“சத்….சத்யா…..”என்று கயல்விழியின் உதடுகள் உச்சரிக்க,தன்னை நோக்கி நடந்து வருபவனைக் கண்டு மனது வேகமாக துடிக்க தொடங்கியது.எத்தனை வருடங்கள் ஓடிவிட்டது அவனைக் கண்டு நிஜத்தில் மறந்து தான் போயிருந்தாள்.ஆனால் நான் மறக்கபட வேண்டியவன் இல்லை இனி அணு தினமும் அவன் நினைவுகளில் கட்டிபோட போகிறவன் என்பதை நிரூபிக்க வந்துவிட்டான் சத்யன்.அவன் கயலை நோக்கி வர வர அவளின் நினைவுகள் பின்னோக்கி பயணித்தது.
சில வருடங்களுக்கு முன்,
கயல்விழி இரண்டாம் வருடம் பொறியியல் படித்துக் கொண்டிருந்த சமயம்.அன்று கல்லூரி முழுவதும் மாணவர்கள் கூட்டம் அலை மோதியது.அனைத்து மாணவ,மாணவியரும் அன்று மிகவும் நேர்த்தியாக வந்திருந்தனர்.காரணம் அன்று காதலர் தினம்.கல்லூரி காலங்களில் காதலர் தினம் என்பது ஏதோ தீபாவளி போல் தான் கொண்டாடப்படுகிறது.காதல் கிடைத்துவிட்டால் ஏதோ உலகத்தை வென்றுவிட்ட மகிழ்ச்சி மட்டுமே அந்த நாட்களில் தெரியும் ஆனால் அதன் பிறகான வாழ்க்கை பற்றி யாருக்கும் அக்கறை இருக்காது.என்ன தான் பெற்றவர்கள் பல அறிவுரைகளை வழங்கினாலும் அந்த பதின் வயதில் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர் போல் தான் ஆகிவிடுகிறது.
ஒரு மரத்தடியில் மாணவிகள் சிலர் அமர்ந்து கொண்டு வருவோர் போவோரை கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.
“ஏய்….இன்னைக்கு மட்டும் தான்டீ இந்த பசங்க எல்லாம் நல்ல டிரஸ்ஸா போடுறாங்க…..”என்று ஒருவள் கூற,
“ஆமாடீ…இதே மத்த நாள்னா பார்க்க முடியாது….”என்று மற்றொருவள் கூற,
“அதெல்லாம் இருக்கட்டும் இன்னைக்கு நீ ஏன் இவ்வளவு மேக்கப் போட்டு வந்திருக்க….என்ன விஷயம்….”என்று கயல் தன் பக்கத்தில் அமர்ந்திருந்த வேணியை கேட்க,அவளோ வெட்கத்துடன் தலை குனிந்து கொண்டு,
“சும்மா தான்டி….”
“ஏய்….இவ ஏதோ மறைக்குறா டீ….இவளை யாரும் விடாதீங்க….கேளுங்க….கேளுங்க….”என்று கயல் மற்றவர்களை உசுப்பேத்த அவர்கள் அனைவரும் வேணியை பிடித்து உலுக்கிவிட்டனர்.
“அய்யோ விடுங்கடி…..எனக்கு இன்னைக்கு பிறந்த நாள்டீ….எருமைகளா….”என்று கத்த,
“ஏய் பொய் சொல்லாத….”என்று அனைவரும் கோரஸ் பாட,
“அடியே நம்புங்கடீ….இங்க பாருங்க என் பிறந்த தேதியை…..”என்று வேணி தனது கல்லூரி அடையால அட்டையை காட்டினாள்.அதை பார்த்தவர்களுக்கு சற்று சொத்தென்று ஆனது.ஆனால் கயல் விடாமல்,
“ஏய் உனக்கு லவ்வர்ஸ் டேல பிறந்த நாள் அதுக்கு ஒரு டிரீட்,உன் பிறந்த நாளுக்கு ஒரு டிரீட்….மொத்தமா இரண்டு டிரீட் கொடுக்கற…இல்ல இன்னைக்கு நீ வீட்டுக்கு போக முடியாது…..”என்று மிரட்ட,மற்றவர்களும் அதே போல் வேணியை மிரட்ட தொடங்கினர்.
“அடியே கத்தி உயிரை வாங்காதீங்க….கொடுக்குறேன் போதுமா….”என்று கூறிய பின் தான் அவளை விட்டனர்.
“ச்ச….நான் கூட நம்ம கேங்குல…ஒருத்திக்கு லவ் செட்டாகிடுச்சுனு நினைச்சேன்….”என்று ஒருவள் கூற,
“ஆமாடி நானும் அதை தான் நினைச்சேன்….ஏன்டீ கயல் நீ தான் பெரிய உலக அழகி ரேஞ்சுக்கு பேசுவ….உன்கிட்ட யாரும் இதுவரை ஒரு பிரப்போஸ் கூட பண்ணலையா….”என்று கயலை உசுப்பிவிட,ஏற்கனவே தனது அழகில் தற்பெருமை கொண்ட கயலுக்கு அது சற்று அவமானமாகி போனது இருந்தும் தன் கெத்தினை விடாமல்,
“அப்படியெல்லாம் இல்ல….எனக்கு தான் இந்த லவ் அதெல்லாம் பிடிக்கல….”என்று மழுப்பலாக பதிலுரைக்க,
“அட இதை நாங்க நம்பனுமா….போடீ….”என்று மற்றவர்கள் கயலை கிண்டல் செய்ய தொடங்கினர்.
“அச்சோ டா கயலம்மாக்கு கோபம் வந்துடுச்சு….”என்று அதற்கும் கிண்டல் தான் பதிலாக வந்தது.
“ஏய் நீங்க எல்லாம் ரொம்ப ஓவரா போறீங்க….ஏன் என்னால முடியாதுனு நினைக்குறீங்களா….பாருங்க ஆடுத்த லவ்வர்ஸ் டேக்கு என் லவ்ரோட வரேன்….”என்று கயல் வீரப்பாக கூற,அப்போது கூட்டத்தில் இருந்த பிரேமி,
“ஏய் உன்னை பத்தி எங்களுக்கு தெரியும்….நான் சொல்லுற ஆளை நீ காதல்ல விழவச்சிட்டனா….நாங்க உன்னை நம்புறோம் நீ பெரிய பேரழகி தான்னு…..”என்று எங்கோ பார்த்துக் கொண்டே கூற,அவளிடம் வீராப்பாக வந்த கயல்,
“சொல்லுடீ….யாரு…அடுத்த லவர்ஸ் டேக்கு அவர் என்னோட லவ்வரா இருப்பார்….”என்று கூற,அவளை நக்கல் பார்வை பார்த்துவிட்டு,
“அதோ வராருல அவரு நமக்கு சீனயர் பேரு சத்யா….அவரை தான் நீ லவ் பண்ண வைக்கனும்…..அப்படி அவர் உன்னை லவ் பண்ணிட்டார்னா…..நாங்க ஒத்துக்குறோம்….நீ பேரழகி தான்னு…..ஆனா நான் உறுதியா சொல்லுறேன் நீ தோத்து தான் போவ….”என்று கூற அவளை முறைத்த கயல் அப்போது லைபரியில் இருந்து வந்து கொண்டிருந்தவனை பார்த்து,
“அதையும் பார்க்கலாம்….ஆனா ஒண்ணு……”என்று கயல் கூற,
“என்ன பயமா இருக்கு போல….”
“ப்ச் அதெல்லாம் இல்லை….அவரை ஏன் சொல்லுற….”என்று கயல் கேட்க,
“ம்ம்….காரணம் இல்லாம சொல்லுவேனா…அந்த சத்யா இருக்கானே சரியான முரடன்…அவன்கிட்ட பெண்ணுங்களே நெருங்க முடியாதாம்….எங்க பக்கத்து வீட்டு அக்கா இவன் கிளாஸ் தான் அவங்க தான் சொன்னாங்க….”என்று ஒரு காரணத்தை கூறினாள் பிரேமி.ஆனால் உண்மையில் அவள் தனது காதலை சத்யனிடம் உரைத்து அவனிடம் நல்ல வெகுமதியை வாங்கினாள் என்பது இந்த கூட்டத்தில் உள்ள யாரும் அறியாத ஒன்று.பிரேமிக்கு கயலின் அழகின் மீது சற்று பொறாமை உண்டு அதனாலே அவளை சத்யாவிடம் சிக்க வைக்க முயன்றாள்.இது அறியாத நம் கூமுட்டை கயலும் செய்யபோகும் பாதக செயலின் வீரியம் அறியாமல் சம்மதம் கூறினாள்.
“ஓகே…..டீல்….”என்றாள் கயல்விழி.
“ஓகே டீல்….”என்றுவிட்டு போகும் கயலை பார்த்த பிரேமியின் கண்களில் மிதமிஞ்சிய வன்மம் இருந்ததை கயல்விழி கவனிக்க தவறிவிட்டாள்.
கயல்விழிக்கு அனைத்தும் விளையாட்டு தான் அதில் இந்த காதலும் ஒரு விளையாட்டு என்று நினைத்துவிட்டாள்.ஆனால் அது உணர்வுகள் அடங்கிய அன்பின் வெளிபாடு என்பது அவளை போன்றவர்களுக்கு புரிய போவது இல்லை ஆனால் அதை உணரும் நேரம் காலம் கடந்திருக்கும்.செய்யும் செயலை யோசித்து செய்ய வேண்டும் இல்லையேல் அதற்கான வினையை நாம் தான் அறுவடை செய்ய வேண்டும்.
ஒரு பழமொழி உண்டு உன் நண்பனை அறிந்து கொண்டால் உன்னை அறிந்து கொள்ளலாம் என்பது கயல்விழி விடயத்தில் நன்கு பொருந்தும்.தன்னுடன் இருப்பவர்கள் எப்படிபட்டவர்கள் என்று புரிந்து நடந்து கொண்டிருந்தால் நல்ல நண்பர்களை நாம் இனம் கண்டுகொள்ளலாம்.ஆனால் கயல் போன்றோருக்கு தன்னை ஜே என்று சுத்தும் கூட்டத்தின் மீது தான் நாட்டம் அதிகம் அதன் விளைவு அவளுக்குள் விதைந்த அனைத்தும் தவறுகளும் அதன் கோட்பாடுகளும் தான்.
இதில் வருந்ததக்க விஷயம் என்னவென்றால் கயலின் ஆட்டம் எல்லாம் வெளியில் தான் வீட்டில் தன் அன்னைக்கு பயந்து சற்று அடக்கி தான் வாசிப்பாள்.அதுவும் குருநாதனால் சில இடங்களில் தடைபடும்.பெற்றவர்களில் ஒருவர் பிள்ளைகளை கண்டிக்கும் போது மற்றவர் அதை ஆதரித்து பிள்ளைகளை கண்டிக்க வேண்டும்.குருட்டு தனமாக என் பிள்ளை எனக்கு தெரியும் என்று கூறினால் அதன் விளைவுகளை அவர்களும் சேர்ந்து தான் அனுபவிக்க வேண்டும்.அது தான் நடந்தது குருநாதன் விஷயத்தில்.தன் மனைவி பெண்ணை கண்டிக்கும் போதெல்லாம் அவரை திட்டி அனுப்பியவருக்கு கயல் கொடுத்த பரிசு தான் ஹார்ட் அட்டாக்.
கயல்விழி என்ன தான் பிரேமியிடம் காதல் பண்ணுகிறேன் என்று கூறிவிட்டாளும் அவளுக்கு உள்ளுக்குள் உதறல் தான்.எங்கு எப்படி தொடங்க வேண்டும் என்பது தெரியவில்லை.அதே சமயம் சவாலை விட்டுக் கொடுக்கவும் மனதில்லை.என்ன செய்யலாம் என்ன செய்யலாம் என்று யோசித்தே மண்டை காய்ந்து அலைந்தாள்.
கல்லூரியில் சத்யாவை பற்றி விசாரித்ததில் அவன் ஒரு முரட்டு பேர்வழி என்பது மட்டும் நன்கு தெரிந்தது.அவனிடம் எப்படியாவது பேச வேண்டும் என்று நெருங்க நினைத்தாலே கயலுக்கு அவனின் ஆறடி உயரமும்,கட்டுமாஸ்தான உடம்பு,அதைவிட கூர்மையான கண்களை கண்டாலே நா உலர்ந்து உடல் நடுங்கிவிடும் இதில் எங்கு அவனிடம் நெருங்க.
சத்யாவிடம் எப்படி பேசலாம் என்று யோசனை செய்த படி அவள் மரத்தடியில் அமர்ந்திருந்த நேரம்,
“கொஞ்சம் நகருரீங்களா…..”என்று ஒரு ஆணின் குரலில் அவள் நிமிர்ந்து பார்க்க,சத்யன் தான் நின்று கொண்டிருந்தான்.கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல் அவள் சத்யனை பார்த்துக் கொண்டு இருக்க,
“ப்ச்…..ஹலோ….”என்றுவிட்டு வாயிற்குள் கண்டபடி கயலை திட்டிக் கொண்டிருந்தான்.அவன் எப்போதும் பெண்களிடம் அதிகம் பேச மாட்டான்.அதில் இவள் வேறு விழுங்குவது போல் பார்த்து வைக்க சத்யனுக்கு எரிச்சல் மிகுந்தது.கயலுக்கு சத்யன் தன்னை திட்டியவுடன் கனவு கலைந்ததை போல எழுந்தவள்,
“ஹலோ எதுக்கு இப்படி திட்டுறீங்க….திடீர்னு யாரோ கூப்பிடவும் யாருனு பார்த்தேன்….அதுக்கு திட்டுவீங்களா….மைண்ட் யூவர் வேட்ஸ்….”என்று கத்திவிட்டு சத்யாவை பேசவிடாமல் ஓடி வந்துவிட்டாள்.பின்னே கையை ஓங்கிவிட்டால் அவ்வளவு தான் உடம்பு தாங்காது என்று தனக்குள் கூறிக் கொண்டாள்.
“ஆனா கயல் அந்த முசுடுகிட்ட இன்னைக்கு பேசிட்ட…”என்று தனக்கு தானே ஒரு பாராட்டை சொல்லிக் கொண்டு சென்றாள்.இதே போல் சத்யனை காணும் போது எல்லாம் அவனை சீண்டிவிட்டு சென்றுவிடுவாள்.அவனும் பல்லை கடித்துக் கொண்டு பொறுத்து போனவன்,ஒருநாள் அந்த பொறுமையும் எல்லை கடந்து அவளை விட்டான் ஒரு அறை,
“நானும் பார்த்துகிட்டே இருக்கேன்…..ரொம்ப ஓவரா துள்ளுர….வாயை உடைச்சுடுவேன் பார்த்துக்க….”என்று கூறிவிட,அவன் அடித்ததில் உதடு கிழிந்து ரத்தம் வர அதை துடைத்துக் கொண்டே,
“ஏன் இப்படி கை ஓங்குறீங்க…..போங்க….நான் உங்க கூட கா….போறேன்….”என்று உதட்டை பிதுக்கிவிட்டு சென்றுவிட்டாள்.முதல் முறையாக சத்யாக்கு மனது தடுமாறியது அதில் தான்.பெண்களிடம் அதிகம் பேசிறாதவன் இன்று கயலை கை நீட்டி அடித்தது அவன் மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.அதன் பிறகு அவனை கயல் தொந்திரவு செய்யவில்லை.ஆனால் சத்யனுக்கு தான் கயலின் நினைவு அடிக்கடி வந்து இம்சித்தது.கல்லூரியில் அவளை தேட அவள் கிடைக்கவில்லை.இவ்வாறு ஒருவாரமாக கயல்,சத்யனின் கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்தது.
எப்போதும் தன்னை சுற்றி வந்து வம்பு செய்பவள் சில நாட்களாக வராமல் இருக்கவே மனது அவளை அதிகமாக தேடியது.சத்யன் சற்று என்று தடுமாறும் ரகம் எல்லாம் கிடையாது.ஆனால் எப்போதும் துருதுரு விழகளுடன் அவனுடன் வம்பிழுக்கும் கயலை அவனுக்கு பிடிக்க தான் செய்தது.எப்போதும் அவனின் கோபத்தைக் கண்டு ஓடும் பெண்களில் கயல் வேறாக இருந்தாள்.சத்யனை பற்றி நன்கு அறிந்து தானே கயல் அவனை இவ்வாறு மடக்கியது பாவம் இது சத்யன் அறியவில்லை.எப்போதும் அனைத்திலும் விழிப்புடன் இருப்பவன் சிறு பெண்தானே என்றுவிட்டுவிட்டான்.
கயல்விழி என்பவள் யானையின் காதில் புகுந்து குடைச்சல் கொடுக்கும் சிறு எறும்பு போல சத்யனின் மனதிலும் புகுந்து அவனை நிலைகுலையை வைக்க போகிறாள் என்பது சத்யனுக்கு காலம் கடந்து தான் புரிந்தது.
“என்ன சத்து மாத்திரை…என்ன யோசனை பலமா இருக்கு…”என்ற குரலில் கலைந்தவன் முன்னே கண்டது முத்து பற்கள் தெரிய சிரித்துக் கொண்டிருந்த கயலை தான்.தன்னை மீறி அவனது விழிகள் அவளை ரசிக்க தான் செய்தது.
“என்ன சத்து மாத்திரை அப்படி பார்க்குற….”என்று அவள் அவனை கிண்டல் செய்ய,அதுவரை அவளின் அழைப்பை கவனியாதவன் அப்போது தான் கவனித்தான்,
“ஏய் அன்னைக்கு தான அடிவாங்கிட்டு போன…அது உனக்கு பத்தலை போல….”என்று கைகளை முறுக்கிக் கொண்டு வர,இரண்டு அடி பின் சென்றவள்,
“ம்ம்ம்…அடிப்பீங்க அடிப்பீங்க….என் கை என்ன பனங்காய் பறிச்சிக்கிட்டு இருக்குமா….ஆனா ஒண்ணு சத்து மாத்திரை நீ என்னை அடிச்சிட்டு காலேஜ் முழுசும் தேடுன பாரு……அதுக்கே இன்னும் இரண்டு உன்கிட்ட வாங்கலாம் போல….”என்று அவனிடம் பழிப்பு காட்டிவிட்டு ஓடி சற்று தூரத்தில் நின்று,
“அப்புறம் உன் பேரு இனி சத்யா எல்லாம் இல்லை சத்து மாத்திரை தான்….நல்லா இருக்குல….”என்று கிண்டல் செய்துவிட்டு ஓட,சத்யாவிற்கு கோபம் வருவதற்கு பதிலாக சிரிப்பு,கண்களில் ஒருவித ரசிப்பு தன்மையும் குடி கொண்டது.எப்போது ஒரு பெண்ணிடம் ரசிப்பு வருகிறதோ அப்போதே அந்த ஆண்மகன் காதலில் விழுந்துவிட்டான் என்பது பொருள்.
கல்லை போல இறுகி நின்றவனை தன் குறும்பு தனங்களால் கரைக்க தொடங்கியிருந்தாள் கயல்விழி.முதலில் அவளை அடித்தவன்,பின் திட்ட தொடங்கி,கடைசியில் ரசிக்கும் நிலைக்கு வந்திருந்தான்.
“ஹாய் சத்து….”என்று கத்தியபடி அவனின் அருகில் அமர்ந்தாள் கயல்விழி.
“ப்ச்…நகர்ந்து உட்காரு….”என்று அவன் கூற,
“ஏன் இரண்டு நாளா காலேஜ் வரல….நான் உன்னை தேடிக்கிட்டு இருந்தேன் தெரியுமா….”என்று கூற,அவளிடம் இருந்து நகர்ந்து அமர்ந்து கொண்டே,
“வேலையா வெளிய போயிருந்தேன்….”என்று பதில் கொடுத்தான்.இப்போது எல்லாம் அவளிடம் சற்று சகஜமாக பேச தொடங்கியிருந்தான்.அவளை முன் போல அவனால் கடந்து போக முடியவில்லை.ஏதோ ஒருவிதத்தில் கயல்விழி சத்யனை கவர்ந்திருந்தாள்.ஆனால் அது காதலா என்று கேட்டால் இல்லை என்று தான் கூறுவான்.அவனை பொறுத்தவரை காதல் எல்லாம் ஏதோ வேலையில்லாதவன் செய்கின்றது.அவனது நோக்கம் எல்லாம் பெரிது அதில் இந்த காதலுக்கு எல்லாம் இடம் இல்லை என்று தான் நினைத்திருந்தான் ஆனால் கயல்விழியின் மீது அவன் கொண்டது வெறும் ஈர்ப்பு கிடையாது என்பதை உணரும் நாளும் வந்தது.
அன்று கயல்விழி கல்லூரி வரவில்லை சத்யாவிற்கு மனதில் ஒரு அலைகழிப்பு.சரி நாளை வருவாள் என்று காத்திருக்க அவள் தொடர்ந்து ஒருவாரம் வராமல் போக சத்யாவால் அதற்கு மேல் இருக்க முடியவில்லை அவளின் வீட்டினை கண்டுபிடித்து சென்றுவிட்டான்.அதன் பிறகு தான் அவன் செய்ய துணிந்த செயலை நினைத்து தன்னையே கண்டிந்து கொண்டு மீண்டும் தன் விட்டிற்கு சென்றுவிட்டான்.
தனது அறையில் அமர்ந்து தன்னை பற்றியே சிந்தனை செய்ய தொடங்க கயலின் மீது தான் வைத்திருப்பது வெறும் நட்பு அல்ல அதையும் தான்டிய ஒன்று என்று புரிந்து கொண்டான்.இத்தனை நாள் மனதில் ஏதோ அழுத்திய ஒரு உணர்வு இன்று பனிபோல விலகியது போல் இருந்தது.சத்யா தன்னை தெரிந்து கொண்டவுடன் தாமதிக்கவெல்லாம் இல்லை கயல்விழி வந்தவுடன் அவளிடம் தன் காதலை கூறிவிட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டான்.
மேலும் ஒரு வாரம் கழித்து தான் கயல்விழி வந்தாள்.அவள் வந்ததை அறிந்து கொண்டவன் நேராக அவளிடம் சென்று தனது மனதில் உள்ளதை கூறிட முதலில் திகைத்தவள் பின் மனதிற்குள் குதுகலித்து கொண்டாள்.கயல்விழிக்கு ஆரம்பத்தில் பழகும் போது சத்யனிடம் விளையாட்டாக தான் பழகினாள் ஆனால் நாளாக அவனின் அக்கறை,அவளிடம் காட்டும் கண்ணியம் என்று அனைத்தும் சத்யனை பிடிக்கதான் செய்தது.ஆனால் அவனை காதிலிக்கிறாளா என்று கேட்டால் இல்லை என்று தான் கூறுவாள் ஆனால் சத்யனை பிடிக்கும் அவ்வளவே இது பிற்காலத்தில் காதலாக மாறாலாம் மாறாமலும் போகலாம்.ஆனால் சத்யா தன் எதிர்காலம் கயல்விழி தான் என்று முடிவை எடுத்த பிறகு தான் அவளிடம் தன் முடிவை கூறினான்.அவனுக்கு கயல்விழியின் உண்மையான முகம் தெரியும் போது முற்றிலுமாக உடைந்து போவான்.கயல்விழியின் காதல் சத்யாவை மனதிளவில் சாககடித்திருந்தது.