இந்த உலகம் பொல்லாதது துரோகங்களாலும் ஏமாற்றங்களாலும் சூழப்பட்டது, வாழ்க்கை துன்பமயமானது என்பதை மிகப் பெரிய விலை கொடுத்து அறிந்து கொண்ட கங்கா தனது இழப்பின் வலி உணர்ந்து தனிமையில் கதறி அழுதாள்.
ஃபோனில் பேசியது வினுஷா தான் என்பதில் கங்காவுக்குச் சந்தேகமே இல்லை. அப்படி அது வினுஷாவாக இல்லாவிட்டால் மறு வினாடியே எதற்காக ஃபோன் சுவிட்ச் ஆப் செய்யப்பட வேண்டும்?
அன்று வினுஷாவுக்காக எவ்வளவு பெரிய ஆபத்திற்கும் துணிந்து அவள் வாழ்வை காப்பாற்றினாள் கங்கா. ஆனால் அதற்கான நன்றியோ நட்புணர்வோ கிஞ்சித்தும் இல்லாமல் அவளுக்குத் துரோகம் செய்ய வினுஷாவுக்கு எப்படி மனம் வந்தது? ஒருவேளை உண்மையைச் சொன்னால் தன் வாழ்விற்கு அது பாதகமாக அமைந்து விடுமோ என்ற அச்சமா? ஆனால் கங்கா அவள் வாழ்வை கெடுக்க நினைப்பாளா என்று அவளுக்கு எண்ணத் தோன்றவில்லையே, என்பதுதான் கங்காவுக்கு நினைக்க நினைக்க வேதனையாக இருந்தது.
வினுஷா விஷயத்தில் அவள் நல்லதை தானே செய்தாள், அது எப்படி அவளுக்கு அது தீங்காக மாறியது? அதற்காகச் சிவசந்திரன் ஏன் அவளுக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்தான்? தன் வாழ்வில் அவள் எல்லோருக்குமே உண்மையாகத் தானே இருந்தாள். அப்படி இருந்தும் அவளை ஏன் எல்லோருமே கைவிட வேண்டும்? சிவசந்திரனை வெளியே கொண்டுவர இராப்பகலாக அவள் என்ன பாடுபட்டு இருப்பாள், அவனைத் தன் உயிருக்கும் மேலாக நேசித்தாளே. அப்படி ஒரு நேசம் அவனுக்கும் இருந்திருக்குமானால் அவனால் இப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்க முடியுமா?
அவள் சமைக்கும் போது கவனக்குறைவாகக் கையைச் சுட்டுக் கொண்டாலோ அல்லது வெட்டிக் கொண்டாலோ கூட அப்படிப் பதறிப் போவானே. அப்படிப்பட்டவனா இப்போது இப்படிப் பேசியது என்று நினைத்து நினைத்து மறுகினாள். இல்லை அவன் எதையோ தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறான், அந்தக் கோபத்தில் தான் ஏதேதோ பேசி விட்டான் மற்றபடி அவனால் தன்னைப் பிரிந்து வாழவே முடியாது. இந்தப் பிரிவு நிரந்தரம் இல்லை விரைவில் அவன் தன்னிடம் வந்து விடுவான் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தாள்.
கணவனின் நினைவில் ஒவ்வொரு நாளும் கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தவளுக்கு அந்தத் தனிமையும் மனபாரமும் பித்துப் பிடிப்பதைப் போல் இருக்கவே, மன இறுக்கத்திலிருந்து விடுபடவும் தன்னை அமைதிப்படுத்திக் கொள்ளவும் அன்று மாலை அருகில் உள்ள பூங்காவுக்குச் சென்றிருந்தாள் கங்கா.
கங்காவை சந்திப்பதற்காகச் சில நாட்களாக அடிக்கடி அந்தப் பகுதியில் வலம் வந்து கொண்டிருந்த சிவரூபனுக்கு அன்று சரியான சந்தர்ப்பம் அமைந்தது. கங்காவை பின்தொடர்ந்து பூங்காவுக்குச் சென்றவன் அவள் எதிரில் வந்து நின்று, ” புனிதமான கங்கை இப்போது பாவப்பட்ட கங்கை ஆகிவிட்டது போல் இருக்கிறதே ஐயோ பாவம்!” என்று போலியாகப் பரிதாபப்படுவது போல் அவளைப் பரிகசித்தான்.
அவன் எதிரே நிற்பது கூட அருவருப்பைக் கொடுக்க அவனைக் கடந்து செல்ல முயன்றாள் கங்கா.
ஆனால் அவளை வழிமறித்து நின்ற சிவரூபன், “அதற்குள் என்ன அவசரம், நான் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டு விட்டுப் போ” என்றான்.
“நீ சொல்லி கேட்பதற்கு எனக்கு எதுவும் கிடையாது?” என்றாள் அவள் அலட்சியமாக.
“ஆனாலும் பாரேன், நான் சொல்லி நீ தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தையும் கடவுள் உருவாக்கியிருக்கிறார்!” என்றவன் அவள் முகம் கோபத்தில் துடிப்பதை ரசித்துவிட்டு மேலும் தொடர்ந்தான் “அன்றைக்குப் பெரிதாகச் சவால் விட்டாயே நீ கங்கை நான் சாக்கடை என்னால் உன்னை எதுவுமே செய்ய முடியாது என்று. ஆனால் இப்போது உன்னைச் சாக்கடையை விட இழிவான நிலைக்குக் கொண்டு வந்து விட்டேன் பார்த்தாயா” என்று வெற்றி களிப்பில் சிரித்தவன் அவள் பேச இடம் கொடமால் தொடர்ந்து பேசினான்.
“நீ தவறானவள் என்று சித்தரித்து அதற்குச் சாட்சியாக நீ ஹோட்டல் ஜூபிலண்ட்க்கு வந்த வீடியோவையும் சேர்த்து பெரியரில்லாத ஒரே ஒரு கடிதம் தான் உன் கணவனுக்கு அனுப்பினேன், அவனும் அதை அப்படியே நம்பி விட்டான்”
அதைக் கேட்டுக் கொண்டிருந்தவள் கட்டுக்கடங்காத ஆத்திரத்துடன், “சீ, நீ எல்லாம் ஒரு மனிதனா…” என்று கத்தத் தொடங்க அவன் மீண்டும் இடையிட்டு, “கூல் கூல், இதற்கே இவ்வளவு ஆவேசப்பட்டால் எப்படி, முழுவதுமாகக் கேட்டுவிட்டுப் புலம்பு. பாவம் இனிமேல் உன்னால் அதை மட்டும் தானே செய்ய முடியும். என்னுடைய லட்சியம் உன்னை அழிப்பது மட்டும்தான் ஆனால் உன்னைப் போன்ற அடங்காப்பிடாரியை திருமணம் செய்து கொண்டு உருகி உருகி காதலித்ததற்காகவே அந்த மடையன் அவன் தான் உன் கணவன் அவனுக்கும் தண்டனை கொடுக்க நினைத்தேன் அதனால்….”
“அதனால்?” என்று அவள் பதற,
“அவனுடைய காரில் போதைப் பொருளை வைத்து அந்தத் தகவலை போலீசுக்கும் போட்டுக் கொடுத்ததே நான் தான், ஆனால் அதையெல்லாம் செய்தது நீதான் என்றும் அதற்குக் காரணம் உன்னுடைய கள்ளத்தொடர்பு தான் என்றும் அவனை நம்ப வைத்து விட்டேன்.
இதையெல்லாம் உன்னால் நிரூபிக்கவும் முடியாது. ஏன் நானே வந்து எல்லாவற்றுக்கும் காரணம் நான் தான் என்று சொன்னால் கூட அவன் நம்பப் போவதில்லை. அந்த அளவிற்கு உன்னை வெறுத்து விட்டான். எப்படி என்னுடைய திறமை, உன்னுடைய ஆணவம் அகங்காரம் காதல் திருமணம் எல்லாவற்றையும் மொத்தமாக அழித்துவிட்டேன். நீ எனக்குச் செய்ததை விடவும் இது பயங்கரத் திரில்லிங்காக இருக்கிறது இல்லையா. இதற்காக நீ இன்னொரு முறை கூட என்னைப் பழி வாங்கலாம் ஆனால் அதன் பின் விளைவு இதைவிடப் பயங்கரமாக இருக்கும். இனி காலமெல்லாம் இதை நினைத்து நினைத்து நீ கண்ணீர் விட வேண்டும், என் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிட்டதை எண்ணி வருந்த வேண்டும்” என்று சொல்லி முடித்துவிட்டு வேகமாக அங்கிருந்து வெளியேறினான் அந்த அரக்கன்.
அவன் சென்று நீண்ட நேரம் ஆகிவிட்ட பின்னரும் அவள் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டே இருக்கப் பொது இடத்தில் நிற்பதை உணர்ந்து மெல்ல வீடு நோக்கி நடந்தாள் கங்கா. மன அமைதிக்காகப் பூங்காவிற்கு வந்தவள் தனக்குள் மிச்சம் மீதி இருந்த மற்ற சக்திகளையும் இழந்துவிட்டாள். சிவரூபன் சொன்னவற்றை மீண்டும் மீண்டும் யோசித்துப் பார்த்தாள், அவன் சொன்னது உண்மைதான் அவளால் எதையுமே நிரூபிக்க முடியாது எப்படி எடுத்துச் சொன்னாலும் சிவசந்திரன் நம்பப் போவதும் கிடையாது என்பதை மிகத் தெளிவாக உணர்ந்துவிட்டாள். ஆனால் யாரோ ஒருவன் எழுதி அனுப்பிய கடிதத்தை நம்பிய அளவிற்கு உயிருக்கு உயிராய் இருந்த மனைவியை நம்பத் தோன்றவில்லையா அவனுக்கு? என்ற கேள்வியே அவள் மனதில் நிலைத்தது.
உலகில் தங்களைப் போன்ற மனமொத்த தம்பதிகளே கிடையாது என்று எத்தனை நாட்கள் எண்ணி எண்ணி பூரித்துப் போயிருப்பாள் அவையெல்லாம் வெறும் மாயை என்று இப்போது அல்லவா புரிகிறது. அதேபோல் ஆண்கள் வர்க்கத்திலேயே அவன் ஒருவன் தான் உயர்ந்தவன் என்று அவள் நினைத்தது கூடத் தவறுதான் உண்மையில் அவன் சராசரி ஆண்களை விடவும் மிகவும் சாதாரணமானவன் தான் இல்லாவிட்டால் தீர விசாரிக்காமல் சீராக உண்மையை அறிந்து கொள்ளாமல் இப்படி அவசரப்பட்டுப் பேசியிருக்க மாட்டான். அவளுடைய அன்புக்கும் காதலுக்கும் அவனிடம் இருந்து கிடைத்த பரிசு ஏமாற்றம் மட்டுமே அந்த ஏமாற்றத்திற்குப் பிறகு அவள் எல்லோரையும் துறந்து விட்டாள் எல்லாவற்றையும் வெறுத்து விட்டாள்.
அத்துடன் இறைவன் வரைந்த அழகிய காதல் ஓவியம் பாழும் மனிதர்களால் கலைந்து போனது.