தன் முன்னே திருமண பத்திரிக்கையை நீட்டிக்கொண்டு நின்றிருந்த விஷ்வாவையும், பார்கவியையும் சந்தோஷத்தோடு பார்த்தவர் மனம் நிறைய வாழ்த்தினார். அவர் வாழ்த்தைப் பெற்றுக் கொண்டு வெளிவந்ததும் நண்பர்கள் கூட்டம் அவர்களைச் சூழ்ந்துக் கொண்டது.
“வாழ்த்துக்கள் ஜி..” என்று முதல் ஆளாக கைக்கொடுத்து வாழ்த்துக்கள் சொன்னான் பார்த்திபன். அனைவருக்கும் தனித்தனியாக பத்திரிகைகள் கொடுத்து அவர்களின் வாழ்த்தைப் பெற்றுக்கொண்டவர்கள், கிளம்ப ஆயத்தமாயினர்.
“ஆனாலும் மச்சான் இவ்ளோ அவசரம் ஆகாது உனக்கு.. எவ்ளோ வேகமா கல்யாணத்துக்கு ரெடி பண்ணிட்ட? இன்னும் ரெண்டு மாசம் இருக்குல்ல?” என்றபடி அவர்களோடு கூட வந்தான் மகேஷ்.
“இன்னும் ரெ..ண்டு மா..சம் இருக்குடா.. 60 நாள்..” என்று விஷ்வா புள்ளி விபரம் சொல்ல ஆரம்பிக்க, பாய்ந்து அவன் இதழ்களை மூடினான் மகேஷ்.
அவர்கள் இருவரையும் தனியாக விட்டு விட்டு முன்னே நடந்துச் சென்று விட்டாள் பார்கவி.
“டேய் இந்த கன்னி பையன் சாபம் உன்ன சும்மா விடாது டா.. ப்ராஜெக்ட் பண்ண வந்த புள்ளைய பிராக்கெட் போட்டு மடக்கிட்டு.. அது எக்ஸாம் எழுதுறதுக்குள்ள கல்யாணம் பண்ணனும்னு வேற ஆசைப்படற பாத்தியா? உன்ன எல்லாம்..” என்று சட்டையின் கையை மடித்து விட,
“ஆசைப்படற என்னை எல்லாம் என்ன பண்ணுவ? என்னடா பண்ணுவ?” என்று பதிலுக்கு விஷ்வாவும் எகிற,
“ஒன்னும் பண்ண முடியாது டா.. ஒண்ணுமே பண்ண முடியாது.. அதுக்கெல்லாம் ஒரு குடுப்பன வேணும்.. கனிய நெனச்ச மனசுடா.. கன்னி கலியாம போனாலும் எனக்கு கனி தான் வேணும்..” என்று பெருமூச்செறிந்தவன் கொஞ்சம் சத்தமாக சொன்னான், கடந்து சென்ற கனிகாவின் காதில் விழும்படி.
“கிடைக்கிற கேப்ல எல்லாம் சிக்ஸ் அடிக்கிறியே மச்சான்?” என்று விஷ்வா அவன் தோளில் கையை வைத்து கேட்க,
“கவனிச்சிட்டியா மச்சான்.. ஆனாலும் உன் கண்ணு செம ஷார்ப்ப்டா..” என்று பாராட்டினான்.
“தூ.. நானும் அவ ஆபீஸ்ல ஜாயின் பண்ண நாளிலிருந்து அவ பின்னாடி உன் கண்ணு அலைறத கவனிச்சுட்டு தான் இருக்கேன்.. கண்ண கடன் கொடுத்துட்டு மக்கு மண்ணாந்த மாதிரி உக்காந்து இருந்தா எப்படிடா செட் ஆகும்?” என்று அவன் கிண்டல் அடிக்க,
“90ஸ் கிட் மச்சான்.. அப்பாவி புள்ளைங்க நாங்க..” பாவம் போல் சொன்னான் மகேஷ்.
“செருப்பு பிஞ்சிடும்.. பொண்ண பாத்து அவ கண்ண பாத்து காதல் சொல்ல துப்பு இல்ல.. பயந்துகிட்டு இருக்க.. அதுக்கு 90ஸ் கிட்ஸ்னு பெருமை வேறயா?” என்று காரி துப்பாத குறையாக கேட்க, அதையெல்லாம் தட்டி விட்டவனாக,
“விடுறா.. ஏதோ ஒரு பிள்ளையை கரெக்ட் பண்ணிட்டதுக்காக ஓவரா பேசாத.. நாலு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் நீயும் அப்படித்தான் இருந்த ஞாபகத்துல இருக்கட்டும்..”
“அது போன மாசம்.. இது இந்த மாசம்..” என்று மாறி மாறி கிண்டல் செய்துக் கொண்டிருந்தவர்கள், பார்கவியின் வரவில் மௌனமானார்கள்.
“ப்ராஜெக்ட் நல்லபடியா முடிச்சிட்ட.. அதே மாதிரி எக்ஸாம் நல்லபடியா பண்ணு மா..” என்று பார்கவியிடம் கூறிய மகேஷ் தலையசைத்து விடை பெற, வாகன தரிப்படத்திற்கு வந்த இருவரும் விஷ்வாவின் இருசக்கர வாகனத்தில் ஏறி கிளம்பினர்.
பார்கவியை அவள் கல்லூரி விடுதியில் விட்டு விட்டு வந்த விஷ்வாவின் நினைவு பின்னோக்கிச் சென்றது.
அண்ணன் மகளைக் காணச் சென்றவன் அடுத்த நாளே அலுவலகம் வந்திருந்தான். ஆனால் அன்று பார்கவிக்கு கல்லூரி செல்ல வேண்டிய தினம் ஆகையால் அவள் வரவில்லை.
புலனத்தின் வாயிலாக குறுஞ்செய்திகள் பறந்து கொண்டிருந்த போதிலும், அவளைக் கண்களில் நிரப்பிக் கொள்ள துடித்தான் அந்த புது காதலன்.
அவளுக்கு அழைப்பு விடுத்தான். மதியத்தோடு கல்லூரி வகுப்புகள் முடிந்திருக்கும் என்பது அவன் அறிந்ததே. எனவே மாலை சந்திக்க வேண்டும் என்று எண்ணியே அழைத்தான்.
அழைப்பு சென்று நான்காவது மணியில் எடுத்தவள், “சொல்லுங்க..” என்றாள் மிக மெதுவான குரலில்.
“என்ன சொல்ல? திரும்பத் திரும்ப ஐ லவ் யூ சொல்லி கேக்கணும்னு ஆசைப்படுறியா?” என்றான் குறும்பாக.
“உங்க அளவுக்கு யாரும் சொல்லி இருக்க முடியாது.. நியூஸ் சேனல்ல நியூஸ் வாசிக்கிற மாதிரி..” என்று அவளும் திருப்பிக் கொடுத்தாள்.
“வெட்கம்.. வேதனை.. அவமானம் டா விஷ்வா.. இப்படி இன்சல்ட் பண்ணிட்டாளே டா.. இதுக்காகவே ப்ரொபோஸ் பண்ற டா…”என்று தனக்குத்தானே பேசியவனாக,
“இவ்வளவு அசிங்கப்படுத்துனதுக்கு அப்புறமும் புரபோஸ் பண்ணலைன்னா எனக்கு அசிங்கம்..” என்றவனின் வார்த்தைகளில் அவள் சிரிக்க,
“குட்டிமா உன்னை பாக்கணும் போல இருக்குடா.. இன்னைக்கு ஈவினிங் மீட் பண்ணலாமா?” என்றவனின் குரல், அவளை சம்மதமாக தலையசைக்க வைத்தது. அவளுக்கும் அவனிடம் பேச வேண்டிய விஷயங்கள் கொட்டிக்கிடக்கவே ஒப்புக்கொண்டாள்.
“இன்னைக்கு செம்ம ஃபார்ம்ல இருக்க பேபி… அநியாயத்துக்கு ஓட்டி தள்ளுற… எவ்ளோ ரொமான்டிக்கா சொல்றேன்… நீ மரண பங்கம் பண்ற… இதுக்கெல்லாம் சேத்து வச்சு செய்றேன் டி…” என்றவன் அவளைக் காண்பதற்காக வேலைகளை வேகமாக முடித்துக் கொண்டு, பறந்து சென்றான் அவள் கல்லூரிக்கே.
சரியாய் நான்கு மணிக்கு தனது வண்டியில், தனக்கு பின்புறமாக ஏறிக்கொண்டவளை ஆசையாக பார்த்தான்.
“ப்ளீஸ்.. கொஞ்சம் சீக்கிரம் போங்க.. ஃபிரண்ட்ஸ் பார்த்தாங்கன்னா வச்சு செஞ்சுடுவாங்க.. இன்னும் அவங்க கிட்ட நான் எதுவும் சொல்லல..” என்று மெல்லியதான குரலில் பார்கவி பதற, சரி என்று தலையாட்டி வண்டியை கிளப்பினான். வண்டி பறந்தது கடற்கரையை நோக்கி. அத்தனை போக்குவரத்து நெரிசல்களிலும் லாவகமாக புகுந்து சென்றான் விஷ்வா.
வண்டி ஓட்டும் வரை அவனை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யாமல் அமைதியாக வந்தவளை, வண்டியின் கண்ணாடி வழியாக அவ்வப்போது பார்த்துக் கொண்டான்.
வண்டியை நிறுத்திவிட்டு வந்த பின்னரே அவள் இதழ்கள் திறந்தன.
“எதுக்கு இப்படி வேகமா வரீங்க.. பயந்து போயிட்டேன் தெரியுமா?” முதல் கேள்வியே அவன் வாயடைக்க செய்ய, “சென்னை டிராபிக்ல நான் வேகமாக வந்தேன்.. நீ அதை பார்த்த? எல்லாம் என் நேரம்..” என்று தலையில் அடித்துக் கொண்டான்.
இடைவெளி விட்டு இருவரும் நடந்து சென்று அலைகளில் கால் பதித்து நின்றனர். மெல்ல கவிந்து வந்த மாலை நேரமும், கடலின் ஓசையும், பாதம் தழுவி செல்லும் அலைகளும், புதிதாய் முளைவிட்டிருக்கும் காதலும் என்று அவர்களின் உலகம் மிக ரம்யமாக இருந்தது.
சில நிமிடங்கள் அமைதியாக இருந்த விஷ்வா, “இப்ப சொல்லு” என்றான் அவளைத் திரும்பிப் பார்த்து.
“என்ன சொல்ல?” என்றாள் ஒன்றும் புரியாதவளாக.
“போன்ல சொன்னத.. நேர்ல சொல்லுடி..” அவன் நெருங்கி வர, பதறியவள் விலக முயல அலைகளின் திடீர் தாக்குதலில் சட்டென தடுமாறி போனாள் பார்கவி. அவள் கைப்பிடித்து நேராக நிற்பதற்கு உதவியவன், அவள் நின்ற பிறகும் கையை விடவில்லை.
அவள் மௌனம் அவனைத் தாக்க, ஒன்றும் பேசாமல் மீண்டும் கடலைப் பார்த்துத் திரும்பினான் விஷ்வா.
“கொஞ்சம் போய் உட்காரலாமா?” என்று பார்கவி கேட்க, அவள் கையைப் பிடித்த வண்ணமே திரும்பி நடந்து கரையில் ஒரு படகின் ஓரமாய் அமர்ந்தனர்.
என்ன பேசுவது? என்று பார்கவிக்கு புரியவில்லை. அவளிடம் சொல்வதற்கும் கேட்பதற்கும் ஆயிரம் ஆயிரம் விஷயங்கள் இருந்தும், இந்த தனிமை அவளை மௌனியாக்கியது.
தன் இரு கரங்களுக்குள் அவளின் கையைப் பொத்திப் பிடித்துக் கொண்டிருந்தவன், அதைப் பார்த்துவிட்டு அவள் முகம் பார்த்தான்.
“நான் விஷ்வா. எனக்கு ஒரே ஒரு அப்பா அம்மா. அப்பா பேரு கோபால்சாமி அம்மா பேரு ராஜேஸ்வரி. சொந்த ஊரு மதுரைக்கு பக்கத்துல இருக்க திருச்சி. அண்ணன் பேரு சரவணன் அண்ணி பேரு வித்யா. கல்யாணம் ஆகி நேத்துதான் குழந்தை பிறந்தா. ஒரு அக்கா பூமிகா. மாமா ரவீந்தர். அவளுக்கும் கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தை இருக்கு. ரிஷிகேசவ் பையன் பேரு, மகன்யா பாப்பா பேரு. அப்புறம் கல்யாணமாகம அந்த வீட்டில இருந்த ஒரே ஆளு நான் தான்.
அப்பா, அம்மா, அண்ணன், அக்கா எல்லாருக்கும் ஒரே செல்ல பையன் சாட்சாத் இந்த விஷ்வா தான். அப்பா போஸ்ட் மாஸ்டரா இருந்து லாஸ்ட் இயர் தான் ரிட்டையர்டு ஆனாங்க.
அம்மா ஹவுஸ் வைஃப்.
சொத்துன்னு பூர்விக வீடு ஒன்னும் இடமும் இருக்கு. அதைத் தவிர்த்து சொத்து எதுவும் இல்ல. மூனு குட்டி போட்டு அதுங்களை படிக்க வச்சு கல்யாணம் பண்ணி கொடுத்ததிலேயே எங்க அப்பாவோட எல்லா சம்பாத்தியமும் கரஞ்சு போச்சு..
அக்கா மும்பைல குப்பை கொட்டிட்டு இருக்கா. அண்ணா, அப்பா அம்மா கூட இருக்கான். அவன் ஒரு வாத்தி.. அண்ணியும் அவன் கூட தான் வேலை பாக்கிறாங்க. எனக்கு என்னமோ டவுட் பல நாளா இருக்கு, அவன் கல்யாணத்துல.. அது எப்படி அப்பா அம்மா பார்த்து கல்யாணம் பண்ண பொண்ணு அவன் கூடவே வேலை பார்க்கும்? இவன் தான் ஏதோ கேடி வேலை பார்த்திருப்பான் அப்படின்னு மனசுக்குள்ள ஒரு பட்சி பறந்துகிட்டே இருக்கு.
அப்புறம் அம்மா கூட பிறந்தவங்க அப்பா கூட பொறந்தவங்க அப்படின்னு ஒரு டஜன் பேர் இருக்காங்க.. அவங்களோட குடும்பம்னு கூட்டி கழிச்சு பார்த்தா ஒரு நூறு பேரு தேறுவாங்க கல்யாணத்துக்கு கூப்பிட..
ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன்.. அக்மார்க் நல்ல பையன்.. டீ டோட்டலர்.. எந்த கெட்ட பழக்கமும் இல்லாத தங்க கம்பி.. வேற வழி இல்ல.. ஃபர்ஸ்ட் டைம் தம் அடிச்சப்ப அம்மா தொடப்பக்கட்டை எடுத்து விளாசி தள்ளிட்டாங்க.. சோ நல்லவனா தான் இருந்தாக வேண்டிய கட்டாயம் எனக்கு.. சோ சேட்.. என் சம்பளம் என்னன்னு உனக்கே நல்லா தெரியும்.. உனக்கு ஓகேன்னா இந்த கம்பெனியிலே கண்டினியூ பண்ணுவேன்.. இல்ல இன்னும் பெட்டர் சாய்ஸ் வேணும்னா பெரிய கம்பெனி போகலாம்…” என்று மூச்சு விடாமல் விஷ்வா பேச அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தாள் பார்கவி.
“இப்ப நீ சொல்லு..” என்ற விஷ்வா பக்கவாட்டாக அமர்ந்திருந்தவன் திரும்பி அவள் முகம் பார்த்த வண்ணம் அமர்ந்தான்.
“அப்பா பரசுராமன் பேங்க்ல ஜோனல் மேனேஜரா இருக்காங்க. அம்மா தான்யலட்சுமி.. நான் அவங்களுக்கு ஒரே பொண்ணு. அவ்வளவுதான்..” என்று நான்கு வரிகளில் முடித்துக் கொண்டாள் பார்கவி.
“அவ்வளவுதானா!?” என்று ஆச்சரியமாக அவன் கேட்க மெல்லிய சிரிப்பு எட்டிப் பார்த்தது அவள் இதழ்களில்.
“அவ்வளவுதான்..” என்றாள் கண் சிமிட்டி.
“சரி இப்ப சொல்லு..” என்று விஷ்வா மிக தீவிரமான குரலில் கேட்க, “என்ன சொல்ல?” என்றாள் நிஜமான குழப்பத்துடன்.
“இன்னும் நீ என்னை லவ் பண்றேன்னு சொல்லவே இல்லடி.. ஒழுங்கா ப்ரொபோஸ் பண்ணு..” என்று அதிகாரமாக அவன் கேட்க,
“அதுக்கு முதல்ல நீங்க ஒழுங்கா ப்ரொபோஸ் பண்ணி இருக்கணும்.. அப்படியே பண்ணாலும் நான் எதுக்கு உங்களுக்கு ப்ரபோஸ் பண்ணனும்? நீங்க ப்ரொபோஸ் பண்ணா நான் பதில் தான சொல்லணும்? நீங்க என்ன புதுசா ப்ரொபோஸ் பண்ண சொல்றீங்க?” என்று கேள்விகளை அடுக்க,
“இவ்ளோ அறிவு எங்கிருந்துடி வந்துச்சு உனக்கு.. ப்பா..” என்று வாய் மேல் கை வைத்தான்.
“இப்ப என்ன உனக்கு ப்ரொபோஸ் பண்ணனும் அவ்வளவு தானே?” என்று அமர்ந்திருந்தவன் அவள் முன்னே முட்டி போட, கடற்கரை மணல் பறந்ததில் தள்ளி போனாள் பார்கவி.
சட்டையின் பையில் இருந்து எடுத்த மோதிரத்தை அவள் வலது கரம் பற்றி அணிவித்து, “இந்த பொசுக்கு பொசுக்குன்னு முழிக்கிற முட்ட கண்ணிய எனக்கு அவ்ளோ புடிச்சிருக்கு.. காலம் முழுக்க இந்த கண்ணுல முழிக்கணும்னு ஆசைப்படுறேன்.. வில் யு மேரி மீ?” என்று அவனை முதல் பார்வையிலேயே அடித்துச் சாய்த்த கண்களைப் பார்த்துக் கொண்டே கேட்டான்.
அவன் கையில் பாதுகாப்பாய் இருக்கும் தன் கை பார்த்தவள் அவன் விழி பார்த்து, “ம்ம்..” என்றாள் பெருமகிழ்ச்சியோடும், பெரு வெட்கத்தோடும்.
“இனி இதுபோல சொல்லாதடி..” என்று அவன் சட்டென்று சொல்ல,
என்ன என்பது போல் விழித்துப் பார்த்தாள் பார்கவி.
“சொல்லாதன்னா சொல்லாத..”
“ம்ம்..” என்றாள் மறுபடியும்.
“இழுத்து வச்சு கிஸ் அடிச்சிடுவேன்.. நல்ல பையனா என்னை இருக்க விடு.. இனி சொல்லாத..” அவள் முகம் காணாது பின்னந்தலையை கோதி விட, முட்டை கண்கள் இன்னும் பெரிதாக விரிய வாயில் கை வைத்துக் கொண்டாள் பார்கவி.
“அப்படியே இருந்துக்கோ..” என்றவன் இதழ்களில் மறைக்க முடியாத புன்னகை இருந்தது.
“ச்சீ.. என்ன இப்படி எல்லாம் பேசுறீங்க?” என்றவள் குரல் குழைந்து போயிருக்க,
“இது இன்னும் டேஞ்சர் விஷ்வா.. எந்திரிச்சுக்கோ..” தனக்குத்தானே கூறியவன் எழுந்துக் கொண்டு அவள் எழுவதற்கு கைகளை நீட்டினான்.
அவள் வலது கை பற்றி எழுப்பியவன் அவளோடு சேர்ந்து நடக்க, மனம் நிறை
ந்திருந்தது இருவருக்கும்.
இளம் மனங்கள் ஒட்டிக் கொண்டன, வரும் விளைவுகள் அறியாது.