பிறை நிலவு வானில் ஒளிர்ந்துக் கொண்டிருந்தது. விடுதியில் இரவு உணவை முடித்து ஜன்னல் அருகே அமர்ந்து, வானத்தை வெறித்துக் கொண்டு இருந்தவள் கைகளில் சாண்டில்யன் எழுதிய விஜய மகாதேவி இருந்தது.
எட்டி புத்தகத்தின் தலைப்பை பார்த்த கங்கா, “வி..ஜ..ய..மகா…தேவி…” என்று எழுத்துக் கூட்டி வாசிக்க, தலையில் அடித்துக் கொண்டாள் பத்மா.
“தமிழ் இனி மெல்ல சாகும்னு உன்ன மாதிரி ஆளுங்களை பாத்து தான் சொல்லி இருப்பாங்க டி… கிரகத்த.. தாய்மொழி வாசிக்க தெரியல…” பத்மா அருகில் இருந்த துணியை எடுத்து கங்கா மீது வீச,
“தைரியம் இருந்தா போய் எங்கப்பாவ கேளு டி வெங்காயம்… அவர் தான கொண்டு போய் செகண்ட் லாங்குவேஜ் ஹிந்தி, தேர்டு லாங்குவேஜ் ஃப்ரெஞ்ச்னு சேர்த்து விட்டு சாவடிச்சது…” கங்காவும் பதிலுக்கு சொல்ல,
“இல்லன்னா அப்படியே தமிழ்ல எல்லாத்தையும் கரச்சி குடிச்சு இருப்ப… போ டி 420… நீ என்ன லட்சணத்தில் ஹிந்தி படிச்சு கிழிச்சன்னு நானும் தான பாத்தேன்… அந்த பானி பூரி விக்குற பையன் கிட்ட நீ பம்முனது இப்பவும் என் கண்ணுக்குள்ள நிக்குது…” என்று பதிலடி கொடுத்தாள் பத்மா.
“அவனுக்கு ஹிந்தி தெரியல மச்சி…” குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் பேசியவளைக் கண்டு,
“அடிங்க…” என்று அடிக்க துரத்தினாள் பத்மா.
இருவரும் கட்டி உருண்டு சண்டை இட்ட போதும், இருந்த நிலையில் சற்றும் மாற்றம் இல்லாது இருந்தவளை முதலில் கவனித்தது பத்மா தான்.
தனது கட்டிலில் படுத்திருந்த கங்காவின் மேல் சாய்ந்து, அவளைப் பிடித்து அடிக்க எதாவது கிடைக்குமா என்று தேடியபடி சுழன்றவளின் பார்வையில் பட்டாள் பார்கவி.
“இவ சரி இல்ல மச்சி..” என்று மூச்சு வாங்க சொன்னாள் பத்மா.
“எவ அவ?” என்று கங்காவும் கேட்க, அவள் மீது இருந்து விலகிய பத்மா அவளுக்கு அருகில் படுத்து, பள்ளி கொண்ட பெருமாள் போல ஒரு கையால் தலையைத் தாங்கிக் கொண்டு பார்கவியை நோக்கி,
“இவ தான் டி.. என்னைக்கி அவுட்டிங் போறேன்னு போனாளோ அன்னையில இருந்து இவ ஒரு தினுசா தான் இருக்கா.. செம ஜாலியா இருக்கு, ஃபன்னா இருக்குன்னு சொன்னவ.. போட்டோ மேல போட்டோ எடுத்து தள்ளி நம்மல வெறுப்பேத்துனவ, அன்னைக்கு நைட்டு வரும்போது மூஞ்சி எல்லாம் சிவந்து போய் கிடந்தா.. அடுத்த நாள் பார்த்தா உடம்பு அனலா கொதிக்குது..ரெண்டு நாளா காய்ச்சல கெடந்தா..
என்னடீன்னு கேட்டா பீச்சுல தண்ணில ஆடுனது சேரலைன்னு சொல்லி கத உட்றா.. என்னமோ அன்னைக்கு தான் பீச்சையே ஃபர்ஸ்ட் டைம் பார்த்த மாதிரியும் அதுல ஆடுன மாதிரியும் சொல்றா..
சரிடி இன்னும் ரெண்டு நாள் லீவ் போட்டு ரூம்ல இருந்து ரெஸ்ட் எடுன்னு சொன்னா மூனாவது நாள் பேக் தூக்கிட்டு ஆஃபீஸ்க்கு போறா.. அதுக்கப்புறம் நாலு நாள் ஜிஞ்சர் ஈட்டிங் மங்கி மாதிரி திரிஞ்சா.. இப்ப என்னடானா மூஞ்சி டால் அடிக்குது.. என்னமோ ஒன்னும் சரியா படல..” என்று கூறியவள், பார்கவி அருகே வந்து அவள் முகத்தையே குறுகுறுவென பார்த்தாள் பத்மா.
“ஆமா மச்சி நானும் கவனிச்சேன் இவ போக்கே சரியில்ல..” என்ற கங்காவும், பத்மாவோடு சேர்ந்து பார்கவியை குறுகுறுவென்று பார்த்து வைக்க,
“அட ச்சீ.. போங்கடி.. உங்களுக்கு வேற வேலையே இல்ல..” என்று கூறியவள் புத்தகத்தை மீண்டும் தேடி எடுத்துக் கொண்டு மாடி ஏறி சென்றாள், அவர்களிடம் இருந்து தப்பிக்கும் படியாக.
அன்று நடந்ததை யாரிடமும் பகிர மனம் இல்லை பார்கவிக்கு. தோழிகள் கேள்விகளால் துளைத்த போதும் ஏனோ சொல்ல தோன்றவில்லை. அவளின் அந்தரங்கமாக அப்போதே எண்ணினாளோ என்னவோ? அவளுமே அறியாத விசயம் தான் அது.
மாடிக்கு செல்ல, அங்கே இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் மாடியில் உலாவிக் கொண்டு இருந்தனர்.
“இல்லீங் மா.. நெசமா நல்லா தான் படிக்குறேன்.. அய்யா கிட்ட குடுங்க..” தாயிடம் பேசிக்கொண்டு இருந்தாள் பெண் ஒருத்தி.
“சரிங்க மாமா.. வந்துறேன்..” அமைதியாக பதில் வந்தது ஒருத்தியிடம் இருந்து.
“ம்ம்கூம்.. அப்புறம்..” ஒருத்தி அலைபேசியில் குழைந்து கொண்டு இருக்க,
“எப்படி தான் டி இம்புட்டு மெதுவா பேசுறா இவ?” என்று அவளுடன் இருந்த பெண் சற்று சத்தமாகவே கேட்டுக் கொண்டு இருந்தாள்.
“இங்க பாரு.. உனக்கு அவ்ளோ தான் மரியாத.. இன்னொரு தடவ இப்படி ஃபோன், மெசேஜ் பண்ண சைபர் கிரைம்ல கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்..” கொந்தளித்துக் கொண்டு இருந்த பெண்ணின் அருகே, அழுத வண்ணம் நின்று இருந்தாள் இன்னொரு பெண். இன்னும் இருவர் அவளைத் தேற்ற,
“செருப்பால அடிப்பேன் மூடிட்டு இரு.. அந்த நாய் ஒரு பொறுக்கின்னு அத்தன தடவ சொல்றோம்.. அப்போ எல்லாம் காதுல பஞ்சு வச்சு அடச்ச மாதிரி திரிஞ்சிட்டு, இப்போ குத்துது குடையுதுன்னு ஒப்பாரி வைக்கிற? மூச்.. சத்தம் வந்தது நானே கொன்றுவேன்..” என்று கொதித்துக்கொண்டு இருந்தாள் ஒரு பெண்.
“அந்த பிரதீபா மேம் கொஞ்சம் கூட யோசிக்காம தொரத்தி விட்ருவாங்க டி.. எப்படியாவது முடிக்கணும்.. பிளீஸ் ஹெல்ப் பண்ணுங்க டி…” கூட்டமாக அமர்ந்து எழுதிக் கொண்டு இருந்தவர்களில் ஒருத்தி கெஞ்சிக் கொண்டு இருந்தாள்.
“எரும.. அந்த பக்கம் போய் காயப்போட்டு தொல.. நா உக்காந்திருக்க இடத்தில தான் காயப்போடனும் உனக்கு?” என்று அந்த நேரத்தில் துவைத்த துணியை உலர்த்த வந்த பெண்ணை விரட்டி கொண்டு இருந்தாள் ஒருத்தி.
“ஹே பாரு.. ஹே பார்கவி..” என்று பார்கவியை, வகுப்பு தோழி ஒருத்தி அழைத்தாள்.
கலவையான குரல்கள் அலைபேசியிலும், நேரிலும் பேச கேட்டுக் கொண்டு இருந்த போதும், எதுவும் பார்காவியின் செவி கடந்து உள்ளம் நுழையவில்லை.
“அன்னைக்கு எனக்கு பதிலா வேற யாராவது உன்னை கட்டி பிடிச்சிருந்தா என்ன டி பண்ணுவ? அப்படித்தான் எதுவுமே சொல்ல முடியாம அமைதியா நின்னு இருப்பியா?” என்ற கடித்த பற்களின் இடையே வெளிவந்த விஷ்வாவின் குரல், பேரிரைச்சலாக இரைந்தது அவள் மனதிற்குள்.
“மகேஷ் எதுக்கு என்கிட்ட வந்து ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ குடுக்கணும்?
நா எதுக்கு வாங்கணும்?
அவர் கைல அடி பட்டத பாத்ததும் நா எதுக்கு அழனும்?
எதுக்கு அவரோட கோபம் என்னை பாதிக்கணும்?
ஹே வெயிட்.. வெயிட்.. எங்கையோ உக்காந்து இருந்த மனுஷன் கரெக்ட்டா அப்போ எப்படி அய்யனார் மாதிரி வந்து நின்னாரு?
அம்மாடி எவ்ளோ கோவம்!
கடைசியா எதுக்கு அவர் என்னை அத்தனை அழுத்தமா கட்டி பிடிக்கணும்?
அப்படி கட்டி பிடிக்கும் போது, விலக்கி தள்ளிவிட முடியாம நா எதுக்கு நிக்கணும்?”
என்று இத்தனை நாள்கள் யோசிக்க பயந்த அத்தனை விஷயங்களும் வரிசைக் கட்டி வந்து நின்று அவளை திணறச் செய்தது.
என்னென்னவோ யோசித்தவளுக்கு எதற்கும் பதில் தான் கிடைக்கவில்லை. கடைசியாக அவன் தந்த அணைப்பின் வெப்பம், அந்த ஈர இரவிலும் கதகதப்பாக அவளைச் சூழ்ந்ததில், அவன் வெப்பத்தை மட்டுமே உணர முடிந்தது அவளால்.
எடுத்து வந்த புத்தகம் பிரிக்கப்படாமல் ஒரு ஓரமாக இருக்க, நிலவினைப் பார்த்துக் கைக்கட்டிக் கொண்டு நின்று இருந்தாள் பெண்.
மனம் முழுவதும் அவன் கோபமும், காதல் சொன்ன நிமிடமும், அணைத்த நொடியுமே மீண்டும் மீண்டும் வந்து போனது. கொஞ்சம் கொஞ்சமாக அவளை வாரி சுருட்டிக்கொண்டது அவன் நினைவுகள். அது அவளுக்கு சுகமாக இருந்ததில் தான் அவள் இளம் உள்ளம் சிக்கி தவித்தது.
கொஞ்சம் கொஞ்சமாக மாணவியர் தம் அறை நோக்கி சென்று இருக்க, அவளைத் தேடி வந்தனர் கங்காவும், பத்மாவும் கையில் அவள் கைப்பேசியை எடுத்துக் கொண்டு.
“அம்மா கால் பண்ணி இருக்காங்க.. பேசு..” என்று அவள் கையில் திணித்து விட்டு மாடியின் கைப்பிடி சுவரில் குதித்து அமர்ந்தனர் இருவரும்.
“இது கூட நல்லா தான் இருக்கு மச்சி..” என்றாள் கங்கா இரவின் குளுமையை அனுபவித்த படி.
அம்மா என்ற சொல் பார்கவியை திடுக்கிட வைத்து, ஒரு குற்ற உணர்வினையும் கொடுத்தது. அலைபேசியில் அன்னையின் எண்ணை அவள் அழுத்தும் முன்னே, தாயின் அழைப்பு வந்தது.
“அம்மா..” என்றாள் பெண் அமைதியாக.
“என்ன டா பவி பண்ற? அப்போ கால் பண்ணி இருந்தேன்.. ஏன் எடுக்கல?” என்று அவர் சாதாரணமா கேட்க, அவளுக்கு தான் தவறு செய்த உணர்வு.
“புக் படிக்க மாடிக்கு வந்தேன்மா..” என்று மகள் பதில் சொல்ல,
“மாடில லைட் கம்மியா இருக்குமே.. கண்ணு வலிக்கும் பவி..” என்று சற்று அழுத்தமாக சொல்ல, மகளின் உடல்நலத்தில் அதிகம் கவனம் கொள்ளும் தாயின் கண்டிப்பு அதில் தெரிந்தது.
“ரூம்ல கொஞ்சம் வெக்கையா இருந்தது மா.. அதான் வந்தேன். புக் படிக்க எடுத்துட்டு வந்தேன். ஆனாபடிக்கல மா..” என்று பதில் சொல்ல, அதன் பின்னே தாய் கோபம் குறைந்து சாதாரணமாக உரையாடினார். அவரிடம் பேசிவிட்டு வைத்தவளையே பார்த்துக்கொண்டு இருந்த தோழிகளும், ஒன்றும் பேசாமல் அவளை அழைத்துக் கொண்டு அறைக்கு சென்றனர். ஆனால் கங்காவின் பார்வை மிக அழுத்தமாக தன் தோழியின் மீது பதிந்து, அவளை யோசிக்க வைத்தது.
இரவு முழுவதும் அன்னை தந்தை தன் மீது வைத்து இருக்கும் நம்பிக்கைக்கும், விஷ்வாவுக்கும் இடையே அல்லாடியவள் அதிகாலை தான் கண்ணயர்ந்தாள்.
அந்த குழப்பத்தினோடே அலுவலகம் சென்றவளை விஷ்வாவின் வெற்று இருக்கையே வரவேற்றது. குழப்பங்கள் எல்லாம், காற்றடிக்கும் போது சடுதியில் காணாமல் போகும் மேகங்கள் போல களைந்து செல்ல, மங்கையின் உள்ளம் அதிர உணர்ந்தது தண்மதியான காதல் என்னும் அதிசயத்தை!
யாரும் அவன் பற்றி பேசவில்லை. அவனின் இரட்டை போல இருக்கும் மகேஷ் கூட எப்பொழுதும் போல் உற்சாகமாக தான் இருந்தான். ஆனால் உடலின், உயிரின் ஒரு பாதியைக் காணாது, தவித்துப் போனது என்னவோ பார்கவி தான்.
யாரிடமும் சென்று கேட்க? தயக்கமாக இருந்தது பார்கவிக்கு. நடந்த நிகழ்வு அவளை தடுத்தது, அவன் குறித்து கேள்விகள் கேட்பதற்கு. ஆனால் இரண்டு மணி நேரத்திற்கு மேல், அவன் மீது இனம் புரியாத உணர்வு கொண்ட அவள் மனதால், கேட்காமலும் அவன் குறித்து அறிந்து கொள்ளாமலும் இருக்க முடியவில்லை.
இரு நிமிடங்கள் பதில் வரவில்லை. கைவிரலின் நகங்கள் எல்லாம் காணாமல் போன பின்பு, பதில் வந்தது இரு வார்த்தைகளில்.
“ஒண்ணும் ஆகல..” வெறுத்துப் போனாள் பார்கவி.
‘திமிர்… திமிர்… உடம்பு முழுக்க திமிர் மட்டும் தான். பதறி போய் ஒருத்தி பேசுனா… பதில பாரு…’ மனதோடு வறுத்து எடுத்தாள் மனம் கவர்ந்தவனை.
இரு நிமிட இடைவெளியில் அடுத்த செய்தி வந்ததை அறிவித்தது அதிர்ந்து ஒளிர்ந்த அலைபேசி. பார்க்கலாமா? என்று புத்தி யோசிக்கும் முன்னே, விரல்கள் சடுதியில் திறந்து இருந்தது புலனத்தை அனிச்சை செயலாக.
“ஊருக்கு வந்துருக்கேன். அண்ணனுக்கு பேபி பிறந்து இருக்கு. அதுக்குள்ள சித்தி ஆகிட்ட நீ.. காங்கிராட்ஸ் பவி..” என்ற செய்தியைத் தொடர்ந்து குழந்தையைக் கையில் ஏந்தி இருந்த அவன் புகைப்படமும் வந்திருந்தது.
சுற்றமும் நட்பும், அவளை கவி என்று அழைக்க, தாய் மட்டுமே அழைக்கும் ‘பவி’ என்ற விளிப்பு அவளுக்கு மிகவும் பிடிக்கும். மனம் நிறைத்தவனும் அதே போல் அழைக்க சில்லென்று இருந்தது அவளுக்கு.
‘எவ்ளோ தைரியம் பாரேன்.. சித்தி ஆகிட்டேனாம்.. சித்தி..’ என்று செல்லமாய் மனதோடு முணுமுணுக்க வைத்தாலும், குழந்தையை அத்தனை பாந்தமாக ஏந்தி இருந்தவனின் தோற்றம் மனதில் பச்சை குத்தியது போல பதிந்தது.
“என்ன பேபி?” அவளும் இரு வார்த்தைகள் அனுப்பி வைக்க,
“ஏஞ்சல் தான்..” என்று சிறகு வைத்த ஸ்மைலியோடு பதில் வந்தது.
“அண்ணி எப்படி இருக்காங்க?”
“அக்கா டி… முறைய மாத்தாத..” கண்ணடித்தது ஒரு குழந்தையின் முகம்.
“உங்க அண்ணி?”
“அப்படி தெளிவா கேளு.. ஷீ இஸ் ஃபைன்..”
“ஓகே.. எப்போ வருவீங்க?” என்று எழுதுவதும் அழிப்பதுமாக அவள் இருக்க,
“என்னத்த எழுதி, எரேஸ் பண்ணி விளையாடிட்டு இருக்க?” என்று குறுஞ்செய்தி வந்து விழ, பதில் சொல்லவில்லை பார்கவி.
என்னவென்று சொல்வாள்? உன்னைக் காணாமல் தேடி தவிக்கிறேன்.. எப்பொழுது வருவாய் என்ற வார்த்தைகளை எழுதி அடித்துக் கொண்டு இருக்கிறேன் என்றா சொல்ல முடியும்?
“மெசேஜ் எல்லாம் பண்ணி இருக்க.. நா இல்லாம போனா தான் என்னை தேடுவியா நீ?”
வாசித்தவளுக்கு திக்கென்று இருந்தது. அழைத்தே விட்டாள்.
“வாய்.. வாய்.. என்ன பேச்சு இது? இல்லாம போனான்னு.. கொஞ்சமாவது யோசிச்சு பேச வேணாம்.. இப்படியா அபசகுணமா பேசுறது?” என்று அழைப்பு எடுக்கப்பட்டதும் ஹலோ கூட சொல்லாமல், தவிப்பொடு படபடத்தவளின் குரல், அவனைக் குளிர்வித்ததை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே அவளோடு தனிமையில் பேச எண்ணி மருத்துவமனையில் இருந்து வெளிவந்தவன் உல்லாசமாக புன்னகைத்தான்.
“கால் பண்ணிட்ட குட்டி மா..” என்றவனின் வார்த்தைகளில் தான் அவளுக்கு தனது செய்கை விளங்கியது.
சட்டென கீழ் அதரத்தை கடித்தவளின் முகம் அந்திவானமாக சிவந்தது. தன் முகமாற்றத்தை மறைக்க உடனே தனது இருக்கையை விட்டு எழுந்தவள், விறுவிறுவென வெளியேறி மேலே செல்லும் மாடி படியில் சென்று அமர்ந்தாள்.
“என்ன குட்டி மா சத்தத்த காணோம்?” என்றவனின் குரல் மயிலிறகாக வருடியது.
“ம்ம்..” என்றவளின் குரல் காற்றுக்கு கேட்காமல் போனாலும், அலைபேசி அழகாக கொண்டு சேர்த்தது உரியவனிடம்.
“படுத்தாத டி… இப்போவே உன்ன பாக்கணும்.. உடனே.. நேர்ல இருக்கும் போது இப்படி எல்லாம் பேச மாட்டியா நீ? நானூறு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் போது தான் இப்படி பண்ணுவியா டி?” என்றவனின் வார்த்தைகள், பூக்களை பூக்க செய்தது பெண்ணின் மனதிற்குள்.
அங்கே நிலைகொள்ள முடியவில்லை அந்த காதலனுக்கு. பிடரி முடியை அழுந்தக் கோதி தன்னை சமாளிக்க அவனும் போராட,
மீண்டும் ஒரு “ம்ம்..” மட்டும் காற்றில் மிதந்து வர,
“வாய திறந்து பேசு டி.. திரும்ப திரும்ப படுத்தாத சொல்லிட்டேன்.. மனுஷன் நிலமை புரியாம படுத்துரா..” என்று அவன் அல்லாட,
“எதுக்கு இப்போ திட்டுறீங்க? நீங்க அப்படி கண்டபடி டெக்ஸ்ட் பண்ணாம இருந்தா நா எதுக்கு கால் பண்றேன்?” என்று கோபித்துக் கொண்டது பெண் மனம்.
“இது தெரிஞ்சு இருந்தா, ரெட் கலர் குர்தி, சாண்டல் கலர் பேன்ட், ஷால் போட்டு கருணா ரூம்ல உன் பக்கத்தில உக்காந்து உன்ன பாத்த அன்னைக்கே இப்படி டெக்ஸ்ட் பண்ணி இருப்பேனே? என் தப்பு தான்.. சாரி குட்டி மா..” என்று உல்லாசமாக அவன் சொல்ல, ‘அப்போவேவா?’ என்று எண்ணி ஆச்சரியத்தோடு ஆனந்தமாகவும் இருந்தது பார்கவிக்கு.
அவனைப் பார்க்க வேண்டும் போல் தவித்தது பார்கவியின் உள்ளம். அதை உணர்ந்தது போல பதில் வந்தது அவனிடம் இருந்து.
“இன்னைக்கு நைட் கிளம்பி காலைல உன் முன்ன நா இருப்பேன்.. அப்போ சொல்லு உன் ம்ம் ம்ம்கூம் எல்லாம்..” என்று அவன் சொல்ல,
“சீக்கிரம் வாங்க..” பட்டென்று வந்தது பதில். இதற்கும் மேல் அவனோடு பேச, அவளுக்கு தெம்பு இல்லாதது போல அழைப்பை உடனே துண்டித்தவள் முகமும், துண்டிக்கப்பட்ட அலைபேசியை பார்த்து விட்டு, அதை நெற்றியில் தட்டிக்கொண்டவன் முகமும் மலர்ந்து இருந்தது.