கணவன் ஜாமீனில் வெளியே வந்திருப்பதை அறிந்த கங்கா அவனைக் காண விரைய மகளுக்குத் துணையாக அவளுடன் மாதவியும் வந்திருந்தாள். அவர்களுக்கு முன்னால் விஸ்வநாதன் அங்கே சென்றிருப்பது அவர்களுக்குத் தெரியாது. சிவசந்திரன் கடைசியாகப் பேசியவற்றைக் கேட்டப்படியே உள்ளே வந்த கங்காவை அவனுடைய கோபக் குரலும் வார்த்தைகளும் அதிர வைத்தன. கணவன் பேசிய வார்த்தைகளினால் ஆத்திரமடைந்ததால் தான் விஸ்வநாதன் அவனுடைய சட்டையைப் பிடித்துள்ளார் என்றெண்ணிய கங்கா அதற்கு முன்பாகத் தந்தை பேசிய தரக்குறைவான வார்த்தைகளை அறியாமல் போனாள்.
மனைவியும் மகளும் உள்ளே வருவதைப் பார்த்த விஸ்வநாதன் சிவசந்திரனை விடுத்து, “நீங்கள் ஏன் இங்கே வந்தீர்கள்?” என்று மாதவியை அதட்டினார். அவர் பேசியவற்றில் எதையெல்லாம் கேட்டு விட்டார்களோ என்கிற பதற்றம் அவருக்கு ஆனால் தந்தையைக் கடந்து கணவனிடம் சென்ற கங்கா,
“இப்படியெல்லாம் பேசுவதற்கு உங்களுக்கு எப்படி மனம் வந்தது, இவ்வளவு வக்கிரமான எண்ணத்தை மனதில் வைத்துக் கொண்டுதான் இத்தனை நாள் என்னுடன் வாழ்ந்தீர்களா” என்று அடிபட்ட வலியுடன் கேட்டாள் கங்கா.
கணவன் பேசியதை கேட்டு அவளுக்குக் கோபத்தை விட வருத்தமும் வேதனையும் தான் அதிகமாக இருந்தது. சிவசந்திரன் பேசியவற்றை மட்டுமே கேட்டுவிட்டு அவள் இப்படிப் பேசுவது புரிந்த பிரமோத், “சிஸ்டர் இங்கே என்ன நடந்தது….” என்று நடந்தவற்றைச் சொல்ல முற்பட்ட போது,
“பிரமோத்” என்று அவனைத் தடுத்த சிவசந்திரன், “நீ பேசாதே நான் பேசிக் கொள்கிறேன்” என்றான்.
அவளுடன் பேசுவதற்காகவே வெறியுடன் காத்திருந்த சிவசந்திரன் அவளே எதிரில் வந்து நிற்கவும், இது அவனும் அவளும் மட்டுமே பேச வேண்டிய தருணம் என்பதை உணர்ந்து வேறு எவரையும் பேச அனுமதிக்கவில்லை.
மீண்டும் கங்காவே பேசினாள். “என் தந்தை தரகர் என்றால் நான் யார்? என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதையும் இப்போதே சொல்லி விடுங்கள்” என்றாள் அதே பழைய குரலிலேயே.
அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தபடி தன்னைச் சிறைக்கு அனுப்பியது கங்கா என்று அவனால் நம்ப முடியவில்லை. அது வேறு யாரோ செய்த சதி என்று நினைத்தான். ஆனால் இப்படிப்பட்ட பயங்கரமான சதி செய்யும் அந்த எதிரி யார்? அது அவனுடைய எதிரியா அல்லது அவளுடைய எதிரியா?
இத்தனை ஆண்டுகள் ஆடிட்டிங் தொழிலில் இருப்பவனுக்கு அதன் நெளிவு சுளிவுகள் மற்றும் சூட்சுமங்கள் அத்துப்படி. கொலை, விபத்து, குண்டுவெடிப்பு என்று சர்வ சாதாரணமாகவே எதிரிகளை அழித்துவிடக் கூடியவர்களுக்குத் தன்னை அழிக்கக் கங்காவின் மீது பழி சுமத்தி அதற்காக என்றோ நடந்த சம்பவத்தை ஆதாரமாக அனுப்பி வைக்க வேண்டிய அவசியமே கிடையாது.
இந்த விஷயத்தில் கங்கா பெயரும் அடிபடுகிறது பழைய சம்பவங்கள் எல்லாம் மீண்டும் கிளறப் படுகிறது என்றால் என்ன அர்த்தம்? இதைச் செய்தது கங்காவின் எதிரியாகத் தான் இருக்க வேண்டும் என்பது தானே!
ஒரு பெண் விஷயத்தில் ஒருவன் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்கிறான் என்றால் அவள் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்க வேண்டும் என்பது இதிலிருந்தே புலப்படவில்லையா? தவறு செய்தது கங்கா, அதற்காக அம்பு குறிப் பார்க்கப்பட்டது அவளுக்காக. ஆனால் அதற்குப் பலியானது அவனுடைய வாழ்க்கை, மானம், மரியாதை என அனைத்தும். வழக்கு, சிறை வாசம், எல்லாம் போதாதென்று அவள் தந்தை வந்து என்னவெல்லாம் பேசிவிட்டார். இத்தனைக்கும் காரணமானவளை அவன் லேசில் விடுவானா?
முகத்தில் ஒருவித அன்னிய தன்மையுடன், “நீ ஹோட்டல் ஜூபிளண்ட்க்கு போயிருக்கிறாயா?” எனக் கேட்டான்.
‘ஹோட்டல் ஜூபிளண்ட்’ பெயரைக் கேட்டவுடன் மின்சாரக் கம்பியை மிதித்தவள் போல் அவளுக்குள் ஒரு வித பய உணர்வு ஏற்பட்டது. அவன் ஏன் இப்போது அதைப் பற்றிப் பேசுகிறான் என்று புரியாத திகைப்புடன், “என்னது?” என்று கேட்டாள்.
மறுமுறையும் அதே கேள்வியைக் கேட்டுவிட்டு, “இல்லை என்று மட்டும் பொய் சொல்லி விடாதே. நீ அங்கே போனதற்கான ஆதாரம் இருக்கிறது” என்றான் இரும்பு குரலில்.
அவளுக்குத் திகைப்பும் அச்சமும் அதிகரிக்க, “அது, நான் அங்கே….” என்று வார்த்தைகளற்றுத் தடுமாறினாள்.
குரலின் தீவிரம் அதிகரிக்க, “சொல்லு நீ அங்கே எதற்காகப் போனாய்? அன்று உன்னுடன் வந்தவன் யார்?” என்று கேட்டான்.
“அவன் என் நண்பன்!”
“நண்பன்!” என்று அருவருப்புடன் முகத்தைத் திருப்பியவன் மீண்டும் அவளை நோக்கியவாறு, “நண்பனை தனியறையில் தான் சந்திக்க வேண்டுமா? பொது இடத்திலேயே பேசி இருக்கலாமே” என்றான் ஒரு மாதிரி குரலில்.
அவன் தன்னைத் தவறாக நினைப்பது புரிய, “நான் அங்கே போனது என்னுடைய இன்னொரு ஃபிரண்டுகாகத் தான் எனக்காக அல்ல” என்று விளக்க முயன்றாள்.
அவள் பேச்சில் நம்பிக்கையற்று, “ஒரு ஃபிரண்டுக்காக இன்னொரு ஃபிரண்டை நீ தனி அறையில் சந்திக்கச் சென்றிருக்கிறாய் என்றால் அப்படிப்பட்ட விஷயம் என்ன? அங்கே என்ன நடந்தது” என்று குறுக்கு விசாரணை செய்பவன் போல் பேசினான் அவன்.
“அப்படியானால் நீங்கள் என்னைச் சந்தேகப்படுகிறீர்களா?” என்று நேரடியாகவே கேட்டாள் கங்கா.
“அது நீ சொல்லப் போகும் பதிலில் தான் இருக்கிறது” என்றான் அவன்.
வினுஷாவுக்காகக் கங்கா அந்த விஷயத்தைச் செய்திருந்தாலும் அந்த நாளில் அவளுக்கு இருந்த பதற்றமும் நடுக்கமும் இன்னமும் அவள் மனதை விட்டு அகலாமல் இருந்தது. அந்த நாளை எப்போது நினைத்தாலும் மீண்டும் அதே உணர்வு அவளுக்கு ஏற்படுவதால் அதைப் பற்றி மீண்டும் அவள் நினைத்துப் பார்க்கவே விரும்புவதில்லை. அப்படிப்பட்ட விஷயத்தைப் பற்றிச் சிவசந்திரன் மீண்டும் மீண்டும் பேசுவதும் குற்றவாளி போல் விசாரிப்பதும் அவளுக்குத் துளியும் பிடிக்கவில்லை, அதுவும் இப்படிப்பட்ட நேரத்தில். அவனைக் காண எவ்வளவு ஆவலாக ஓடி வந்தாளோ அத்தனையும் இப்போது வெறுப்பாக மாறிக் கொண்டிருந்தது.
“அங்கே என்ன நடந்திருந்தாலும் அது என் ஃபிரண்டுக்காக நடந்தது தான். அதுவும் நம்முடைய திருமணத்திற்கு முன்னால் நடந்தது அதற்கும் உங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது, இப்போது நீங்கள் ஏன் அதைப் பற்றிப் பேசுகிறீர்கள்?” என்று குரலில் கோபம் துளிர்விடக் கேட்டாள் கங்கா.
கேட்ட கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காமல் இப்படிச் சுற்றி வளைப்பதும் மழுப்பலாகப் பேசுவதும் அவனுடைய சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாகவே இருக்கப் பொறுமை இழந்த குரலில், “உன் கணவனாக உன்னைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டிய உரிமை எனக்கு இருக்கிறது, இப்போது அதற்கான அவசியமும் ஏற்பட்டிருக்கிறது அதனால் நீ நிச்சயமாக உண்மையைச் சொல்லித்தான் ஆக வேண்டும்” என்று நிர்பந்தித்தான் சிவசந்திரன்.
“அது என்னைப் பற்றிய விஷயமாக இருந்திருந்தால் எப்போதோ சொல்லி இருப்பேனே. ஆனால் அது இன்னொருவரை பற்றிய விஷயம் அதனால் அதைப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை, ப்ளீஸ் புரிந்து கொள்ளுங்கள்”
அவள் தோள்களை முரட்டுத்தனமாக அழுந்த பற்றி உலுக்கி, “தன் மனைவி ஒரு ஆணுடன் தனியறைக்குச் சென்றதைப் பற்றி ஒரு கணவன் என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய் சொல்லு” என்று அவன் கர்ஜித்த போது கங்கா மனமுடைந்து நொறுங்கிப் போனாள்.
வினுஷாவைப் பற்றிய உண்மைகளைச் சொல்ல முடியாமலும் தன்னைத் தவறானவள் அல்ல என்று நிரூபிக்க முடியாமலும் அவள் தவித்துத் துடித்து நின்ற நிலை கண்டு மாதவி அவள் அருகே ஓடி வந்தாள்.
கணவன் மனைவி பேசிக் கொண்டிருந்த விஷயம் அங்கிருந்த யாருக்கும் புரியவில்லை ஆனால் ஹோட்டல் தனியறை ஆண் நண்பன் என்ற வார்த்தைகள் ஏதோ தவறாக இருப்பதை உணர்த்த மாதவி, “கங்கா என்னம்மா இதெல்லாம். நீ எப்போதும் அங்கெல்லாம் போனாய்” என்று கேட்டாள்.
அன்னை அருகே வந்தவுடன் கங்காவின் உறுதி தளர மனமுடைந்து, “அம்மா உண்மையிலேயே நான் எந்தத் தப்பும் செய்யவில்லை அம்மா என்னை நம்புங்கள் ப்ளீஸ்” என்று கண்ணீர் மல்க கெஞ்சினாள்.
“உன்னை யாருமே தவறாக நினைக்கவில்லைம்மா, அந்த இடத்தில் என்ன நடந்தது என்று தான் அவரும் கேட்கிறார். அது எதுவானாலும் தைரியமாகச் சொல்லிவிடும்மா” என்றாள் மாதவி.
‘அம்மா அதைச் சொன்னால் ஒரு பெண்ணின் வாழ்வே அழிந்து விடும்”
“இப்போது நீ சொல்லாவிட்டால் உன் வாழ்க்கை அழிந்துவிடுமே கங்கா”
“அதையெல்லாம் சொன்னால்தான் இவருக்கு என் மேல் நம்பிக்கை வருமா அம்மா, இத்தனை நாளில் அது தானாகவே வந்திருக்க வேண்டாமா? என்னிடமே நம்பிக்கை இல்லாதவர் நான் சொல்வதை மட்டும் உண்மை என்று எப்படி நம்புவார்”
“அப்படி என்றால் அந்தப் பெண் யார் என்றாவது சொல் இல்லையென்றால் நடந்த விஷயத்தை அவளையே சொல்ல வை அது மட்டும் தான் இப்போது இருக்கும் ஒரே வழி”
அப்போதும் கங்கா பேசாது நிற்க, “தயவு செய்து சொல்லிவிடுமா….” என்று கெஞ்சியவள், “சொல்லுடி சொல்லப் போகிறாயா இல்லையா” என்று அவள் கன்னங்களில் மாறி மாறி அடித்து, “நீ உனக்காகச் சொல்ல வேண்டாம் எனக்காக, நம் குடும்பக் கௌரவத்திற்காக உண்மையைச் சொல்லித்தான் ஆக வேண்டும்” என்று கட்டாயப் படுத்தினாள்.
“அம்மா…” என்று அவள் தயங்க, “சொன்னதைச் செய்” என்று உத்தரவிட்டாள்.
வேறு வழியின்றிக் கங்கா வினுஷாவை ஃபோனில் அழைக்க, மறுமுனையில், “ஹலோ” என்று பேசியது வினுஷா தான். அவள் குரல் கேட்ட மாத்திரத்தில் கங்கா தன் வாழ்வை காப்பாற்றிக் கொள்ளவும் அதே சமயத்தில் வினுஷாவுக்கு அதனால் பாதிப்பு ஏற்படாதவாறும் படபடப்பாகப் பேசினாள்.
“வினு, நான் கங்கா பேசுகிறேன், நீ இப்போது எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும். அதை நீ ஒரு வார்த்தையில் பதில் சொன்னால் கூடப் போதும். அன்று நான் ஹோட்டல் ஜூபிலண்ட்க்கு போனது உனக்காகத் தானே” என்றவள் தொடர்ந்து, “ப்ளீஸ் சொல்லு இதனால் உனக்கு ஒரு பிரச்சனையும் வராது வினு. ப்ளீஸ், இப்படிக் கேட்டதற்காக என்னை மன்னித்துவிடு. எனக்காக உண்மையைச் சொல் வினு” என்று அவள் மன்றாடிக் கொண்டே இருக்க, சட்டென மறுமுனை நிசப்தமாகிவிட்டது.
அவள் மீண்டும் ஒருமுறை அழைக்கக் கடுமையான குரலில், “சாரி, ராங் நம்பர்” என்று மறுமுனை துண்டிக்கப்பட்டு அத்துடன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டது..
ஃபோன் ஸ்பீக்கரில் இருக்க, எல்லோருக்குமே அந்தப் பதில் நன்றாகக் கேட்டது.
பேரதிர்ச்சியில் உறைந்து போன கங்கா நிராசையுடன் அடுத்து என்ன செய்வது என்று நினைப்பதற்குள் அந்த விஷயத்தில் அவளுடன் துணை நின்ற ராஜுவின் நினைவு வர. நிச்சயமாக வினுஷாவை போல் ராஜு நடந்து கொள்ள மாட்டான் என்ற நம்பிக்கையில் அவனுக்கு ஃபோன் செய்து பார்த்தாள். துரதிஷ்டவசமாக அவனைத் தொடர்பு கொள்ள முடியாமல் போன பின்பு தான் கங்காவுக்கு அவளுடைய பயங்கரமான நிலை புரிந்து தன் மீதே அவளுக்குக் கழிவிரக்கம் சுரந்தது.
ஆனால் இது அதற்கான நேரமல்ல. இனி அவள் தன் வாழ்வை காப்பாற்றிக் கொள்ள வினுஷாவையோ ராஜுவையோ நம்பி காத்திருக்கவும் அவகாசம் இல்லை. எனவே கடைசி முயற்சியாகக் கணவனிடம் தானே நடந்த உண்மைகளைக் கூற முனைந்தாள் கங்கா.
“உண்மையில் நான் அங்குச் சென்றது வினுஷாவுக்காகத் தான், ஏனென்றால்….” என்று அவள் சொல்லத் தொடங்கிய போது சிவசந்திரன் கை உயர்த்தி அவளைத் தடுத்தான்.
அவள் சொல்ல வந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ள அவன் தயாராக இல்லை. விளங்கச் சொல்வதானால் கங்கா செய்த ஏதோ ஒரு தவறான செயலில் ஈடுப்பட்டிருக்கிறாள் என்றே அவனது ஆழ்மனம் நம்பத் தொடங்கி விட்டது. அதனால் தான் அந்த விஷயத்தில் கங்கா கூறிய எதுவும் அவன் கருத்தில் பதியவில்லை. உண்மையை அறிந்து கொள்ள நினைப்பவரிடம் தான் உண்மையைச் சொல்லி விளங்க வைக்க முடியுமே தவிர அடுத்தவரை குற்றவாளி என்றே தீர்மானித்து விட்டு விசாரிப்பவனிடம் என்ன சொல்லியும் பலனிராது. அதுதான் கங்காவின் விஷயத்திலும் நடந்தது. சிவசந்திரன் கங்காவிடம் உண்மைகளை அறிந்து கொள்ள முனையவில்லை, மாறாக அவள் ஏதோ ஒரு விபரீதமான விஷயத்தைச் செய்துவிட்டு இப்பொழுது அதை மறைக்கிறாள் அதற்காக மேலும் மேலும் பொய் பேசுகிறாள் என்று எண்ணினான்.
கங்கா தான் செய்த தவறை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான்! தவறே செய்யாதவள் எப்படி அதை ஒப்புக் கொள்வாள்?
அவன் சிறைக்குச் சென்ற விவகாரம், அதன் பின்னே அவன் படித்த கடிதம், விஸ்வநாதனின் பேச்சு மற்றும் மனைவியின் மழுப்பலான பதில்கள் எல்லாம் சேர்ந்து அவன் மனதை அழுத்த கங்காவின் மேலிருந்த காதல் அவன் அடி மனதில் புதைந்து போனது.
“போதும் உன் நாடகம்! இந்த விஷயத்தில் சம்பந்தப்படாதவர்களுக்கு ஃபோன் செய்து ஏதேதோ பேசினால் மட்டும் எப்படி உனக்குச் சாதகமான பதில் கிடைக்கும்” என்றான் அயர்ந்த குரலில்.
“இல்லை உண்மையிலேயே வினுஷா….” என்று அவள் பேச முற்பட மீண்டும் அவன் குறுக்கிட்டான்.
வெறுப்புடன், “போதும் என்றேனே! இனி பேசுவதற்கு நமக்குள் எதுவுமே இல்லை, பேசுவதற்கு மட்டுமல்ல வாழ்விலும் ஒன்றுமில்லை” என்றவன் விஸ்வநாதன் கொண்டு வந்திருந்த விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்திட்டு அதை அவள் முகம் நோக்கி வீசினான்.
“என்ன இது?” என்று அவள் தவிப்புடன் கேட்க,
“நீ விரும்பியது” என்றவன் அதற்கு மேலும் அவளைப் பார்க்க விரும்பாமல், “போ வெளியே” என்றான்.
சிவசந்திரன் விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்து போடுவதைத் திருப்தியுடன் பார்த்த விஸ்வநாதன், அதற்கு மேல் பேச்சை வளர்க்க விரும்பவில்லை. அவர் எதிர்பார்த்து வந்தது தான் நடந்து விட்டதே.
ஆனால் மாதவியோ மகளின் வாழ்க்கைக்காக மீண்டுமொரு முறை அவனிடம் பேசிப் பார்க்க எண்ணி, “தம்பி….” என்ற போது,
“என்ன அவனிடம் கெஞ்சி கூத்தாடி வாழ்க்கை பிச்சை கேட்க போகிறாயா?” என்று மனைவியை அதட்டிய விஸ்வநாதன், “இன்னும் ஏன் மானங்கெட்டு இங்கேயே நிற்கிறீர்கள். அவன் சொன்னது சரியாகக் கேட்கவில்லையா அல்லது கேட்டும் உறைக்கவில்லையா?” என்று கத்தினார்.
இரும்பாய் இறுகி நிற்கும் மருமகனையும் நதி போல் கலங்கி நிற்கும் மகளையும் எப்படியாவது சேர்த்து வைத்து விட முடியுமா என்ற பரிதவிப்போடு பார்த்துக் கொண்டு நின்ற மாதவியால் காட்டுத்தனமாய்க் கத்திக் கொண்டிருந்த கணவரை மீறி எதுவும் செய்ய முடியாமல் போனது. உணர்வற்ற சிலையாய் நின்றிருந்த கங்காவை அழைத்துக் கொண்டு வெளியேறுவதைத் தவிர.