பெருமை போல் கூற,
ஜெயதேவ் காரி துப்புவது போல் செய்கை செய்ய, சத்யதேவோ தூசி தட்டுவது போல் செய்கை செய்தான்.
ஜெயதேவின் முகத்தை பார்த்தபடி மீனாட்சி மெல்ல, “ஜெயா ஒரு அலையன்ஸ்..” என்று ஆரம்பிக்க,
அவனோ, “சத்யாக்கு பாருங்க” என்று கூறி எழுந்து சென்று விட்டான்.
மீனாட்சி கவலையுடன் இளைய மகனைப் பார்க்க,
மென்னகையுடன் அன்னையின் தோள்களை பற்றிய சத்யதேவ், “அவனுக்குனு ஒருத்தி இனிமேலா பொறந்து வரப் போறா! கொஞ்ச நாள் விடுங்க மா” என்றான்.
“அட போடா.. விட்டு விட்டு தான் பிடிக்க முடியாத இடத்தில் வந்து நிற்கிறான்.. என்ன தான் உன் கிட்ட இப்படி கேலியும் கிண்டலுமா பேசினாலும் அவன் முகத்தில் சிரிப்பே இல்லையேடா! சில நேரம் நம்ம கிட்ட இருந்து விலகி இருக்கிற மாதிரி தோனுதுடா..”
“அது உங்களோட மனப்ராந்தி” என்றவனின் தலையில் முறைப்புடன் தட்டியவர்,
“சொல்றான் பார் பிராந்தி விஸ்கினுட்டு” என்றார்.
“தீ-னு சொன்னா வாயை சுட்டுடாதுனு சொல்றது இல்லையா அது மாதிரி தான்மா இதுவும்”
“பிராந்தியும் இல்லை விஸ்கியும் இல்லை.. நான் உண்மையைத் தான் சொல்றேன்”
“நான் ஒரே ஒருமுறை சொன்னதுக்கு அடிச்சிட்டு நீங்க எத்தனை முறை சொல்றீங்க! அதுவும் நான் சொல்லாததையும் சேர்த்து வேற சொல்றீங்க”
“டேய் விளையாடாத”
“அம்மா உங்களுக்கே தெரியும்.. அவனா மனசு வச்சா தான் உண்டு”
“அதைத் தான் சொல்றேன்.. முன்னாடி இப்படியா இருந்தான்! எப்போதும் சிரித்த முகமா இருந்தானே! அவன் மனசார சிரிச்சு எத்தனை வருஷம் ஆச்சு! வாழ்க்கை முழுசும் இப்படியே தனியா ஓடிட்டே இருக்கப் போறனோனு பயமா இருக்குதுடா” என்றவர், “என் மகனோட வாழ்க்கை இப்படி வறண்ட பூமியா மாறிடுச்சே!” என்று முடித்த போது அவரது குரலில் துயரம் நிறைந்து இருந்தது.
“ஹ்ம்ம்.. அது ஒரு காலம்” என்று ஏக்கமும் கவலையுமாக பெருமூச்சை வெளியிட்ட சத்யதேவ், “அப்பா இறந்து, பத்தொன்பது வயசில் படிப்பை பாதியில் நிறுத்தி குடும்ப பொறுப்பை கையில் எடுத்தவனை சூழ்நிலையும், அந்த சம்பவமும் கொஞ்சம் கொஞ்சமா மாத்தி இப்படி இறுகி போயிட்டான்.. என்னை வேற சொல்லச் சொல்ல கேட்காம பிஜி படிக்க ஆஸ்ட்ரேலியா அனுப்பிட்டான்” என்றான்.
“அந்த பொண்ணை இன்னும் இவன் மறக்கலையாடா?” என்று கவலையுடன் கேட்கவும்,
சட்டென்று ஜெயதேவின் அறையை ஒரு நொடி பார்த்துவிட்டு, “அவன் முன்னாடி இப்படி கேட்டுடாதீங்க! சலங்கை கட்டியது போல் ஆடிடுவான்” என்றவன், “அவன் அந்த பிசாசை காதலிக்கவே இல்லைமா” என்றான்.
லேசாக சிரித்தவன், “நிஜமாவே அவன் அவளை காதலிக்கவே இல்லைமா.. அந்த பிசாசு தான் இவன் பின்னாடி சுத்துச்சு.. இவன் கடைசி நாள் காலேஜ் போன அன்னைக்கு எல்லோர் முன்னாடியும் அந்த” என்று கெட்ட வார்த்தை ஏதோ சொல்ல வந்தவன் நாவடக்கி தொடர்ந்தான், “அந்த பிசாசு ‘படிப்பை நிறுத்தப் போறியாமே! இத்தனை நாள் உன் பின்னாடி வந்ததை வச்சு மனசில் ஆசை எதுவும் வளர்த்துக்காத.. அப்படி எதுவும் இருந்தா இப்பவே அழிச்சிடு.. உன்னை மாதிரி ஒன்னுமில்லாத அன்னக்காவடியை எந்த பொண்ணும் விரும்ப மாட்டா.. அதுவும் இந்த ஒன்னரை வருஷ படிப்பை வச்சு விவசாயம் பார்க்க போறியாமே! இனி உன்னை நம்பி எவளும் கல்யாணமும் செய்ய மாட்டா..’னு பேசி அவளோட பிரெண்ட்ஸும் சேர்ந்து இன்னும் பேசி, எல்லோரும் சத்தமா சிரித்து ரொம்ப இன்சல்ட் செய்துட்டாங்க..
‘நான் உன் மேல ஆசை வளர்த்துக்கிறதா! அதுக்கு உனக்கு தகுதி இருக்கா! இந்த ஒன்னரை வருஷத்தில் உன்னை நான் திரும்பிக் கூட பார்த்தது இல்லை’ னு அவளுக்கு நல்ல சூடா பதில் கொடுத்துட்டு வந்தாலும், அதுக்கு அப்புறம் ஏனோ பெண்கள் மேல அவனுக்கு வெறுப்பு வந்துடுச்சுமா.. பார்க்கலாம்” என்று முடித்த போது அவனது குரலிலும் கவலை இருந்தது.
சென்னையில் தனியே வீடு எடுத்து தங்கியபடி ஜெயதேவ் விவசாய படிப்பையும் சத்யதேவ் பொறியியல் படிப்பையும் படித்துக் கொண்டு இருக்க, அவர்கள் தந்தை சங்கரனும் தாய் மீனாட்சியும் கிராமத்தில் இருந்தனர். அவர்கள் குடும்பம் சற்றே வளமானது தான். பூர்வீக நிலத்தில் தான் சங்கரன் விவசாயம் செய்து கொண்டு இருந்தார். சிறு வயதில் இருந்தே விவசாயத்தில் ஆர்வம் கொண்டிருந்த ஜெயதேவ் நிறைய மதிப்பெண்கள் எடுத்திருந்த போதிலும் விவசாய படிப்பையே தேர்ந்தெடுத்தான். அவன் கல்லூரியில் இரண்டாவது வருடம் படித்துக் கொண்டு இருந்த போது சர்ப்பம் தீண்டி சங்கரனின் உயிர் மண்ணுலகை விட்டு பிரிந்தது.
அனுபமற்ற சிறுவர்கள் தானே என்று சொத்து விஷயத்தில் அங்காளி பங்காளிகள் ஏமாற்ற நினைக்க, ஜெயதேவ் படிப்பை நிறுத்தி குடும்ப பொறுப்பை கையில் எடுத்தான். அவனை விரும்பியதாக கூறிய பெண் தோழிகளுடன் சேர்ந்து இவனை அவமதிப்பு செய்த சம்பவத்துடன் சேர்த்து, ஏமாற்ற நினைத்த உற்றார் உறவினர்கள் மத்தியில் சொத்தை காத்து குடும்பத்தை நிலை நிறுத்த போராடியதில் மொத்தமாக இறுகிப் போனான்.
இயற்கை முறையில் விவசாயம் செய்து லாபம் பார்த்தவன் தனக்கு சமைப்பதில் இருந்த ஆர்வத்தையும் வீணாக்காமல் அதனைப் பற்றி கற்று கொண்டான். சென்னை அருகே விவசாய நிலத்தை வாங்கியவன் அங்கேயும் இயற்கை முறையில் விவசாயம் செய்தான். சென்னையில் நன்றாக லாபம் கிடைக்க ஆரம்பித்ததும் ஊரில் இருக்கும் விவசாய நிலங்களை குத்தகைக்கு விட்டுவிட்டு அன்னையை அழைத்துக் கொண்டு சென்னை வந்துவிட்டான். அதன் பிறகு சிறிய அளவில் மெஸ் ஆரம்பித்து தனது கடின உழைப்பினால் தற்போதைய நிலையை அடைந்து இருக்கிறான்.