அறைக்குள் அமர்ந்தவளோ “இது உனக்கு தேவையா டி? அவன் பேசாம போய்ட்டு இருந்தான். அவனை இழுத்து வச்சு வம்பு பண்ணின? அதான் நீ சொன்னதை அவன் செஞ்சு காட்டிட்டு போய்ட்டான். இப்ப அனுபவி”, என்று எண்ணினாள்.
“நான் என்ன இப்ப அவன் நடந்துகிட்டது பிடிக்கலைன்னா சொன்னேன்?”, என்று அவள் கேட்க மனசாட்சி அவளிடம் பேச முடியாமல் ஓடி ஒழிந்து கொண்டது.
அன்று இரவு அறைக்குள் வந்த பிறகு அவனிடம் அவள் என்ன வம்பு வளர்க்கலாம் என்று எண்ணிய படி இருக்க அதை உணர்ந்தானோ என்னவோ “அப்ப அப்படி நடந்ததுக்கு சாரி. இனி அப்படி நடக்காது”, என்று சொன்னவன் வேறு எதுவும் பேசாமல் படுத்து விட்டான். அவளுக்கு தான் சப்பென்று போனது.
அடுத்த நாள் காலையில் கண்மணியின் குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்தாள் உமா. அவனுக்கு இளவரசன் என்று பெயர் வைத்திருந்தார்கள்.
“இளா குட்டி, சித்தி பாருங்க, சித்தி பாருங்க”, என்று அவள் கொஞ்சிக் கொண்டிருக்க குழந்தையும் அவளைப் பார்த்து புன்னகைத்தது.
“கொஞ்சம் உங்க சித்தியை இந்த சித்தப்பாவையும் பாக்கச் சொல்லு டா மகனே”, என்று சொல்லிய படியே அவளுக்கு சற்று இடைவெளி விட்டு அமர்ந்தான் சிவன்.
அவளுக்கு சற்று தள்ளி அமர்ந்த படியே அவன் குழந்தையின் கன்னத்தை பிடித்துக் கொஞ்சிக் கொண்டிருக்க அவனது விரல் அவள் மேல் லேசாக உரசியது. அதை வேண்டும் என்றே செய்கிறான் என்று எண்ணி பல்லைக் கடித்தாள் உமா. ஏதாவது சொன்னால் வேண்டும் என்றே இன்னும் அதிகமாக செய்வான் என்று எண்ணி அமைதி காத்தாள்.
சற்று நேரத்தில் “பட்டுக்குட்டி இங்க பாரு, இங்க பாரு”, என்று அவன் குழந்தையுடன் ஒன்ற அவனது உடல் அவள் மீது சற்று அழுத்தமாக பதிந்தது. உமாவுக்கு அவன் அருகாமை சலனத்தை விதைக்க அவளது கோபமும் தாபமும் கட்டுக்கடங்காமல் பெருகிக் கொண்டிருந்தது.
சற்று குனிந்து அவன் குழந்தைக்கு முத்தம் கொடுக்க வர அவனது தலைமுடி அவளது கைகளில் உரசி அவளுக்குள் உணர்ச்சிக் கொந்தளிப்பை உருவாக்கியது. அதை தாங்க முடியாமல் அவஸ்தையில் துடித்தாள் உமா.
அவள் முகம் எல்லாம் வெட்கத்தில் சிவந்து விட்டது. “இவ்வளவு நாள் தெரியலை. ஆனா இப்ப இந்த குட்டியைப் பாக்க இளா அண்ணன் மாதிரியே இருக்கான்ல உமா?”, என்று கேட்ட படி இயல்பாக அவளைத் திரும்பிப் பார்த்தான் சிவன்.
அப்போது தான் அவளது முகச் சிவப்பு அவன் கண்ணில் பட்டது. அதைப் பார்த்தவனுக்கு அவளிடம் இருந்து பார்வையை திருப்பவே முடியவில்லை. இது அவளின் உணர்வுகளில் வெளிப்பாடல்லவா? அதுவும் அந்த உணர்வுகள் அவனால் அவளுக்குள் உருவாக்கப் பட்டவை அல்லவா? ஆண் என்ற கர்வம் வந்தது.
அவன் பார்வை தன்னையே அளவெடுப்பதை உணர்ந்தவள் அதற்கு மேல் அவன் முன்னால் வெட்கத்துடன் அமர்ந்திருக்க சங்கடப் பட்டு “குழந்தையை பிடிங்க. எனக்கு உள்ள வேலை இருக்கு”, என்று அவன் முகம் பார்க்காமல் சொல்லி விட்டு குழந்தையை அவன் கையில் கொடுத்து விட்டுச் சென்றாள்.
“உங்க சித்திக்கு சித்தப்பா பக்கத்துல வந்தாலே பயமா இருக்கு போல டா”, என்று பிள்ளையிடம் பேசிக் கொண்டிருந்தான் சிவன். வீட்டுக்குள் இருந்த உமாவுக்கு அதைக் கேட்டு சிறு சிரிப்பு வந்தது.
அடுத்து வந்த நாட்கள் எப்போதும் போல நகர்ந்தது. வெண்ணிலா கடைசி பரிட்சையை முடித்து விட்டு ரிசல்ட்க்காக காத்திருந்தாள். அவளுக்கு ரிசல்டும் வந்தது. நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தாள். கட்டாயம் டாக்டர் சீட் கிடைக்கும் என்று அனைவரும் சொன்னார்கள்.
ஆனால் சிவனுக்கு தான் யோசனையாக இருந்தது. கவர்ன்மெண்ட் காலேஜ் கிடைத்தாலும் கட்டாயம் செலவு அதிகமாக தான் ஆகும் என்று தெரியும். வீட்டில் இத்தனை ஆட்கள் இருக்க அவர்கள் சம்பாதிப்பது வீட்டு செலவுக்கு தான் சரியாக வரும். அதனால் என்ன செய்ய என்று தடுமாறினான்.
வெண்ணிலாவிடம் “என்ன படிக்க நினைக்கிற பாப்பா?”, என்று கேட்டான்.
“அண்ணா, நான் சொன்னா சுயநலவாதின்னு நினைப்பியா?”, என்று தயக்கத்துடன் கேட்டாள் வெண்ணிலா. இந்த பேச்சு வார்த்தை நடக்கும் போது அனைவரும் அங்கே தான் இருந்தார்கள்.
“அப்படி எல்லாம் நினைக்க மாட்டேன் டா சொல்லு”, என்று சிவன் சொன்னதும் “எனக்கு நம்ம குடும்ப கஷ்டம் தெரியும் அண்ணா. எங்களுக்காக தான் நீ ரொம்ப கஷ்டப் படுற? ஆனாலும்…. என்னோட கனவை இப்ப நிறைவேத்திக்கலைன்னா வேற எப்பவுமே அது முடியாது அண்ணா. எனக்கு மெடிக்கல்க்கு படிக்கணும். கவர்ன்மெண்ட் காலேஜ்ல சேரனும்னு தான் ரொம்ப கஷ்டப் பட்டேன். ஆனாலும் செலவு ஆகும்னு எனக்கு தெரியும். எனக்காக ஒரே ஒரு விஷயம் பண்ணு அண்ணா. பேங்க்ல லோன் வாங்கித் தா. அது போதும். அதையும் நான் அடைச்சிருவேன். அக்காக்கு எல்லாம் நகை போட்ட மாதிரி எனக்கு நகை எல்லாம் வேண்டாம் அண்ணா. என்னை படிக்க மட்டும் வை அண்ணா. பிளீஸ்”, என்று தெளிவாக தன் மனதைச் சொன்னாள்.
இந்த சிறு வயதில் அவளின் தெளிவான பேச்சு அவளது பொறுப்பான தன்மையைக் காட்ட அனைவருக்கு அது பெருமையாக தான் இருந்தது. அவள் அவ்வளவு கேட்ட பிறகு அனைவருக்குமே அவள் ஆசையை நிறைவேற்ற வேண்டும் போல தான் இருந்தது.
“அதெல்லாம் முடியாது நிலா. வேணும்னா நர்ஸ்க்கு படி”, என்று சொன்னாள் பார்வதி. அதைக் கேட்டு நிலா கண்கள் கலங்க “அம்மா, அவ படிக்கணும்னு தானே சொல்றா? கண்டிப்பா படிக்க வைப்போம்”, என்றான் சிவன். கருப்பட்டியும் படிக்க வைக்கலாம் என்று சொன்னான்.
பார்வதி அப்போதும் தயங்க “அத்தை அவ ஆசையை நிறைவேத்தலாம். சிவாவும் இவங்களும் கண்டிப்பா இந்த குடும்பத்தை பாத்துக்குவாங்க. உடனடியா பணம் வேணும்னா கூட என்னோட நகையை அடகு வச்சு ரெடி பண்ணிறலாம். இத்தனை பேர் இருக்கோம் தானே? பாத்துக்கலாம்”, என்றாள் கண்மணி.
ஆனால் அந்த இடத்தில் உமா எதுவும் சொல்ல வில்லை. ஆனால் சிறிது நேரத்தில் சிவனை அழைத்த ராதாகிருஷ்ணன் “வெண்ணிலா டாக்டர்க்கு படிக்கிற விஷயமா வீட்ல பேச்சு வார்த்தை நடந்துச்சுன்னு உமா சொன்னா மாப்பிள்ளை”, என்று ஆரம்பித்தார்.
“ஆமா மாமா, படிக்க வைக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டோம்”, என்றான் சிவன்.
“நல்ல விஷயம் தான். பணம் செலவு ஆகும்னு தெரியும். ஆனா நான் கொடுத்தா நீங்க ஏத்துக்க மாட்டீங்க?”
“அது நல்லா இருக்காது மாமா. பணம் இடைல வந்தா….”
“எனக்கு புரியுது மாப்பிள்ளை. அதனால நான் ஒரு யோசனை சொல்லலாமா?”
“சொல்லுங்க மாமா”
“இல்லை, நம்ம கம்பெனில உமா பேர்ல ஒரு டிரஸ்ட் நடத்திட்டு வரோம். அதுக்கு நம்ம கம்பெனில இருந்தும் பணம் கொடுப்போம். அது போக வெளிநாட்டுல இருந்தும் பணம் வரும். அதை வச்சு நிறைய அநாதை ஆஸ்ரமத்துக்கு உதவுறோம். அது மட்டுமில்லாம வருஷம் வருஷம் நிறைய பேரை படிக்க வைக்கிறோம். அது மூலமா நாம வெண்ணிலாவை படிக்க வைப்போமா?”
“நீங்க எங்க நல்லதுக்காக தான் சொல்றீங்கன்னு எனக்கு தெரியும் மாமா. ஆனா தப்பா நினைக்காதீங்க. நீங்க உதவி செய்யுறது யாருமே இல்லாத குழந்தைகளுக்கு. ஆனா வெண்ணிலாவுக்கு தான் நாம எல்லாரும் இருக்கோமே?”
“மாப்பிள்ளை”
“ஆமா மாமா, நீங்க செய்ற உதவி யாருமே இல்லாத ஒரு குழந்தைக்கு போகட்டுமே? அதெல்லாம் நாங்க அவளை படிக்க வச்சிருவோம் மாமா. ஒரு வேளை எங்களால முடியலைன்னா நீங்க கடன் தர மாட்டீங்களா என்ன?”
“கண்டிப்பா தருவேன் மாப்பிள்ளை. நான் சம்பாதிச்சது முழுக்க நமக்கு தானே? நீங்க வேற நான் வேற இல்லை மாப்பிள்ளை”
“அப்புறம் என்ன? பாத்துக்கலாம் மாமா”, என்று அவன் சொல்ல “சரி மாப்பிள்ளை”, என்று சொல்லி போனை வைத்தார். என்ன தான் அவனிடம் சாதாரணமாக சொல்லி விட்டாலும் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் போல ஆசையாக இருந்தது அவருக்கு.
உடனே அருணைக் கூப்பிட்டு பேசினார். அவனும் சில ஐடியாக்கள் சொல்லவே அடுத்த நாளே அதற்கான வேலைகளை ஆரம்பித்தார். உமா பெயரில் ஒரு அட்வடைசிங்க் கம்பெனியை ஆரம்பித்தார். அவர்களின் கம்பெனிக்கு என முதல் விளம்பரத்தை உருவாக்கும் பொறுப்பை சிவனுக்கு கொடுத்தார். சந்தோசத்துடன் அதை ஏற்றுக் கொண்டான்.
ஸ்டூடியோ பொறுப்பையும் விளம்பரப் பொறுப்பையும் சிவன் மற்றும் கருப்பட்டி இருவரும் பார்த்துக் கொண்டார்கள். ஒரு வழியாக நாட்கள் நகர்ந்தது. சிவன் உமா பில்டர்ஸ்க்காக எடுத்துக் கொடுத்த விளம்பரம் நல்ல படியாக மக்கள் மத்தியில் பிரபலமானதால் பிற கம்பெனிகளும் தங்களுக்கு என விளம்பரம் எடுக்கச் சொல்லி கேட்டுக் கொண்டார்கள். சிவன், கருப்பட்டி மற்றும் உமாவின் உழைப்பில் அவர்களின் விளம்பரக் கம்பெனி உயர்ந்தது.
வெண்ணிலாவுக்கும் மதுரை கவர்ன்மெண்ட் மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்தது. கையில் இருக்கும் பணத்தை வைத்து சமாளித்தார்கள். ஆனாலும் பேங்கில் லோன் போட்டிருந்தான்.
வெண்ணிலாவை மருத்துவக் கல்லூரியில் சேர்க்க உமாவும் சிவனும் தான் சென்றிருந்தார்கள். அவளை கல்லூரியில் விட்டுவிட்டு வரும் போது அங்கே அனிதா திருமணம் நடந்த கல்யாண மண்டபம் கண்ணில் பட்டது. அதைக் கண்டு இருவருக்கும் பழைய விஷயங்களை நினைத்து கஷ்டமாக இருந்தது.
இங்கே சென்னையில் இறங்கியதும் மழை பிடித்துக் கொண்டது. பஸ் ஸ்டாண்டில் இருந்து வீட்டுக்கு செல்வதற்குள் இருவரும் நனைந்து விட்டார்கள்.
“நல்லா நனைஞ்சிட்டீங்க பாரு. டிரஸ் மாத்திட்டு தலையை துவத்துங்க”, என்று பார்வதி சொல்ல இருவரும் அறைக்குள் சென்றார்கள்.
உள்ளே சென்றதும் இருவருக்குமே தடுமாற்றமாக தான் இருந்தது. தன் முகத்தைப் பார்க்கவே தடுமாறி நிற்கும் மனைவியின் மீது ஆசைத் தீ பெருக்கெடுத்தது. அந்திநேரத் தென்றல் காற்று ஜன்னல் வழியாக அவர்கள் முகம் தீண்ட தயக்கத்தை உதறி அவளை நெருங்கினான் சிவன்.
அவள் எப்போதும் போல முகத்தை திருப்பிச் சென்றிருந்தால் அவனும் விட்டிருப்பான். அவள் வெட்கத்துடன் தலை குனிய “உமா”, என்ற படி அவள் கரங்களைப் பிடித்தான்.
அவன் தொடுகையில் அவள் தவிப்புடன் நிற்க ஈரம் சொட்டும் அவள் முகமும், அதில் இருந்த வெட்கமும் அவன் உணர்வுகளைத் தீண்ட அவள் முகம் நோக்கி குனிந்தான்.
அவன் இதழ்கள் அவள் கன்னம், காது என்று பயணித்து கடையில் அவள் இதழ்களில் இளைப்பாற இருவருமே அந்த முத்தத்தை ரசித்தார்கள். அப்போது கேட்ட இடிச் சத்தத்தில் தன்னுணர்வுக்கு வந்த உமா “சீ”, என்ற சொல்லோடு அவனைத் தள்ளி விட்டாள்.
அவள் அப்படிச் சொன்னதும் “உமா”, என்று அவன் அதிர்வாக அழைக்க “இப்படிச் செய்ய உங்களுக்கு வெக்கமா இல்லை?”, என்று கோபத்துடன் கேட்டாள்.
“என்ன டி வெக்கம்? நீ என் பொண்டாட்டி தானே?”, என்று சுள்ளென்று கேட்டான்.
“என் பெர்மிசன் இல்லாம இப்படி பண்ண மாட்டேன்னு சொன்னீங்க தானே?”
“உன் பெர்மிசனோட தான் செஞ்சேன்? முத்தம் கொடுக்கும் போது பேசாம தானே இருந்த?”
“சிவா”
“வாயை மூடு, நான் பண்ணினது தப்புன்னு பல தடவை சொல்லிட்டேன். சத்தியமா நான் பாத்ததும் விரும்பினது உன்னைத் தான் டி. மதுரைல வச்சு உன்னை ரசிக்க தான் செஞ்சேன். போட்டோ எடுக்குற மாதிரி உன்னை சுத்தி சுத்தி தான் வந்தேன். நீ நடந்துகிட்டது பிடிக்கலைன்னு விலகிப் போனது ஒரு காரணம்னா இன்னொரு காரணம் எங்க அம்மா. நான் உன்னை விரும்பிருந்தாலும் கண்டிப்பா எங்க அம்மா கிட்ட என் காதலை சொல்லிருக்க மாட்டேன். அது எங்க அண்ணா செஞ்சிட்டு போன தப்பால. ஆனா உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். உன்னை திருப்பி திருப்பி விரட்டினது எங்க அம்மா கிட்ட போய் என்னால காதல்னு நிக்க முடியாதுன்னு தான். இன்னொன்னு உன்னோட ஸ்டேட்டஸ். அது பக்கத்துல நான் நிக்க முடியாதுன்னு நினைச்சேன். அதான் உன்னை துரத்தினேன். இன்னொன்னு நீ விளையாடுறியான்னு எனக்கு தெரியலை. ஆனா உன்னை அன்னைக்கு ஆஸ்பத்திரில பாத்தேன் பாரு,… உன் நிலைமையைப் பாத்து செத்துட்டேன் டி. டாக்டர் சொன்னதைக் கேட்டு என் உயிரே போன மாதிரி இருந்துச்சு. நீ எனக்காக பட்டினி கிடந்தது சாக துணிஞ்சது எல்லாம் தெரியும். தெரிஞ்சிக்கிட்டே எதுக்கு உமா இப்படி மெலிஞ்சிட்டன்னு நான் எப்படி கேப்பேன்? ஆனா நீ என்னைப் புரிஞ்சிக்கவே இல்லை. அதுவும் நான் பேசின பேச்சினால தானே? திருப்பியும் நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். இப்ப நடந்ததுக்கும் சாரி. இனி உன்னை தொல்லை பண்ண மாட்டேன்”, என்று சொன்னவன் கடைக்கு சென்று விட்டான்.