அத்தியாயம் 13_1 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்
Post Views:1,779
அத்தியாயம் 13
எந்த ஜென்மத்திலும் நமக்கு
பிரிவே இல்லை. ஏனென்றால் உன்னில்
நானும் என்னில் நீயும் இருப்பதால்!!!
தன்னுடைய ஹாஸ்டல் அறையில் அவனைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்த ரேகாவுக்கு வாழ்க்கையே வெறுத்து போனது போல தான் இருந்தது.
பெற்றவர்களும் இல்லாமல் அநாதை போல வளர மிகவும் கஷ்டப் பட்டிருக்கிறாள். விக்ரம் உதவியால் அழகான, அன்பான குடும்பம் அவளுக்கு கிடைத்தது. ஆனால் இன்று அனைத்தையும் உதறி விட்டு இங்கே வந்திருக்கிறாள். அதனால் மனம் பாரமாக இருந்தது. தனிமை அவளை அச்சுறுத்தியது.
கூடவே விக்ரமை விட்டு பிரிந்ததும் மனதுக்கு கஷ்டமாக இருந்தது. “வீட்டுக்கு போன அப்புறம் இனி என்னை நினைப்பானா? இனி என்னைப் பாக்க இங்க வருவானா? என் கிட்ட போன்லயாவது பேசுவானா? அத்தையும் மாமாவும் கொஞ்ச நாள் கழிச்சு என்னை கூட்டிட்டு வரச் சொன்னா அவங்க கிட்ட இவன் என்ன சொல்லி சமாளிப்பான். என்னைப் பத்தி தப்பா அவங்க கிட்ட சொல்லிருவானா? அவங்களும் நம்பி என்னை வெறுத்துருவாங்களா? காயத்ரி அக்காவும், ஆதி அத்தானும் என் கிட்ட பேசுவாங்களா?”, என்று யோசித்தே தூக்கத்தை தொலைத்தாள்.
வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்த விக்ரமுக்கோ மீண்டும் திரும்பி சென்று அவளை அழைத்து வரத் தான் தோன்றியது. ஆனால் அவளாக விருப்ப பட்டு போறேன் என்று சொன்ன பிறகு அவனால் என்ன செய்ய முடியும்? கூடவே அழைத்து வந்தால் மீண்டும் அவளை ஏதாவது கஷ்டப் படுத்தி விடுவோமோ என்ற பயமும் இருந்தது. ஆனால் அவளைப் பிரிந்து அவனால் சத்தியமாக நல்லா வாழ முடியும் என்று தோன்றவே இல்லை. அரை உயிராக தான் ஊருக்கு சென்றான்.
தளர்ந்து போய் வீட்டுக்கு வந்த மகனைப் பார்த்து சாரதா மற்றும் சேதுபதிக்கு வருத்தமாக இருந்தது. அவனை அவர்கள் இப்படி இருந்து பார்த்ததே இல்லை. விக்ரம் சின்ன வயதில் இருந்து நினைத்ததை சாதிக்கும் ரகம். அதனால் தோல்வி எதையும் அவன் சந்தித்தே இல்லை. அதனால் அவன் சோர்ந்து உக்காந்து அவர்கள் பார்த்ததில்லை.
“விக்ரம், ரேகாவை அவ ஹாஸ்ட்டல்ல விட்டுட்டியா?”, என்று கேட்டாள் சாரதா.
“ஆமா மா விட்டுட்டேன்”, என்று சோகமாக சொன்னான் விக்ரம்.
“சரி சரி சாப்பிட வா. வேலை முடிஞ்ச அப்புறம் ரேகா வந்திருவா டா. இப்படி எல்லாம் நீ சோகமா இருந்தா பாக்க நல்லாவே இல்லை விக்ரம் கண்ணா. நீ எப்பவும் இப்படி இருக்க மாட்டியே? உடம்பு எதுவும் சரியில்லையா?”
“அப்படி எல்லாம் இல்லை மா. எனக்கு பசிக்கலை. எனக்கு சாப்பாடு வேண்டாம். நான் கொஞ்ச நேரம் தூங்குறேன்”, என்று சொல்லி விட்டு அவனுடைய அறைக்குள் சென்று விட்டான்.
“என்னங்க, இவன் ரொம்ப உடைஞ்சு போய்ட்டானே? எனக்கு இவனை பாக்க கஷ்டமா இருக்குங்க”, என்று கணவனிடம் புலம்பினாள் சாரதா.
“விடு சாரதா. அவனுக்கும் ரேகாவை பிரிஞ்சு இருக்க கஷ்டமா இருக்கும்ல? நீ வளைகாப்புக்கு முடிஞ்சு உன் அம்மா வீட்டுக்கு போனப்ப எனக்கும் அப்படி தான் இருந்துச்சு. ரேகா வந்த உடனே அவன் சரியாகிருவான். இதுல எல்லாம் நாம தலையிட முடியாது மா”, என்று சேதுபதி சொல்லிக் கொண்டிருக்கும் போது தான் காயத்ரியும் ஆதியும் வீட்டுக்கு வந்தார்கள்.
“ஆமா அத்தை, உஷாவுக்கும் முகிலைப் பிடிச்சிருச்சு. ஆமா என்ன வீடே அமைதியா இருக்கு? ரேகா விக்ரம் எங்க? இந்நேரம் அவ உங்க கூட தானே அரட்டை அடிப்பா?”, என்று கேட்டாள் காயத்ரி.
“அதை ஏன் கேக்குற மா? ரேகா ஹாஸ்டலுக்கு கிளம்பிட்டா . அவ முடிக்க வேண்டிய வேலை இருக்காம். அதை முடிச்சு கொடுத்துட்டு வருவாளாம். ஆனா விக்ரம் என்னடான்னா முகத்தை தொங்க போட்டுட்டு இருக்கான். அவளை விட்டுட்டு இப்ப தான் வந்தான். வந்ததும் சாப்பாடு வேண்டாம் படுக்க போறேன்னு சொல்லிட்டுப் போய்ட்டான்”, என்று சாரதா சொன்னதும் ஆதியும் காயத்ரியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
இருவருக்கும் மீண்டும் சண்டை வந்து தான் ரேகா சென்றிருப்பாளோ என்று இருவருக்குமே தோன்றி வைத்தது.
“ரேகா வந்த உடனே விக்ரம் சரியாகிறுவான் மா”, என்றான் ஆதி.
“அதைத் தான் உங்க அப்பாவும் சொல்லிட்டு இருக்கார். சரி சாப்பிட வறீங்களா?”
தங்களின் அறைக்கு வந்ததும் ஆதியிடம் “என்னங்க அத்தை இப்படி சொல்றாங்க? நேத்து நைட் எங்க வீட்ல இருந்து வந்தப்ப ரெண்டு பேரும் நல்லா தானே இருந்தாங்க?”, என்று கேட்டாள் காயத்ரி.
“விக்ரம் எப்ப எப்படி நடந்துப்பானு தெரியலை. அவன் ஏதாவது சொல்லி தான் அவ கோப பட்டு போனாளோ என்னவோ?”
“நீங்க விக்ரம் கிட்ட என்ன விசயம்னு கேளுங்க. நான் ரேகாவுக்கு கால் பண்ணி என்னன்னு விசாரிக்கிறேன்”, என்று காயத்ரி சொன்னதும் ஆதி விக்ரம் அறைக்கு சென்றான். அங்கே விட்டத்தை வெறித்து படுத்திருந்த விக்ரமைக் கண்டதும் விஷயம் பெரியது என்று புரிந்தது ஆதிக்கு.
அறைக்குள் சென்று “விக்ரம்”, என்று அழைத்தான்.
கண் விழித்த விக்ரம் ஆதியைக் கண்டு எழுந்து அமர்ந்த படியே “வா அண்ணா”, என்றான்.
கட்டிலில் அவன் அருகில் அமர்ந்த ஆதி “என்ன டா இதெல்லாம்? உனக்கும் ரேகாவுக்கும் இடைல ஏதாவது பிரச்சனையா?”, என்று கேட்டான்.
“ஹிம்”
“பழசையே பிடிச்சு தொங்காதேன்னு அன்னைக்கே சொன்னேன்ல? ஏதாவது அவளை காயப் படுத்துற மாதிரி பேசிட்டியா? அதான் ரேகா கோப பட்டுக் கிளம்பிட்டாளா?”
“ஆமா”
“அப்படின்னா அவ உன்னை விட்டு போனது சரி தான்”, என்றான் ஆதி.
“அண்ணா“, என்று அதிர்வாக அழைத்தான் விக்ரம்.
“உனக்கு அவ கூடவே இருக்குறதுனால அவ அருமை உனக்கு புரியலை. அந்த பொண்ணு உன்னை அவ்வளவு லவ் பண்ணுதுன்னு அவ உன்னைப் பாக்குற பார்வையிலே எங்க எல்லாருக்கும் தெரியுது டா. ஆனா உனக்கு தான் அது புரியலை. அவ உன்னை விட்டு பிரிஞ்சு இருந்தா தான் நீ அவளைப் பரிஞ்சிப்பா. இந்த பிரிவை அவளை புரிஞ்சிக்க ஒரு வாய்ப்பா எடுத்துக்கோ டா”
“ஹிம் ஆனாலும் அவ இல்லாம கஷ்டமா இருக்கு”
“எல்லாம் சரியாகிரும் விக்ரம். கொஞ்சம் பொறுமையா உன் மனசை மாத்து. உன் மனசு மாறின பிறகு ரேகாவை இங்க கூட்டிட்டு வந்துறலாம். அது வரைக்கும் அவ கிட்ட அடிக்கடி போன்ல பேசு. நமக்கு இங்க எல்லாருமே இருக்கோம். ஆனா அவளுக்கு அங்க யாருமே இல்லை. நீ பேசினா அவளுக்கு ஆறுதலா இருக்கும் டா. நீ என்ன தான் பேசிருந்தாலும் அவளால உன்னை வெறுக்க முடியாது. அவளும் உன்னை நினைச்சு அங்க தவிச்சிட்டு தான் இருப்பா. அவ கிட்ட பேசு”
“சரி பேசுறேன்”
“அதை சிரிச்சிட்டே சொன்னா என்னவாம்? சரி சரி எதையும் யோசிக்காம ரிலாக்சா தூங்கு”, என்று சொல்லி விட்டுச் சென்றான் ஆதி.
ஆதி விக்ரமைப் பார்க்கச் சென்றதும் ரேகாவை போனில் அழைத்தாள் காயத்ரி. அவள் அழைப்பதைக் கண்டு கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்த ரேகா அதை எடுத்து “அக்கா”, என்றாள்.
“ரேகா, என்ன இதெல்லாம்? நீ ஏன் அங்க போன? நான் தான் அவ்வளவு சொன்னேன்ல? கொஞ்சம் பொறுமையா இருந்துருக்கலாமே?”,
“போற மாதிரி சூழ்நிலை அமைஞ்சிருச்சுக்கா. அதனால தான் வந்துட்டேன். சரி ஆதி விடுங்க. விக்ரம் வீட்டுக்கு பத்திரமா வந்துட்டாங்களா?”
“உன் மனசு எனக்கு புரியுது ரேகா. நீயும் அவன் இல்லாம கஷ்டப் படுவ. பேசாம நீ இங்க கிளம்பி வரியா?”
“இல்லைக்கா, இங்க வேலையும் தலைக்கு மேல இருக்கு. இந்த புராஜெக்ட் முடிக்கணும். இந்த கேப்ல விக்ரம் மனசு மாறி முழு மனசா என்னை ஏத்துக்குறாரான்னு பாப்போம்”
“அப்படி அவன் கடைசி வரை மனசு மாறலைன்னா என்ன செய்யப் போற ரேகா? நீ அங்கயும் அவன் இங்கயும் இருக்கப் போறீங்களா?”
“வேற என்னக்கா செய்ய முடியும்? எனக்கு அவரோட மனைவி அப்படிங்குற ஸ்தானமே போதும். யாராவது உன் புருஷன் பேர் கிட்டா விக்ரம்னு சொல்ற சந்தோஷம் போதும். அவரை நினைச்சிட்டே வாழ்ந்துருவேன். ஆனா உங்களை, அத்தை, மாமாவை எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்ணுவேன். இப்ப கூட ரொம்ப தனியா இருக்குற மாதிரி இருந்துச்சு. நீங்க கால் பண்ணவும் தான் எனக்கு சந்தோஷமா இருக்கு”, என்று சொல்லி சிரித்தாள் ரேகா.
“கவலைப் படாத ரேகா. அப்படி எல்லாம் உன்னை தனியா விட்டுற மாட்டோம். விக்ரம்க்கு இந்த தனிமை தேவை தான். தனிமை அவன் மனசை மாத்தும். அப்படி அவன் மனசு மாறலைன்னா கூட உன்னை கொஞ்ச நாள்ல அத்தையும் மாமாவும் கூட்டிட்டு வரச் சொல்லிருவாங்க. அது வரைக்கும் நீ கவலைப் படாம இரு. நல்லா சாப்பிடு. நான் அடிக்கடி உனக்கு பேசுறேன். நீயும் எதுன்னாலும் தயங்காம எனக்கு கால் பண்ணி சொல்லு. அத்தை மாமாவுக்கும் பேசு. அவங்களும் உனக்கு பேசுவாங்க”
“சரிக்கா, அத்தானை கேட்டேன்னு சொல்லுங்க”
“அவர் உன் புருஷனை பாக்க தான் உங்க ரூமுக்கு போயிருக்கார்,. கண்டிப்பா அவனும் ஒப்பாரி வச்சிட்டு தான் இருப்பான். ரெண்டு பேரும் நல்லா ஜோடி சேந்தீங்க போ”, என்று காயத்ரி சிறு சிரிப்புடன் சொல்ல “அக்கா”, என்று சிணுங்கினாள் ரேகா.
“ரெண்டு பெரும் வேணுக்குன்னு அழுது கரைஞ்சா இதை என்ன சொல்ல? சரி நீ ரெஸ்ட் எடு. நான் அப்புறம் கூப்பிடுறேன்”
“சரிக்கா”, என்று சொல்லி விட்டு போனை வைத்தாள். ரூமுக்கு வந்த ஆதி காயத்ரியிடம் ரேகா என்ன சொன்னாள் என்று கேட்டு தெரிந்து கொண்டான். அதன் பின் ஆதியும் காயத்ரியும் இந்த பிரிவு விக்ரம் மற்றும் ரேகா இருவருக்கும் இடையே இருக்கும் காதலை அதிகப் படுத்தும் என்று எண்ணிக் கொண்டு வேறு வழியில்லாமல் அவர்களை அவர்கள் போக்கிலே விட முடிவு எடுத்தார்கள்.
அடுத்த நாள் காலையில் எழும் போதே விக்ரமின் நினைவு தான் ரேகாவுக்கு வந்தது. யாவரும் ரசிக்கும் ஹீரோ போல இருந்த விக்ரமின் தோற்றம் நினைவில் வந்து அவளுடைய நிம்மதியைக் கெடுத்தது. இத்தனை நாள் தினமும் அவன் முகத்தில் விழித்ததால் இன்று அவனை அதிகமாக தேடியது.
“திட்டினாலும் பரவால்லைன்னு அவன் கூடவே இருந்துருக்கணுமோ? இங்க வந்தது தப்போ?”, என்று சிந்தித்தாள் ரேகா.
“அவ்வளவு மானம் கெட்டுப் போய்ட்டியா?”, என்று அவளை நக்கல் அடித்தது அவள் மனது. அதற்கு பதில் சொல்ல முடியாமல் சோம்பலாகவே வேலைக்கு கிளம்பிச் சென்றாள்.
லீவ் கேட்டு அது முடியும் முன்னே ஆபீஸ் வந்த அவளை புராஜெக்ட் மேனேஜர் வியப்பான பார்வை பார்த்தாலும் எதுவும் கேட்க வில்லை. அவள் வந்தது அவருக்கு தான் நிம்மதி. ஏனென்றால் அவருக்கு வேலை முடியனுமே.
இத்தனை நாள் வேலை செய்யாததால் இன்று வேலைக்குள் நுழைய மிகவும் கஷ்டப் பட்டாள் ரேகா. கூடவே அவளுடன் வேலை செய்பவர்கள் அவள் திருமண விஷயம் கேட்டு அவளுக்கு வாழ்த்துக்கள் சொல்வதும் விக்ரமை பற்றி விசாரிப்பதுமாக இருக்க அவளுக்கு வேலை செய்யும் மனநிலையே இல்லை.
ஆனால் இத்தனை நாள் நல்ல பேர் வாங்கி விட்டு இன்று வேலையை செய்ய வில்லை என்றால் அவ்வளவு தான் என்று எண்ணியவள் எப்படியோ மனதை ஒரு முகப் படுத்தி வேலை செய்ய ஆரம்பித்தாள்.