“மச்சான்.. மச்சான்.. நானே ட்ரெய்னிங் குடுக்கிறேன் மச்சான்.. ஆல்ரெடி உனக்கு புராஜெக்ட் போய்ட்டு இருக்கு.. இதுல ட்ரெய்னிங் வேற குடுக்கனும்னா கஸ்டம் டா..” என்று அவன் அலுவலகம் வந்த நொடி முதல் வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கும் மகேஷை இதற்கு மேல் கேவலமாக பார்க்க முடியாது என்று எண்ணும் படியாக பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்வா.
“ஏய்! என்னடா பிரச்சனை உனக்கு? நேத்து முடியாதுன்னு சொன்ன.. இன்னைக்கு வந்து இப்படி பெனாத்திட்டு இருக்க? எலி எதுக்கு இப்ப பேண்ட் போட தவிக்குது? இது சரியா படலையே எனக்கு..” என்று சந்தேகமாக நண்பனை பார்த்தான் விஷ்வா.
“ஹி ஹி.. இல்ல மச்சி.. டிரெயினி ஒரு பொண்ணாம் டா..” என அசடு வழிந்தான் மகேஷ்.
“இந்த டாஷ தான நேத்து சொன்னேன்.. மூக்கால அழுது, குருட்டு நாய் விட்டத்தில பாஞ்ச மாதிரி கத்துன.. இப்போ வந்து கால வச்சு ஆஃபீஸ தோண்டிட்டு இருக்க.. காண சகிக்கல.. காலங்காத்தால சாவடிக்காம மரியாதையா போய் வேலைய பாரு..” என்று சொல்லி அவனை விரட்டி விட்டு வந்தவன், தனது சுழல் நாற்காலியில் அமர்ந்து கணினியை உயிர்பிக்க, அதிர்ந்தது அவனது அருகே இருந்த இன்டர்காம்.
அழைப்பை ஏற்றவன் பேசி முடித்து கருணாகரன் அறைக்குச் சென்றான். சென்னையின் தீராத போக்குவரத்து நெரிசலில் நொந்து வந்தவனை மகேஷ் பேசியே வெறுப்பேற்றி இருக்க, இப்பொழுதும் உட்கார கூட விடாமல், உடனே அழைத்ததில் எரிச்சல் மேலோங்க உள்ளே வந்தவனை சில்லென்று வரவேற்று சட்டென குளிர்வித்தது, மூடிய அறையின் உள்ளிருந்து வெளிப்பட்ட குளிரூட்டியின் காற்றா, இல்லை, அதைவிட குளிர்ச்சியாய் இருந்த பெண்ணின் தோற்றமா? என்பதற்கு பட்டிமன்றம் எல்லாம் வைக்கவில்லை அவன் மனது.
மனதில் வெள்ளையாடை தேவதைகள் அவன் பின்னே லாலா பாட முற்பட, ‘90s கிட்ஸ் புத்தி’ என்று தன்னைத்தானே காரிதுப்ப, இப்பொழுது ஏஆர்ஆர் ‘உனக்காக வாழ நினைக்குறேன்.. உசிரோட வாசம் புடிக்குறேன்’ என்று புல்லாங்குழல் வாசிக்க ஆரம்பித்ததார்.
“இது ஓகே டா விஷ்வா…” என்று தனக்குத்தானே கூறியவனாய், பார்த்துக்கொண்டு இருக்கும் போதே சட்டென வானிலை மாறியது அவனுக்கு மட்டும். அவன் முகமும் என்றும் இல்லாத பிரகாசத்தைத் தத்தெடுக்க உள் நுழைந்தவன், கருணாகரனுக்கு எதிராக அமர்ந்திருந்தவளின் பக்கத்து இருக்கைக்கு பின்னே சென்று நின்று அவருக்கு காலை வணக்கத்தை தெரிவித்தான். தலையசைத்து அதை ஏற்றவர் கண்காட்டி இருக்கையில் அமரச் சொல்ல அமர்ந்தான் பார்கவியின் அருகே.
கருணாகரன் முன்பே சொல்லியிருந்ததால் பார்கவி அவன் புறமாய் திரும்பி மெலிதாய் புன்னகைக்க, வசந்தகால ஊட்டியின் மொத்த ரோஜா பூக்களும் பூத்தது விஷ்வாவின் மனதிற்குள்.
“விஷ்வா இவங்க தான் நான் சொன்ன நியூ ட்ரைனி.. *** காலேஜ் ஸ்டூடண்ட். பைனல் இயர் ப்ராஜெக்ட்காக இங்க வந்து இருக்காங்க. உங்களுக்கு அசைன் பண்ணி இருக்க ப்ராஜெக்ட்ல இவங்களையும் சேர்த்துக்கோங்க.. இனி இவங்க உங்க பொறுப்பு. ஷீ இஸ் பார்கவி.. லைக் மை சிஸ்டர்.. பார்கவி மீட் மிஸ்டர் விஷ்வா யுவர் டீம் லீடர்..” என்று விஷ்வாவிடம் ஆரம்பித்து, பார்கவியிடம் விஷ்வாவை அறிமுகம் செய்து வைப்பதில் முடித்தான் கருணாகரன்.
இப்பொழுது நன்றாக அவன் முகம் பார்த்து மென் புன்னகை அவள் பூக்க, விஷ்வாவின் மனதில் குற்றால சாரல் கும்மி அடித்தது.
‘இருபத்தொன்பது வயசு வரைக்கும் முரட்டு சிங்கிள்ளா இருந்தது வீண் போகல டா விஷ்வா..’ என்று குத்தாட்டம் போட்டது அவனது இளமனது.
“ஹாய் சார்..” என்று பார்கவி அவனிடம் பேச, தொண்டைல ‘கிச்கிச்’ வந்துவிடுமோ என்று ஒரு நொடி பயந்து தான் போனான். ஆனால் அவன் குரல் அவனை கைவிடவில்லை.
“ஹாய் பார்கவி.. வெல்கம் டூ அவர் டீம்.” என்று புன்னகைக்க, தன்னோடு சேர்ந்து சிரிக்க அழைக்கும் அவனது கண்களும், இதழ்களும் அவளுக்குள்ளும் சிறு சலனத்தை தோற்றுவித்ததோ?!
திரும்பி கருணாகரனைப் பார்க்க, “எப்போ ஜாயின் பண்ற மா?” என்று கேட்க,
“இன்னைக்கே பண்ணிடலாமா?” என்று அவரிடமே கேட்டாள் பார்கவி.
“யூர் விஷ்..” என்று அவள் விருப்பத்தை முன்னிருத்தினான் கருணாகரன்.
“ஓகே சார்.. அப்போ இன்னைக்கே ஜாயின் பண்ணிக்குறேன்”என்று கூறிவிட்டு எழும்பி நிற்க, உடன் எழுந்தனர் ஆண்கள் இருவரும்.
“ஆல் த பெஸ்ட் பார்கவி” என அவளுக்கு வாழ்த்தியவர், “டேக் கேர்..” என்று விஷ்வாவிடம் கூறிவிட்டு சத்தமில்லாது அதிர்ந்துக் கொண்டிருந்த தனது அலைபேசியின் அழைப்பினை ஏற்று காதிற்குக் கொடுத்தார்.
“தாங்க் யூ சார்.. ” என்று இருவரும் ஒரு சேர கூறி வெளியேற, அவள் செல்வதற்குக் கதவினைத் திறந்து விட்டான் விஷ்வா.
பார்கவி என்பதால் அவன் அதைச் செய்யவில்லை. பெண்கள் எல்லோருக்கும் அவன் இதைச் செய்வது தான். ஆனால் பரசுராமனைப் பார்த்து வளர்ந்த பார்கவிக்கு, இது வியப்பு தான்.
மகேஷ் அவனது குழுவுடன் கலந்தாலோசிப்பு கூட்டத்தில் இருக்க, விஷ்வா தனது இருக்கையில் அவளை அமர வைத்து விட்டு, பார்கவிக்கு இடம் ஏற்பாடு செய்யச் சொல்லிவிட்டு வந்தவன் கண்கள் அவனையும் மீறி அவளில் படிந்தது.
பெண்களோடு எப்படி பழக வேண்டும்; எப்படி பார்க்க வேண்டும் என்றெல்லாம் அறிந்தவனின் பார்வை, அவன் கட்டுப்பாட்டை மீறியது தன்னவளாக எண்ணிய மங்கையிடம் மட்டுமே.
அவன் பார்வை உச்சி முதல் உள்ளங்கால் வரை மின்னலாக பாய்ந்தது பெண்ணிடம். இத்தனை மென்மையாகவும் பெண் இருப்பாளா? என்பது தான் அவன் முதல் கேள்வி.
அரக்கில் முட்டி தொடும் குர்தாவும், சந்தன நிறத்தில் பட்டியாலாவும் அணிந்து, சந்தன நிற துப்பாட்டாவை இடது தோளில் போட்டிருந்தவளைப் பார்க்க பார்க்கத் தெவிட்டவில்லை அவன் கண்களுக்கு.
பிறை நெற்றியும், அதில் உடைக்கு ஏற்ப இட்டிருந்த அரக்குநிற நீள்வட்ட பொட்டும் அதன்மேல் கீற்று போல் திருநீறும், வில்லாக வளைந்த புருவங்கள் கட்டாயம் செயற்கை அல்ல என்பது பார்க்கும் பொழுதே தெரிந்தது.
‘நல்லவேள அம்சமா அமஞ்சு போச்சு.. இல்ல த்ரெட்டிங் பண்ணா இவ தாங்குவாளா?’ என்றவனின் எண்ணப்போக்கு கண்டு அவனே ஒரு நொடி விதிர்த்து விட்டான்.
இடை தொடும் கூந்தல், குட்டியாய் ஜிமிக்கி, கழுத்தில் குட்டி இதய வடிவ டாலர் இணைத்த மெல்லிய தங்கச்சங்கிலி, ஒரு கையில் கடிகாரம், மறுகையில் பூக்கள் இணைத்தது போல மெல்லிய கைச்சங்கிலி. விரலில் அணிந்திருந்த மோதிரத்தை கட்டைவிரல் கொண்டு மேலும் கீழுமாக தள்ளி விட்டபடி சுற்றிலும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவள் பாதங்கள் கூட அவன் கண்களுக்குத் தப்பவில்லை. குழந்தையின் பாதம் போல் பார்க்கவே மிருதுவாக இருந்தது. அவற்றுக்கு கிரீடம் போல் அரக்குவண்ண சாயம் பூசப்பட்ட விரல்கள். அவளைப் போலவே ஓசை எழுப்பாத வெள்ளி கொலுசு.
மனதிற்குள் தானாகவே எஸ்பிபியும், வாலியும், ரகுமானும் இசைக்க ஆரம்பித்தனர்.
தென்றலைப் போல நடப்பவள் என்னைத் தழுவ காத்து கிடப்பவள் செந்தமிழ் நாட்டு திருமகள்
எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்
சிந்தையில் தாவும் பூங்கிளி
அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி
அஞ்சுகம் போல இருப்பவள்
கொட்டும் அருவி போல சிரிப்பவள்
மெல்லிய தாமரை காலெடுத்து நடையை பழகும் பூந்தேரு
மெட்டியை காலில் நான்
மாட்ட மயங்கும் பூங்கொடி
பாடலின் ஒவ்வொரு வார்த்தைக்கும் வடிவம் கொடுத்தது போலவே தன் முன்னே வந்து நிற்பவளை ரசிக்காமல் இருக்க முடியவில்லை விஷ்வாவினால்.
‘என்ன டா விஷ்வா உனக்கு வந்த சோதனை? கொல்றாளே!’ என்று நெஞ்சின் மீது அடித்துக் கொள்ளாத குறையாகப் புலம்ப வைத்தாள் விஷ்வாவை.
‘தூ.. மனசுல வாரணம் ஆயிரம் சூர்யான்னு நினைப்பு.. மூடிட்டு இரு.. அவ உன்ன அம்மஞ்சல்லிக்கு நினைக்க மாட்டா.. கடைசில அஞ்சல டா.. அவ என் அஞ்சல டான்னு அலைய போற..’என்று அவன் புத்தியே அவனைப் பேசி சரி செய்துக் கொள்ள முயன்றாலும், மனம் கேட்பதாக இல்லை.
எப்பொழுதும் போல அழகான பெண்களைப் பார்த்ததும் உண்டாகும் ஹார்மோன் விளையாட்டு தான் இது என்று எண்ணினாலும் மனம் நிலையில்லாது தவித்தது கண்டு அவனுக்கே அதிர்ச்சி தான்.
‘பொறுமை விச்சு.. பொறுமை.. பாத்துக்கலாம்.. இன்னும் ஆறு மாசம் டைம் இருக்கு.. பாத்துக்கலாம் மேன்..’ என்று பலவாறாக பேசி தன்னையே சரி செய்த பிறகே அவள் அருகில் வந்தான் விஷ்வா.
நொடியில் உலகத்தைச் சுற்றி வரும் வல்லமை கொண்ட மனம், அத்தனையும் நினைத்து முடித்து ஆசுவாசம் கொள்ள அவள் அருகிலேயே சென்றது தான் அதிசயம்.
தன்னைக் களைத்து நிலைப்படுத்திக் கொள்ள, “லிசின் கைஸ்..” என்று விஷ்வா குரல் கொடுக்க, அவனது குழுவில் இடம் பெற்று இருந்த மற்ற ஐவரும் கணினிக்குள் விட்டிருந்த தலையை சற்றே வெளியே நீட்டினர்.
“ஷீ இஸ் பார்கவி. நம்ம டீம்ல தான் ஜாயின் பண்ணி இருக்காங்க.” என்றவன் அறிமுகம் செய்து வைக்க,
“ஹாய் ஆம் வர்ஷா..”
“ஹலோ ஆம் கனிகா..”
“ஹே ஆம் வினீத்..”
“ஹாய் ஆம் பார்த்திபன்..”
“ஹாய் ஆம் ஸ்டெல்லா”
என்று ஐவரும் அவரவர் இடத்தில் இருந்து தங்களை அறிமுகம் செய்துக் கொள்ள, அத்தனை பேரையும் பார்த்து மென் புன்னகை மட்டுமே பதிலாக வந்தது.
மீண்டும் அவர்கள் பணியைப் பார்க்க ஆரம்பிக்கவும், தனது இருக்கைக்கு விஷ்வா வந்தான். அமர்ந்த வண்ணம் முகம் நிமிர்த்தி அவள் பார்த்த விதம் அவனைக் கொள்ளை கொள்ள, செயலற்று நின்று விட்டான் விஷ்வா.
கேள்வியாக பார்த்தவளுக்கு, கண்களால் பக்கத்தில் போடப்பட்டு இருந்த நாற்காலி ஒன்றைக் காட்டினான். புரியாமல் அவள் பார்க்க,
“உங்க பிளேஸ் அது..” என்று சொல்ல, வேகமாய் எழுந்தவள் இடம் மாறி அமர, தன்னிருக்கையில் அமர்ந்தான் விஷ்வா.
“சார்..” என்று தயக்கமாக பார்கவி விளிக்க,
“சார் வேண்டாமே.. கால் மீ விஷ்வா.. கார்ப்பரேட் ரூல்ஸ் பார்கவி..” என்றான் மென்பொருள் அலுவலக வாழ்வியலின் முதல் படியை அவளுக்கு விளக்கும் விதமாக.
அவளுக்கும் அது தெரியும் தான் என்றாலும், ஏனோ ஒரு தயக்கம். இன்று காலை அலுவலகம் கிளம்பும் முன் தந்தையிடம் பேசியது நினைவுக்கு வந்தது.
“கவனமா இருக்கணும் பார்கவி… எல்லார் கூடவும் ரொம்ப கவனமா பழகனும். அடுத்தவங்கள நாம எப்படி நடத்துறோமோ, அப்படி தான் நம்மையும் அவங்க நடத்துவாங்க. உன் கிட்ட பேசும் முன்ன யாரா இருந்தாலும் யோசிச்சு பேசணும். அதுக்கு தகுந்த போல இரண்டு அடி தள்ளி நின்னு பழகு பாப்பா.. ஈஸி கோயிங் இருக்க கூடாது. கத்துக்க போற… கவனம் படிப்பு மேல இருக்கட்டும்… என் பொண்ணு நீ.. மறக்க மாட்ட… மறக்கவும் கூடாது.. அப்பா பேரை காப்பாத்தனும்… ஆல் த பெஸ்ட் பாப்பா…” என்று ஒரே மூச்சில் பேசி முடித்த தந்தையின் வார்த்தைகள் கலக்கத்தைத் தான் தந்தது பார்கவிக்கு.
“ஓகே சா… விஷ்வா” சார் என்று சொல்ல வந்தவள் விஷ்வா என முடித்தாள்.
புன்னகையால் விரிந்தது ஆணின் இதழ்கள். ஆண்களில் சற்று நிறம் கூடி இருந்தவனின் இதழ்களும் ஆரோக்கியமான இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தது.
அவளது கல்லூரி நண்பர்களில் பலருக்கும் கூட புகைப்பிடித்து இதழ்கள் கறுத்துப்போய் இருக்க, இவன் இதழ்கள் அவளுக்கு வித்தியாசமாக தெரிந்தது.
“எச் ஆர் வொர்க் எல்லாம் முடிஞ்சதா?”
“இன்னும் இல்ல விஷ்வா..”
“முடிச்சிட்டு வாங்க பார்கவி.. ஸ்ட்ரைட்டா போய் லெஃப்ட்ல திரும்பினா எச்ஆர் செக்சன் வரும். முடிச்சிட்டு வாங்க.” என்று கூறி அவன் அனுப்பி வைத்தான்.
“லஞ்ச் டைமில இங்க என்னத்த உருட்டிட்டு இருக்க? வா டா போய்க் கொட்டிகிட்டு வருவோம். மீட்டிங் போனதுல டீ ப்ரேக் கூட போகல..” என்று மகேஷ் இழுக்க, விஷ்வா எதுவும் பேசாமல் பார்கவி வரும் திசையைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
மதிய உணவு இடைவேளை வரை அவள் வரவில்லை. நூற்று ஐம்பது பேர் வேலை பார்க்கும் சற்றே பெரிய நிறுவனம் அது என்பதால் சற்று தாமதமாகும் என்பது அவனுக்கும் புரிந்தது.
அழைத்துக் கேட்க அவளது கைபேசி எண்ணையும் வாங்கி வைத்து இருக்கவில்லை.
“பார்த்த விழி பார்த்த படி பூத்து கிடக்க..” என்று கோரசாக சத்தம் கேட்டது. நண்பர்கள் இருவரும் திரும்பிப் பார்க்க அவனது குழுவின் ஐவரும் நின்று இருந்தனர்.
மகேஷ் புரியாமலும், விஷ்வா மறைக்கத் துடித்த வெட்கத்தோடும் “என்னங்க டா?!” என்று கேட்க,
“சிங்கம் சிக்கிடுச்சி ஜி” என்று வினீத் கூற,
“வசமா சிக்கிடிச்சு..” என்று ஸ்டெல்லா சிரிக்க,
“அட் ஃபர்ஸ்ட் சைட் மகேஷ்.. அண்பிலிவபிள்..” என்று வர்ஷா கலாய்க்க,
“இட்ஸ் மெடிக்கல் மிராக்ள்..” என்று பார்த்திபனும் ஜோதியில் ஐக்கியமாக, கலகலத்தது அவர்கள் நின்றிருந்த இடம்.
“அவ்ளோ ஓபனா வா டா தெரிஞ்சது?” என்று விஷ்வா விளையாட்டாக கேட்க,
“பச்சையா தெரியுது ஜி” என்றாள் கனிகா.
“கனி யூ டூ?” என்று விஷ்வா நெஞ்சைப் பிடிக்க, இப்பொழுது குழப்பத்தின் உச்சியில் நின்றது மகேஷ்.
“என்ன டா நடக்குது இங்க?” என்று கோபமாக கேட்க, “அத அங்க கேளுங்க…” என்று கூறிவிட்டு ஐவர் கூட்டணி களைந்தது.
“அது வந்து மச்சி… அது வந்து… ல்தகாசைஆ வந்துடுச்சு மச்சான்…”
“எத?”
“அதான் மச்சான் லவ்வு வந்துடுச்சு…” இப்பொழுது காலால் தரையை விஷ்வா தேய்க்க,
“பனை மரத்துல பாதி இருந்துட்டு இந்த கண்றாவி எல்லாம் செய்யணுமா மச்சான்? கண்ணு அவிஞ்சு போய்டும் போல இருக்கு… தயவுசெஞ்சு விசயத்த மட்டும் சொல்லு…” என்று நொந்து போய்க் கூற,
“பார்கவி மச்சான்… உன் தங்கச்சி பேரு..”
“எத எனக்கு தங்கச்சியா? எங்கப்பன் எனக்கு சொல்லவே இல்லயே..” என்று திகைத்துப் போய் யோசித்தவன், அவன் சொல்லிய மச்சானின் அர்த்தம் விளங்க,
“நாசமா போறவனே! இப்போ எதுக்கு டா எங்குடும்பத்துல கும்மி அடிக்கிற?” என்று பொங்கிவிட்டான்.
“இல்ல மச்சான் என்னோட ஆளு உனக்கு தங்கச்சி தான?” என்று அவன் கோபத்தை சட்டை செய்யாமல் விஷ்வாவும் கூற,
“ஆர் யூ சீரியஸ் மச்சான்?” என்றான் மகேஷ் இப்பொழுது விளையாட்டுதனம் அற்ற குரலில்.
அதுவரை இருந்த குறும்பு அத்தனையும் நொடியில் கரைய, தனது ஆறடி உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றவனாக, “டாம் சீரியஸ் மகி…” என்றான் உறுதியான குரலில்.
“அந்த பொண்ணுக்கு பிடிக்கணுமே டா..”
“அவ ஓகே சொன்னா வேலை ஈஸி.. இல்லன்னா வீட்ல சொல்லி பேசிட வேண்டியது தான்… என்ன ஆனாலும் அவ தான் எனக்கு…” என்றவனின் குரலில் அத்தனை உறுதி இருந்தது. அதில் ஒரு பக்கம் சந்தோசம் வந்தாலும், ஒரு பக்கம் பயம் வந்தது மகேஷுக்கு.
நினைவு தெரிவதற்கும் முன்பிருந்தே இருக்கும் நட்பு அவர்களது. எத்தனைக்கெத்தனை விளையாட்டாக இருக்கிறானோ, அத்தனைக்கும் சேர்த்து உறுதியாக இருப்பவன் விஷ்வா.
ஒரு வேளை அந்த பெண்ணிற்கு வேறு காதல் இருந்தாலோ, இல்லை இனி வேறு யார் மீதாவது காதல் வந்தாலோ என்ன செய்வான் என்று அடித்துக் கொண்டது மகேஷின் மனம்.
அதைக் கேட்கவும் செய்தான் நண்பனிடம்.
“தெரியல மச்சி… ஆனா மனசு சொல்லுது அவ எனக்கு தான்னு…” என்று நம்பிக்கையாய் கூறும் நண்பனைப் பார்த்து, பயமும் கவலையும் சரிபாதியாக தோன்றியது மகேஷுக்கு.
“கடவுளே எப்படியாவது இவன் நினைக்கிறது நடக்கட்டும்…” என்று அவசர வேண்டுதல் ஒன்றை இறைவனிடம் சமர்ப்பித்து விட்டு நண்பனை இலகுவாக்கும் பொருட்டு, “எப்படியோ சிங்கிள் மிங்கிலாகப் போற… ட்ரீட் மச்சான்…” என்று கேட்க ஒருமுறை பார்கவி வரும் பாதையைத் திரும்பிப் பார்த்தவன், நண்பனின் தோள் மீது கைப்
போட்டுக் கொண்டு கிளம்பிச் சென்றான் மதிய உணவிற்காக.
விஷ்வாவின் இந்த காதல் காயம் கொடுக்குமா… கரை சேர்க்குமா? காலத்தைக் காத்து நிற்கும் காதல் சொல்லுமா பதிலை.