பிரமோத் வெளிநாட்டில் வசித்து வந்தாலும் தினமும் சிவசந்திரனுடன் தொடர்பில் இருந்து வந்தான். ஆனால் கடைசி இரண்டு வாரங்களாக அவனிடமிருந்து அழைப்புகளோ குறுஞ்செய்திகளோ வராமல் இருந்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. திருமணமான புதிதில் கூடச் சிவசந்திரன் இப்படி இருந்ததில்லை. ஏதாவது ஒரு நேரத்தில் அவன் அனுப்பும் செய்திகளுக்கு ஒரு பதில் செய்தியாவது அனுப்பி விடுவான். இணைய வழியில் ஈமெயில் அல்லது வாட்ஸ் அப் ஏதேனும் ஒன்றில் தொடர்பிலேயே இருந்தவனுக்கு இப்போது என்ன ஆனது என்று அவனுக்குக் குழப்பமாக இருந்தது. எங்காவது அவசர ஆடிட்டிங்கில் இருப்பான் விரைவில் அவனிடமிருந்து செய்தி வரும் எனக் காத்திருந்தவனுக்கு நாட்கள் வாரங்களாகியும் அவனிடம் இருந்து பதில் வராமல் போகவும் அவன் மனம் துணுக்குற்றது. உடனடியாகக் கங்காவை தொடர்பு கொள்ள முயன்று அது முடியாததால் அடுத்தபடியாக அவர்கள் நட்பு வட்டத்தில் நெருக்கமாகவும் நம்பிக்கையாகவும் இருப்பவர்களைத் தொடர்பு கொண்டு சிவசந்திரன் பற்றிய முழு விபரத்தையும் அறிந்து கொண்டவன் உடனடியாக அடுத்த விமானத்தில் தாயகம் வந்து இறங்கினான்.
இறைவன் எப்போதும் நல்லவர்களுக்குக் கெட்டதை மட்டுமே செய்வதில்லை. தக்க சமயத்தில் நல்லதை செய்யவும் தவறுவதில்லை. ஆனால் அதுவரை பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என்பதே அவன் கட்டளை.
பிரமோத்தினாலும் சிவசந்திரனை சந்திக்க முடியவில்லை. சில நம்பிக்கையான வட்டாரங்களில் கிடைத்த தகவலின் படி சிவசந்திரனின் நிலைமையும் அடுத்து என்ன நடக்கவிருக்கிறது என்பதையும் அறிந்து கொண்டவன் சற்று துரிதமாகவே செயல்படத் துவங்கினான்.
சிவசந்திரனை அழிக்கவும் வீழ்த்தவும் பலர் சூழ்ச்சி செய்தாலும் அவனது நட்பையும் நேர்மையையும் மதிப்பவர்களும் இருக்கவே செய்தனர். அப்படிப்பட்டவர்களை வைத்துச் சிவசந்திரனை ஜாமினில் வெளியே எடுத்தான்.
சிறையில் இருந்து வெளியே வந்து சிவசந்திரனின் மனம் பயங்கரமாக இறுகி இருந்தது. தனக்குத் துளியும் சம்பந்தமில்லாத வழக்கில் தான் குற்றவாளியாக்கப்பட்டதும், தொடர்ந்து தன் மேல் சுமத்தப்பட்ட பொய் வழக்குகளும் அதற்காகச் சிறையில் அவன் அனுபவித்த கொடுமைகளையும் எண்ணி எண்ணி அவன் உள்ளம் உச்சபட்ச கொதி நிலையில் இருந்தது.
அவனைப் பின்னால் இருந்து முதுகில் குத்திய அந்தத் துரோகி அவனுடைய தொழில் சார்ந்த யாரோ ஓர் எதிரி என்றுதான் அவன் அதுவரை எண்ணியிருந்தான். ஆனால் வீட்டுக்குள் நுழைந்ததும் அவன் அறிந்து கொண்ட விஷயம் வேறாக இருந்தது, நம்ப மாட்டாதாதாகவும் இருந்தது.
பிரமோத் சிவசந்திரனை அவனுடைய வீட்டிற்கு அழைத்து வந்த போது, வீட்டுக் காவலாளி முதலாளியிடம் நலம் விசாரித்துவிட்டு, வீட்டு சாவியைக் கொடுக்கவும் அவன் மனதில், ‘கங்கா இங்கே இல்லையா, அவள் இங்கே இருந்திருந்தால் சாவி ஏன் காவலாளியின் கைக்குப் போகப்போகிறது?’ எனக் கசப்புடன் எண்ணியவனின் நெஞ்சில் நிராசை அலைகள் பாய்ந்தன.
மனைவியை ஆரத்தழுவி கொண்டு உருகி வழியும் மனநிலையில் அவன் இருக்கவில்லை தான் என்றாலும் அவன் மனம் அவளைத்தான் தேடியது. மூழ்குகிற கப்பலை விட்டு வெளியேறுகிற எலியை போல் அவளும் வீட்டை விட்டு போய் விட்டாளா சிறைக்குச் சென்று விட்டு வந்த கணவன் இனி தனக்கு வேண்டாம் என்றே நினைத்து விட்டாளா? என்று மனம் போன போக்கில் நினைத்தபடி வீட்டுக் கதவை திறந்து கொண்டிருந்தவனிடம், சில பார்சல் கவர்களைக் கொண்டு வந்து கொடுத்த காவலாளி அவையெல்லாம் அவன் இல்லாத போது வந்திருந்த பார்சல்கள் என்றும் சொல்லிவிட்டுச் சென்றான்.
ஆனால் சிறையில் இருக்கும் அவனைக் காண்பதற்காகக் கங்கா நடையாய் நடந்தது அவனுக்குத் தெரியாததைப் போலவே, அவனை ஜாமீனில் எடுப்பதற்காகத் தந்தையை மீறி அவள் அலைந்து திரிந்ததும், அந்த முயற்சிகள் தோல்வியடைந்ததும் கூட அவனுக்குத் தெரியாமலேயே இருந்தது தான் விதி.
உள்ளே வந்ததும் கடிதங்களைப் பிரித்துப் பார்க்கும் ஆர்வம் இன்றி அவற்றை மேஜை மேல் வைத்து விட்டுச் சோபாவில் அமர்ந்தவனின் கண்களில் பட்டது ‘ரகசிய சங்கதிகள்’ என்று மேலுறையில் வக்கிரத்துடன் எழுதப்பட்டிருந்த அந்தப் பார்சல். அதைப் பிரித்துப் பார்த்த போது, உள்ளே ஒரு பென் டிரைவும், பெயரோ கையொப்பமோ இல்லாமல் அச்சிடப்பட்ட கடிதமும் இருந்தன.
அந்தக் கடிதத்தில்,
நீ ஆசை ஆசையாய் திருமணம் செய்து மனைவி என்ற பெயரில் வீட்டில் கொண்டு வந்து வைத்திருக்கும் மாயப் பேய் கங்கா தேவி தான் உன்னுடைய சிறை வாசத்திற்கும் சீரழிவிற்கும் காரணமானவள். கற்பை விலைக்கு விற்கும் ஒழுக்கம் கெட்டவள் அவள். தந்தையின் வற்புறுத்தலுக்காக உன்னைத் திருமணம் செய்து கொண்டவள் அவளுடைய அந்தரங்க காதலனுடன் கம்பி நீட்டுவதற்காகப் போட்ட திட்டம் தான் உன் மீது போடப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வழக்கு. இந்தப் பக்கம் நீ சிறைக்குச் சென்றவுடன் அந்தப் பக்கம் உன்னுடைய சொத்துக்களைச் சுருட்டிக் கொண்டு சத்தம் இல்லாமல் காதலனுடன் கூத்தடிப்பது தான் அவளுடைய எண்ணம்.
ஊரார் முன்னிலையில் உத்தமி வேஷம் போடும் அந்தச் சாகசக்காரி அவளுடைய ஆசைகளுக்குத் தடையாக இருக்கும் உன்னைக் கொலை செய்யவும் தயங்க மாட்டாள். அவள் சுதாரிக்கும் நீ விழித்துக் கொள். அன்பு மனைவியை இப்படி ஒரு வெற்றுக் கடிதத்தை வைத்து சந்தேகிக்க மனம் வரவில்லையா இதோ இந்தக் கடிதத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் பென் டிரைவில் உன் மனைவியின் அந்தரங்க லீலைகளின் ஒரு பாதி இருக்கிறது. முழுவதுமாகப் பார்த்தால் உத்தமனே நீ தாங்க மாட்டாய். இனியும் ஏமாறாதே! என்று முடிந்திருந்தது.
பிரமோத்தை விட்டு விலகிச் சென்று தனது லேப்டாப்பில் பென்டிரைவை பொருத்திப் பார்த்தான். அதிலே கங்கா ஓர் இளைஞனுடன் ஓர் அறைக்குச் செல்வதும் சற்று நேரத்திற்குப் பின் அவனுடனே வெளியே வருகின்ற சிசிடிவி காட்சியும் நேரம் தேதி உட்படப் பதிவாகி இருந்தது.
ஆனால் அது கங்கா தானா சந்தேகமே இல்லை அதில் இருப்பதே அவன் மனைவி கங்காவே தான். கங்காவின் நிழலைக் கூட நன்கு அறிந்தவனுக்கு அவளுடைய உருவத்தைக் கண்டுபிடிக்க முடியாதா என்ன! ஆனால் இதை மட்டும் வைத்து அவளை எப்படிச் சந்தேகிக்க முடியும்?
பெயரோ விலாசமோ இல்லாத அந்தக் கடிதத்தின் நம்பகத்தன்மை சந்தேகத்திற்குரியதுதான் அதைப் பெரிதாகப் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இதுவே வேறு ஒரு சமயமாக இருந்திருந்தால் சிவசந்திரன் அதன் உண்மை நிலவரத்தை பொறுமையாக ஆராய்ந்து முடிவு எடுத்திருப்பான். ஆனால் அவன் மீது சுமத்தப்பட்டிருந்த வீண்பழி, அதனால் அவனுக்கு ஏற்பட்ட அவமானம் சிறையில் அவன் அனுபவித்த கொடுமைகள் எல்லாம் ஒட்டு மொத்தமாகச் சேர்ந்து அவன் மனதில் ஒரு கொந்தளிப்பை உண்டாக்கி இருந்தது. அவன் முற்றிலுமாகத் தனது நிதானத்தை இழந்து இருந்தான். கங்காவின் முகத்துக்கும் துரோகத்திற்கும் துளியும் ஒத்துப் போகவில்லை. அவள் களங்கமற்றவள், அவன் சிறைக்குச் சென்றதை பயன்படுத்திக் கங்காவின் மேல் யாரோ பழி சுமத்த முயற்சிக்கிறார்கள் என்று அவன் மனம் அவளுக்காக வாதாடினாலும் அது அவன் அறிவை எட்டவில்லை.
கங்கா ஏன் அவனைச் சந்திக்கச் சிறைக்கு வரவில்லை? அவள் ஏன் இந்த வீட்டில் இல்லை? அந்தக் கடிதத்தில் இருப்பது உண்மை தானா? கூடவே, அந்தச் சிசிடிவி காட்சியும் சேர்ந்து அவன் மனதை உறுத்தியது. கங்கா எதற்காக ஓர் இளைஞனுடன் ஹோட்டல் அறைக்குச் செல்ல வேண்டும்? குடும்பப் பெண் செய்கிற காரியமா அது! ஒருவேளை இந்தக் காட்சியைப் பதிவு செய்து அவனுக்கு அனுப்பியதே அந்த இளைஞனாகக் கூட இருக்கலாம். இது கங்காவின் குடும்ப வாழ்வை சிதைப்பதற்காகவோ அல்லது அவளை மிரட்டி பணிய வைப்பதற்காகவோ கூட இருக்கலாம் என்று கூட அவனுக்குத் தோன்றியது. ஆனால் இப்படியொரு விஷயம் நடந்திருப்பதைப் பற்றிக் கங்கா ஏன் இதுவரை மறைத்து வைத்தாள். கணவன் மனைவிக்குள் பரஸ்பர நம்பிக்கையும் அது என்றும் நிலைத்திருக்கத் தெளிந்த நீரோட்டம் போன்ற வெளிப்படைத் தன்மையும் அவசியம் என்பது தானே இருவரும் தங்களுக்குள் போட்டுக் கொண்ட முதல் நிபந்தனை. அப்படி இருந்தும் கங்கா இதை மறைக்க என்ன காரணம்!
அது எதுவாக இருப்பினும் ஒன்று மட்டும் உண்மை அவனைச் சுற்றி ஏதோ சதி நடக்கிறது நேரடியாகவோ மறைமுகமாகவோ கங்காவும் அதில் சம்பந்தப்பட்டிருக்கிறாள். அந்த ஹோட்டலில் என்ன நடந்தது, யார் அந்த இளைஞன்? இதற்கான பதிலை கங்கா தான் சொல்ல வேண்டும் என்று வெறியுடன் காத்திருந்தான். ஆனால் அவனைக் காண கங்கா வருவதற்கு முன் அவளுடைய தந்தை விஸ்வநாதன் வந்தார்.
சாறு எடுக்கப்பட்ட பின் தூக்கி எறியப்படும் கரும்பின் சக்கையாகச் சிவசந்திரனையும் தூக்கி எறிய நினைத்தார் விஸ்வநாதன். போதை வழக்கில் சிறைக்குச் சென்று வெளியே வந்திருக்கும் அவனால் இனி அவனுடைய தொழிலிலும் ஜெயிக்க முடியாது தன்னுடைய தொழிலுக்கும் அவனால் எந்தவித பிரயோஜனமும் இருக்கப் போவதில்லை. அந்தஸ்தையும் அடையாளத்தையும் இழந்து நிற்கும் அந்த அனாதை பயல் இனி தன்னுடைய நிழலில் தான் ஒதுங்கி வாழ வேண்டி இருக்கும். அப்படிப்பட்டவனை மருமகனாக நினைக்கவோ சம அந்தஸ்து கொடுத்து அவனுடன் பழகவோ அவர் விரும்பவில்லை.
எனவே மகளுக்கு எப்படி அவள் விருப்பத்தைக் கேட்காமலேயே மாப்பிள்ளையும் திருமணத்தையும் நிச்சயித்தாரோ அதேபோல விவாகரத்து வாங்கவும் அவராகவே முடிவெடுத்தார். அதற்காகத்தான் சிவசந்திரன் வெளியே வந்தவுடன் அவனைக் காணச் சென்றார்.
ஹாலில் அமர்ந்திருந்த பிரமோத் அவரைப் பார்க்க, அவரோ “எங்கே அவன்?” என்று கத்தினார்.
சத்தம் கேட்டு உள்ளறையில் இருந்து வெளியே வந்த சிவசந்திரனிடம் விவாகரத்து பத்திரங்களைக் நீட்டி, “இதிலே கையெழுத்துப் போடு, நான் கிளம்ப வேண்டும்” என்றார்
அதை வாங்கமலேயே, “என்ன அது?” என்று வினவினான் சிவசந்திரன்.
விஸ்வநாதனின் குணமறிந்தவனுக்கு இது அவ்வளவு ஆச்சரியமாக இருக்கவில்லை, மனம் கலங்காமல், “அதை உங்கள் மகள் சொல்லட்டும்” என்றான் அமைதியாக.
அவனைத் துச்சமாக எண்ணி, “அவள் என்ன சொல்வது! நீ தான் மாப்பிள்ளை என்று அவளுக்குச் சொன்னதே நான் தான், இப்போது நீ வேண்டாம் என்று சொல்வதும் நான் தான். என் பேச்சை அவள் மீற மாட்டாள், வீணாகப் பிரச்சனை செய்யாமல் கையெழுத்துப் போடு” என்றார் கட்டளையிடுவது போல.
“இந்த அதிகாரமெல்லாம் உங்கள் வீட்டோடு, இங்கே அதெல்லாம் செல்லாது, என்னை யாரும் மிரட்டிப் பணிய வைக்கவும் முடியாது. முதலில் நான் கங்காவுடன் பேச வேண்டும், அதற்குப் பிறகு மற்றதைப் பார்க்கலாம்” என்றான் அவன் நிமிர்வுடன்.
“போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியுடன் ஒரு கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்த பெண் பேசுவாள் என்றா நினைக்கிறாய்” என்றார் விஸ்வநாதன் ஏளனமாக.
அதுவரை அமைதியாக இருந்த பிரமோத் அப்போது கோபத்துடன் குறுக்கிட்டு, “அவன் குற்றவாளி என்று இன்னும் தீர்ப்பு வரவில்லை” என்றான்.
“இனி தனியாகத் தீர்ப்பு ஒன்று வர வேண்டுமா? அது தான் டிவி யிலும் பேப்பரிலும் தினசரி வருகிறதே. சேச்சே, நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இருந்தால் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்திருப்பானா, திருமணப் பத்திரிக்கையில் போடுவதற்குக் கூட ஊர் பேர் தெரியாத அனாதைப் பயல். இவனுக்கு நீ என்ன வக்காலத்து வாங்குவது”
சிவசந்திரன் பதில் சொல்லும் முன்பாகப் பிரமோத் முந்திக் கொண்டான். “வரம்பு மீறி பேசுகிறீர்கள். அவனாக வந்து உங்கள் வீட்டுப் பெண்ணைக் கேட்கவில்லை. அவனைத் தேடி வந்து பெண் கொடுத்தது நீங்கள் தான். இதுவரை அவன் உங்களுக்கு எவ்வளவு உதவி செய்திருக்கிறான் என்கிற நன்றி கூட இல்லாமல் இப்படி அநாகரிகமாகப் பேசுவது உங்கள் வயதுக்கும் அந்தஸ்துக்கும் தகுந்த மாதிரி இல்லை” என்று கண்டித்தான்.
என்ன இருந்தாலும் விஸ்வநாதன் சிவசந்திரனின் மாமனார் என்பதனால் தான் பிரமோ தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு பொறுமையாகப் பேசினான். வேறு எவரேனும் இப்படிப் பேசி இருந்தால் முதலில் அடித்து உதைத்துவிட்டு தான் பேச்சு வார்த்தையில் இறங்கி இருப்பான்.
“கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு என்பார்கள். நான் குலம் கோத்திரம் எதுவும் பாராமல் இவனை யோக்கியன் என்று நம்பி பெண்ணைக் கொடுத்ததால் தான் இப்படி அவமானப்பட்டு நிற்கிறேன். தகப்பன் பேரே தெரியாத இவனுக்குக் குடும்ப மானம் குல கௌரவம் பற்றியெல்லாம் எங்கிருந்து தெரியப் போகிறது. நல்ல தாய்க்குப் பிறந்திருந்தால் இப்படிப்பட்ட ஈனச்செயல் செய்யத் தோன்றுமா?” என்று தீயினும் கொடுஞ்சொற்களால் அவனைக் காயப்படுத்தினார்.
அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள மாட்டாமல் விஸ்வநாதனின் வயது உறவு முறை எல்லாம் மறந்து, “ஏய்! என்று ஒருமையில் கத்திய சிவசந்திரன், “என் எதிரே நின்று பேசும் தகுதி கூட உனக்குக் கிடையாது, தொழிற்சாலை என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை அழித்துக் கொண்டிருக்கும் உனக்கு உண்மையில் ஈனச் செயல் என்றால் என்னவென்று தெரியுமா? இதுவரை நீ செய்திருக்கும் சட்டவிரோதமான செயல்கள் அத்தனையும் எனக்கு அத்துபடி. ஜெயிலுக்குப் போய் விட்டு வந்தவனால் என்ன செய்ய முடியும் என்று நினைத்து விட்டாய் போல, இப்போது நான் நினைத்தால் கூட நீ இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் உன்னை அழித்து விட முடியும். அதைவிடச் சுலபமாக இதுவரை நீ செய்திருக்கும் முறைகேடுகளையும் மோசடிகளையும் உரிய ஆவணங்களுடன் அரசாங்கத்திடம் ஒப்படைத்தால் அத்துடன் உன் கதை முடிந்து விடும். ஆனால் இப்போது நான் வேறொரு மன நிலையில் இருக்கிறேன்” என்று மிகக் கடுமையான குரலில் எச்சரித்தான்.
சிவசந்திரன் குரலை உயர்த்தவும் விஸ்வநாதன் சற்று மிரண்டு போனார். சிறைக்குச் சென்று திரும்பியவன் தன்னைக் கண்டு அவமானப்படுவான் தன் எதிரே நிற்க கூச்சப்பட்டு அடங்கி இருப்பான் என்று அவர் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக அவன் ஆக்ரோஷமாகப் பேசவும் அவருக்கு வாயடைத்து போயிற்று. அதுவும் அவர் செய்திருக்கும் அத்தனை மோசடிகளையும் அறிந்தவன் அவரையே அழித்து விடுவேன் என்று எச்சரித்த பிறகு அவனை எதிர்த்துப் பேசும் வகையறியாது விஸ்வநாதன் அமைதியடைய வேண்டி இருந்தது.
மிதமிஞ்சிய ஆத்திரத்துடன் தொடர்ந்து பேசினான் சிவசந்திரன். “தொழில் பிரச்சனை, தொழிற்சங்க பிரச்சனை, வரி ஏய்ப்பு, பணத் தேவை, இதையெல்லாம் தீர்த்துக்கொள்ள உனக்குத் தேவை செல்வாக்கு மிகுந்த ஒரு பணக்காரன். அதற்காகத் தந்திரமாகப் பெற்ற மகளையே வியாபார பொருளாக்கி எனக்கு விற்று விட்ட உனக்கு என்னுடைய பிறப்பைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது. திருமணம் என்ற பெயரில் நீ செய்த வியாபாரத்திற்கு உண்மையில் என்ன பெயர் தெரியுமா? அதைச் சொல்வதற்குக் கூட எனக்குக் கூசுகிறது, இன்னும் சொல்லப் போனால் உன் பெண்ணுக்கு நீ தகப்பன் அல்ல தரகன், ஆனால் உண்மையான தரகன் கூட உன் அளவுக்குக் கணக்குப் போட்டுக் காரியத்தில் ஈடுபடமாட்டான். ” என்றான் அருவருப்புடன்.
விஸ்வநாதனின் கீழ்த்தரமான செயல்பாடுகள் குறித்து எல்லாமே அறிந்திருந்த போதிலும் மனைவிக்காக அவன் அவற்றைச் சகித்துக் கொண்டதோடு மரியாதையாகவும் நடந்து கொண்டான். ஆனால் வரையறை கடந்து அவர் பேசியதை பொறுத்துக் கொள்ள அவன் தன்மானம் இடமளிக்கவில்லை. குடும்பம் தொழில் என எல்லாவற்றிலும் குறுக்கு புத்தியுடன் கயமைத்தனம் மட்டுமே செய்யும் விஸ்வநாதனே இவ்வளவு பேசும் போது வாழ்வில் எந்தப் பின்புலமும் இன்றித் தன்னந்தனியே படித்து நேர் வழியில் முன்னேறிய சிவசந்திரன் அவரை எதிர்த்துப் பேசுவதில் ஆச்சர்யம் இல்லை!
தன்னுடைய ராஜ தந்திரத்தை இவ்வளவு இழிவாகப் பேசிய பின் விஸ்வநாதனுக்கு அமைதி எல்லாம் மறந்து போனது, “என்னை என்ன சொன்னாய்….” என்று அவேசமாகக் கத்தியபடி சிவசந்திரனின் சட்டையைப் பிடிக்க, அவன் அதைத் தடுக்க,
அப்போது யாரும் எதிர்பாராமல் வாயிற்புறம் இருந்து, “போதும்” என்று அலறினாள் கங்கா.
அவ்விடத்தில் கங்காவைக் கண்ட அம்மூவருக்கும் வெவ்வேறு விதமான உணர்ச்சிகள் தோன்றின. விஸ்வநாதனுக்கு மகள் எல்லாவற்றையும் கேட்டு விட்டாளோ என்கிற பதற்றம். பிரமோத்துக்கு, கங்கா அவளது தந்தையைப் போலச் சிவசந்திரனுக்குப் பாதகமான எதையும் பேசி விடக்கூடாது அதுவும் அவன் இருக்கும் இந்த நிலையில் என்கிற படபடப்பு. சிவசந்திரனுக்கோ அந்தக் கடிதத்தினால் ஏற்பட்ட கோபம் விஸ்வநாதனின் தகாத பேச்சினால் ஏற்பட்ட ஆத்திரம் எல்லாம் சேர்ந்து அதற்குப் பரிகாரமாக அவளைப் பலிபீடத்தில் நிற்க வைக்கத் துடித்துக் கொண்டிருந்தான்.