ஒரு வாரம் கடந்து இருந்த நிலையில் ஞாயிறு அன்று மாலை ஆத்மிகா தனது தோழியின் வீட்டில் இருந்து தனது இரு சக்கர வண்டியில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த பொழுது அவளுக்கு முன் இரு சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தவனின் காற்சட்டை பையில் இருந்து கைபேசி கீழே விழும் நிலையில் இருந்ததைப் பார்த்தாள்.
அதைப் பற்றி அவனிடம் சொல்வதற்காக இவள் அவனை நெருங்கிய வேளையில் கைபேசி கீழே விழுந்து விட்டது. அவசரமாக அதை எடுத்து தனது பையினுள் வைத்தவள், தனது வண்டியின் வேகத்தை அதிகப் படுத்தி அவனை நெருங்க முயற்சித்தாள்.
ஒருவாறு அவனை நெருங்கியதும் அவன் பின்னால் சென்றபடியே “ஹலோ”, “மிஸ்டர்”, “ஏய்!” என்று இடது கையை நீட்டி கத்திக் கொண்டே தொடர்ந்தாள்.
அவனை மிகவும் நெருங்கிய வேளையில் திடீரென்று இவளது வண்டியை முந்திவந்த ஒரு இருசக்கர வண்டி இவளது வண்டிக்கு குறுக்கே வந்து நிற்கவும், சட்டென்று சுதாரித்து தடுப்பியை அழுத்தி வண்டியை நிறுத்தியவள், “அறிவில்லை! இப்படியா வந்து நிறுத்துவ?” என்று எகிறினாள்.
வண்டியை விட்டு இறங்கியவனோ, “இப்படி பப்ளிக்கா ஒருத்தனை துரத்திட்டு போறியே உனக்கு வெட்கமா இல்ல?” என்று எகிறினான்.
“அதில் உனக்கு என்ன பிரச்சனை?” என்று கோபத்துடனே கேட்டாள்.
“அதான் அவன் விருப்பம் இல்லைனு சொல்லிட்டானே! அதையும் மீறி இப்படி துரத்துறியே! உங்க வீட்டில் என்னனு வளர்த்தாங்களோ!” என்று முகத்தை சுளித்து அவளை கேவலமாக பார்த்தபடி கூறியவன் பின், “இனி அவன் பின்னாடி சுத்தினனு தெரிந்தது! செவுள் திரும்பிக்கும்” என்று கடும் கோபத்துடன் முடித்தான்.
ஆத்மிகா அவனை ஏற இறங்க பார்க்க,
அதில் கடுப்பானவன், “என்ன!” என்று கடும் கோபத்துடன் கேட்டான்.
அவளோ சிறிதும் அசராமல் வண்டியில் அமர்ந்த நிலையில் கைகளை கட்டியபடி சிறு சுவாரசிய பார்வையுடன், “அவன் யாரு உனக்கு? பிரெண்டா உடன்பிறப்பா?” என்று கேட்டாள்.
“யாரா இருந்தா உனக்கு என்ன?”
“நான் அவனை துரத்தினா உனக்கு என்னனு சொல்லிட்டு போய்கிட்டே இருப்பேன்” என்று அவனை வம்பிழுத்தாள்.
அவன் தனது முகக்கவசத்தை கீழ் இறக்கி முகத்தை காட்ட, அவளோ ‘என்ன!’ என்பது போல் புருவம் உயர்த்திப் பார்த்தாள்.
அவன் எரிச்சல் கலந்த கோபத்துடன், “சொன்னது புரிந்ததா?” என்று கேட்டான்.
“இப்பவும் நீ யாருனு சொல்லலையே!”
அவன் முறைக்க, அவளோ ‘பதிலை சொல்லு’ என்பது போல் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
“ஏய்!” என்று அவன் கர்ஜிக்க, அவர்களை கடந்து சென்ற வாகனத்தில் இருந்தோர் அவர்களை பார்த்துவிட்டு சென்றனர்.
அவனது கர்ஜனையில் சிறிதும் அச்சம் கொள்ளாமல், “பெயர்” என்றாள்.
அவளது தைரியத்தில் சிறு ஆச்சரியம் கொண்டவன் முகத்தை கடுமையாக வைத்தபடியே, “ஜெயதேவ்” என்றான்.
“மிஸ்டர் விக்டரி(victory).. ஜெயம்-னா விக்டரி தானே!” என்றவள், “ஒரு சின்ன அட்வைஸ் கொடுக்கவா?” என்று கேட்டாள்.
அவளது முகம் இயல்பாக இருந்தாலும் கண்ணில் தெரிந்த சிரிப்பில் அவன் கோபத்துடன், “என்னைப் பற்றி தெரியாம விளையாடுற” என்று எச்சரிக்கும் குரலில் கூறினான்.
“நீயும் தான் என்னைப் பற்றி தெரியாம பேசிட்டு இருக்க”
“என்ன தெரியாது! கொஞ்சமும் வெட்கமே இல்லாம ஒரு பையன் பின்னாடி சுத்துற பொண்ணு..” என்று இழுத்து நிறுத்தியவன் வேண்டுமென்றே அவளை காயப்படுத்தி சத்யதேவிடம் இருந்து விலக்கி நிறுத்தும் எண்ணத்தில், “பசங்க பின்னாடி அலையுற பொண்ணுங்க யாருனு தெரியுமா!” என்று கூறி முகம் சுளித்து அவளை கேவலமாக பார்த்தான்.
அவன் கூறியதின் அர்த்தத்தை புரிந்து கோபத்துடன், “அப்போ பொண்ணுங்க பின்னாடி அலையுற பசங்க யாரு? நீ சொன்னதோட ஆம்பளை வேர்ஷனா(version)?” என்று கேட்டவள், “ஒரு பையன் ஒரு பொண்ணு பின்னாடி விடாம சுத்தினா, அது தெய்வீக காதல்.. அதே ஒரு பொண்ணு சுத்தினா அவ வேசியா?” என்று சூடாக கேட்டாள்.
“ஹெலோ! நீ பேசினதைத் தான் நான் சொன்னேன்.. முதல்ல பொண்ணுங்க பற்றிய உன்னோட கேவலமான எண்ணத்தை மாத்து.. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்.. நீ ஆரம்பத்தில் இருந்தே தப்பா தான் பேசிட்டு இருக்க.. ஐ மீன் நான் நீ நினைக்கிற ஆள் இல்லை..” என்றவளின் பேச்சை இடையிட்டவன்,
“என்னடி விட்டா பேசிட்டே போற!” என்று எகிறிக் கொண்டு வர,
அவனது ‘டி’ என்ற அழைப்பில் கோபத்துடன், “எனக்கும் செவுள் திரும்புற அளவுக்கு அடிக்க தெரியும்டா” என்றவள்,
அவன் கடும் கோபத்துடன், “ஏய்!” என்று கத்தியதை சிறிதும் பொருட் படுத்தாமல் வண்டியை சற்றே திருப்பியபடி,
“முதல்ல சரியான ஆள் கிட்ட தான் பேசுறோமானு தெரிஞ்சுட்டு பேசுடா மங்கூஸ் மண்டையா! நான் உன் தொம்பி பின்னாடி சுத்துற பொண்ணு இல்லை.. கீழ விழுந்த உன் தொம்பியோட போனை கொடுக்கத் தான் அவனை துரத்தினேன்.. நீ பேசியதுக்கு எல்லாம் பெனாலிட்டியா அதை நானே வச்சுக்கிறேன்” என்று கூறி வண்டியை கிளம்பிக் கொண்டு சென்றாள்.
“ஏய்!” என்று கத்தியபடி அவசரமாக தனது வண்டியை கிளப்பிக் கொண்டு அவள் பின்னே சென்றவன் அவளது வண்டி எண்ணை குறித்துக் கொண்டு வேகத்தை கூட்டினான். ஒருவேளை அவளை பிடிக்க முடியவில்லை என்றால் தேவைப்படும் என்றே வண்டி எண்ணை மனதினுள் குறித்துக் கொண்டான்.
அவள் வண்டியின் முன் மீண்டும் தனது வண்டியை குறுக்கே நிறுத்தி கீழே இறங்கி வந்தவன் அவளது வண்டி சாவியை கையில் எடுத்துக் கொண்டு, “ஒழுங்கு மரியாதையா போனை கொடு” என்றான்.
அவனிடம் கத்தவோ சாவியை கேட்கவோ இல்லாமல் அமைதியாக வண்டியில் இருந்து இறங்கியவள் அவனது வண்டி சாவியை தனது கையில் எடுத்துக் கொண்டாள்.
அவன் தான், “ஏய்!” என்று கத்தினான்.
அவள் அமைதியாக வலது கரத்தை நீட்ட, அவன் கடுப்புடன் அவளை முறைத்தபடி சாவியை அவளது நீட்டிய கரத்தில் வைத்தான்.
அமைதியாக தனது வண்டியில் ஏறி அதை இயக்கியவள் அவனது சாவியை தூக்கிப் போட்டாள்.
அதை சரியாக பிடித்தவன் அவளை முறைக்க,
அவளோ அலட்டிக் கொள்ளாமல், “நீ கையை நீட்டி இருந்தா கையில் கொடுத்து இருப்பேன்” என்றவள், “ஆத்மிகா.. *** காலேஜ்.. பைனல் சி.எஸ்.ஈ.. நாளைக்கு ஈவ்னிங் நாலு மணிக்கு உன் தம்பியை வந்து போனை வாங்கிக்க சொல்லு.. திரும்ப வந்து குறுக்கா மறுக்கா வண்டியை நிறுத்தாத.. அப்புறம்.. இப்படி என்னை துரத்திட்டு வந்துட்டே இருந்த, பார்க்கிறவங்களுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ சொன்னது தான் தோணும்” என்று கூறிச் சென்றுவிட்டாள்.
வீட்டிற்கு சென்றவள் சம்ருதிகாவை அழைத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு சென்று நடந்ததை கூறினாள்.