அன்று இரவு தங்கள் அறையில், படுக்கையில் படுத்தபடி சம்ருதிகா, “நாளைக்கு வரவனை அந்த ஜெயதேவ் தம்பினு எப்படி கண்டுபிடிப்ப?” என்று கேட்டாள்.
“நீ இன்னும் இதை விடலையா?”
“நீ இந்த பிரச்சனையை விடலையே!”
‘உஃப்’ என்று பெருமூச்சை வெளியிட்ட ஆத்மிகா, “நாளையோட முடிக்கிறேன்.. இப்போ தூங்கு” என்றாள்.
“கேட்டதுக்கு பதிலைச் சொல்லு.. ஒருவேளை ரோட்டில் நீங்க பேசினதை யாராவது கேட்டு இருந்து, அந்த ஜெயதேவ் தம்பின்னு வந்து நின்னா உனக்கு எப்படி தெரியும்?”
“வரவன் அந்த விக்டரியோட தம்பியானு கண்டு பிடிக்கிறது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை.. வரவனை வீடியோ காள் போடச் சொன்னா, முடிஞ்சுது”
“நல்ல ஐடியா தான்.. இருந்தாலும் இனி இப்படி உன்னோட விவரத்தை முன்னப் பின்ன தெரியாதவன் கிட்ட சொல்லாத, அதுவும் பப்ளிக்கில் வச்சு சொல்லவே சொல்லாத”
“உன்னோட அலர்ட் மோட் தப்பில்லை தான் ஆனா ஓவர் அலர்ட் உடம்புக்கு ஆகாது”
சம்ருதிகா முறைக்க, இவள், “முறைச்சுட்டு இருக்கிறியா! இந்த டிம்மான ஜீரோ வாட்ஸ் லைட்டில் எனக்கு எதுவும் தெரியலை” என்று கூறினாள்.
“ஆத்மி!”
“நாராயணா இந்த கொசு தொல்லை தாங்கலையே!” என்ற ஆத்மிகா, “அப்படி என்ன பெருசா விவரத்தை சொல்லிட்டேன்! என்னோட பெயர், காலேஜ் நேம், என்னோட டிப்பார்ட்மென்ட் அண்ட் நான் படிக்கிற வருஷம்.. இதை எல்லாம் நான் சொல்லாமயே பசங்க அசால்ட்டா கண்டு பிடிப்பான்க.. இதையே யோசிச்சுட்டு இருக்காம நிம்மதியா தூங்கு.. என்னையும் தூங்க விடு” என்று முடித்தாள்.
சில நொடிகளில், “ஆத்மி..” என்று சம்ருதிகா ஆரம்பிக்க,
“இதுக்கு மேல பேசின! அக்கானுலாம் பார்க்க மாட்டேன்.. ஒரே மிதி தான்” என்ற ஆத்மிகா போர்வையை இழுத்து மூடி திரும்பி படுத்துக் கொண்டாள்.
அதே நேரத்தில் தனது அறையினுள் செல்லப் போன ஜெயதேவை, “ஜெயா” என்று அழைத்து நிறுத்திய சத்யதேவ், “அந்த பொண்ணு பார்க்க எப்படி இருப்பா?” என்று கேட்டான்.
ஜெயதேவின் பார்வையில் அவசரமாக, “டேய் சாதாரணமா தான்டா கேட்கிறேன்” என்றான்.
“நான் எதுவும் சொல்லலையே!”
“அதான் உன் பார்வையே சொல்லுதே” என்றவன், “காலேஜ் ஃபுல்லா(full) பொண்ணுங்க இருப்பாங்க.. எப்படிடா கண்டு பிடிப்பேன்?” என்று கேட்டான்.
“நான் வேணா அவளை வரைஞ்சு தரட்டுமா?” என்று ஜெயதேவ் நக்கலாக கேட்க,
“உன் கிட்ட இந்த கேள்வியை கேட்டது என்னோட தப்பு தான்” என்றான்.
‘தெரிந்தா சரி’ என்பது போல் பார்த்துவிட்டு ஜெயதேவ் உள்ளே செல்லப் போக,
“நான் எப்படிடா அவளை கண்டு பிடிக்க?” என்று மறுபடியும் கேட்டான்.
“காலேஜ் வாசலில் நில்லு.. அவளே வந்து உன் கிட்ட பேசுவா”
“ஓ! அவ தான் உன்னை பார்த்து இருக்காளே!” என்றவன், “ஆனா அவ போனை ஆட்டை போட நினைச்சா!” என்று இழுத்து நிறுத்தினான்.
“அப்படி நினைச்சு இருந்தா உன்னை துரத்திட்டு வந்தே இருக்க மாட்டா”
“இல்ல.. உன் கிட்ட பேசினதுக்கு அப்புறம் மனசு மாறி இருந்தா!” என்றவன் ஜெயதேவின் முறைப்பில், “இல்லைடா.. நீ கொஞ்சம் அதிகமா பேசி இருக்கிறியேனு சொன்னேன்” என்று பம்மிய குரலில் கூறினான்.
ஜெயதேவ் முறைப்புடன், “அப்படி மனசு மாறி இருந்தா, அவளைப் பற்றிய விவரத்தை சொல்லியே இருக்க மாட்டா” என்றான்.
“ஹி.. ஹி.. அதுவும் சரி தான்” என்றவன், “ஆனா! ஒருவேளை என்னை சுத்தலில் விட அவ பொய் சொல்லி இருந்தா?” என்று இழுத்து நிறுத்தினான்.
“அவ பொய் சொல்லலை”
சத்யதேவ் சிறு ஆச்சரியத்துடன் பார்க்க,
தோள்களை லேசாக குலுக்கியபடி, “அவ கொஞ்சம் வித்யாசமா தான் தெரிஞ்சா அண்ட் அவ கண்ணில் பொய் இல்லை” என்றவனின் மனக்கண்ணில் விழிகளில் மட்டும் குறும்புப் புன்னகையை தேக்கியபடி தன்னை நோக்கிய ஆத்மிகாவின் முகம் தோன்றியது.
“அம்மா” என்று சத்யதேவ் கத்தியதில் அவளை பற்றிய எண்ணத்தை விரட்டிவிட்டு சகோதரனை பார்த்தான்.
மீனாட்சி அங்கே வந்ததும், சத்யதேவ், “உலக வரலாற்றில் முதல் முறையாக.. உங்க மூத்த பையன் ஒரு பொண்ணுக்கு சர்டிபிகேட் கொடுக்கிறான் ம்மா” என்றான்.
அவனை கடுமையாக முறைத்த ஜெயதேவ், “அந்த ராங்கி பட்டாசு பற்றிய விவரத்தை மாத்தி சொல்லி உன்னை சுத்தலில் விட்டு இருக்கணும்” என்றுவிட்டு அறையினுள் சென்று கதவடைத்தான்.
மீனாட்சி முகத்தில் தெரிந்த அதீத மகிழ்ச்சியில் சத்யதேவ் யோசனையுடன், “முகத்தில் ஓவரா பல்ப் எரியுதே!” என்றான்.
அவரோ விரிந்த புன்னகையுடன், “நாளைக்கு அந்த பொண்ணை பார்க்க நானும் வரேன்டா” என்றார்.
“மகனை கலாய்ச்ச பொண்ணை பார்க்க இவ்ளோ ஆர்வமா? அந்த அளவிற்கா இவனால் பாதிக்கப்பட்டு இருக்கிறீங்க!”
“அது இல்லடா.. நான் பொண்ணு பார்க்க வரேன்னு சொல்றேன்”
“அதைத் தான், என்ன இவ்ளோ ஆர்வம்னு கேட்கிறேன்”
“டேய்.. நம்ம வீட்டு மூத்த மருமகளா அவளை பொண்ணு பார்க்க வரேன்னு சொல்றேன்”
நெஞ்சில் கை வைத்த சத்யதேவ், “என்ன!” என்று சிறிது அலற,
அவரோ, “ஹ்ம்ம்.. நான் முடிவு செய்துட்டேன்” என்று புன்னகையுடன் கூறினார்.
“அந்த பொண்ணு இப்போ தான் பைனல் இயர் படிக்கிறாமா.. கிட்டதிட்ட எட்டு வயசு வித்யாசம்”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது.. அந்த பொண்ணு தான் உன்னோட அண்ணி”
“இதெல்லாம் நியாயமே இல்லை ம்மா”
அவர் முகத்தை தூக்கி வைத்தபடி சென்று மெத்திருக்கையில் அமர,
சத்யதேவ் மென்னகையுடன் அவர் அருகே அமர்ந்து தோளில் கை போட்டு அரவணைத்தபடி, “தங்களின் இந்த அதிரடி முடிவிற்கான காரணம் என்னவோ?” என்று கேட்டான்.
“அந்த பொண்ணோட நல்ல குணமும், துணிச்சலும்.. அதை விட முக்கியமான காரணம்.. முதல் சந்திப்பிலே கொஞ்ச நேரம் தான் என்றாலும் என் பையனை பழையபடி இயல்பா மாற்றி இருக்கா.. அது மட்டும் இல்லை என் மகனை கவர்ந்தும் இருக்கா”
“முதல் மூணு சரி.. கடைசி விஷயம் இடிக்குதே!”
“நீயே யோசிச்சு பாரு.. இவன் ஒரு பொண்ணை நம்புறது எவ்ளோ பெரிய விஷயம்! இதுல ‘ராங்கி பட்டாசு’னு செல்லப் பெயர் வேற!” என்று குதுகலமான விரிந்த புன்னகையுடன் புருவம் ஏற்றி இறக்கினார்.
“ரொம்ப நல்ல செல்லப் பெயர் தான்” என்று நக்கலாக கூறியவன், “அவன் கோபத்தில் பட்டப்பெயர் சொல்லிட்டு போறான்மா” என்றான்.
“நீ தானேடா உலக அதிசயம் அது இதுனு சொன்ன!”
“அது சும்மா அவனை கலாய்க்க சொன்னது” என்றவன், “சின்ன பொண்ணுமா” என்றான்.
“பைனல் இயர்னா 21 வயசு இருக்கும்.. சின்ன பொண்ணு ஒன்னும் இல்லை”
“இப்போலாம் அதிக வயசு வித்தியாசத்தில் யாரும் கல்யாணம் செய்துக்கிறது இல்லைமா” என்றவன், “முதல்ல உங்க ஆசைக்கு அந்த பொண்ணு வீட்டில் சரி சொல்லணுமே.. படிக்கிற பொண்ணு..” என்றவனின் பேச்சை இடையிட்ட மீனாட்சி,
“அவ படிப்பை முடிச்சதுக்கு அப்புறம் அவ வீட்டில் பேசலாம்டா” என்றார்.
“அந்த பொண்ணு நல்ல பொண்ணா தான் தெரியுது.. ஆனா உங்க ஆசை!!!” என்று இழுத்து நிறுத்தியவன், “நீங்க முக்கியமான ஒரு விஷயத்தை யோசிக்கவே இல்லை.. அந்த பொண்ணுக்கு இவனை பிடிக்கணும்.. இன்னொரு ரொம்பவே முக்கியமான விஷயம், உங்க பையனுக்கு பிடிக்கணும்” என்றான்.
“அவனுக்கு பிடிக்க போய் தான் அவளுக்கு சர்டிபிகேட் கொடுத்தான்”
“அவன் சாதராணமா தான்மா சொன்னான்”
“அதெல்லாம் இல்லை.. கடந்த பத்து வருஷத்தில் அவன் ஏதாவது ஒரு பொண்ணை பற்றியாவது பேசி இருக்கிறானா! இன்னைக்கு சர்டிபிகேட்டே கொடுத்து இருக்கிறான்”
“அம்மா அம்மா!” என்று சற்றே ஆயாசமாக கூறியவன், “உங்களுக்கு எப்படி சொல்லி புரிய வைக்க! நான் கேட்ட கேள்விக்கு, அவன் அந்த நபரை கணித்து பதில் சொல்லிட்டு போனான்.. அவ்ளோ தான்” என்றான்.
“ஆனா அந்த நபர் ஒரு பொண்ணு”
அவரை முறைத்தவன், “நான் தூங்கப் போறேன்” என்றபடி எழ,
அவர், “டேய்!” என்றார்.
“உங்க ஆசை கொண்ட மனசுக்குத் தான் இப்படி எல்லாம் தோணுது.. தப்பு தப்பா யோசிக்காம போய் படுத்து தூங்குங்க” என்று கறாராக கூறினான்.
காற்று போன பலூனாக அவரது முகம் சுருங்கிவிட, அவரது நாடியை பிடித்து தன்னை நோக்கச் செய்தவன் மென்னகையுடன், “அவனிடம் பேசி கூடிய சீக்கிரம் கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்கிறேன்.. ரொம்ப மறுத்தான்னா, அவன் கல்யாணம் செய்தா தான் நானும் செய்வேன்னு சொல்லி கார்னர் செய்றேன்.. இப்போ ரொம்ப யோசிக்காம போய் படுத்து தூங்குங்க” என்றான்.
அவர் உதட்டை பிதுக்கி, ‘அப்போ அவ்ளோ தானா! வேற ஒன்னுமில்லையா!’ என்பது போல் பார்க்க,
அவன் மென்னகையுடன், “ஹ்ம்ம்.. அவ்ளோவே தான்” என்றான்.
‘அந்த பொண்ணு இல்லையா சொக்கா!’ என்று மனதினுள் கூறியபடி பெருமூச்சை வெளியிட்ட மீனாட்சி மனதை தேற்றிக் கொண்டு, “சரிடா.. குட் நைட்” என்று கூறி சென்றார். அவனும் உறங்க தனது அறைக்கு சென்றான்.