செயல்திட்டத்தை தோழிகள் இருவரும் சேர்ந்து செய்வது என முடிவெடுத்து, அதையும் துர்காவின் அண்ணனிடம் கொடுத்துவிட்டு கல்லூரி விடுதியில் இருந்து கொட்டமடித்துக் கொண்டு இருந்தனர்.
ஆனால் பார்கவி நிலை படுமோசம். அவள் இருப்பது வடக்கென்றால் அலுவலகம் இருப்பது தெற்கு. போய்வரவே குறைந்தது மூன்றறை மணி நேரமாவது ஆகும். களைத்து போனது பார்கவிக்கு. உடையைக் கூட மாற்றது பொத்தென விழுந்தாள் கட்டிலின் மீது.
பதிலேதும் சொல்லாமல், சொல்ல தெம்பு இல்லாமல் கண் மூடி படுத்து இருந்தவளை பார்க்க பாவமாக இருந்தது.
“என்ன ஆச்சு பாரு?” என்று கேட்டனர் இருவரும் பரிவாக.
“ஒண்ணும் இல்ல கங்கா.. அப் அன்ட் டவுன் மட்டுமே ஃபோர் ஹார்ஸ் பத்மா.. இப்படி எல்லாம் அலைஞ்சது இல்லல்ல.. அதான் செம்ம டயர்டா இருக்கு.” என்றாள் இருவருக்கும்.
“இவளே ஒரு தொட்டாச்சிணுங்கி.. இவளுக்கு எதுக்கு அவ்ளோ தூரம் தள்ளி ஆஃபீஸ் பாத்தாங்க அப்பா.. ஒரே நாள்ல வாடி வதங்கி போய் இருக்கா பாரு..” என்று கங்கா புலம்ப,
“அட விடு டி.. இப்படியே இருந்தா அது அவளுக்கே நல்லது இல்ல. அதுக்கு தான் அப்பா நாலையும் யோசிச்சு இப்படி ஏற்பாடு பண்ணி இருக்காங்க.. ஃபர்ஸ்ட் வீக் கொஞ்சம் கஷ்டமா இருக்கும். போக போக எல்லாம் சரியா போகும்” என்று பத்மா சொல்லிக் கொண்டு இருக்கும் போதே பரசுராமன் அழைத்து விட்டார் மகளுக்கு.
“ஹலோ ப்பா..”
“ஆஃபீஸ் ஓகே வா மா? எந்த பிரச்சினையும் இல்லைல?” என்று அவர் கேட்க,
“நல்லா இருந்துச்சுப்பா.. கருணா சார் ரொம்ப நல்லா பேசுனாங்க. டீம்ல இன்ட்ரோ குடுக்கும் போது மை சிஸ்டர் அப்படின்னு தான் சொன்னாங்க..” என்று பார்கவி சன்னமாக சொல்ல,
“அப்போ சரி மா.. நல்லா பண்ணனும்..” என்று கூறி அழைப்பினைத் துண்டித்து விட்டார்.
“என்னது ஓனரோட சிஸ்டரா?” என்று கங்கா அதிர,
“இப்போ எதுக்கு பேய் மாதிரி அலறித் தொலையுற எரும?” என்றாள் பத்மா.
“இல்ல மச்சி.. ஓனர் சிஸ்டர்ன்னா பசங்க எப்படி பாப்பாங்க இவள?” என்று கங்கா கேட்க,
அன்று காலை முதல் அவளை பூங்காற்றாக தாலாட்டியவனின் பார்வை மின்னாலாக தோன்றி மறைந்தது மனதிற்குள். மென் புன்னகை தானாக மலர, தோழிகளின் பேச்சை பார்த்துக் கொண்டு இருந்தாள் பார்கவி.
மனமோ விஷ்வாவின் நடவடிக்கைகளை பட்டியலிட்டு கொண்டு இருந்தது. அச்சுறுத்தாத ரசனையான அவனது பாவம், அவளையும் அவனை நோக்கி ஈர்த்தது நட்பாக.
அவள் விஷ்வாவை நினைத்துக் கொண்டு இருக்க, அவளின் அலைபேசி சத்தமாக இசைத்தது அறியவில்லை அவள். பக்கத்தில் வந்து அவள் கைப்பேசியை எடுத்து பேச ஆரம்பித்து இருந்தாள் பத்மா.
பத்மா பேசி முடித்து, கங்காவும் பேசி முடித்த பிறகும் கூட பார்கவியிடம் சத்தமில்லாது போக, எட்டி பார்த்தனர் இருவரும். தூங்கி போயிருந்தாள் மென்புன்னகையோடு.
அவர்கள் சொல்ல, தான்யலட்சுமியும் மகளின் தூக்கத்தை கலைக்க வேண்டாம் என்று சொல்லி, எழுந்ததும் அழைக்கக் கூறினார்.
********
“இன்னைக்கு அவ வர மாட்டா டா..” என்று ஆயிரமாவது முறை சொன்ன விஷ்வாவை பார்த்து,
“உனக்கென்ன பா நீ பைத்தியம்… அதுவும் சாதாரண பைத்தியம் இல்ல… முத்தி போன காதல் பைத்தியம்.. என்னவேனாலும் எத்தன தடவனாலும் பேசுவ.. நாங்க அப்படியா? எங்களுக்கு வேலை இருக்கு..” என்றான் மகேஷ் கேவலமான தொனியில்.
“அவள பாத்த இத்தன நாள்ல, இது தான் டா ஃபர்ஸ்ட் டைம் பாக்காம இருக்குறது..” என்று விஷ்வா மனத்தாங்கலோடு சொல்ல,
“அடங்கப்பா.. அப்படி எத்தன நாள் ஆச்சு நீங்க அவங்கள பாத்து?” என்று எரிச்சலாக கேட்க,
“ரெண்டு நாள் ஆச்சு மச்சி… டூ டேஸ்.. தட் மீன்ஸ்.. 48 ஹார்ஸ்.. 2880 மினிட்ஸ்..1,72,800 செகண்ட்ஸ்.. யூ நோ மச்சி..” என்று புள்ளி விபரம் சொன்னான் விஷ்வா.
“முத்திடிச்சு மச்சி.. முத்திடிச்சி…” என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே, அங்கு வந்த கருணாகரனின் செயலாளர் சுதீஷ், “இன்னும் அந்த வேலை முடியலையா மகேஷ்? சின்ன வொர்க் அது கூட முடிக்காம.. என்ன பண்றீங்க? உங்களுக்கு அப்புறம் குடுத்த வேலைய விஷ்வா முடிச்சு அனுப்பிட்டாரு..” என்று அவனை வறுத்தெடுக்க,
“அட நாரப்பயலே.. இம்புட்டு நேரமா எங்கூட தான டா உக்காந்து கழுத்தறுத்த? இதுக்கு நடுல எப்போ எப்படி டா வேல வந்து அத முடிச்ச?” என்று விஷ்வாவுக்கு மட்டும் கேட்கும் வகையில் பற்களை நறநறத்துக் கொண்டு கொந்தளிக்க,
“சுதீஷ் இவன் என்னவோ சொல்றான்.. என்னன்னு கேளுங்க..” என்று போட்டுக்கொடுத்து விட்டு அமைதியாக நின்றான் விஷ்வா.
சுதீஷும் வேலையைச் செய்யும்படி கூறிவிட்டுச் செல்ல, “நல்லா வருவீங்கடா…” என்று சொல்லிவிட்டு சென்று விட்டான் மகேஷ்.
புதன் மற்றும் சனிக்கிழமைகளில் அவளுக்கு கல்லூரி இருப்பதால் அந்த இரு நாட்களும் அலுவலகம் வர முடியாது என்று முன்பே பார்கவி கூறியிருந்தாள். திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வந்தவள், புதன்கிழமை வராததற்கு தான் மகேஷை வைத்து செய்துக் கொண்டிருந்தான் விஷ்வா.
அவள் வரும் நாட்களில், “இனி சின்ராசா கையிலேயே பிடிக்க முடியாது..” என்று மொத்த அலுவலகமே சொல்லும் அளவுக்கு நடந்துக் கொண்டான் விஷ்வா.
பார்கவியின் அழகிலும், மென்மையான சுபாவத்திலும் அங்கே வேலை பார்த்த பல ஆண்கள் கவரப்பட்டாலும், அது எதுவும் பார்கவியை பாதிக்காத வண்ணம் தடுத்து நிறுத்தி இருந்தது விஷ்வாவின் காதல், என்பது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.
அனைவருடனும் சமமாக கலந்து பழகும் விஷ்வாவின் தன்மையால் அவனுக்கு எதிரிகள் யாரும் இல்லை. அவன் நேசிக்கும் பெண் என்ற ஒரே காரணம் போதுமானதாக இருந்தது, பார்கவியை யாரும் சீண்டாமல் இருப்பதற்கு.
இதனால் அலுவலகம் செல்வது என்பது பார்கவிக்கும் மிகவும் பிடித்த விஷயமாக இருந்தது. புது நட்பு, புதுசூழல் என்ற அனைத்தும் சிரமமின்றி இருக்க அவளும் அவர்களில் ஒன்றாக கலந்து இருந்தாள்.
ஊருக்கே தெரிந்த விஷயம், அவளுக்கு மட்டும் தெரியாத வண்ணம் பார்த்துக்கொண்டது தான் விஷ்வாவின் மிகப்பெரிய சாதனையாக இருந்தது. அவள் அலைபேசி எண் கிடைத்த பிறகும் கூட இதுவரை அதை அவன் உபயோகித்தது இல்லை.
புது நட்பு அழகாய் முளைவிட்டிருந்தது அவர்களுக்கு இடையே. கனிகா, பார்த்திபன் உடன் சற்று அதிக ஆழமான நட்பு ஏற்பட்டு இருந்தது. மகேஷ் ஒரு அண்ணன் போலவே நடந்துக் கொண்டான் பார்கவியிடம். இதில் விஷ்வாவோடு அவளுக்கு ஏற்பட்டு இருந்த உறவுக்கு தான் என்ன பெயர் வைப்பது என்று புரியவில்லை அவளுக்கு. ஒரு குழப்பத்திலேயே சுற்ற வைத்தான் அவளை.
இரண்டே வாரத்தில் அவர்களோடு சேர்ந்துக் கொட்டமடிக்க ஆரம்பித்தவளைக் கண்டு கங்காவிற்கு கோபம் வந்தது. எப்பொழுதும் பார்கவியின் மீது அதீத உரிமை எடுத்துக் கொள்வாள் கங்கா. பத்மா எத்தனை முறை எடுத்து சொன்னாலும் அதை கங்கா கண்டு கொள்வதும் இல்லை.
“இப்போ எல்லாம் நம்ம கூட பேசக் கூட டைம் இல்ல பத்து சிலருக்கு..” என்று பத்மாவை இடித்துக் கொண்டு வந்து உட்கார்ந்தாள் கங்கா.
“ஆரம்பிச்சுட்டா டா..” தலையில் அடித்துக் கொண்டாள் பத்மா.
அலுவலக நண்பர்களுக்கு என்று இருக்கும் புலன குழுவில் வினீத்தும், பார்த்திபனும் மாற்றி மாற்றி அனுப்பிக் கொண்டு இருந்த செய்திகளையும், ‘ஸ்டிக்கர்ஸ் மற்றும் மீம்’ வைத்து போடும் சண்டைகளை, புன்னகையோடு பார்த்துக் கொண்டு இருந்த பார்கவி, “யாரு கங்கா?” என்றாள்.
“யாரோ..” என்றாள் கங்கா விட்டேத்தியாக.
அதைக் கேட்டுக் கொண்டே புலனத்தில் கண்களைப் பதித்து இருந்தவள், பக்கென்று சிரித்து விட கங்காவிற்கு கோபம் உச்சிக்கு ஏற விருட்டென்று எழுந்து சென்றுவிட்டாள்.
அவள் செல்வதை கவனிக்காத பார்கவி, “பத்து… இங்க பாரேன்.. இந்த பார்த்தீ பண்றதை..” என்று சிரிப்போடு பத்மாவிடம் தன் அலைபேசியில் வந்திருந்த படத்தைக் காட்ட, பத்மாவும் சிரித்துவிட்டாள்.
தன்னையும் தன் கோபத்தையும் மதிக்காத தோழிகள் இருவரையும் பார்த்த கங்காவின் கண்கள், பார்கவியின் மீது சற்று அழுத்தமாக படிந்தது.
நாள்கள் அதன் போக்கில் செல்ல பார்கவி அலுவலகம் வந்து சேர்ந்த மாதத்தின் கடைசி வார இறுதியும் வந்தது.
“மச்சான்… புது ப்ராஜெக்ட் கிடைச்ச சந்தோஷத்தைக் கொண்டாட தலைவர் இந்த தடவ மகாபலிபுரம் ரிசார்ட் ஒன்னுல பார்ட்டி அரேஞ்ச் பண்ணி இருக்காரு டா..” என்று உற்சாகமாய் வந்தான் மகேஷ். வேலை பார்த்துக் கொண்டிருந்த விஷ்வாவின் இடத்தைச் சூழ்ந்தனர் அங்கிருந்த அனைவரும்.
“ஃபுல் டே.. மார்னிங் நைனுக்கு ஸ்டார்ட் பண்ணி நைட் டின்னர் முடிச்சிட்டு தான் ரிட்டன்..” என்றான் வினித்.
“ஒரே மஜா தான்..” என்றான் பார்த்திபன்.
வர்ஷா தன்னால் வர முடியாது என்று கூற, “எல்லாரும் கம்பல்சரி வந்தே ஆகணும்னு சொல்லி இருக்காங்க டி” என்றாள் கனிகா.
“இங்க வராம அப்படி என்ன வெட்டி முறிக்க போற? தின்னுட்டு ஹாஸ்டல்ல தூங்குறதுக்கு.. மூடிட்டு கிளம்பி வர வழிய பாரு” என்றாள் அவளது நெருங்கிய தோழியான கவிதா.
ஒவ்வொருவரும் அதைப் பற்றியே பேசிக் கொண்டு இருக்க, கல்லூரி சென்ற பார்கவிக்கு தெரியவில்லை. முதல் நாள் இரவு நட்பு பட்டாளத்தோடு சேர்ந்து விடிய விடிய ‘கொரியன் சீரிஸ்’ பார்த்துவிட்டு, தூங்கவே நேரம் ஆகி இருக்க எழுவதவதற்கும் தாமதமாகிப் போனது.
அவசர அவசரமாக குளித்து கிளம்பி ஓடி வந்தாள் அலுவலகத்திற்கு. வந்தவளை வரவேற்றது, விஷ்வாவின் இடத்தில் இருந்து வந்த கலவையான குரல்கள்.
முதலில் அவளைப் பார்த்தது கனிகா தான். “ஹே கியூட்டி பை.. வா.. வா..” என்று உற்சாகமாக வரவேற்க, அத்தனை பேரும் திரும்பினர் அவளை நோக்கி.
வியர்வையில் நெற்றி மீது தவழும் முடிக்கற்றைகள் ஒட்டி இருக்க, காதோரம் வடிந்த ஒற்றைத்துளி கூட கவிதையாய் தெரிந்தது அந்த காதலனுக்கு.
மென்னகையுடன் அவர்கள் அருகே வந்தவள், “என்ன ஸ்பெஷல்? ஆஃபீஸே களைக்கட்டுது..” என்று வினவிய படி, அவளது பையினை விஷ்வாவின் மேஜை மீது வைத்துவிட்டு அவன் இருக்கையை ஒட்டி நின்றாள்.
அத்தனை பேர்.. கிட்டத்தட்ட எட்டு பேர் குழுமி நிற்கும் இடத்தில் இயல்பாக சென்று அவன் அருகே நின்றதை, மற்றவர்கள் ஏன் அவளுமே உணராது இருக்கும் போது, நண்பர்கள் இருவர் மட்டும் உணர்ந்தனர். மகேஷ் மகிழ்ச்சியாக நண்பனை நோக்க அவனோ, ‘பார்த்த விழி பார்த்தபடி பூத்து கிடக்க.. பார்கவி பார்கவி..’ என்று பாடியபடி கனவு உலகத்தில் இருந்தான்.
யாருக்கும் தெரியாமல் நண்பனின் தோளில் அழுத்தமாக கரத்தினைப் பதித்தவன் சத்தம் இல்லாமல் குலுக்க, பரமானந்த நிலையில் இருந்து தரையிறக்கப்பட்ட கடும் கோபத்துடன் நெற்றிக்கண் திறந்தான் விஷ்வா.
“டிரான்ஸ்போர்ட் கூட ஆஃபீஸ் அரேஞ்ச் பண்றாங்க.. மார்னிங் இங்க வந்து அப்படியே எல்லாரும் பஸ்ல போறோம்..” என்று ஒவ்வொருவராக சொல்லிக் கொண்டிருக்க,
“நாங்க இவ்ளோ சொல்றோம் உன் முகத்தில் எந்த சந்தோஷத்தையும் காணோமே.. என்ன ஆச்சு கவி? ஏதும் ப்ராப்ளமா?” என்று கேட்டான் மகேஷ்.
“அப்படியெல்லாம் எதுவும் இல்ல மகேஷ்..” என்று வாய் வார்த்தைகள் சொல்ல, மனமோ இதற்கு தந்தையிடம் எப்படி சம்மதம் வாங்குவது என்று யோசித்துக் கொண்டிருந்தது.
“ஓகே கைஸ்… பேசின வரைக்கும் போதும்.. டைம் அப்.. சோ வேலைய பாருங்க..” என்று விஷ்வா சொல்ல கூட்டமும் சற்றே கலைந்தது.
“அப்பா கிட்ட எப்படி கேட்கிறது? விடுவாங்களா? முதல்ல அம்மா விடுவாங்களா இதுக்கெல்லாம்?” என்று பெற்றோரை எண்ணி முணுமுணுத்தவள் கைகள், தன்னிச்சையாக அலைபேசி எடுத்து தோழியர் இருவருக்கும் விஷயத்தை புலனத்தின் வழியாக சொல்லி இருந்தாள்.
“வாவ் மச்சி… என்ஜாய்..” என்று பத்மா அனுப்பி இருக்க
“ஏன் மச்சி எங்களையும் சேர்த்து கூட்டிட்டு போக முடியுமா? வாய்ப்பு இருக்கா?” என்று கேட்டு இருந்தாள் கங்கா.
“அட ஆமா மச்சி… மூணு பேரும் சேர்ந்து போன செம ஃபன்னா இருக்கும் கேட்டு பாரேன்..” மாற்றி மாற்றி செய்திகள் வந்துக் கொண்டிருக்க எதையும் கவனிக்கவில்லை பார்கவி.
தன்னிடத்தில் அமர்ந்து வேலைகளைச் செய்ய ஆரம்பித்த பொழுதும், அவள் கவனம் முழுவதுமாக அங்கு இல்லை என்பதை உணர்ந்தே இருந்தான் விஷ்வா. அவளாகச் சொல்லாமல் என்னவென்று கேட்பது என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தான்.
என்ன என்று கேட்பதற்கே அத்தனை யோசித்தவன், அவளை மொத்தமாக தன் கைகளுக்குள் பொத்தி வைத்து அணை
த்து அவள் அனுமதி இல்லாமலேயே, “ஷீ இஸ் மைன்..” என்று சொல்லாமல் சொல்லியதில் அதிர்ந்து போனது பார்கவியின் தேகம்.