“ஆமா, போய் பேசிட்டு இருங்க மாப்பிள்ளை”, என்றார் முருகேசன்.
“இல்ல மாமா, நான் இங்கயே பேசுறேன்”, என்று தவிப்பாக சொன்னான். அவர்கள் தவறாக நினைத்துக் கொண்டால் என்ன செய்வதாம்?
“சங்கடப் படாதீங்க மாப்பிள்ளை. இதுவும் உங்க வீடு தான். சரி மாடிக்காவது போய் பேசிட்டு இருங்க. கூட்டிட்டு போ காயு”, என்றதும் “வா”, என்று சொல்லி மாடிக்கு அழைத்து சென்றாள்.
அவளுடனான தனிமையை தவிர்க்க தான் அவன் அப்படி யோசிக்கிறான் என்று அவளுக்கு புரிந்தது. ஆனாலும் இருவருக்குமே ஒருவருக்கொருவர் அருகில் இருக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது.
மாடிக்கு சென்றதும் சிலுசிலுவென்று வந்த காற்று அவர்கள் மனதை அமைதியாக்கியது. சுற்றி இருந்த இருள் போர்வையும், வந்த பவள மல்லி வாசனையும் தனி ஏகாந்தத்தை தந்தது. அங்கிருந்த சேரில் இருவரும் அமர்ந்தார்கள்.
தங்களை சகஜமாக்கிக் கொண்டு இருவரும் சிறிது நேரம் நண்பர்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அதன் பின் இருவருக்குள்ளுமே சிறிது அமைதி நிலவியது. யார் என்ன பேச என்று இருவருக்குமே தெரியவில்லை. அந்த அமைதியை இருவராலும் கடந்து வர முடியவில்லை.
முதலில் அதை உணர்ந்த காயத்ரி “என்ன ஆச்சு டா? திடீர்னு அமைதியாகிட்ட?”, என்று கேட்டாள்.
“ஒண்ணும் இல்லை. கீழே போவோமா?”
“அம்மா தான் கூப்பிடுறேன்னு சொன்னாங்களே. ஆமா நீ எதுக்கு இப்படி இருக்க? சொன்னா தானே தெரியும்?”
“நான் சொன்னாலும் உனக்கு என்னோட உணர்வுகள் புரியாது காயு”
“புரியாதுன்னு நீயா நினைச்சா நான் என்ன பண்ண? சொன்னா தானே எனக்கு புரியும்”
“இப்ப உடனே உன்கிட்ட இருந்து ஒரு கிஸ் வேணும் போதுமா?”, என்று அவன் படக்கென்று கேட்டதும் அவள் நே என்று விழித்தாள்.
இப்படி வெளிப்படையாக கேட்பான் என்று அவள் எதிர் பார்க்கவே இல்லை. அவனை திகைப்பாக அவள் பார்த்துக் கொண்டிருக்க “நீ சொல்லச் சொன்ன. நான் சொன்ன. கேட்ட உடனே உன்னால தர முடியுமா? முடியாதுள்ல? இதுக்கு தான் நான் உன் கூட தனியா இருக்க பயப்படுறேன் காயு. பிளீஸ் வா, கீழே போகலாம்”, என்று அவன் சொன்னதும் அவனை நெருங்கி, அவன் முகம் முழுவதும் முத்தம் பதித்து அவனை இறுக்கி கட்டிக் கொள்ள வேண்டும் போல இருந்தது அவளுக்கு.
ஆனால் ஒரு பெண்ணாக அவளுக்கு தயக்கமாக இருந்தது. இப்போது அவனாக அவளை நெருங்கினால் அவள் எதுவும் சொல்லப் போவதில்லை தான். ஆனால் அவளாக எப்படி அவனை நெருங்கவாம்?
“எனக்கு என்னோட இந்த உணர்வுகளை யார் கிட்ட சொல்றதுன்னு தெரியலை. உனக்கு அப்படி எதுவும் இல்லையா காயு? அப்படி என்னை மாதிரியே உனக்கும் பீலிங்க்ஸ் இருந்துருந்தா அன்னைக்கு அப்படி ஒரு வார்த்தை சொல்லிருக்க மாட்டல்ல?”, என்று ஆழ்ந்த குரலில் கேட்டான் தீபக்.
அவன் அப்படிக் கேட்டதும் அவள் முகம் முழுவதும் சூடானது. தன்னுடைய முகத்தை அவனுக்கு காட்டாமல் தலை குனிந்த படியே இருந்தாள்.
“நான் இவ்வளவு சொல்லியும் என்னோட பீலிங்க்ஸ் உனக்கு புரியலைல? சரி விடு. நான் கிளம்புறேன். அத்தை மாமா கேட்டா வீட்ல அவசரமா வர சொன்னாங்கன்னு சொல்றேன். நீயும் அதையே சொல்லிரு”, என்று அவன் கிளம்ப போனதும் அவனை நிமிர்ந்து தவிப்பாக பார்த்தாள்.
அவள் பார்வை அவனை பாதிக்க “என்ன டி இப்படி பாக்குற? நான் இப்ப போகவா இருக்கவா? என்னால முடியலை டி. இந்த உணர்வுகளை எல்லாம் என்னால கடந்து வர முடியலை. நான் ஏன் இப்படி இருக்கேன்னு எனக்கே புரிய மாட்டிக்குது டி”, என்று அவன் சொன்னதும் அவளால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
அவன் தோளில் சாய்ந்து கொள்ள அவள் மனம் பரபரத்தது. ஆனால் அதற்கான தைரியம் அவளிடம் இல்லை. சுற்றி இருந்த இருளும், உடலையும் மனதையும் வருடும் தென்றலும் அவர்களுக்கு இதத்தைக் கொடுத்தாலும் உணர்வுகள் என்னவோ வெம்மையைத் தான் கொடுத்தது.
அவளை அனைத்துக் கொள்ள அவன் உடலும் மனமும் பரபரத்தாலும் அவளுடைய அசையாத நிலை அவனுக்கு எரிச்சலைக் கொடுத்தது. ஒரு சைகை காட்டினால் கூட அவன் புரிந்து கொள்வான். ஆனால் அவளோ தலை குனிந்து அசையாமல் அமர்ந்திருந்தாள்.
வெட்கத்தை விட்டு தன்னுடைய உணர்வுகளைச் சொல்லியும் தன்னை அவள் புரிந்து கொள்ள வில்லையே என்று அவனுக்கு கோபமாக வந்தது. .
அவள் சம்மதம் சொல்லா விட்டாலும் அவனாக அவளை முத்த மிட அவனுக்கு அதிக நேரம் ஆகாது, ஆனால் முதல் முறை போல் அவளுக்கு விருப்பம் இல்லாமல் அவளை நெருங்கக் கூடாது என்று தெளிவாக இருந்தான்.
இதற்கு மேல் தான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று புரிய அங்கிருந்து செல்லப் பார்த்தான். அப்போது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவன் கரத்தை பற்றி நிறுத்தினாள் காயத்ரி. நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தான். அவஸ்தையாக அவனைப் பார்த்தாள்.
“என்ன டி?”
“கொஞ்ச நேரம் இரேன்”
“இருந்து என்ன பண்ண? இங்க பாரு காயு உன்னைப் பாத்த நாள்ல இருந்து உன் மேல பைத்தியமா இருக்கேன். நேரடியா காதலைச் சொல்ல தைரியம் இல்லாததுனால தான் உனக்கு பிரண்டா ஆனேன். பிரண்டா இருக்கும் போது என் மனசுல காதல் இருந்தாலும் உன்னை நான் ஒரு தடவை கூட தப்பான பார்வை பாத்தது கிடையாது. ஏன்னா நீ என் மேல வச்சிருக்குற நட்புக்கு நான் உண்மையானவனா இருக்கணும்னு நினைச்சேன். ஆனா நீ சாரு விசயத்துல உன்னோட மனசுல இருக்குறதை எனக்கு புரிய வச்ச. உன் மனசுல என் மேல காதல் இருக்குனு இப்ப கூட எனக்கு நிச்சயம் தான். உன் காதல் தெரிஞ்சதுல இருந்து நீ என்னோட லவ்வர் மட்டும் தான் டி. அதுக்கு அப்புறம் எப்படி உன்கிட்ட என்னால கண்ணியமா நடந்துக்க முடியும்? பொண்டாட்டி கிட்ட எவனும் கண்ணியமா நடந்துக்க மாட்டான். நமக்கு இப்ப கல்யாணம் கூட நிச்சயம் ஆகிருச்சு. ஆனா இப்ப கூட நீ என்னை விட்டு விலகி இருக்குறது எனக்கு கஷ்டமா இருக்கு. நீயா தான் கல்யாணம் பண்ணிக்கலாமானு கேட்ட. உன்னை இழக்க கூடாதுன்னு தான் நானும் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். ஆனா இப்ப ஏண்டா ஒத்துகிட்டோம்னு இருக்கு. உன்கிட்ட இருக்குறது எனக்கு அவஸ்தையா இருக்கு”, என்று புலம்பிய படியே தலையில் கை வைத்து கோதிக் கொண்டான்.
அதற்கு மேல் அவனுடைய தவிப்பை தாங்க முடியாமல் அவனை அவள் நெருங்க நினைக்க அப்போது “காயு, சாப்பாடு ரெடி. ரெண்டு பேரும் சாப்பிட வாங்க”, என்று அழைத்தாள் கலாவதி.
அவளைத் திரும்பிக் கூட பார்க்காமல் கீழே சென்று விட்டான் தீபக். மனதில் இருப்பதை உள்ளே புதைத்து விட்டு முகத்தை சீராக்கி விட்டு அவன் பின்னே சென்றாள் காயத்ரி.
அவள் கீழே செல்லும் போது அவன் சௌமியிடம் வம்பிழுத்துக் கொண்டிருந்தான். மனதில் இருக்கும் வருத்தத்தை மறைத்துக் கொண்டு அவர்களுடன் கலந்து கொண்டாள் காயத்ரி. ஆனால் அவன் அவள் பக்கம் திரும்பவே இல்லை. போகும் போது அவளிடம் அவன் பேசவும் இல்லை.
வீட்டுக்கு சென்றதும் “லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுக்கிட்ட உரிமையா நடந்துக்கணும்னு நினைச்சது தப்பா? ஒரு முத்தத்துக்கு என்னை அலைய வைக்கிறல்ல? என் மேல கொஞ்சமாவது உனக்கு அன்பு இருந்தா கல்யாணம் வரைக்கும் என் கண்ணுலே படாத. என்கிட்ட பேசவும் செய்யாத. உன் மேல கொலை வெறில இருக்கேன். பை”, என்று மெஸ்ஸேஜ் அனுப்பி வைத்து அவளை சோதித்தான் தீபக்.
சொன்னது போலவே அவள் போனை அவன் எடுக்கவும் இல்லை. அவளுடைய மெஸ்ஸேஜை அவன் பார்க்கவும் இல்லை. திருமண உடை எடுக்க செல்லும் போதும் வேலை இருக்கிறது என்று சொல்லி கழண்டு கொண்டான். அவனைத் தேடி அவள் தான் தவித்துப் போனாள்.
மதன் மற்றும் நந்தினி திருமண நாளுக்காக ஆவலாக காத்திருந்தாள் காயத்ரி. அங்கே தீபக் வருவான். அன்றாவது அவனிடம் தெளிவாக பேச வேண்டும் என்று ஆவலாக இருந்தாள். மதன் மற்றும் நந்தினி திருமண நாளும் வந்தது. பட்டுப் புடவை அணிந்து சந்தோஷமாக தயாராகிக் கொண்டிருந்தாள் காயத்ரி.
“என்ன அக்கா, கல்யாணப் பொண்ணு மாதிரி ரெடியாகுற? மேக்கப் கொஞ்சம் ஓவரா இருக்கு. மாம்ஸ் சைட் அடிக்கணும்னு தானே?”, என்றாள் சௌமி.
“ஆமா ஆமா, நான் மேக்கப் போட்டா தான் உன் மாமா என்னைப் பாப்பானா?”
“அதானே. நீ பக்கி மாதிரி இருந்தாலும் மாம்ஸ் உன்னை சைட் அடிக்க தான் செய்வாங்க. சரி சரி சீக்கிரம் கிளம்பு. அப்பா உன்னை சீக்கிரம் வரச் சொன்னாங்க”
“நீயும் வரலாம்ல சௌமி?”
“எனக்கு இன்னைக்கு எக்ஸாம் இருக்குப்பா. லீவ் போட முடியாது. மாம்ஸ் மாதிரி நானும் பர்ஸ்ட் மார்க் வாங்க வேண்டாமா? மாம்ஸ் எனக்கு நிறைய டிப்ஸ் சொல்லிக் கொடுத்துருக்காங்க தெரியுமா? இப்ப எல்லாம் அதைத் தான் பாலோ பண்ணுறேன்”
“நாங்களும் தான் படிச்சு வேலைக்கு போயிருக்கோம். உனக்கு நாங்க எல்லாம் அறிவாளியா தெரிய மாட்டோமே? அந்த லூசு உன்னை நல்லா மூளை சலவை பண்ணி வச்சிருக்கான். படிச்சு தொலை. நான் கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டு கிளம்பினாள். அவளை முருகேசன் தான் பஸ் ஏற்றி விட்டார்.
அதே நேரம் தன்னுடைய நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த தீபக்கின் கண்கள் அவளை ஆவலாக தேடியது. அவள் இன்னும் வர வில்லை என்றதும் நண்பர்களுடன் அரட்டையில் இறங்கினான்.
மதனும் நந்தினியும் அழகான ஜோடியாக மணமேடையில் நின்றார்கள். காலை ஐந்து மணிக்கே முகூர்த்தம் முடிந்திருந்ததால் இப்போது ரிசப்ஷன் தான் நடந்து கொண்டிருந்தது.
தீபக்கின் ஒவ்வொரு நொடியும் எதிர்பார்ப்பில் கழிந்தது. காலேஜ் பங்க்சனில் காயத்ரியை புடவையில் பார்க்கும் போது அவனுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். அதன் பின் நிச்சயம் அன்று தான் கட்டியிருந்தாள். இன்று கட்டாயம் புடவையில் வருவாள் என்று எண்ணி ஆவலாக அவளுக்காக காத்திருந்தான். அவள் வரவுக்காக வாசலை பார்த்து அமர்ந்திருந்தான்.
மஞ்சளும் அரக்கும் கலந்த நிறப் பட்டுப் புடவையில் தேவதை போல வந்தாள் காயத்ரி. இமைக்க மறந்து அவளை பார்த்துக் கொண்டு இருந்தவனை அவனுடைய நண்பர்கள் தான் இயல்புக்கு திருப்பினார்கள்.
மையிடாத விழிகள் இப்போது புதிதாக மையை தாங்கியிருக்க அவனை அவள் கண்கள் வசீகரித்தன.
உள்ளே வந்தவளின் கண்களும் அவனைத் தான் ஆவலாக தேடியது. அவள் கண்களில் வழிந்த தேடலைக் கண்டதும் குதுகலித்தவன் கோபம் இருப்பது போல் சாதாரணமாக அமர்ந்து கொண்டான்.
தீபக்கும் நண்பர்களும் இருக்கும் இடம் வந்தவள் அனைவரிடமும் பேசிக் கொண்டே தீபக்கை பார்வையிட்டாள். அவனோ போனை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவர்களின் கோபம் மற்றவர்களுக்கு தெரிந்து விடக் கூடாது என்பதற்காக அவன் அருகே ஒரு சேரை இழுத்துப் போட்டு அவளை அமரச் சொன்னான்.
அவன் அருகே அமர்ந்தாலும் அவன் பேசாதது, தன்னை ஒரு முறை கூட நிமிர்ந்து பார்க்காதது அவளுக்கு தான் கஷ்டமாக இருந்தது. அதன் பின் அனைவரும் மணமக்களைக் காண மேடைக்குச் சென்றார்கள். அனைவரும் மணமக்களுக்கு கிஃப்ட் கொடுத்தார்கள். பின் குருப் போட்டோ எடுக்கப் பட்டது. காயத்ரி அருகில் வந்து நின்று கொண்டான் தீபக்.
அடுத்து சொந்தங்கள் அனைவரும் வரவேண்டியது இருப்பதால் அவர்களிடம் சொல்லி விட்டு அனைவரும் கீழே இறங்க போகும் போது காயத்ரி கையைப் பிடித்து இழுத்தாள் நந்தினி.
“என்ன நந்து, ஏதாவது வேணுமா?”
“எனக்கு ஒண்ணும் வேண்டாம். உனக்கு என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க? உன் முகத்துல சந்தோசமே இல்லை. உனக்கும் கல்யாணம் வச்சிருக்காங்க தெரியும் தானே?”
“அதை அப்புறம் பேசலாம். உன் சொந்தக்காரங்க எல்லாம் வருவாங்க”
“என்ன பிரச்சனைன்னு சிம்பிளா சொல்லு. நீ இப்படி இருந்தா நல்லாவே இல்லை காயு”
“அன்னைக்கு நடந்ததை இன்னும் பேசி சாகடிக்கிறான் டி. நான் அன்னைக்கு இவன் தொட்டதுக்கா அப்படிச் சொன்னேன்? யாராவது வந்திரப் போறாங்கன்னு தானே அப்படிச் சொன்னேன்”
“என்கிட்ட சொல்ற இதை அவன் கிட்ட சொன்னியா காயு?”
“அவன் எங்க சொல்ல விடுறான்? என்னை பேசவே விட மாட்டிக்கிறான். ஆனா என்னை திட்ட மட்டும் செய்றான். என்கிட்ட பேசக் கூட இல்லை டி”
“அவன் சொல்ல விடலைன்னா செயல்ல காட்ட வேண்டியது தானே? ஒரு முத்தம் கொடுத்தா சரியாகிறப் போறான்?”
“அதையும் கேட்டான் டி”, என்று தவிப்பாக சொன்னாள் காயத்ரி. அவள் முகம் சிவந்து விட்டது.
“அப்படியா சூப்பர். அப்பவாது கொடுத்தியா இல்லையா?”
“வெக்கமா இருந்துச்சு நந்து. கொடுக்கலை”
“வெளங்கிப் போச்சு. அவன் கேக்குறதை கொடுத்து தான் தொலையேன். கொஞ்சம் வெக்கத்தை விட்டு அவன் கோபத்தை குறை டி. உங்க கல்யாணம் வரைக்கும் இந்த பிரச்சனை சரியாகலைன்னா கல்யாண நாள் எப்படி சந்தோஷமா இருக்கும்? சீக்கிரம் சரி பண்ணு”, என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அடுத்த குடும்பம் மேடைக்கு வர காயத்ரி கீழே இறங்கினாள்.
அதன் பின் அனைவரும் உணவு உண்டு விட்டு கிளம்ப எண்ணும் போது “காயத்ரி எப்படி வீட்டுக்கு போவ?”, என்று கேட்டான் விக்னேஷ்.
“பஸ்ல தான் விக்கி”, என்று அவள் சொன்னதும் அவளை முறைத்தான் தீபக்.
“எதுக்கு முறைக்கிறான்?”, என்று அவள் குழப்பமாக பார்த்துக் கொண்டிருக்கும் போதே “நான் அவளை வீட்ல விட்டுருவேன் டா. நீங்க கிளம்புங்க”, என்றான்.
அவன் அப்படிச் சொன்னதும் அமைதியாக அவன் பின்னே சென்றாள். இப்போது வரை அவளிடம் ஒரு வார்த்தை கூட அவன் பேச வில்லை. ஆனால் அக்கறையாக பார்த்துக் கொண்டான்.
பைக் ஸ்டாண்ட் சென்று வண்டியை எடுத்ததும் அவள் அமருவதற்காக காத்திருந்தான். அவன் பின்னே அமர்ந்தவள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவன் மீது சாய்ந்த வாறே அவன் தோள் மீது கையை வைத்தாள்.
அவள் அப்படி அமர்ந்ததைக் கண்டு திகைத்தாலும் “இவளுக்கு என்னோட பீலிங்க்ஸ் கூட விளையாடுறதே வேலையாப் போச்சு”, என்று கோபமாக எண்ணிக் கொண்டான் தீபக்.
பைக்கில் இருவரும் சென்று கொண்டிருக்க இருவரின் நெருக்கமும் அதிகமாக இருந்தது. அப்போது காயத்ரி போன் இசைத்தது. கலாவதி தான் அவளை அழைத்தாள்.
காதல் தொடரும்….