கதிரவன் தன்னுடைய வெப்பக் கதிர்களை சுருக்கி… நிலவவளின் குளிர் கதிர்கள் பூமியைத் தழுவிட இடமளிக்கும் பின் மாலைப்பொழுது.
வீட்டின் முன்பிருந்த மதில் சுவரின் சிறிய கேட்டினை திறந்துகொண்டு உள் சென்ற குமரன், வீட்டின் வாயிற்கதவு பூட்டியிருப்பதைக் கண்டு தன்னுடைய பார்வையை சுழற்றினான்.
“கேட்டை பூட்டாமல் எங்கே போனாங்க? இன்னும் ஸ்கூல் விட்டே வரலையோ?” என தனக்குத்தானே கேள்வி கேட்டவனாக வீட்டின் பின்புறம் சென்றான்.
மொட்டை மாடிக்கு செல்லும் படிகள் அங்கிருக்க, அதில் ஏறினான்.
மாடியின் ஒரு பகுதி வெண்ணிலாவின் அறை. மற்றொரு பகுதி மொட்டை மாடி. வீட்டின் உள்ளிருந்து மேலேறி வந்தாள் வெண்ணிலாவின் அறையின் உட்பகுதிக்கு நேராக செல்லலாம். வெளியில் பின்பக்கமிருக்கும் படிகளில் மேலேறினாள் மொட்டை மாடி பரப்பினை கடந்து வெண்ணிலாவின் அறைக்கு வருவதைப்போல் அமைந்திருக்கும்.
மதில் சுவரின் இரும்பு கம்பி கதவுகள் திறந்திருந்ததாலே, வெண்ணிலா வந்துவிட்டாளோ என்று முன்பக்கம் பூட்டியிருக்க, அவளின் அறையில் இருப்பாளென யூகித்து பின் படிகள் வழியாக மாடிக்குச் சென்றான் குமரன்.
மாடியேறியவனை முதலில் வரவேற்றது, அங்கு பல வண்ணங்களில் பூத்து குலுங்கிய காசித்தும்பை மலர்கள் தான். அவனையும் அறியாது இதழில் மென்னகை பூத்தது.
அருகிலிருந்த மல்லிகை பந்தலில், அப்போது தான் மொட்டு மலர்ந்த மல்லிகை மணம் கமழ்ந்து அவ்விடத்தை அச்சூழலை ரம்மியமாக்கியது.
கண்மூடி வாசம் நுகர்ந்தான். மனதில் சொல்ல முடியாத இதம் பரவிட சில கணங்கள் அப்படியே நின்றுவிட்டான்.
உழைப்பின் பின்னால் ஓடிக்கொண்டே இருப்பவனுக்கு இத்தகைய தருணங்கள் எல்லாம் எளிதில் வாய்க்கப்பெறாதவை. அதனாலேயே தன்னை மறந்து நின்றிருந்தான்.
திடிரென சற்று வேகமாக காற்று வீசியதில்… தென்னை மரத்து ஓலைகளுக்கு இடையே எழுந்த சலசலப்பில் மோனைநிலை களைந்து தன்னிலை மீண்டான்.
“இவளும் இன்னும் வரலையா?” என்று நினைத்தபடியே, அலைப்பேசியை எடுத்து காந்தளிற்கு அழைக்க முயற்சித்தவாறு கீழிறங்கி, வீட்டின் முன்பக்கம் குமரன் வர… தன்னுடைய இருசக்கர வாகனத்தின் முன் சக்கரத்தை வைத்து இரும்பு கதவினை இடித்து திறந்தபடி உள்ளே வந்தாள் வெண்ணிலா.
பக்கவாட்டில் இருந்த சீதா மரத்தின் கீழ் வண்டியை நிறுத்தியவள், தன்னுடைய தோள் பையில் சாவியை தேடியவாறு வாசலின் முன்னிருந்த இரு படிகள் ஏறி கதவினை திறந்து உள் செல்லும் வரையிலும் அங்கே நின்றிருந்த குமரனை அவள் கவனிக்கவில்லை.
பையையும், கழுத்தில் அணிந்திருந்த கல்லூரி அடையாள அட்டையையும் வரவேற்பறை நீள்விருக்கையில் கிடத்தியவள், அலைப்பேசியை மின் இணைப்பில் சொருகி அங்கிருந்த மேசையின் மீது வைத்துவிட்டு… அடுக்களைக்குள் நுழைந்து, பாலினை அதற்குரிய பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் ஏற்றிய பின்னரே வறண்டிருந்த தொண்டையை நீரினை குடித்து குளிர வைத்தாள்.
அவளின் செயல்களை கவனித்தபடி குமரன் உள்ளே வந்து நீள்விருக்கையில் அமர்ந்திருந்தான்.
அந்த வெண்மை நிற ஆடையில் இன்று அவள் அவனின் கண்களுக்கு தேவதையெனக் காட்சியளித்தாள். சோர்வான முகமும் அத்தனை கலையாக இருப்பதாக உணர்ந்தான்.
தன் எண்ணம் போகும் பாதையை நொடியில் விரட்டி தூர எறிந்தான்.
‘இது அவள் தன்னை விரும்புகிறேன் என்று சொல்லியதனால் உண்டான சலனம். என்ன தான் உரிமை உள்ள உறவு பெண்ணாக இருந்தாலும், தன்னை நம்பி பழக விட்டிருக்கும் அத்தை காந்தளின் நம்பிக்கையை குலைத்து விடக்கூடாது’ என்று தனக்குத்தானே சொல்லி மனதை அடக்கி வைத்தான்.
“பால் கொதிக்கட்டும்… அதற்குள் ஃபிரஷாகி வரலாம்” என்று வாய்விட்டு சொல்லியபடி மாடியேறப் போனவள் ஏதோ நினைவு வந்தவளாக… தன்னுடைய அலைப்பேசியின் அருகில் சென்று, மின் இணைப்பு பொருத்தப்பட்டிருப்பதோடே காந்தளுக்கு அழைத்தாள்.
“என்னம்மா இன்னும் வரல?” என்று அவரின் வருகை குறித்து விசாரித்தவள், அவர் பதில் கூறும் முன்பே… “மாமா காஃபிப் பொடி இன்னைக்குத்தானே ஸ்டார்ட் செய்றாரு சொன்னாய்? ஒழுங்கா பர்ஸ்ட் அரைக்கும் பொடி வீட்டுக்கு வரணும் சொல்லு…” என்றாள்.
அந்தப்பக்கம் காந்தள் என்ன கூறினாரோ…
“உன் புள்ளை என் ஃபோன் அட்டெண்ட் பண்ணாக்கா நான் ஏன் மம்மி உன்கிட்ட சொல்லப்போறேன்? அனுப்புற மெசேஜ்க்கு ரிப்ளை கூட பண்ணமாட்டேங்கிறார் அந்த குறு மிளகு.” உதடு சுழித்தாள்.
………….
“ஆமாம் மிளகு தான். எப்பவும் ரொம்ப காரமாவே சுத்துறாரே… அப்போ சரியான பெயர் தான்” என்றவள் கூடத்தில் சட்டமாக அமர்ந்து ஒருவன் தன் பேச்சினை ரசித்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணராமலே மாடியேறிச் சென்றாள்.
வெண்ணிலா தன்னை குறு மிளகு என்று சொல்லியதோடு அதற்கான காரணத்தையும் சொல்லியிருக்க குமரனின் இதழின் ஓரம் மென் புன்னகை.
“வாலு…” மெதுவாக சொல்லிக்கொண்டான்.
பத்து நிமிடங்கள் சென்றும் வெண்ணிலா வராமலிருக்க… அடுக்களைக்குள் நுழைந்து அவனே காஃபி போட முனைந்தான்.
அங்கு சிறிய டப்பாவிலிருந்த பொடியை எடுத்தவன், என்ன நினைத்தானோ அதனை அப்படியே வைத்துவிட்டு வெளியில் சென்றான். இரண்டு நிமிடங்களில் திரும்பி வந்தவனின் கையில் அன்று புதிதாக தயாரிக்கப்பட்ட இரண்டு விதமான காஃபிப்பொடிகளும் அவனது கையில் வீற்றிருந்தது.
காந்தளுக்கு கொடுப்பதற்காக கொண்டு வந்ததை மறந்து தன்னுடைய ஜீப்பிலேயே வைத்திருந்தான். அதனைத்தான் இப்போது வெளியில் சென்று எடுத்து வந்தான்.
இரு கோப்பையில் இரண்டு தூள்கள் இட்டு இரு விதமான காஃபி கலந்து கொண்டிருக்கையில், குளித்து ஆடை மாற்றி நீள பாவடை மற்றும் சட்டையில் மாலையில் மலர்ந்த அந்தி மல்லியாய் அங்கு வந்தவள் தன்னுடைய கதிரவனை கண்டதும் சூரியகாந்தியென முகம் பிரகாசித்தாள்.
“எப்போ வந்தாங்கா?” என்றவளுக்கு கதவினை திறந்து போட்டு வைத்திருப்பது அப்போதுதான் கருத்தில் பதிந்தது.
‘அட்வைஸ் ஆரம்பிச்சிடுவாரே!’ என்று உள்ளுக்குள் அளறினாலும், மகிழ்ந்த முகமாக அவனருகில் சென்றாள்.
“எப்போ மாமா வந்தீங்க?”
நூலிழை இடைவெளியில் வந்து நின்றவளின் நெருக்கம் என்றுமில்லாத புதுவித அவஸ்த்தையை, நொடியில் தோற்றுவிக்க சற்று தள்ளி நின்றான்.
“அரை மணியாச்சு” என்று அவள் முகம் பாராது பதில் வழங்கினான்.
“அப்போ நான் வரும்போது?” யோசனையாக இழுத்தாள்.
“பொண்ணுங்க நேர் பார்வையாக நடக்கிறது தப்பில்லை. ஆனால் நம்மள சுற்றி என்ன நடக்குதுன்னும் பார்க்கணும். இப்படித்தான் வீட்டில் நுழைந்து ஒரு ஆள் உட்கார்ந்திருப்பதைக்கூட கவனியாது இருப்பாங்களா? பேசும் போது மொபைல் சார்ஜரில் இணைத்து பேசக்கூடாதுன்னு தெரியாதா?” காட்டமாகக் கேட்டவனின் பார்வை தான் ஆற்றிக் கொண்டிருக்கும் காஃபியின் மீதே நிலைத்திருந்தது.
‘நோட் பண்ணலையோன்னு நினைச்சேன்.’ வெளியில் அசடு வழிய உதட்டை இழுத்து வைத்தாள்.
“உங்க ஜீப்?”
“ரெண்டு வீடு தள்ளி பள்ளம் வெட்டியிருக்கு.” வெண்ணிலா வந்தது குமரன் வந்ததற்கு எதிர்திசை, அதனால் அவளுக்கு பள்ளமும், அதன் காரணமாக அவர்கள் வீட்டிற்கு தள்ளியே நிறுத்தப்பட்டிருந்த அவனது வண்டியும் கண்ணில் படவில்லை.
“முகத்தை பார்த்து பேசமாட்டியா மாமா? என்னவோ நான் உன்னை தொட்டதே இல்லைங்கிற மாதிரி கிட்ட வந்ததும் தள்ளிப்போற?” எனக் கேட்டவள் அவனை உரசி நின்றாள்.
வெண்ணிலா பிறந்தது முதல் அவளது ஸ்பரிசத்தை கையில் உணர்ந்திருக்கிறான். ஆனால் இன்று எல்லாம் புதிதாய். அவனுள் மாயமாய் பல உணர்வுகள். இன்னதென்று வடிவம் பெறா உருவமாய்.
தன் பேச்சினை தன்னுடைய மனமே கேட்காத இயலாமை. சிறு பெண் காதலென்று கூறியதால் தனக்குள் ஏற்படும் மாறுபாட்டை அவனால் ஏற்க முடியவில்லை. இது அவனது காதலின் முதல் நிலை என அறியாதவனுக்கு தன்மீதே கோபமாக வந்தது.
‘சிறியவள் பிதற்றினாள் புத்தி சொல்லி விலாகாது தானும் ஒப்புக்கொள்ள வேண்டுமா?’ அவளிடம் நெருங்கத் துடிக்கும் மனதின் கட்டுப்பாடற்ற நிலை அவனை வெளியில் அவளிடம் சீற வைத்தது.
“தள்ளி நில்லுடி.”
அவனது டி என்ற விளிப்பை அவன் உணர்ந்தானோ இல்லையோ அவள் உணர்ந்தாள். எப்போதும் அவன் சொல்லியதில்லை.
அம்மாடி என்ற அன்பு நிறைந்த விளிப்பே அவனுடையது. வார்த்தையின் முடிவில் ‘டா’ என்றோ ‘ம்மா’ என்றோ ஆதுரமாக அழைப்பவனின் உரிமையின் மாற்றம் அவனது ஒற்றை எழுத்தில் அவளுக்கு விளங்கிற்று. அவனுக்கு?
வெண்ணிலா அசையாது நின்றிட… மீண்டும் அவன் தான் இரண்டடி விலகிச் சென்றான்.
இப்போது வெண்ணிலா முறைத்து பார்த்தாள்.
உன் பார்வையெல்லாம் என்னை ஒன்றும் செய்திடாதென்ற அலட்சியம் அவனிடம். ஆனால் உண்மையில் அவளருகில் இதயம் மண்டியிடும் உணர்வு அவனுள்.
அவள் முன் ஒரு கோப்பையை நீட்டினான்.
அவள் வாங்காது இருக்க… அவன் நீட்டியபடியே இருந்தான்.
“ம்ப்ச்… பிடி வெண்ணிலா…”
அவளின் அருகிலிருந்து விலக வேண்டுமென்கிற வேகம் குமரனிடம்.
“எப்போ ஓகே சொல்லுவீங்க மாமா?”
அவனாக சொல்லும்வரை கேட்கக்கூடாது என்றிருந்தவளின் காதல் மனம் அவனை கண்டதும் அதை கேட்டிடத்தான் முண்டியடித்தது. தன்னைப்போல் கேட்டும் விட்டாள்.
கண்ணோடு கண் கலந்து, ஓர் ஆழ்ந்த பார்வை.
“இங்கு நான் வந்திருக்கவேக்கூடாது போல” என்றவன், “இனியும் வரணுமா? வேண்டாமா? நீயே முடிவு பண்ணிக்கோ!” என்றான்.
தான் கேட்ட கேள்விக்கு இல்லையென்றோ ஆமாமென்றோ அவன் சொல்லாததே பெருத்த நிம்மதியாக இருந்தது.
உன்னைப்போல் எண்ணம் எனக்கு இல்லையென்று சொல்லிவிட்டால், அதற்கு மேல் கெஞ்சி நிற்கும் நிலை வந்துவிடவேக் கூடாதென நினைப்பு அவளுக்கு. காதலை யாசகமாக பெற முடியுமா? கேட்டால் கிடைக்கக்கூடியதா? ஆனால் அவளவன் அவளை அந்நிலையில் தான் நிறுத்தப்போகிறான் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை.
முகம் சுருங்கிட திரும்பியவள் வரவேற்பறை நோக்கி நகர்ந்திட…
“இதை வாங்கிட்டு போ” என்றான்.
அவள் திரும்பி என்னவென பார்த்திட,
குளம்பி கோப்பையை முன் நீட்டியபடி, “நம்ம ஆலையில் தயார் பண்ணது. டேஸ்ட் எப்படியிருக்கு சொல்லு?” என்க, வெண்ணிலா கோப்பையை வாங்குவதற்கு ஏதுவாக தன்னுடைய வலது கையை நீட்டினாள்.
வெண்ணிலாவின் மணிக்கட்டின் முன் புறம் நவீன பச்சையால் (டாட்டூ) கருப்பு நிறத்தில் எதையோ வரைந்திருந்தாள்.
பார்த்ததும் என்னவென்று அவனுக்கு புரியவில்லை. இத்தனை நாட்களாக அது இல்லை. தான் பேசிடாத இந்த ஒரு மாத காலத்தில் என்றோ இதனை வரைந்திருக்க வேண்டுமென்று யூகித்தவனின் பார்வையெல்லாம் அந்த டாட்டூவின் மீதே.
தானாக வாய் திறந்து கேட்டும் குமரன் பதில் சொல்லாத வருத்தத்தில் இருந்தவள் அவனின் ஆராய்ச்சியான பார்வையை கவனிக்கவில்லை.
கோப்பையை வாங்கியவள், வரவேற்பறை சென்றிட அவள் கையில் வரைந்திருப்பதற்கான அர்த்தம் ஓரளவு யூகிக்க முடிந்த பின்னரே அவனும் சென்றான்.
சுவைக்கும் நேரம் இருவருக்கும் மௌனமாகவே கடந்தது.
இறுதி சொட்டு வரை ரசித்து குடித்தவள்,
“டேஸ்ட் புதிதா ரொம்ப நல்லாயிருக்கு மாமா. நம்ம ஆலையில் ஏலக்காய் ஃபிரியா கிடைக்குதுன்னு தாரளமாக மிக்ஸ் பண்ணியிருக்கீங்க போல, சுக்கு, கிராம்பு, பட்டை, அதிமதுரம் எல்லாம் சேர்த்து ஆயுர்வேதம் வகையில் இருக்கு. எல்லாத்தோட ருசியையும் ஃபீல் பண்ண முடியுது” என்றவளுக்கு உண்மையிலேயே அதன் சுவை மிகவும் பிடித்திருந்தது. அது அவள் காஃபியை பருகிய விதத்திலேயே குமரன் கண்டு கொண்டான்.
“ம்” என்றவன் அவளிடம் இன்னொரு கோப்பையை கொடுத்தான்.
“இன்னொன்னா?”
“ம்… இதையும் டேஸ்ட் பண்ணு. இது இன்னொரு வகை.”
“ஹோ…” வாங்கி குடித்தவளுக்கு இதன் சுவையும் அருமையாகவே இருந்தது.
“இது மைல்டா கசக்குது. ஆனாலும் நல்லாயிருக்கு” என்றாள்.
“இது சிக்ரி மிக்ஸ்டு. முதலில் குடித்தது சிக்ரி இல்லை. ஆனால் அதனுடன் சேர்ந்த மற்ற பொருட்கள் கசப்பை டாமினேட் பண்ணிடுச்சு” என்று விளக்கினான்.
அவளுக்கு அவனுடையை தொழிலைப்பற்றி அவன் ரசித்துக் கூறுவதில் அத்தனை பிடித்தம். அவனுக்கும் அவளிடம் சொல்வதென்றால் கூடுதல் முனைப்பு. இருவருக்குள்ளும் நிறைய பேச்சுக்கள் இருக்கும். அவரவர் துறை பற்றி ஒருவருக்கொருவர் சலிக்காது பேசிய நாட்கள் அதிகம்.
பல நாட்களுக்குப் பின்னர் அந்த நாள் கிடைத்ததாகவே எண்ணினர். இருந்தபோதிலும் தற்போதைய நிலையில் வேறு எதைப்பற்றி பேசிட என்றும் தெரியாது மீண்டும் ஆழ்ந்த அமைதி இருவரிடையேயும்.
காலி கோப்பை கையிலிருக்க அதனையே வெறித்திருந்தாள் வெண்ணிலா.
என்னதான் காதலில்லை என்று அவன் சொல்லிக்கொண்டாலும், அவனது கண்கள் அவளிடமே தஞ்சம் புகுந்தது. அவனால் தடுக்க முடியவில்லை என்பதே நிதர்சனம். மனதிற்கு சில உணர்வுகள் கட்டுப்பாட்டில் அடங்காதவை. அவற்றுள் இந்த காதல் பிரத்யேகமானது அல்லவா? அதனை அவன் உணரும் நாள் எந்நாளோ?
எவ்வளவு நேரம் தான் அவளும் வெறும் கோப்பையை பார்த்திருப்பாள்?
தனக்கு முன்னிருந்த டீபாயின் மீது கோப்பையை வைத்தவளின் கையை நன்றாக ஊன்றி கவனித்தவன்,
“என்னதிது?” என்று அவளது கையில் வரைந்திருந்த டாட்டூவை சுட்டி வினவினான்.
வெண்ணிலாவின் தடுமாற்றம் எல்லாம் ஒரு நொடி தான்…
“கதிர் நிலவு” என்றவள் அரை நிலவின் உட்புறம் ஒளிரும் கதிராய் தீட்டியிருந்த டாட்டூவை மற்ற கையின் ஒற்றை விரலால் வருடியவாறே “நிலவு சூரியனின் கதிரில் அடங்கிப் போவது இயற்கையின் நியதியாக இருக்கலாம்… ஆனால் இங்கு, நிஜத்தில் இந்த கதிர் எப்பவும் இந்த வெண்ணிலாவுக்குள் தான் அடக்கம்” என்று சொல்லியவளின் கண்களில் தான் எத்தனை காதல்?
பார்ப்பவனுக்கே மூச்சு முட்டும் போலிருந்தது.
அவளது முகத்தில் இருக்கும் ரசனை, ஒளியெல்லாம் உண்மையிலேயே அவளுள் அவனை, உணர்வுகளால் அவள் காட்டிடும் காதலுக்கு அடங்கிப்போக வைப்பதாகத்தான் அக்கணம் தோன்றியது.
“நிலவுக்குள் கதிர் இருப்பதைப்போல்… எனக்குள் உன்னை, அதாவது இந்த வெண்ணிலாக்குள் கதிரை பொத்தி வச்சிக்கணும்.” வெறும் வார்த்தையில், குரலில் அத்தனை காதலை காட்டிட முடியுமா. மொத்தமாக கதிர்குமரனுக்கு தன்னுடைய இதயம் அவளிடம் மண்டியிடும் உணர்வு.
அவள் சொல்லிய விதத்தில் மொத்தமாக சரணடைந்து போனான். ஆனால் அலைபாயும் மனதை ஏனோ தட்டி அடக்கினான்.
“நல்லாயிருக்குல மாமா?”
ரசனையாக அதனை பார்த்து தடவியபடியே வெண்ணிலா வினவிட…
“நல்லாயில்லை.” பட்டென்று முகத்தில் அடித்தது போல் கூறியிருந்தான்.
கல்லூரி படிப்பை முடித்துவிடாதா சிறு பெண் காதலென்று பிதற்றுவது அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அவனுக்கு அவளது காதல் வார்த்தைகள் யாவும் வெறும் பிதற்றலாகத்தான் தெரிந்தது. அதற்கு தான் காரணமென நினைக்கையில் தன்மீதே கோபம் கோபமாக வந்தது.
அதனை ஒற்றை வார்த்தையில் அழுத்தமாகக் காட்டியிருந்தான்.
விலக்கி வைக்க நினைப்பவனால் ஏனோ விலக முடியவில்லை என்பதையே ஏற்க முடியாது போனது.
பூரிப்பாக இருந்த அவளின் முகம் நொடியில் சின்னதாகிப்போனது. ஆனால் இதற்கெல்லாம் அசரும் ஆள் அவளில்லையே!
“எனக்கு பிடிச்சா போதும் கதிர் மாமா” என்றவள், “இப்படியெல்லாம் முகத்தை உர்ருன்னு காட்டினால், பயந்து வேண்டான்னு போயிடுவன்னு நினைச்சிங்களா… நெவர்” என குமரனின் கண்களுக்கு நேரே சுட்டு விரலை இடவலமாக ஆட்டி, தோள் குலுக்கினாள்.
அதில் அவனுக்கு ஆயசாமாக வந்த போதும் முறைத்தபடியே இருந்தான்.
“நீங்க எனக்கு முறை மாமா… அதனால் இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவே முறைக்கலாம் தப்பில்லை” என்று அவனை சீண்டினாள்.
இப்படிப்பட்ட பேச்சுக்கள் அவர்களுக்கிடையே முற்றிலும் புதிது. அவளது பேச்சு கிண்டல் எல்லாம் அவனுக்கும் பிடித்துதான் இருக்கிறது. ஆனாலும் ஏதோ கண்ணுக்கு தெரியாத திரை அவனிடம். அவளை வயது முதிர்ந்த பெண்ணாக அவனால் பார்க்க முடியவில்லை.
“அத்தை ஒரு கனவோடு உன்னை படிக்க வைக்குறாங்க… அவங்களை ஏமாத்திடாதே!” குமரனுக்கு எதை சொல்லி மறுப்பதென தெரியாது அந்நேரம் தோன்றியதை பேசினான்.
“படிக்கிற யாரும் லவ் பன்றது இல்லையா மாமா? இல்லை, லவ் பன்ற யாரும் படிக்க மாட்டங்களா?” என கூர்மையாக அவனை பார்த்து கேட்டவளுக்கு அவனிடம் பதிலில்லை.
“சும்மா எதையாவது காரணம் சொல்லி என் மனசை மாத்தலாம் நினைக்காத மாமா, முடிஞ்சா எனக்கேத்த மாதிரி நீ மாறிக்கோ” என்றவள் சட்டென்று எட்டி அவனின் மீசை நுனியை பிடித்து இழுத்திருந்தாள்.
“ஏய்…” அவளின் செயலுக்கெல்லாம் அவன் கண்டனம் தெரிவிக்கவில்லை. மாறாக வலியிலேயே சன்னமாகக் கத்தியிருந்தான்.
“என்ன மாமா இதுக்கே இப்படி கத்துற?” என்றவள், “நீ முறுக்கிவிட்டு நடந்து வரும்போது எனக்கு இதை பிடிச்சு இழுக்கணும் ரொம்ப நாள் ஆசை” என்றாள்.
அவன் மறுக்க மறுக்க அவள் தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் காதலை கொட்டி கவிழ்த்தாள்.
உள்ளுக்குள் பிடித்திருக்கிறது. ரசித்தாலும் வெளியில் விறைப்பாக முகத்தை வைத்துக்கொண்டு,
“முதலில் இதை ட்ரிம் பண்ணனும்” என்று அவளுக்கு கேட்குமாறே முனகினான்.
“பண்ணிக்கோ மாமா… உன் ஷார்ப் மீசை உன்னை எக்ஸ்ட்ரா அழகா காட்டுது. சோ, ட்ரிம் பண்ணிக்கோ. உன்னை சைட் அடிக்க நினைக்குற பொண்ணுங்க லிஸ்ட் கொஞ்சம் கம்மியாகும்.”
அவனுக்கு அப்படியே திரும்பி சுவற்றில் முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது.
என்ன சொன்னாலும் காதலிலேயே வந்து நிற்கின்றாளே! அவனும் என்னதான் செய்வான்.
“அம்மாடி, சொல்றதை புரிஞ்சிக்கோடாம்மா! இதெல்லாம் நமக்கு செட்டாகாது. அத்தை என்ன நினைப்பாங்க? தாத்தா, அப்பத்தாவிற்கெல்லாம் தெரிந்தால் வருத்தப்படுவாங்க” என்று சற்று தன்மையாக எடுத்துக் கூறினான்.
குமரனுக்கு இங்கு வரும்போது அவளிடம் இத்தனை நேரம் பேசிக்கொண்டிருக்க வேண்டும், காதல் இல்லை என்பதை புரிய வைத்திட வேண்டுமென்ற எண்ணமெல்லாம் இல்லை.
வெண்ணிலா பிறந்தது முதல் உண்டான நேசமான உறவாயிற்றே. அவனே எதிர்பாராமல் நீண்ட நேரம் இதைப்பற்றி மட்டுமே பேசும்படி ஆகிவிட்டது. அவள் சொல்வதற்கெல்லாம் மறுத்துக்கொண்டே இருந்தாலும், அவனும் அவனை அறியாது அக்கணத்தை விரும்பித்தான் அவளுடன் கடத்தினான்.
ஆனால் நேரம் செல்ல செல்ல அவனுக்குள் இனம் புரியா ஒருவித தடுமாற்றம் நெஞ்சின் உள்ளே மேலெழும்புவதை உணர முடிந்தது. இதற்குமேல் இது நீடித்தால்… தானே தனக்கு எதிராகிவிடுவோம் என்பது அவனுக்கு திண்ணம்.
அதனாலேயே இறுதியாக அழுத்தமாக அதேநேரம் தன்மையாக குடும்பத்தை காரணம் காட்டி பேசினான்.
அவளோ தன்னிலையில் அவனைவிட அழுத்தமாக இருந்தாள்.
“உங்களுக்கு செட்டாகாது சொல்லுங்க மாமா… அதுகெதுக்கு அம்மா, அம்மாச்சிலாம் காரணம் காட்டுறீங்க? உங்களுக்கு என்னை பிடிக்கல தானே? விடுங்க” என்றவள் மேற்கொண்ட என்ன சொல்லியிருப்பாளோ காந்தளின் வருகை இருவரது விவாதத்துக்கும் தற்காலிக முடிவை கொடுத்து அவர்களின் பேச்சினை ஒத்தி வைத்தது.