அத்தியாயம் 22
விரல் தீண்டி சிலிர்க்க வைத்தவள்
உயிர் தீண்டி உறையச் செய்தவள்
விலகி சென்றது தான் விந்தையோ?!!!
“வா என்னன்னு பாக்கலாம்”, என்று சொல்லி கல்யாணியை இழுத்துக் கொண்டு சென்றாள் மரகதம்.
அங்கே போன மரகதம் ஒரு நொடி திகைத்து நின்று விட்டாள். அங்கே இரண்டு ஜோடிகளுக்கான மேடை அலங்காரம் செய்யப்பட்டு மணமக்கள் நான்கு பேரின் பெயர்களும் அங்கே எழுதப் பட்டிருந்தது.
“பாத்தியாக்கா? நாலு பேர் நிக்குற மாதிரி தானே போட்டுருக்காங்க?”, என்று கேட்டாள் கல்யாணி.
“ஆமா டி, என்ன நினைச்சிட்டு இருக்காங்க இவங்க? பையன் வீட்டுக்காரன்னா இவங்க என்ன வேணும்னாலும் பண்ணுவாங்களா? தம்பி மகளுக்கும் ஒரே நேரத்துல ரிசப்ஷன் வச்சா என்ன அர்த்தம்?”
“அக்கா நீ என்ன சொல்ற? அந்த பஞ்சாயத்துல கல்யாணம் நடந்துச்சே? அந்த பொண்ணுக்கா நம்ம பொண்ணு கூட ரிசப்ஷன் வைக்கிறாங்க?”
“ஆமா அதே தான். இரு இதுக்கு ஒரு வழி பண்ணுறேன்”, என்று சொல்லி சென்ற மரகதம் நேராக சென்று தன் மகளை அழைத்துக் கொண்டு மேடையில் நிற்க வைத்தாள்.
மேடைக்கு வந்த ராதாவும் தினேஷ் கீதா பெயரைப் பார்த்து ஒரு நொடி திகைத்து பின் சிறு சிரிப்புடன் சரியாகி விட்டாள். கண்ணன் வராமல் தான் மட்டும் முன்னால் வந்து மேடையில் நிற்பது அவளுக்கு ஒரு மாதிரியான உணர்வைக் கொடுத்தது.
“அம்மா, இப்ப எதுக்கு இன்னை இங்க கூட்டிட்டு வந்த? அவங்க வந்த அப்புறம் என்னை கூட்டிட்டு வந்துருக்க வேண்டியது தானே?”, என்று கேட்டாள் ராதா.
“உனக்கு ஒண்ணும் தெரியாது, நீ பேசாம இரு”, என்று சொல்லி அவளை அடக்கிய மரகதம் ஒரு பெண்ணை அழைத்து “பொண்ணு மேடைக்கு வந்துடுச்சு. மாப்பிள்ளையை வர சொல்”, என்று சொல்லி அனுப்பி வைத்தாள்.
கண்ணன் கிளம்பும் போது தினேஷும் கிளம்பி வந்தான். அவர்களுடன் செல்வாவும் கதிரும் வந்தார்கள். அப்போது தேன்மொழியும் “எல்லாரும் மேடைக்கு போறாங்க கீதா, வா நாமளும் போகலாம்”,என்று சொல்லி அவளை அழைத்து வந்தாள். அவர்களுடன் சௌமியும் வந்தாள்.
ராதாவைப் பார்த்துக் கொண்டே மேடை ஏறினான் கண்ணன். அவளும் சிறு வெட்கத்துடன் அவனைப் பார்த்தாள். அது வரைக்கும் அனைத்தும் சரியாக தான் சென்றது. கண்ணனுக்கு பின்னே வந்த தினேஷ் மேடை ஏற போக “நீ எங்கப்பா வர?”, என்று கேட்டாள் மரகதம்.
அனைவரும் திகைத்து விழித்தார்கள். “ஆமா நீ என்ன எங்க மாப்பிள்ளை மாதிரியே டிரெஸ் போட்டுருக்க? அடடே உன் பொண்டாட்டியும் என் பொண்ணு மாதிரி புடவை கட்டிருக்கா. உங்க பேரும் இங்க எழுதிருக்கு. என்ன நடக்குது இங்க?”, என்று கேட்டாள் மரகதம்.
மரகதத்துக்கு இந்த விஷயம் தெரிவிக்க படவில்லை என்று புரிந்து போனது அனைவருக்கும். அடுத்த நொடி தேன்மொழி குடும்பம், கதிர் குடும்பம், கீதா குடும்பம் அனைவரும் மேடைக்கு அருகில் வந்தார்கள். அங்கு வந்த உறவினர்கள் அனைவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
“அத்தை இன்னைக்கு தினேஷுக்கும் கீதாவுக்கும் ரிசப்ஷன்”, என்றான் கண்ணன்.
“ஆமா சம்பந்தி, உங்களுக்கு இந்த விஷயம் தெரியாதா?”, என்று கேட்டார் தர்மதுரை.
“என்ன ஆளுங்க நீங்க? உங்க மகனுக்கு கல்யாணம் பண்ணிட்டு உங்க தம்பி மகளுக்கும் ஓசில பங்ஷன் நடத்தலாம்னு நினைச்சீங்களா?”
[the_ad id=”6605″]
“நல்லா கேளுக்கா, அந்த பொண்ணு கல்யாணமே நல்ல படியா நடக்கலை. இதுல ரிசப்ஷன் ஒண்ணு தான் குறைச்சல்”, கல்யாணி சொன்னதும் “சித்தி என்ன பேசுறீங்க?”,என்று அதட்டினாள் ராதா.
“நீ சும்மா இரு ராதா, உனக்கு ஒண்ணும் தெரியாது. ஒரு நாள் நைட் முழுக்க ஒருத்தன் கூட இருந்தாளாம். ஆனா ஒண்ணும் நடக்கலையாம். இதுல ஒருத்தன் பெருந்தன்மையா தாலி வேற கட்டிருக்கான்”, என்று கல்யாணி சொன்னதும் அதிர்ச்சியில் அமைதியாக இருந்தார்கள்.
கீதா கண்களில் கண்ணீர் வந்தது. அவள் பாவமாக தினேஷைப் பார்த்தாள். அவள் கண்களில் கண்ணீரைக் கண்டு கொந்தளித்த தினேஷ் “வாயை மூடு. நீயெல்லாம் பொம்பளையா? என் பொண்டாட்டியைப் பத்தி பேச எந்த நாய்க்கும் உரிமை இல்லை”, என்றான்.
“பாத்தியாக்கா, உன் முன்னாடியே இவன் என்னை நாய்ன்னு சொல்றான்”, என்றாள் கல்யாணி.
“ஏய் என்ன டா திமிரா? கேடு கேட்ட பொண்ணைப் பத்தி சொன்னதும் உனக்கு ரோஷம் வருதா? என் தங்கச்சியை நாயின்னு சொல்ல நீ யாரு டா?”, என்று மரகதம் எகிற “ராதா, உங்க அம்மாவை அமைதியா இருக்க சொல்லு. அவங்க பேசுறது சரி இல்லை. என் தங்கச்சியை பத்தி பேசினா நான் சும்மா இருக்க மாட்டேன்”, என்றான் கண்ணன்.
“ஐயோ, நான் பண்ண பாவம் என் மக வாழ்க்கையிலா வந்து விடியணும்?”, என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதாள் கீதாவின் அம்மா ரேகா. துரைராசு கண்களிலும் கண்ணீர் வடிந்தது.
சகுந்தலாவும் செல்வியும் கைகளை பிசைந்து கொண்டு இருந்தார்கள்.
“என்னங்க இப்படி நடக்குது? இதுக்கு தான் நம்ம பிள்ளைக்கு தனியா பங்ஷன் வைக்கலாம்னு சொன்னேன்”, என்றாள் வேணி.
“தப்பு தான். அதை இப்ப யோசிச்சு என்ன பண்ணுறது வேணி? நாம இப்ப அமைதியா இருக்குறது தவிர வேற வழி இல்லை. இங்க நம்ம பிள்ளைக்கு பங்ஷன் நடத்த முடியலைன்னா நாம தனியா நடத்திக்கலாம். ஒரு பிரச்சனையும் இல்லை. நீ கவலை படாத. பாவம் இந்த கீதா தான்”, என்றார் மதியழகன்.
“அத்தை, நீங்க பேசுறது முறை கிடையாது. கீதா தங்கம். நீங்க வரம்புக்கு மீறி பேசினா எங்க யாராலயும் பொறுத்துக்க முடியாது. நாக்கை அடக்கி பேசுங்க”, என்றாள் தேன்மொழி.
“ஓ, நீயா? ஆமா உன்னையும் அவன் கட்டி வச்சிருந்தானாமே? அங்கயும் எதுவும் நடந்துச்சோ என்னவோ?”, என்று மரகதம் கேட்ட அடுத்த நொடி அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான் கதிர்.
அவனை தடுத்த மதி “பொறுமையா இருப்பா”, என்றார்.
“என்னப்பா பொறுமையா இருக்க சொல்றீங்க? இந்த பொம்பளை பேசுறது எப்படி இருக்கு பாருங்க? நம்ம வீட்டு பொண்ணுங்களை பத்தி குறை சொல்ல இவளுக்கு என்ன உரிமை இருக்கு?”, என்று தந்தையை அடக்கின கதிர் “ஒரு டி. என். ஏ டெஸ்ட் போதும் கீதா நல்லவன்னு நிருபிக்கிறதுக்கு. ஆனா உனக்காக எல்லாம் நாங்க அந்த அளவுக்கு போக மாட்டோம். என் பொண்டாட்டியையும் கீதாவையும் பேசின உன்னையும், உன் தங்கச்சியையும் வெட்டி போடணும்னு ஆத்திரம் வருது. ஆனா உன்னை தொட்டா அது எங்களுக்கு தான் அசிங்கம். உன்னை எல்லாம் நாய்ன்னு சொல்லக் கூடாது, நாய் நன்றி உள்ளது. இனி ஒரு வார்த்தை பேசின நான் மனுசனா இருக்க மாட்டேன்”, என்று கர்ஜித்தான்.
அத்தனை பேரின் முன்னிலையில் அவன் அடித்தது மரகதத்துக்கு ஆத்திரம் மூட்டியது. நேராக தர்மதுரை அருகில் சென்றவள் “இது தான் பொண்ணு கொடுத்ததுக்கு நீங்க கொடுக்குற மரியாதையா? கண்டவன் எல்லாம் என்னை அடிக்கிறான். நீங்க வாயை மூடிட்டு இருக்கீங்க?”, என்று கொலைவெறியுடன் கேட்டாள்.
“பொண்ணு கொடுத்தீங்கன்னு உங்க மேல மரியாதை இருந்துச்சு. ஆனா எப்ப என் ரெண்டு பொண்ணுங்களைப் பத்தி தப்பா பேசினிங்களோ அப்பவே நீங்க இவ்வளவு தானானு தோனிருச்சு. அப்புறம் கதிர் ஒண்ணும் கண்டவன் இல்லை. எங்க வீட்டு மாப்பிள்ளை. உங்க மகளை நாங்க எடுத்துருக்கோம் அதனால நாங்க அமைதியா இருக்கலாம். பொண்டாட்டியை சொன்னா எவனுக்கும் கோபம் வரத் தான் செய்யும். தினேஷ் உங்களை நாய்ன்னு சொன்னதும் தப்பில்லை. கதிர் உங்களை அடிச்சதும் தப்பில்லை”, என்றார் தர்மதுரை.
[the_ad id=”6605″]
பல வித கல்யாண கனவுகளுடன் இருந்த ராதாவின் மனநிலை முற்றிலும் மாறிப் போனது. அவள் கண்களிலும் கண்ணீர் வந்தது.
முழு அலங்காரத்தில் தேவதையாக, புது மனைவி என்ற உரிமையுடன் தன்னருகில் நிற்கும் ராதாவின் கண்ணீரைக் கண்டு வருத்தமாக இருந்தது கண்ணனுக்கு.
அடுத்த நொடி கண்ணன் அருகில் வந்த மரகதம் “மாப்பிள்ளை பாத்தீங்களா? ராதா நீயும் பாரு. எல்லாரும் என்னை எப்படி அசிங்க படுத்துராங்க. இவங்க எல்லாரையும் வெளிய போக சொல்லுங்க”, என்றாள்.
“சரி அத்தை வெளிய போக சொல்றேன்”, என்று கண்ணன் சொன்னதும் மரகதம் கல்யாணி முகம் ஒளிர்ந்தது. மற்ற அனைவரும் திகைப்பில் இருந்தனர்.
“ராதா, இப்ப இந்த நிமிஷம் உன் அம்மாவும் சித்தியும் இந்த இடத்தை விட்டு போகலன்னா இனி உனக்கு என் வாழ்கையில் இடம் இருக்காது”,என்று சொன்ன கண்ணன் ராதாவின் அதிர்ந்த முகத்தைப் பார்க்க முடியாமல் திரும்பிக் கொண்டான்.
மரகதம் கல்யாணி இப்போது திகைத்தார்கள் என்றால் மற்ற அனைவரும் கண்ணனை எண்ணி பூரித்துப் போனார்கள்.
“நாங்க ஏன் போகணும்? இது என் பொண்ணு கல்யாணம். பொண்ணைக் கொடுத்துட்டா நீ என்ன வேணும்னாலும் பேசலாமா?”, என்று எகிறினாள் மரகதம்.
“அம்மா, அவர் உன் மாப்பிள்ளை. மரியாதை கொடுத்து பேசு”, என்று அழாத குறையாக சொன்னாள் ராதா. “அம்மா இப்படி பேசினால், பிறந்த வீட்டையே தான் மறக்க வேண்டியது வரலாம்”, என்று கவலைப் பட்டாள் ராதா.
“மாப்பிள்ளை, புடலங்கா மாப்பிள்ளை. கட்டின அன்னைக்கே அறுத்து விடுவேன்னு சொல்றவன் மாப்பிள்ளையா? இவன் என்ன உன்னை வேண்டாம்னு சொல்றது? நீ வா நாம போகலாம். உனக்கு வேற மாப்பிள்ளை பாத்து கட்டி வைக்கிறேன்”, என்று சொன்ன அடுத்த நொடி அவளை அறைந்திருந்தார் அவளின் கணவன் சண்முகம்.
சமையல் செய்யும் இடத்தில் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த சண்முகம் விஷயம் அறிந்து இங்கே வரும் போது மரகதம் பேசிய பேச்சு அவரை கொலை நடுங்க வைத்தது.
“பெத்த பெண்ணை கட்டிக் கொடுத்து கொஞ்ச நேரத்துல என்ன பேச்சு பேசுற? நீ பொம்பளையா டி?”, என்று கேட்டார் சண்முகம்.
“ஏங்க, இவங்க என்னை அடிக்கிறாங்க”, என்று அழுது கொண்டே சொன்னாள் மரகதம்.
“மாப்பிள்ளை வீட்ல உள்ளவங்க உன்னை அடிச்சிருக்காங்கன்னா நீ என்னவெல்லாம் அவங்களை பேசுனியோ? எனக்கே உன்னை வெட்டிப் போடணும்னு வெறி வருது. அங்க பாருடி நம்ம பொண்ணை. எவ்வளவு சந்தோஷமா இருந்தா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி. இப்ப நீயே அவ வாழ்க்கையை கேள்வி குறி ஆக்கிட்டியே? சம்மந்தி அவ பேசுன பேச்சுக்கு நான் எல்லார் கிட்டயும் மன்னிப்பு கேக்குறேன்”
“அவங்க பேசுனா நீங்க என்ன செய்வீங்க? விடுங்க”, என்று சொன்ன தர்மதுரை அடுத்து என்ன சொல்ல என்று தெரியாமல் மௌனமானார்.
“அப்பா, அம்மாவையும் சித்தியையும் இங்க இருந்து போக சொல்லுங்க. எனக்கு பிறந்த வீடு இருக்கான்னு என்னை யோசிக்கிற அளவுக்கு கொண்டு வந்துட்டாங்க. என்னைப் பத்தி கொஞ்சமாவது நினைச்சு பாத்திருந்தா இப்படி செஞ்சிருப்பாங்களா? அவங்க நியாயமா நடந்துருந்தா எங்க அம்மாவுக்காக பேசலாம். என்னோட நாத்தனார்களை அசிங்கமா பேசின அவங்க இங்க இருந்தா இங்க இருக்குற யாரும் சந்தோஷமா இருக்க மாட்டாங்க. அதனால அவங்களை கிளம்ப சொல்லுங்க. அப்புறம் இப்ப தினேஷ் கீதாவுக்கு ரிசப்ஷன் நடந்தா மட்டும் தான் நானும் என் கணவரும் மேடைல இருப்போம்”, என்றாள் ராதா.
தன்னுடைய மகளா தன்னை இப்படி சொல்வது என்று எண்ணி அதிர்ந்து போய் அவளைப் பார்த்தாள் மரகதம். தன்னுடைய மகள் அவள் வாழ்க்கையைப் காப்பாற்றிக் கொண்டாள் என்று எண்ணிய சண்முகம் “சொல்றது காதில் விழலையா? வெளிய போடி”, என்று கேட்டுக் கொண்டே இருவரையும் வெளியே இழுத்துச் சென்றார்.
அனைவரின் மனதிலும் சிறு நெருடல் இருந்தாலும் அடுத்தடுத்த வேலைகள் நடந்தது. சுத்தமான வெள்ளைத் துணியில் சிறு கரும்புள்ளி விழுந்தது போல அனைவரின் சந்தோஷமும் சிறு வலியைக் கொண்டிருந்தது.
ஆனால் நடப்பது நல்லதாக நடக்க வேண்டுமே? அடுத்தவர்களுக்காக மற்றவரும் பொய்யாக சிரித்து விஷேசத்தில் கலந்து கொண்டார்கள்.
[the_ad id=”6605″]
எந்த வித உயிர்ப்பும் இல்லாமல் மேடையில் நின்றவர்கள் போட்டோ எடுப்பவர் சொன்னதற்காக சிரித்தார்கள்.
இந்த சூழ்நிலையைக் கடக்க செல்வா, தேன்மொழி, கதிர், சௌமி நால்வரும் மெனக்கெட்டு மற்றவரின் முகத்தில் சிரிப்பைக் கொண்டு வந்தார்கள். அதன் பின்னர் கொஞ்சம் சகஜமாக சென்றது. சிறிது நேரம் முன்பு நடந்த விஷயங்களை சிறிது நேரம் மனதின் ஓரத்தில் தள்ளி விட்டு சந்தோஷமாக இருந்தார்கள்.
ஒவ்வொருவராக வந்து வாழ்த்து சொல்லி மணமக்களை வாழ்த்தி விட்டு சென்றார்கள்.
மேடையில் இரண்டு ஜோடிகளையும் நிற்க வைத்து அவர்கள் அருகே கதிர், தேன்மொழி, செல்வா, சௌமி நால்வரும் அவர்களை கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள்.