காரணம் அந்த வீட்டு முதலாளி ஆபீஸ்க்கு செல்ல சரியான நேரம் நெருங்கிவிட்டது.. அதனால் சந்திரா மிகவும் அவசரமாக ஆனால் நிதானமாக ஒவ்வொரு வேலையாக செய்து கொண்டிருந்தார்..
பாலச்சந்திரன் அவரை திருமணம் செய்த காலத்தில் இருந்து சந்திரா பலவற்றை அனுபவித்து விட்டார்..
காலேஜ் படிக்கும் போது இருவரும் விரும்பி திருமணம் செய்து கொண்டார்கள்.. அதனால் பேர் பொருத்தம் கூட அவர்களுக்கு அப்போது மகிழ்ச்சியை தந்தது..
காதலிக்கும் போது தெரியாத அவரது குணங்கள் அனைத்தும் திருமணத்திற்கு பின் தான் ஒவ்வொன்றாக வெளி பட்டது பாலச்சந்திரனிடம் இருந்து..
அவரது இழிவான குணங்களைப் பார்த்து சந்திரா அதிர்ந்து பயந்துவிட்டார்.. என்று தான் சொல்ல வேண்டும்..
காதலித்து திருமணம் செய்து அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தது போல் தான் அவரது வாழ்க்கை இருந்தது..
பாலச்சந்திரன் சந்திராவிற்கு முதலில் போட்ட கண்டிஷனே அண்ணன் குடும்பத்துடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதுதான்..
அண்ணன் கஷ்டப்படுகிறார் பிள்ளைகள் கஷ்டப்படுகிறார்கள் என்று ஒரு பைசா பணம் செலவழித்தாலோ அல்லது பொருட்களோ பண்டமாற்று முறை வைத்துக் கொண்டாலும் சந்திராவின் கதி அதோ கதி என்று சொல்லிவிட்டார்..
ஒரே ஊரில் இருந்து கொண்டு அண்ணன் குடும்பத்தை பார்க்கவும் முடியாது பேசவும் முடியாது அவர்களுக்கு தன்னால் எந்த உதவியும் செய்ய முடியாது என்று சந்திரா மனம் வருந்தாத நாளே இல்லை..
அண்ணன் விபத்துக்குள்ளாகிய போதும் சரி, பிள்ளைகள் பெரியவர்கள் யாரும் இல்லாமல் உதவிக்கு கஷ்டப்பட்ட நேரமும் சரி பண உதவியோ வேறு எந்த உதவியும் செய்ய முடியாத கையாலாகாத தனத்தில் இருந்தார்..
காலை கணவன் எழுந்ததில் இருந்து சந்திராவின் வேலை ஆரம்பிக்கிறது..
மூன்று, நான்கு குழந்தைகள் வைத்திருக்கும் பெண்கள் கூட அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். காலை உணவு செய்ய வேண்டும். மதிய உணவு கட்டிக் கொடுக்க வேண்டும், வீட்டு வேலைகள் செய்ய வேண்டும்.. என்று பலவற்றையும் யோசித்து வேலை செய்யும் போது கூட சந்திராவை போல் யாரும் கஷ்டப்பட மாட்டார்கள்..
பாலச்சந்திரன் ஒருவரை வேலைக்கு அனுப்புவதற்கு இடையில் சந்திரா செத்து பிழைப்பார் என்று தான் சொல்ல வேண்டும்..
ஆனால் சந்திரா காலை உணவை மட்டும்தான் காலையில் செய்வார்.. மற்ற வேலைகள் அனைத்தும் பாலச்சந்திரனுக்கு உரிய வேலைகள்தான் செய்வார்..
கணவன் வீட்டை விட்டு வெளியேறும் கடைசி நொடி வரை சந்திரா காலில் சக்கரம் கட்டியது போல் ஓடிக்கொண்டே இருப்பார்..
பி எஸ் காஸ்மெட்டிக்.. பாலச்சந்திரனின் தந்தை அந்த காலத்தில் ஆரம்பித்த கம்பெனி.. அவர் அதைத் தொடர்ந்து வெற்றிகரமாக தான் நடத்திக் கொண்டிருக்கிறார்..
பாலச்சந்திரனுக்கு வயது 55 ஆகிவிட்டது.. ஆனாலும் அவரை பார்த்தால் இன்னும் 40 நெருங்காத வயது என்று தான் கூறுவார்கள்..
அவ்வளவு இளமையானவர் போல் தோற்றம் அளிப்பார்..
அவர் இளமைக்கு காரணம் சந்திராவின் பக்குவமான ஆரோக்கியமான வீட்டு உணவு தான் என்று கூறவேண்டும்..
தண்ணீர் கூட பாட்டில் தண்ணீர் கடையில் வாங்கி அருந்த மாட்டார்..
அனைத்திலும் மிகவும் நுதனம் பார்ப்பவர்..
இதோ இன்று காலையிலும் சந்திரா சமையல் அறையில் கணவனுக்கு நெய் அதிகம் இல்லாத பொங்கல் செய்து கொண்டிருந்தார்..
இத்தோடு நான்காவது முறை பாலச்சந்திரன் சந்திராவை அழைத்து விட்டார்..
நல்ல வேளை அவர்கள் அறை கீழே இருந்தது மேலே இருந்தால் சந்திரா ஏறி இறங்கியே செத்துப் போய் இருப்பார்..
“ ஏய் சனியனே..! இன்னும் நான் கூப்பிட்டது காதுல கேக்கலையா டி.. மகாராணி ஆடி அசஞ்சு வர இவ்வளவு நேரம்..” என்றார்..
கணவன் இவ்வளவு பேசியும் சந்திரா வாய் திறக்க வில்லை.. அப்படி மீறி வாய் திறந்தால் சந்திராவின் நிலை என்னவாகும் என்று அவருக்கு பல அனுபவங்கள் உள்ளது..
“ என்னங்க கூப்பிட்டிங்களே ஏதாவது வேணுமா?.. ” என்றாள் சந்திரா..
“ ஏண்டி கூப்பிட்ட எனக்கு தெரியாதா?. உன்னை கூப்பிட்டேனா. இல்லையான்னு. நான் சொன்ன பக்குவத்துல பொங்கல் ரெடியா இருக்கா?.. எனக்கு பண்ணி தந்த சத்தியத்தை நீ இன்னும் மீறலையே?..”
என்ன சத்தியம் என்று தான் இத்தனை வருடத்தில் காதால் கேட்டு காதும் புளித்து போய், வாயால் பதில் சொல்லி வாயும் அலுத்து போய்விட்டது..
“ இல்லையேங்க நான் இப்ப வரை அவங்க யாரோடையும் எந்த தொடர்பும் வைக்கலைங்க..” என்றார்..
“ அதுதான் உனக்கும் நல்லது உன் புள்ளைக்கும் நல்லது.. உன் அண்ணன் மகன் யாரோ ஒரு சினிமாகாரிய வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து இருக்கிறதா காலையில ஊருக்குள்ள பேசிகிட்டாங்க.. சினிமாக்காரியை அழைச்சிட்டு வந்து வீட்டுக்குள்ள கூத்தடிக்கிறாங்க.. இவன் எல்லாம் எங்க உருப்பட்டு ஒரு நல்ல நிலைமைக்கு வரப் போறான்.. இதோ பாருடி திரும்பவும் சொல்றேன் அந்த பொண்ணு மட்டும் நீ அவனுக்கு கல்யாணத்துக்கு பார்த்து கொடுத்த பொண்ணுன்னு தெரிஞ்சது உன்னை உயிரோட சமாதி கட்டிடுவேன்.. போ போய் சாப்பாடு எடுத்து வை.. நான் கிளம்புவதற்க்கு எல்லாம் ரெடியா?..” என்றார்..
“ எல்லாம் ரெடிங்க..” என்று கூறி சந்திரா விட்டால் போதும் என்று ஓடி வந்துவிட்டார்..
ஒரு வழியாக இல்லாத ஆர்ப்பாட்டம் பண்ணி பாலச்சந்திரன் சாப்பிட்டு விட்டு ஆபிஸ் கிளம்பி சென்று விட்டார்..
அவர் இருக்கும் போது அண்ணன்
குடும்பத்தை பற்றி மனதால் நினைத்தால் கூட அவருக்கு தெரிந்து விடும் என்று பயப்படுவார்..
கணவன் சென்றதும் சற்று நேரம் ஓய்ந்து போய் சோபா செட்டில் அமர்ந்தார்.. தன்னால்தான் அண்ணன் குடும்பத்திற்கும் அண்ணன் பிள்ளைகளுக்கும் எதுவும் செய்ய முடியவில்லை.. அவர்களாவது அவர்களது வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொள்ள வேண்டும்.. அதை அவர் கண்ணால் எங்கேனும் சந்திக்கும் போது பார்த்தால் மட்டும் போதும் இதுதான் எப்போதும் அவரது ஆசை..
தனிமையில் ஆறுதலாக அமர்ந்து அண்ணன் குடும்பத்தை பற்றி நினைத்து கொண்டிருக்கும் போது நேரம் 9 மணியை காட்டும் விதமாக மணி அடித்தது..
கணவன் பாலச்சந்திரனுக்கு தான் அண்ணன் குடும்பத்தை பற்றி நினைக்கவோ, பேசவோ பிடிக்காது ஆனால் அவர் வாங்கிய இந்த கடிகாரத்துக்கு கூட அது பிடிக்காமல் போனது என்று இன்று தான் தெரிந்து கொண்டார்..
அப்போது தான் இன்னும் மகன் எழுந்து வரவில்லை எனும் நினைவு வந்து மகனது அறையின் கதவை தட்டினார்..
“ கண்ணா, கண்ணா.. ” என்று இரண்டு சத்தம் வைத்தும் மகன் அறை கதவை திறக்கவில்லை.. அதனால் மகன் இன்னும் எழுந்து கொள்ளவில்லை என்பதை அறிந்து சந்திரா உள்ளே சென்றார்..
அவன் உடல் அமைப்பிற்கு அந்த கட்டில் போதாது..
உடல் அமைப்பிற்கு ஏற்றளவு உயரம் அதிகம்..
சந்திரா மகன் அருகே அமர்ந்து தலையை வருடிக் கொண்டிருப்பதில் அசைந்து கொடுத்த திருநாவுக்கரசு
கண் திறந்து பார்த்த போது அருகே தாய் இருப்பதை பார்த்து சிரித்துக் கொண்டே அப்படியே தலையை தாயின் மடியில் வைத்துக் கொண்டான்..
காலை நேரம் 9 மணி ஆனால் மகன் இன்னும் எழுந்து கொள்ளவில்லை.. இதற்கு பலமுறை சந்திரா கணவனிடம் திட்டு வாங்கி உள்ளார்..
மகன் இரவு வெளியே சென்று விட்டு தாமதமாகத்தான் வீடு வந்தான்.. அதனால் தாமதமாக எழுந்து கொள்வான்.. என்று சந்திரா நினைப்பார்.. ஆனால் கணவன் அப்படி நினைக்க மாட்டாரே..!
எப்போது சின்ன சந்தர்பம் கிடைக்கும் மகனையும் மனைவியையும் வறுத்து எடுக்கலாம் என்று காத்திருக்கும் பாலச்சந்திரனுக்கு அதிகமாக மனைவியை விட மகனே சந்தர்ப்பத்தை அமைத்துக் கொடுப்பான்..
இன்னும் அவனுக்கு தானே செல்லம் கொடுத்துக் கெடுக்க கூடாது என்பதால் அவனது தோளில் இரண்டு அடியை போட்டு சீக்கிரம் எழுந்து குளித்து உணவு உண்ண வரும்படி அழைத்து விட்டு சென்றார்..
.
அவனும் தாய் சொல்லை தட்டாத பிள்ளை போல் எழுந்து குளிப்பதற்காக குளியல் அறைக்குள் சென்றான்..
சந்திரா மகனுக்கு பொங்கல் பிடிக்காது என்பதால் இட்லி அவித்து கார சட்னி தயார் செய்து வைத்தார்..
அவரும் உணவை எடுத்து மேசையில் வைக்கவும் திருநாவுக்கரசும் குளித்து ரெடியாகி வரும் நேரமும் சரியாக இருந்தது..
மகனுக்கு போதும் என்ற அளவுக்கு பரிமாறியதும் அவரும் கொஞ்சம் உணவு உண்டு காலை உணவை முடித்துவிட்டு இனி கணவனுக்கு பக்குவமாக மதிய உணவு சமைக்க தயார் படுத்தினார்..
12.30 மணிக்கு சரியாக கணவன் உணவு உண்ண வீட்டுக்கு வந்து விடுவார்..
சிக்கன் அல்லது மட்டன், மீன் அல்லது முட்டை அத்துடன் சேர்த்து ஒருவகை காய்கறி இப்படி மூன்று வகையான பதார்த்தங்கள் மதிய உணவிற்கு இருக்க வேண்டும்..
அது கணவனின் கல்யாணத்திற்கு முன்பான கண்டிஷன்.. ஒரு நாளும் சந்திரா அதை மீறியதில்லை..
அந்த வீட்டில் வெள்ளிக்கிழமை, நல்ல நாள் கிழமை, எதுவும் இல்லை.. எல்லா நாளும் நான் வெஜ் ஐட்டம் இருக்க வேண்டும்..
அப்படியான சூழ்நிலையில் கணவனுக்காக பார்ப்பதா?. இல்லை தன் கடவுளுக்காக பார்ப்பதா?. என்று சந்திரா மிகவும் தவித்து போன காலங்கள் பல..
காலங்கள் போக போக அதற்கும் பழகிவிட்டார்..
திருநாவுக்கரசு காலை உணவை முடித்துவிட்டு தாய்க்கு காய்கறியை நறுக்கி கொடுத்து சின்ன சின்ன வேலைகளை செய்து கொடுத்து விட்டு ஹால் சோபாவில் டிவியை போட்டு மோட்டு பத்லு பார்த்துக் கொண்டிருந்தான்..
சற்று நேரத்தில்
“ டேய் கண்ணா வா.. அம்மா லன்ச் பண்ணிட்டேன்.. கொஞ்சம் சூடா இருக்கும் போதே சாப்பிடு அப்பதான் டேஸ்ட் நல்லா இருக்கும்..”
என்று சந்திரா அழைத்தும் மகன் வராமல் என்ன செய்கிறான் என்று பார்ப்பதற்காக ஹாலுக்கு வந்தார்..
சந்திராவினால் கண்ணன் என்று அழைக்கப்பட்டவன் தாய் அழைக்கும் சத்தம் கேட்டும் எழுந்து வராமல் தீவிரமாக தொலைக்காட்சியில் மோட்டு பத்லு பார்த்துக் கொண்டிருந்தான்..
தாயின் அவசரம் அவனுக்கு புரியாமல் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான்..
“ கண்ணா அம்மா கூப்பிடுறது கேக்கல.. இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க அப்பா வந்துடுவார்.. அப்புறம் அந்த மனுஷன் உன்னை நிம்மதியாவா சாப்பிட விடுவார்.. ஆயிரம் குறை சொல்லி திட்டிக்கொண்டே இருப்பார்.. அப்புறம் என் புள்ள சாப்பிடறது உடம்புல ஒட்டாமலே போய்டும்.. ” என்று கூறி அவன் தலையை கலைத்து விட்டு தலைவாசலில் ஏதோ சத்தம் கேட்கவும் திரும்பி பார்த்தார்..
அவர் இவ்வளவு நேரம் புகழ்ந்து பாடிய கணவனே மனைவியை ஆசை பார்வை பார்த்துக் கொண்டு வாசலில் நின்றார்..
“ ஏண்டி அறிவு கெட்டவளே.. உனக்கு கடவுள் மனசாட்சியை படைக்கவே இல்லையா?..
இவர் என்ன ரெண்டு, மூணு வயசு பாப்பாவா?.. நீ மடியில் தூக்கி வச்சு கொஞ்சி நிலா சோறு ஊட்டி விட..
சூடா சாப்பிடாட்டி உன் புள்ளை உடம்புல ஒட்டாதோ?..
இந்த 130 கிலோ எடை கொண்ட யானை உடம்பில ஒட்டினா என்ன?.. ஒட்டலேன்னா என்னடி?.. இந்த 26 வருஷமும் ஒட்டினதுக்கு அவர் என்ன கிழிச்சார்?.. இனி ஒட்ட போறதுக்கு என்ன கிழிக்க போறார்?..
அங்க பார். கொஞ்சமாவது வயசுக்கு தகுந்த வேலை பார்கிறாரா?.. ஐந்து வயசு பாப்பா பாக்குற கார்ட்டூன் பார்க்கிறார் உன் புள்ள.. இதுல இவருக்கு சூடான சாப்பாடு இல்லாதது தான் ஒரு கேடு..
வா வந்து உழைத்து கலைச்சு போய் வந்திருக்கிற எனக்கு சூடான சாப்பாட்டை வை.. அவருக்கு காலைல அவிச்ச 50 இட்லி மிச்சம் இருக்குமே அதை போடு தின்னுட்டு போய் திரும்பவும் கார்ட்டுன் பார்க்கட்டும்.. தண்ட சோறு..
புள்ளைய பெத்து கையில வாங்கினதுமே ஆசையா என் அப்பன் பேரு வச்சேன்.. அதுக்காக என்னால கடுச்சொல் பேசி திட்ட முடியல..”
பாலசந்திரன் அப்படி திட்டி பேசிக்கொண்டிருக்கும் போது சம்மந்தமே இல்லாமல் வாய்விட்டு சத்தமாக சிரித்தான் திருநாவுக்கரசு..
அவன் சிரிப்பு அவன் அப்பாவை இன்னும் அதிகமாக கோபப்படுத்தியது.. மீண்டும் திட்ட வாயை திறக்கும் போது அவர் காதில் கேட்ட வார்த்தையில் உச்சகட்ட அதிர்ச்சியும் அதிக கோவத்தையும் கொண்டார்..
“ அம்மா எனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வை.. கல்யாணம் பண்ணினால் எவ்வளவு ஹாப்பியா இருக்கலாம்.. நம்ம சொந்தம் எல்லாம் விருந்து வைப்பாங்க தானே..! ” என்றான்..
சாதாரணமாக கூட அவனது வயதுக்கு தகுந்த பேச்சுக்களை ஒரு நாளும் திரு பேசியிருக்க மாட்டான்..ஆனால் இன்று அதிசயமாக திருமணம் செய்து வை என்று கேட்டதை பார்த்து சந்திரா அதிர்ந்தார் என்றால் பாலசந்திரன் அதிக கோபத்தைக் கொண்டார்..
“ ஆமா இவரே தண்டசோறு.. ஊர் கூட்டி நான் இன்னொருத்தண்டச் சோறை அழைச்சிட்டு வருவேன்னு வேற கனா காணுறாரோ?.. இங்க பாருடி சந்திரா.. அவர் எப்ப நூறு ரூபாவது சொந்தமா உழைக்கமுடியும்னு உழைக்கிறாரோ அன்னைக்கு அவரையே போய் கல்யாணம் பண்ணிக்க சொல்லு..
அவருக்காக இனி நான் தண்டமா செலவு பண்ண மாட்டேன்..
கல்யாணம் பண்ணிக்கிட்டு மிக்சர் சாப்பிட தான் லாயக்கு..
அவர் உடம்பே அவருக்கு பாரம் இதுல அவருக்கு இன்னொரு துணை வேற தேவை..”
என்று மீண்டும் சத்தமிட்டு விட்டு கணேசன் டைனிங் டேபிளில் சென்று அமர்ந்தார்..
ஒரு வழியாக உணவை உண்டு விட்டு சந்திரன் அறைக்கு சென்றதும் சந்திரா மகன் அருகே வந்து அவன் தலையிலேயே இரண்டு கொட்டு வைத்தார்..
“ ஏன் கண்ணா இப்படி பண்ணுற?.. அவரே எப்படா சரியான நேரம் கிடைக்கும் உன்னை திட்டியே பொழுதைப் போக்க நினைப்பார்.. இதில் நீ வேற அவருக்கு சந்தர்ப்பத்தை வசதியா அமைச்சு கொடுக்கிற?..
நல்ல வேளை வாய் பேச்சோட நிக்குது.. என் மாமனார் பெயர் மட்டும் உனக்கு வைக்கலைன்னா உன் உடம்புல பல தழும்புகள் இருக்கும்..
என்ன கண்ணா திடீர்னு கல்யாண பேச்சை எடுத்த?.. யாரையாவது பொண்ண பார்த்தியா பிடிச்சிருக்கா?..
காலாகாலத்துல உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு எனக்கும் ஆசை தான் ஆனா எங்க நம்ம பேச்சு எடுபடுமா என்ன?.. ” என்றார் மன வருத்தத்தோடு..
மகன் திடீரென இவ்வளவு எடை கூடியது அவருக்கே மிகுந்த மன கவலை உண்டு பண்ணியது.. அவனால் இருந்தால் எழ முடியவில்லை.. கீழே குனிய முடியவில்லை.. சேர்ந்தால் போல் பத்து அடி எடுத்து வைத்தாலே வேகமாக மூச்சு இழைக்கிறான்..
அவனை பார்த்தாலே யாரும் வேலை கொடுக்கத் தயங்குகிறார்கள்..
உடல் எடை காரணமாக யானை யானை என்று பள்ளி மாணவர்கள் கேலி பேசியதால் பள்ளிக்குச் செல்லாமல் பாதியிலேயே நின்று விட்டான்..
தாயின் கவலை தோய்ந்த முகத்தை பார்த்து விட்டு “ என்னமா பேசுறீங்க நான் எப்போ கல்யாணத்தை பத்தி கேட்டேன்.. எனக்கு இப்ப கல்யாணத்துக்கு என்ன அவசரம்..? ” என்றானே பார்க்கலாம்..
“ கண்ணா இவ்வளவு நடந்து இருக்கு என்னடா திரும்ப இப்படி கேக்கிற..?
ஐயோ கடவுளே எனக்கு பயமா இருக்கு.. என் பிள்ளைக்கு மோகினி பேய் எதுவும் பூந்துடுச்சா?..
நேற்று இரவு எங்கேயோ போய் ஊர் சுத்திட்டு தாமதமா வந்தானே அப்ப போற போக்குல ஏதாவது காத்து கருப்பு என் பிள்ளையை பிடிச்சிருச்சோ?..
வயசு பையனை மோகினி பேய் அடிச்சா தானே இப்படி ஏதாவது உளறி வைப்பாங்க..
நாளைக்கு ஜோசியரை போய் பார்த்து மந்துரிச்சு தாயத்து கட்டிவிடனும்..” என்று பேசிக்கொண்டே அவனை அழைத்துச் சென்று உணவு பரிமாறி இருவரும் உண்டு முடித்தார்கள்..