“என்ன லாலா லவ் பண்றானா?” வசுந்த்ரா ஆச்சரியமாகக் கேட்டவள்,
“ஆனாலும் உங்க அண்ணன் பசங்க எல்லாம் அப்படியே சித்தப்பா வழிதான்!” என்று கணவனை கிண்டல் செய்தாள். மனைவியின் சீண்டலில் எழுந்த சிரிப்பினை அடக்காது அட்டகாசமாக சிரித்த சித்ரஞ்சன்,
“என்ன செய்றது, நாங்க அன்பு காட்டியே பழகிட்டோம்” என்றவன்
“நீ சொல்லு வசு, என்ன செய்றது? இந்த பய வேற ரொம்ப கெஞ்சுறான்?” என்றான் தீவிரமான குரலில்.
“நம்ம என்ன செய்றது? அவனை வந்து மாமா கிட்ட பேச சொல்லுங்க” என்று வசு சொல்ல, சித்ரஞ்சன் மறுத்தான்.
“சரோ லவ் பண்றான்னு சொன்னப்போ என் அண்ணன் என்ன செஞ்சார் மறந்திட்டியா? அதுவும் லாலா மேல அவங்க எல்லாம் ரொம்ப நம்பிக்கை வச்சிருக்காங்க, சீக்கிரம் கவர்மெண்ட் ஜாப் வாங்கிடுவான்னு, இப்போ போய் வேலைக்கு முன்னாடி லவ்வுனு சொன்னா அவ்வளவுதான்! அந்த பொண்ணு வீட்ல ரொம்ப ப்ரசர் பண்றாங்க. சக்தி அந்த பொண்ணைப் பார்க்க என்னை அழைச்சிட்டுப் போனான். போறதுக்கு முன்னாடி நான் கூட இன்னும் கொஞ்ச மாசம் போகட்டும், அப்படியென்ன அவசரம் நினைச்சேன். லாலாவுக்கும் வேலை கிடைச்சிட்டா அவன் சந்தோஷமா இருப்பான் நினைச்சேன். அந்த பொண்ணைப் பார்த்து பேசினதும் நம்ம பயலுக்கு உதயா சரியா இருப்பா தோணுது வசு” என்று சித்ரஞ்சன் பேச்சில் வசுந்த்ரா குறுக்கீடவில்லை.
“நீங்க நிறைய மனுஷங்களைப் பார்க்குறீங்க, நல்லவங்க, மோசமானவங்க. தெரியாம தப்பு செஞ்சவங்க, தெரிஞ்சு செய்றவங்க, இப்படி நிறைய. உங்களுக்கு சரினு பட்டா கண்டிப்பா சரியா இருக்கும் ரஞ்சன்” என்று வசுந்த்ராவின் மெச்சுதலில் மென்னகை அவனிடம்.
“எனக்கு நிறைய தெரிஞ்சாலும் என்னை உனக்குத்தான் நிறைய தெரியும். நீ சொல்லு வசு, உன்னைக் கல்யாணம் பண்ணும்போது கூட ஒரு நிமிஷம் தைரியத்துல பண்ணிட்டேன், இப்போ நம்ம பசங்கன்னு வரப்போ பயமா இருக்கு. லாலா வேற ரொம்ப சென்சிட்டிவா இருக்கான், உனக்குப் புரியுதுதானே? இந்த சக்தி என்னடான்னா என் ப்ரண்ட் கேக்குறான் கல்யாணம் பண்ணி வைங்க மாமான்னு கிளம்பி வந்துட்டான். நம்ம வீட்டை எப்படி சமாளிக்கிறது தெரியல, அதுவும் என் ஹிஸ்டரிக்கு நான் சொன்னா கேட்பாங்களா?” என்று கேட்க, வசுந்த்ராவுக்கு அவன் பேசிய விதம் சிரிப்பு கொடுத்தது.
“ரெண்டு நாள் பார்க்கலனதும் உடனே ஐஸ் வைக்க வேண்டியது, லாலாவுக்குக் கல்யாணம் பண்ண போறோம். சரோவுக்கு குழந்தை பொறந்தா நீங்க தாத்தா, இப்போ வந்து எங்கிட்ட வசனம் பேசுறீங்க ஏடிஎஸ்பி” என்று கிண்டல் செய்ய,
“எங்கப்பாம்மா லேட்டா பெத்துட்டாங்க, என் அண்ணங்காரன் சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டா நானா பொறுப்பு? நம்ம பகத்துக்கே குழந்தை பொறந்தாலும் நான் உங்கிட்ட வசனம் பேசுவேன்டி. நானே நீயில்லாம ரெண்டு நாளா சரியா தூங்கல தெரியுமா?” என்று புலம்ப
“அப்போ சந்தோஷம், நான் கொஞ்ச நேரத்துல டிரெயின் ஏறிடுவேன், அதான் ரெண்டு நாள் நல்லா தூங்கிட்டியே, இன்னிக்குத் தூங்க வேண்டாம்” என்றவன் பேச்சில் வெட்கம் பூக்க,
“பொறுப்பான சித்தப்பா மாதிரி பேசுங்க ரஞ்சன். லாலா விஷயம் பேசுறப்ப உங்களுக்கு ரொமான்ஸ் கேக்குதா?” என்று வசுந்த்ரா அதட்டினாள்.
“நீதான் டி என்னை இப்படி பேச வைக்கிற” என்ற சித்ரஞ்சன், “வசு, நான் உதயா நம்பர் தரேன். நீ பேசிட்டு என்ன பண்ணலாம் சொல்லு. ஓகே?” என்றதும் வசுந்த்ராவும் சரியென்றாள். அவளும் உதயாவுக்குக் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு காத்திருக்க, உதயா அழைத்தாள். வசுந்த்ரா இயல்பாகப் பேச உதயாவும் லாலாவைப் பார்த்தது, பேசியது, பிடித்தது எல்லாம் சொன்னாள். சித்ரஞ்சனிடம் அவன் காவல்துறை அதிகாரி, லாலாவின் சித்தப்பா, ஆண் என்ற ஒரு பயம், மரியாதை, ஒதுக்கமிருந்தது. வசுந்த்ராவின் பேச்சில் தானாகவே ஒரு இலகுத்தன்மை தோன்ற அவர்கள் உரையாடல் நல்லவிதமாக முடிந்தது.
“அதுக்கெல்லாம் சக்தி வேலையே நமக்கு வைக்கல, அவன் நல்லா விசாரிச்சுட்டான். நானும் விசாரிக்குறேன், அந்த பொண்ணுக்கு எட்டு வயசுல அவங்க அப்பா சூசைட் பண்ணிட்டு இறந்துருக்கார். அம்மா கஷ்டப்பட்டுப் படிக்க வைச்சிருக்காங்க. நல்ல திறமையான, தைரியமான பொண்ணா இருக்கா வசு. லாலாவுக்கும் ரொம்பப் பிடிச்சிருக்கு, ஆனா வீட்ல எப்படி சொல்றது?” சித்ரஞ்சன் வெகுவாகத் தயங்க,
“நீங்க லாலா லவ் பண்றான் சொல்லாதீங்க. உங்களுக்குத் தெரிஞ்ச பொண்ணு, ப்ரண்ட் மூலமா வந்த வரன் சொல்லுங்க. உதயாவோட பயோடேட்டாவ மாமாவுக்கு அனுப்பிவிடுங்க. வீட்டுக்கு வந்ததும் அவர்கிட்ட பேசுங்க, முக்கியமா உங்கம்மா இருக்கும்போது பேசுங்க.”
“என்ன?”
“நாளைக்கு இந்த விஷயம் நீங்க பேசும்போது உங்கம்மா சப்போர்ட் பண்ணனும், நான் அக்காகிட்டயும் உங்கம்மாகிட்டயும் லாலா கல்யாணம் பத்தி பேசி வைக்கிறேன். அப்படி ஒத்துவரலன்னா என்னன்னு பார்ப்போம்” என்று கணவனும் மனைவியும் முடிவு செய்தனர்.
இங்கே லாலாவோ மீண்டும் திருமணம் வேண்டுமா என்ற சிந்தனையில் உழன்றான். உதயாவுக்கு வேறு
‘அலைபாயுதே ஸ்டைல்ல கல்யாணம் பண்ணிப்போமா?’ என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.
உதயா இடைவேளை நேரத்தில் அதனைப் பார்த்துவிட்டு லாலாவுக்கு அழைத்தாள்.
“மெசெஜ் பார்த்தேன் லாலா” என்றதும் அவன் ஆர்வமாக
“உங்களுக்குக் கொஞ்சமாச்சும் அறிவிருக்கா? எங்கம்மா நம்ம கல்யாணம் பண்ணிட்டு தனியா தனியா இருக்கவா கல்யாணம் செய்ய சொல்றாங்க? உங்க சித்தப்பா, சித்தி எல்லார்கிட்டயும் என்னை பேச வச்சு, உங்க சித்தப்பா அம்மா கிட்ட எல்லாம் பேசிட்டார். இப்பவும் என்னை கல்யாணம் பண்ற டிசிசன்ல நீங்க ஸ்ட்ராங்கா இல்லையா?” உதயாவின் குரலில் இளவெயிலாக கோபம் மிகுந்திருந்தது.
“அடியே! உன்னை கல்யாண பண்றதுல எனக்குக் குழப்பமே இல்லை. இப்போ பண்ணனுமா’ன்றதான் என் குழப்பம், பிரச்சனை எல்லாமே” லாலாவும் பாவமாக சொல்ல
“நான் என்ன செய்றது?” ஆதங்கமாக உதயா கேட்க
“விடு, நான் ஏதோ டென்ஷன்ல.. நீ டென்ஷன் ஆகாத” என்று போனை வைத்தான்.
லாலாவுக்குத் திருமணம் குறித்தோ காதல் குறித்தோ கனவுகளே இல்லையென்றால் அது பொய். கல்லூரி காலத்தில் பெண்களை ஆர்வமாகப் பார்ப்பான், அதெல்லாம் உண்டு. ஆனால் தேர்வுகளுக்குப் படிக்க தொடங்கிய பின் மாக் டெஸ்டில் வாழ்க்கை போக, மங்கைக்கெல்லாம் மனதில் இடமில்லை. உதயா வந்த பின்னே காதல், திருமணம் போன்ற அவன் அகராதியில் காணாமல் போன சொற்கள் எல்லாம் பூதிதாய் உதித்து வாசம் வீசின. உதய நிலாவின் பெயரைப் பேசின.
இங்கே லாலா யோசனையிலிருக்க, சுதந்திர விலாசத்திலோ சுப செய்தியாகத்தான் இருந்தது.
சித்ரஞ்சன் லாலாவின் திருமண விஷயம் பேசத்தொடங்கும்போதே திலகர் மறுத்தார்.
“அவன் கவர்மெண்ட் வேலைக்குப் போன அப்புறம் பார்ப்போம் டா. அப்போ நீ நானு பொண்ணு கொடுக்க வருவானுங்க” என்றதும் வாஞ்சி நாதன் குறுக்கீட்டார்.
“அது எப்போப்பா? முப்பது வயசுக்கு மேலயா? அந்த காலமெல்லாம் வேறப்பா. என் கூட வேலை செய்றவர் பையன் மாசம் மூணு லட்சம் சம்பாதிக்குறான், அவன் வயசு முப்பது. இன்னும் பொண்ணு அமையல. நல்ல வரனா இருந்தா பார்ப்போமே பா?” என்று வாஞ்சி நாதன் சொல்ல, அஞ்சம்மாளும் மகனுக்கு ஆதரவாகப் பேசினார்.