அவனது இடத்தில் அமர்ந்து கணினியில் முகத்தைப் புதைத்து, மிக கவனமாக வேலை பார்த்துக்கொண்டு இருந்த விஷ்வாவையே குறுகுறுவென்று பார்த்தான் மகேஷ்.
அதைக் கவனிக்க வேண்டியவனோ சட்டை செய்யாமல் இருக்க, அருகில் வந்த பார்த்திபன், “அங்கே என்ன தெரிகிறது?” என்று கேட்டு அவன் காதுக்குள் காற்றை ஊதிவிட்டு வெறுப்பேற்ற, “அப்பாலே போ சைத்தானே..” என அவன் முதுகில் இரண்டு அடி போட்டான் மகேஷ்.
“என்ன பாஸ்? என்ன ஆச்சு? எதுக்கு இப்போ முறப்பொண்ண பாக்குறது போல அவர சைட் அடிச்சிட்டு இருக்கீங்க?” என்று பார்த்திபன் கேட்க,
“செம்ம ஹேண்ட்ஸமா இருக்கான்ல.. அதான் அவன் அழகுல மயங்கி பாத்துட்டு இருக்கேன்..” என்று பற்களை நறநறத்தபடி கோபமாக மகேஷ் கூற,
“ஹேண்ட்ஸமா? அழகுல மயங்கியா! பாஸ் அவனா நீங்க?” என்று எட்டி நின்று பார்த்திபன் கலாட்டா செய்ய,
“அடிங்க… நானே அவனை முறைச்சிக்கிட்டு இருக்கேன்.. மொற பொண்ண பாக்குறேன்.. முறை வாசல் பண்றேன்னு சொல்லிட்டு இருக்க..” என்று கூறியபடி அவன் மீது ‘பென் ஸ்டாண்டை’ விட்டெரிய, பார்த்திபன் விலகிக் கொள்ள, அது கனிகாவின் பின்னங்கழுத்தின் மீது விழுந்ததில், அவள் காளியாக முறைத்தாள் மகேஷையும் பார்த்திபனையும்.
சரமாரியாக இருவரையும் திட்ட ஆரம்பித்தாள் கனிகா.
“என்ன பாஸ் இந்த பேச்சு பேசுது இந்த பிள்ளை? இந்த பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா உங்களுக்கு?” என்று மேடை ரகசியமாக பார்த்திபன் கேட்க, அதில் ஒரு நொடி மகேஷை உக்கிர பார்வை கனிகா பார்த்து வைக்க,
“அடேய் பால்டாயில் வாயா உனக்கு என்ன டா பாவம் பண்ணேன்? இப்படி கோர்த்து விடுற.. ஆத்தி பாக்குறாளே! பாக்குறாளே.. நா என்ன பண்ணுவேன்?” என்று மகேஷ் கதற,
இதை எல்லாம் கண்டும் காணாதது போல் மலர்ந்த புன்னகையோடு வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த விஷ்வாவின் இதழ்கள் சட்டென மடிந்தன பார்கவியின் வருகையில்.
“கட்டிப்புடிச்சு நின்னவனெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டேங்கிறாங்க.. ஸ்டாண்ட் விட்டு அடிச்சதுக்கு இந்த பேச்சு பேசுறா.. இதுக்கு பேரு தான் மாமியார் உடைச்சா மண் குடம் மருமக உடச்சா பொன் குடங்கறதா?” என்று முணுமுணுக்க, விஷ்வாவின் அக்கினி பார்வை அவனை எரித்தது.
பார்கவியின் பார்வை மகேசைத் தாண்டி, விஷ்வாவைத் துளைத்துச் சென்றது.
“வாடா பார்த்தி… இங்க வாஸ்து சரி இல்ல.. நம்ம போய் ஆறிப்போன காபி குடிச்சிட்டு வரலாம்..” என்று பார்த்திபனின் தோளில் கைப்போட்டு இழுத்துக் கொண்டு சென்றான்.
“பாஸ்.. பாஸ்.. எனக்கு கோல்ட் காபி எல்லாம் பிடிக்காது பாஸ்..” என்று பார்த்திபன் கதற கதற இழுத்துக் கொண்டு சென்றான் அலுவலக கேண்டினுக்கு.
ரிசார்ட் சென்று வந்து இரண்டு வாரங்கள் கடந்திருந்தது. இன்று வரை பார்கவியின் கண்கள் விஷ்வாவை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இன்னும் இன்னும் அதிகமாய் கூட்டுக்குள்ளே ஒடுங்கிக் கொண்டாள் பெண். விஷ்வாவும் தன் போக்கில் வேலைகளைச் செய்ய, பார்கவியும் அதையே பின்பற்றினாள்.
அன்று, விஷ்வா மார்புக்குள் தன்னை பொத்தி வைத்து சொல்லிய காதலின் கணம் தாங்காது, கண்களில் கண்ணீர் வழிய நின்றவளை எதுவும் சொல்லாது விடுவித்தவன் விறுவிறுவென்று அங்கிருந்து நடந்து சென்றான்.
கண்மூடித் திறப்பதற்குள் அனைத்தும் நடந்தேறி இருக்க, சுற்றி இருந்தவர்கள் தான் ஸ்தம்பித்துப் போனார்கள்.
பார்கவி நின்று இடத்திலேயே நின்று இருக்க, அவளுக்கு எதிர் புறமாக சென்றுக் கொண்டிருந்தான் மகேஷ். எந்த பக்கம் செல்வது என்று தெரியாமல் விழித்தவன், கனிகாவை, பார்கவி பக்கம் அனுப்பிவிட்டு நண்பனை பின்தொடர்ந்து ஓடினான்.
“இவன் கண்ண காட்டினா நான் போய் நிற்கணுமா? நான் என்ன இவன் பொண்டாட்டியா? ஆளயும் மண்டையும் பாரு..” என்று புலம்பிக் கொண்டே பார்கவியிடம் வந்த கனிகா, எதுவும் பேசாமல் அங்கே இருந்த இருக்கையில் அமர வைத்து தண்ணீரை வலுக்கட்டாயமாக கையைப் பிடித்துக் கொடுத்துக் குடிக்கச் சொன்னாள்.
அதிர்ந்து போய் இருந்த பார்கவி, அப்பொழுது தான் நிகழ்காலத்திற்கு வந்தவளாக தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.
சற்று நேரம் அழவிட்ட கனிகா, “போதும் கவி… அழுறத கொஞ்சம் நிறுத்து.. இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே அழுதுட்டு இருக்க போற? நீ அழுது அழுது மூஞ்சி வீங்கி… பாக்குறவங்க எல்லாரும் என்ன ஏதுன்னு கேக்க போறாங்க..” என்று அதட்டிய பிறகே அழுகை குறைய, நீரை எடுத்து மீண்டும் அவள் கைகளில் கொடுத்தாள் கனிகா.
“விஷ்வாவுக்கு கோவம் வரும்றதே இன்னைக்கு தான் தெரியும்.. இதுல மனுஷன் இப்படி லவ் ப்ரொபோஸ் பண்ணுவாருன்னு நான் கனவுலயும் நினைக்கல… ஆனாலும் மாஸ்ல மனுஷன்!” என்று கனிகா செல்ல, இறுகிப்போனது பார்கவியின் உடல்.
ஆரவாரமாக ஆரம்பித்த சனிக்கிழமை, அத்தனை அமைதியாக முடியும் என்று அந்த பத்து பேருக்கும் தெரிந்திருக்கவில்லை. இரவு உணவைப் பெயருக்குக் கொறித்து விட்டு மீண்டும் பேருந்தில் ஏறியவர்கள் பயணம் அவரவர் தங்கும் இடத்தில் முடிந்தது. விஷ்வா, மகேஷ் தங்கி இருக்கும் இடத்தைக் கடந்து தான் பார்கவியின் கல்லூரி விடுதி இருந்தது.
ஆனாலும் அவளைத் தனியே விட மனமில்லாமல் அவளோடே பயணம் செய்தவர்கள், அவள் இறங்கிய பிறகு மீண்டும் வேறு வாகனம் பிடித்து அவர்கள் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை சோம்பலாக கழிய திங்கள் கிழமை வரவேண்டிய பார்கவி வரவில்லை. அதற்கு பதிலாக விஷ்வாவின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு கடிதம் மட்டுமே வந்தது. திறந்து பார்ப்பதற்குள் விஷ்வாவின் இதயம் மூன்று மடங்கு வேகவேகமாக அதிர்ந்தது.
“ஒரு வேள வேலையை விட்டு நின்னுட்டாளோ? அதுக்குத்தான் மெயில் அனுப்பி இருக்காளா?”
அவனை அதிர வைத்த அந்த மின்னஞ்சல், விடுப்பு கேட்டு அவள் அனுப்பி இருந்தது. அதன் பின்னரே அவனால் இயல்பாக சுவாசிக்க முடிந்தது.
கனிகா அழைத்து பேசியதில் 104 டிகிரி காய்ச்சலில் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது விஷ்வாவிற்கு. ஒரு நொடி விஷ்வாவின் முகத்தில் நிழல் படிய, “எப்படினாலும் சொல்லித்தான் ஆகணும்.. அவளைத் தானே கல்யாணம் பண்ணிக்க போறோம்? என்னைக்கு சொன்னாலும் இந்த தொட்டா சிணுங்கிக்கு இப்படித்தான் ஆகும்..” என்று அவளைப் பார்க்கத் துடித்த மனதை அடக்கிக் கொண்டு விலகி நின்றான்.
வியாழக்கிழமை அலுவலகம் வந்தவள் குனிந்த தலை நிமிராமல், எவரையும் எதிர் நோக்க முடியாமல் அமர்ந்திருந்தாள். நொடியில் உச்சி முதல் பாதம் வரை அவளைக் கவனித்தவனின் பார்வை சற்றே கலங்கியது. மொத்தமாக வாடியிருந்தாள்.
நண்பர்கள் அனைவரும் வந்து அவள் நலம் விசாரித்துச் சென்ற போதும், ஓரிரு வார்த்தைகள் பேசினாளே தவிர, பிறருடன் பேசுவதை முற்றிலுமாக தவிர்க்க முயன்றாள் பார்கவி.
அவள் கையில் இறுகப் பிடித்து இருந்த அலைபேசி கிர் என்று அதிர தூக்கி வாரி போட்டது பார்கவிக்கு. எடுத்துப் பார்த்தவர்களுக்கு இப்பொழுது கோபம் தான் வந்தது.
“இப்ப எதுக்கு அசோக வனத்து சீத மாதிரி மூஞ்ச தூக்கி வச்சுட்டு உட்கார்ந்து இருக்க டி?”
“என்னைக்கா இருந்தாலும் சொல்ல வேண்டியதுதான்.. எனக்கு வைஃப்னா அது நீதான்.. அதத்தான சொன்னேன்.. என்ன இப்படி சொல்ல நினைக்கல.. அன்னைக்கு சிட்டுவேஷன் அப்படி சொல்ற மாதிரி ஆயிடுச்சு..”
“திரும்பத் திரும்ப சொல்ல முடியாது.. ஐ லவ் யூ.. நீ லவ் பண்றியா லவ் பண்ணலையானு நான் கேட்கல.. நான் லவ் பண்றேன்னு தான் சொல்றேன்.. அன்னைக்கு நடந்தததுக்கும், இப்ப நான் சொல்றதிலும் உன்னோட பங்கு ஒன்னுமே கிடையாது.. இதுக்காக உன்னை நீயே கில்ட்டியா நினைச்சுக்காத.. நீ எந்த தப்பும் பண்ணல சரியா? சோ யாரையும் பேஸ் பண்ண தயங்காத..”
என்று வரிசையாக குறுஞ்செய்திகள் அதிர, ‘செய்றதையும் செஞ்சுட்டு வியாக்கியானம் வேற பேசுறான் பாரு..’ என்று மனதுக்குள் அர்ச்சித்தாள். என்றாலும் அவன் சொல்லியதில் மனம் அமைதியாக அதற்கு அடுத்த நாட்களில் அவனைத் தவிர மற்ற எல்லோரிடமும் சகஜமாக பேச ஆரம்பித்து இருந்தாள்.
பார்கவி தன்னைத் தவிர்ப்பதை உணர்ந்து, அவள் தேறி வர கொடுத்த அவகாசம் போதும் என்று எண்ணிய விஷ்வா, வேண்டும் என்றே அவளோடு வம்புக்கு நின்றான்.
அவளுக்கான பணிகளை ஸ்டெல்லா மற்றும் வினித்துடன் சேர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்கள் இருவரின் பணியை ஏற்றுக் கொள்பவன், இவள் செய்யும் வேலைகளில் ஆயிரம் குறைகளை கூற ஆரம்பித்தான். அவனே நிவர்த்தி செய்யக்கூடிய சிறு சிறு பிழைகள் தான் என்றாலும், அவளைப் பேச வைப்பதற்காக ஒவ்வொன்றாய் சுட்டிக்காட்டி அவளிடம் திருப்பி அனுப்பி வைத்தான்.
அவளுக்குள் மாற்றங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தான் விஷ்வா என்பதை அவள் உணராவிட்டாலும் அவன் மிகத் தெளிவாக உணர்ந்துக் கொண்டான். மற்றவர்களிடத்தில் எப்பொழுதும் போல பேசினாள். விஷ்வாவிடம் பேசும் பொழுது மட்டும் முதலில் தயக்கம் வந்து, இப்பொழுது எல்லாம் கோபம் வருகிறது.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் அன்று பொங்கி விட்டாள். மாலை விரைந்துக் கிளம்ப வேண்டும் என்று அவசர அவசரமாக வேலைகளைச் செய்து முடித்து விஷ்வாவிற்கு அனுப்ப, திருப்பி அனுப்பினான் சிறு புன்னகையோடு.
ஒரு சிறு பிழை தான் அது. ஆனால் கவனிக்காமல் விட்டால் பெரிதாக அந்தத் திட்டத்தையே பாதிக்க கூடிய அளவில் வந்து நிற்கும். மற்றவர்கள் என்றால் அவனே செய்திருப்பான். அவளே கண்டுபிடித்து திருத்திக் கொண்டால், அவளுக்கு அது ஒரு பயிற்சியாக இருக்கும் என்று எண்ணியே அனுப்பி இருந்தான்.
“எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு.. நீங்க அளவு மீறி போயிட்டு இருக்கீங்க.. ஒன்னுமே இல்லாத விஷயத்துக்கு திருப்பி அனுப்புறீங்க.. இதுல என்ன தப்பு இருக்கு? என்ன நெனச்சிட்டு இருக்கீங்க நீங்க?” என்று பார்கவி படபடக்க, பார்த்துக் கொண்டிருந்தவனுக்குத் தான் புன்னகை ஒன்று உருவானது.
“என்ன சொன்ன?” உச்சி முதல் பாதம் வரை அழுத்தமாய் அவளைப் பார்க்க, பார்கவியின் முகம் சிவந்தது கோபத்தினாலா? வெட்கத்தினாலா! என்பதை அவள் மட்டுமே சொல்ல முடியும்.
கீழ் இதழ் கடித்து அவள் தன்னை சமாளித்துக் கொள்ள, பார்வையால் வருடியவன் அவள் விழிகளை பார்த்தபடி, “லிசன் ஒண்ணுமே இல்லாத விஷயமா இது?” என்று அழுத்தமாக கேட்டு, அவள் புறமாக கணினியைத் திருப்பி அவள் செய்திருக்கும் பிழையைச் சுட்டிக்காட்டி இதனால் பின்வரும் பிரச்சனைகளை எடுத்துக் கூற, ‘ஐயோ’ என்று ஆனது பார்கவிக்கு. எத்தனை பெரிய தவறு அது என்பது அப்பொழுதுதான் அவளுக்கு விளங்கியது. தப்பு செய்த குழந்தையாய் திருத்திருவென்று விழித்தபடி, “சாரி..” என்றாள் உள்ளே போன குரலில்.
இப்பொழுது அவள் இருக்கையை தன்னை நோக்கி இழுத்தவன்,
“அப்புறம் என்ன கேட்ட? என்ன நெனச்சிட்டு இருக்கீங்க நீங்க.. இதைத்தானே கேட்ட? உன்ன தான் நினைச்சுட்டு இருக்கேன்னு உனக்கே தெரியும்.. திரும்பத் திரும்ப கேட்டா என்னடி அர்த்தம்?” என்று கேட்டான் அழுத்தமான குரலில்.
“ஹலோ.. என்ன ரொம்ப ஓவரா பேசுறீங்க? என்ன சும்மா சும்மா லவ் பண்றேன்.. உன்ன தான் நினைச்சுட்டு இருக்கேன்னு சொல்றீங்க? டி போட்டு வேற பேசுறீங்க.. அமைதியா இருந்தா உங்க இஷ்டத்துக்கு பேசுவீங்களா?” என்று எகிறி குதிக்க, உச்சி மேட்டுக்கு சென்றது அவன் புருவங்கள்.
“நாட் பேட் பேபி… நல்லாவே சண்டை போடுற… ஆனா ஒரு விஷயம் உனக்கு நான் சொல்லியே ஆகணும்… சாரி கேக்கணும்…
அன்னைக்கு எனக்கு பதிலா வேற யாராவது உன்னை கட்டி பிடிச்சிருந்தா என்ன டி பண்ணுவ? அப்படித்தான் எதுவுமே சொல்ல முடியாம அமைதியா நின்னு இருப்பியா?” என்று அவள் கண்களை ஊடுருவி கேட்டான்.
‘ஆமால்ல! எதுக்கு நான் அமைதியா இருந்தேன்? எதுக்கு இவன தள்ளி விடல? எதுக்கு கட்டிப்பிடிச்சு நின்னுட்டு இருந்தேன்? ஒருவேளை இவன் சொல்ற மாதிரி வேற யாராவது இருந்திருந்தா என்ன செஞ்சிருப்பேன் நான்? செருப்ப கழட்டி அடிச்சிருப்பேன்… வீரா வேஷம் ஒரு மனம் போட, மற்றொரு மனம் ‘கிழிச்ச’ என்று காரி துப்பியது. அப்புறம் என்ன இதுக்கு இவனை மட்டும் செருப்பை கழட்டி அடிக்காம விட்ட?
பின்ன என்ன தான் டி பண்ணி இருப்ப? மிஞ்சி மிஞ்சி போனா அவங்கள தள்ளிவிட்டு இருப்ப.. ஒருவேளை அவன் சொன்ன மாதிரி வேற யாராவது?’ என்று எண்ணியவள், மகேஷ், வினித், பார்த்திபன் என்று யாரையும் விஷ்வாவின் இடத்தில் நிறுத்திப் பார்க்கக் கூட அவளால் முடியவில்லை… தலையைக் குலுக்கிக் கொண்டாள்.
பலவாறாக அவளுக்குள்ளே போராடிக் கொண்டிருக்க, அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் எண்ண ஓட்டத்தை ஓரளவு யூகித்தவனாய்,
“செருப்ப கழட்டி எல்லாம் அடிச்சி இருக்க மாட்ட.. அட்லீஸ்ட் அவனை புடிச்சி தள்ளிவிட்டு ஓடியாவது போய் இருப்ப..” என்று சொல்ல முறைத்தாள் கோபமாக.
“இப்பயாவது ஏதாவது புரியுதா?” என்று அவன் வைத்திருந்த பேனாவைக் கொண்டு அவள் இருக்கையின் கைப்பிடியை தட்டியபடி கேட்டான்.
பதில் ஏதும் இல்லை அவளிடம். ‘அது என்ன அவன் மட்டும் ஸ்பெஷல்? அவன் நின்ன இடத்தில வேற யாரையும் நினைச்சு கூட பாக்க முடியல உன்னால?’ என்று உள் மனம் கூர்மையாய் கேள்விகள் கேட்க, அதற்கும் பதில் இல்லை அவளிடம்.
“புரியும் போது சொல்லு பேசலாம் நாம.. இப்ப ரொம்ப யோசிக்காம கிளம்புற வேலையை பாரு…” என்று கூறியவன் தனது கணினியை நோக்கித் திரும்பி, தன் வேலைகளில் மூழ்கிப் போனான்.
அவன் சொன்னதைக் கேட்டு தன் உடமைகளை எடுத்துக் கொண்டு கிளம்பியவளின் உள்ளம் குழம்பி இருந்தது.
இரவின் தனிமையில் தன்னைத்தானே சுய பரிசோதனை செய்
துக் கொண்டதில், புரிந்துக் கொண்டவை ஒரு சுனாமியாய் சுழற்றி போட்டது அவளை.