ஹாய் தங்கம்ஸ் வாங்க காதல் உலகம் எப்படி இருக்கும்னு உள்ள போய் சுத்தி பார்த்துட்டு வரலாம்..
வாவ் என்ன அழகு.. எத்தனை அழகு…
வண்ணமயமான விதவிதமான மலர்கள் தோட்டத்தின் நடுவே அழகிய இதய வடிவ அரண்மனை..
வீசும் காற்றிற்கு கூட காதல் வந்ததோ யார் அறிவர்? அந்த காற்றுப்பட்டு அந்த வண்ணமயமான மலர்கள் தரும் வாசத்தை சுவாசித்தால் கூட ஆய்சுக்கும் காதல் நம் கூடவே ஒட்டிக் கொண்டிருக்கும்..
ஆனாலும் இவ்வளவு அழகிய சூழ்நிலையில் கூட காதல் ராணி முகம் வாடி கன்னத்தில் கை வைத்து சோர்ந்து போய் அமர்ந்திருந்தாள் அந்த தோட்டத்தில்..
தன் இதய ராணியின் முகம் வாட்டம் பொறுக்காமல் காதல் உலகத்தில் யாரேனும் காதலுக்கோ அல்லது காதலர்களுக்கோ துரோகம் செய்கிறார்களா?.. என்று நகர்வலம் சென்று கண்காணிக்கும் அவரது அந்த பொன்னான நேரத்தில் கூட அவர் ராணியின் முகம் வாடியது காணப் பொறுக்காமல் அழகிய இரண்டு வண்ண ரோஜா மலர்களை பறித்துக் கொண்டு ராணியின் அருகே வந்து அமர்ந்தார் காதல் அரசன்..
காதல் அரசன் தன் மனைவியுடன் உரையாடிக் கொண்டிருந்தார்..
“ என் அரசியின் திருமுகம் வாடியதன் காரணம் என்னவோ..? ” என்றார்..
“ தாங்கள் அறியாததா தேவரே?.. நம் காதல் நம் தலைமுறையுடன் காணாமல் போய்விடுமோ என்று மிகவும் பயமாக உள்ளது..
நம் உலகத்தில் நாம் காதலை வாழ வைக்கிறோம் ஆனால் பூமியில் காதல் என்றால் என்னவென்று அறியாத ஜந்துகள் தானே அதிகம் உள்ளது..
இவர்கள் காதல் என்று பெயர் பண்ணி பண்ணும் கூத்துக்களை பார்த்தால் நமக்கே வெட்கமாக உள்ளது..
அதிலும் 80ஸ் 90ஸ் கிட்ஸ் இடம் புனிதமான காதல் இருந்தது..
அவர்கள் காதலுக்காக சாகவும் துணிந்தார்கள்..
ஆனால் இன்றைய 2k கிட்ஸ் என்னும் தலைமுறை வந்ததும் போதும் நாளொரு வண்ணமும் பொழுது ஒரு மேனியும் போன்று தினமும் ஆண்கள் ஒவ்வொரு பெண்ணோடும் பெண்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்ற மாதிரி ஆண்களையும் மாற்றிக் கொண்டு அல்லவா இருக்கிறார்கள்..
இவர்கள் இடையே எங்கே உண்மை காதல் உள்ளது..
அப்படியும் சில உண்மை காதலர்கள் இருந்தால் ஜாதி மத பேதம் காட்டி அவர்களை பிரித்துவிட்டே இந்த மனித சமுதாயம் அடுத்த வேலையை பார்க்கிறது..
காதலுக்கு கண் இல்லை என்று அவர்களே கூறுகிறார்கள் ஆனால்
அதே காதலுக்கு நடுவே பணத்தையும் வசதியையும் கல்வியையும் அழகையும் வைத்து பிரித்து பார்க்கிறார்களே?. அது ஏன் என்றே எனக்கு புரியவில்லை அரசே?..
நம் காதல் உலகம் போன்று அந்த பூமியிலும் எனக்கு உண்மையான காதலை பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசையாக உள்ளது அரசை..
மீண்டும் இந்த பூமி அதே 80ஸ் 90ஸ் கிட்ஸ் காதலுக்கு செல்லுமா?. என்று மனம் ஏக்கம் கொள்கிறது அரசே..
அவர்களிடமும் சில ஏமாற்று காதலர்கள் இருந்ததுதான்.. ஆனால் அதிகபட்சம் உண்மை காதலும் காதலர்களும் மட்டுமே இருந்தார்கள்..
காதல் ஜோடிக்கு உதாரணமாக ரோமியோ ஜூலியட், ஷாஜகான் மும்தாஜ் என்று கூறுகிறார்கள்.. ஆனால் அவர்களைப் போன்று நாமும் உண்மை காதலர்களாக வாழ்வோம் என்று யாரும் எண்ணுவதில்லை..
இந்த பூமியில் உண்மை காதலையும் காதலர்களையும் பார்க்க வேண்டும் அது மட்டும் தான் என் தற்போதைய ஒரே கவலை அரசே..
“ ஆம் அரசியாரே 2கே கிட்ஸ் என்னும் தலைமுறை வந்ததும் போதும் நம் காதல் என்னும் புனிதம் அழிந்து கொண்டிருப்பதை தாங்கள் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்..
ஏதேதோ வார்த்தைகளை பிரயோகிக்கிறார்கள் பிக்கப் என்கிறார்கள்.. பிரேக்கப் என்கிறார்கள் என்ன கன்றாவி வார்த்தைகளோ..!
காதல் புனிதத்தை எந்த ஜோடி தான் இங்கே உண்மையாக நிலை நாட்டுகிறது..”
“ ஆம் அரசே இப்படியே விட்டால் நம் காதல் உலகமே அழிந்து விடும்..
ஆண் ஒரு பெண்ணை பழிவாங்க காதல் என்கிறான்..
பெண் நகைக்கும் பணத்திற்கும் ஆசைப்பட்டு ஆணிடம் காதல் என்கிறாள்..
இளம் வயதினர் இன கவர்ச்சியில் காதல் என்கிறார்கள்..
குடும்பப் பெண்கள் கடமையே காதல் என்கிறார்கள்..
குடும்ப ஆண்கள் தங்கள் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ளும் பொறுப்பை காதல் என்கிறார்கள்..
இப்படி ஒவ்வொருவருக்கும் காதல் என்னும் மந்திரம் பல வகையான அர்த்தங்களை உண்டு பண்ணுகிறது..
விடிந்தால் நாளை காதலர் தினம் ஆரம்பிக்கப் போகிறது ஆனால் அன்றைய நாள் பூமியில் காதலர்கள் செய்யும் கூத்துக்களை பார்க்க வேண்டும் என்று நினைத்தாலே எனக்கு குமட்டுகிறது..
ஏன் காதலர் தினம் வருகிறது என்று தெரியாமலே அதை கொண்டாடும் சிலர் இருக்கிறார்கள்..
தங்களது ஜோடிகளின் பெயர்களை பெயரின் முன் எழுத்தை இணைத்து இதயம் வரைவது. ஊர் சுவர்களில் படம் வரைவது ஒரு சிலருக்கு அதுதான் காதல்..
பரிசீல்கள் கொடுப்பது. பீச் சினிமா பார்க் அழைத்து சென்று விதவிதமான உணவுகள் வாங்கி கொடுத்து சந்தோஷப்படுத்துவது. இதுதான் காதல் என்று சிலர் நினைத்துக் கொண்டு செய்வார்கள்..
நாளைய காதலர் தினத்தை நம் உலகத்தில் விமர்சையாக கொண்டாட வேண்டும் அரசே..! அதை பார்த்தலாவது என் மனம் அமைதி அடைகிறதா என்று பார்ப்போம்..
அதை பற்றி கலந்து ஆலோசிக்க நம் மகன் மருமகள் மற்றும் மகள் மருமகன் இரண்டு ஜோடியையும் அழைத்து பேசுவோம் அரசே.. ” என்று காதல் ராணி பேசுவதையும் அவர் முகத்தில் வந்து போன காதல் பற்றிய கவலைகளையும் அறிந்து கொண்ட அரசன் ஒரு உறுதியான முடிவை எடுத்தார்…
“ அப்படியே ஆகட்டும் தேவியே.. என் ஜீவனின் முகம் வாடினால் நான் பொறுத்துக் கொள்வேனா என்ன?.. சீக்கிரம் உன் ஆசை நிறைவேறும் அரசியே.. அதற்கு நீ கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும்..” என்று கூறி ஆசை காதல் மனைவியின் கன்னம் கிள்ளி முத்தாடி விட்டு அங்கிருந்து சென்றார் அரசர்..
காதல் உலகத்தில் காதல் அரசியின் அரசனின் கண்காணிப்பில் இருக்கும் மக்கள் யாரும் ஒருபோதும் அவர்கள் காதலர்களுக்கோ, துணைவர்களுக்கோ துரோகம் செய்ய மாட்டார்கள்.. அப்படியும் மீறி ஒரு சில சம்பவங்கள் நடந்தாலும் அதற்கு தகுந்த தண்டனை கொடுத்து அவர்களை நல்ல முறையில் வழிநடத்தி விடுவார்கள்..
யாரும் தவறுகள் செய்ய மாட்டார்கள் என்று நினைத்து காதல் அரசன் நகர்வலம் செல்லாமல் இருப்பதில்லை அவரது கடமையை அவர் சரியாக செய்து விடுவார்..
சிறு தவறு நடந்தாலும் அவர் இதய ராணியின் மனம் அல்லவா துடித்து போகும் அதை எக்காரணம் கொண்டும் அவர் அனுமதிக்க மாட்டார்..
தன் துணைவியின் துயர் போக்க ஒரு முடிவை எடுத்து விட்டார்..
நகர்வலம் சென்று தன் அரண்மனைக்கு திரும்பிய அரசர் தன் மகன் மற்றும் மருமகளை அழைத்து நாளை அவர்களுக்கு அவர் கொடுக்கும் கடமையை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்..
அதற்கு மகன் திருமதியும் மகள் திருமகளையும் தன் தாயின் துயரை போக்குவதற்கு பூமியில் சிறந்த காதலர்களை உருவாக்குவதற்காக அவர்களுக்கு கொடுக்க பட்ட கடமையை ஏற்றுக் கொண்டார்கள்..
மகள் மற்றும் மருமகனையும் அனுப்பி வைத்தால் மனைவி மிகவும் பிள்ளைகள் இன்றி உடைந்து விடுவார்.. என்று தெரியும் அதனால் தற்பொழுது இவர்களுக்கு மட்டுமே பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்.. இவர்கள் சென்று அதை வெற்றிகரமாக முடித்து வந்தால் அடுத்த காதல் அரசன் எனும் பட்டத்தை திருமதி பெற்றுக் கொள்வான்..
அடுத்து மகளுக்கும் மருமகனுக்கும் பூமி செல்லும் வாய்ப்பை அரசர் கொடுப்பாரோ என்னவோ..!
அரசர் தன் திட்டபடி காதலர் தினத்திற்கு அருமையான பரிசை கொடுத்து தன் மனைவியை மகிழ்வித்தார்..
அத்தோடு தன் முடிவையும் மனைவியிடம் தெரிவித்தார்..
“ தேவியாரே நம் மகன் மற்றும் மருமகள் இருவரும் இன்று இரவு பூமிக்கு செல்ல இருக்கிறார்கள்..
அங்கே சென்று சிறந்த காதல் ஜோடியை தெரிவு செய்து வந்தால் அவர்களுக்கு அடுத்த காதல் அரசன் அரசி என்னும் பட்டத்தை வழங்க உள்ளேன்.. ஒரு வருடமாக நம் பிள்ளைகளை நாம் பிரிந்து இருக்க வேண்டும் அதற்கு சம்மதமா?..” என்று கேட்டார்..
“ ஒன்றை பெற வேண்டும் என்றால் ஒன்றை இழக்க வேண்டும் என்பது விதி தானே அரசரே.. அதை ஏன் நாம் மாற்றி அமைக்க வேண்டும் உண்மை காதலர்களை காண வேண்டும் என்றால் ஒரு வருடமாக நாம் பிள்ளை செல்வங்களை பிரிந்து இருந்து ஆக வேண்டும் என்பது விதி போல்.. நடப்பது நடக்கட்டும்.. இப்பொழுது மனம் ஓரளவுக்கு ஆறுதல் பெற்றது அரசே..
நம் மகனும் மருமகளும் அவர்களுக்கு கொடுத்த பொறுப்பை சிறப்பாக செய்வார்கள் என்று முழு நம்பிக்கை எனக்கு உள்ளது..
கவலையை விட்டு நாம் அவர்களை ஆசீர்வதித்து பூமிக்கு அனுப்பி வைப்போம்..” என்று அரசி கூறினார்..
“ தாயே கவலை வேண்டாம்.. தங்கள் மகிழ்ச்சிக்கு நாங்கள் பொறுப்பு.. தந்தை எங்களுக்கு ஒப்படைத்திருக்கும் கடமைக்கு ஒரு வருட கால அவகாசம் இருக்கிறது.. அதற்குள் சிறந்த காதலர்களை எடுத்துக்காட்டாக உருவாக்கிவிட்டே நாம் காதல் உலகம் திரும்புவோம்.. ஜெயமே ஜெயம்..” என்று கூறி தாய் தந்தையின் பாதம் பணிந்து தங்கள் பொறுப்பை நிறைவேற்றுவதற்காக இளவரசனும் இளவரசியும் பூமியை நோக்கி பயணத்தை ஆரம்பித்தார்கள்..
*********
2024ம் வருடம் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காதலர் தினம் அன்று இரவு நேரம்..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை பூங்கா..
அணையோடு ஒட்டி அந்த பூங்கா இருப்பதால் இயற்கை அழகுக்கும் விளையாட்டுக்கும் பொழுது போக்கிற்கும் பஞ்சமில்லாத இடம்.
இந்த பூங்காவிற்கு ஞாயிற்றுக்கிழமை மற்றும் விசேட விடுமுறை நாட்களில் மக்கள் சந்தோஷமாக குடும்பத்தோடு வந்து விளையாடி பொழுதை போக்கி செல்வார்கள்..
இன்று காதலர் தினம் என்பதால் விசேடமாக அந்த பூங்காவிற்கு இரவு நேரம் காதலர்களுக்காக மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது..
இளம் வயது காதலர்கள் புல்வெளியில் இருந்தார்கள்..
குடும்பத்தோடு வந்திருப்பவர்கள் பிள்ளைகளை விளையாடும் இடத்தில் விட்டுவிட்டு அருகை கவனித்தபடி இருந்தார்கள்..
18 வயதிற்கு மேற்பட்டவர்களில் இருந்து அறுபது வயதிற்கு உட்பட்டவர் வரை..
ஜோடிகளாக அனைவரும் காதலர்கள் என்று பெயர் பண்ணி அங்கே அவர்கள் காதலர்களோடு ஒன்று கூடி மகிழ்ந்து கொண்டிருந்த நேரம்..
குடும்பமாக வந்திருப்பவர்கள் அவர்களது பிள்ளைகள் மற்றும் எதிர்காலத் திட்டத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்..
இளவயது காதலர்கள் பரிசீல்களைப் பற்றி குறைகள் கூறிக்கொண்டு அங்கே விற்கும் உணவுகளை ருசி பார்த்துக் கொண்டு அவர்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்..
ஜோடி ஜோடியாக அமர்ந்து கைகளை கோர்த்துக்கொண்டு ஐஸ்கிரீம் உண்பது. சிரித்து ரசித்து பேசிக் கொண்டிருப்பது, மற்ற ஜோடிகள் என்ன செய்வார்கள் என்று வேடிக்கை பார்ப்பது காதலர்கள் வாங்கி வந்த பரிசீல்களை பெற்றுக் கொள்வது போன்று அவர்களுக்கு தெரிந்த வகையில் அன்றைய காதலர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்..
அந்த இடமே இரவு நேரம் என்பதை மறைக்கும் விதமாக மின்விளக்கு வெளிச்சத்தில் ஜெகஜோதியாக இருந்தது.. அனைத்து ஜோடிகளும் அவர்களது ஜோடிகளோடு அமர்ந்திருந்த நேரம் ஒரு வெட்ட வெளியில் திடீரென்று மின் வெட்டும் வெளிச்சத்தோடு அந்த இடத்தில் யார் கண்ணுக்கும் தென்படாத கையளவு இரண்டு உருவங்கள் வானில் இருந்து பூமியை நோக்கி வந்து இறங்கியது..
இடி மின்னல் பூமியில் விழுந்ததோ என்று நினைக்கும் அளவு கண்ணை கவரும் வெளிச்சத்தோடு இருந்ததால் அனைவரும் பயந்துவிட்டார்கள்..
சில நிமிடங்களின் பின் அது மாயையோ என்று தோன்றும் அளவு அந்த இடம் முன்பு இருந்தது போன்று எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது..
அதைப் பார்த்ததும் ஏதோ ஒரு மாய வெளிச்சம் என்று கடந்து மீண்டும் அவர்களது காதல் லீலையை ஆரம்பித்தார்கள்..
இதற்கு இடையே அந்த இடத்தையும் காதல் ஜோடிகளையும் தொலைக்காட்சியின் காட்டுவதற்காக தொலைக்காட்சி நிருபர்கள் சிலர் படம் பிடித்துக் கொண்டும் காதல் ஜோடிகளை பேட்டி எடுத்துக் கொண்டும் இருந்தார்கள் ஒரு பக்கம்..
இப்படியே நேரம் நள்ளிரவை கடந்து கொண்டு இருந்தது..
காதல் ஜோடிகள் ஜோடி ஜோடியாக அந்த இடத்தை விட்டு கலைந்து கொண்டு இருந்தார்கள்..
இந்த இடைப்பட்ட நேரத்திற்குள் திருமதியும் திருமகளும் ஒவ்வொரு காதல் ஜோடியையும் கண்காணித்து அவர்களுக்கு காதல் என்றால் என்னவென்று தெரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை ஓரளவு அறிந்து கொண்டார்கள்..
“ இளவரசியே நன்றாக அனைத்தையும் கவனித்தீர்களா?.. ஜோடியாக வந்திருப்பவர்களையும்..
இங்கே தங்களுக்கான காதல் ஜோடி கிடைக்குமா?.. நமக்கும் இது போன்று சந்தோஷம் கிடைக்குமா?.. என்று தனியாக வந்திருப்பவர்களையும் நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்..” என்றார் திருமதி..
“ தங்கள் மனதில் ஓடும் எண்ணத்தை நான் நன்கு அறிவேன் இளவரசே…
நாளையில் இருந்து நாம் பணியை சிறப்பாக மேற்கொள்ளுவோம்..” என்றாள் திருமகள்..
“ இந்த மடமை மக்களுக்கு காதல் என்றால் என்னவென்று காட்டுவோம் அரசியே.. தற்போது நமக்கான இடத்தை நாம் தேடிக்கொள்ள வேண்டும்..” என்றார் இளவரசர்..
இனி அவர்களுக்காக கொடுக்கப்பட்ட வேலையை அவர்கள் கச்சிதமாக செய்வார்கள்..
யாரை யாருடன் ஜோடி இணைத்து அவர்களுக்கு திருப்தி ஆகும் காதல் ஜோடியை கண்டறிவார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்..