“அதானே? நம்ம பாமணி ஜோசியன் ஒரு வருஷத்துக்குள்ள லாலாவுக்குக் கல்யாணம் பண்ணனும் சொல்லிட்டான். உங்கப்பா கிட்ட நானும் போன மாசமே சொல்லிட்டேன் டா பெரியவனே, இவர் எங்க கேட்குறார். இல்லைன்னா மூணு வருசம் தள்ளி போய்டும். மூணு வருஷம் அப்புறம் என் பேரனுக்கு நல்ல பொண்ணு கிடைக்குமா? அவன் வயசு புள்ளங்க எல்லாம் புள்ளையே பெத்துடுச்சு” என்ற அஞ்சம்மாவின் பேச்சில் வாஞ்சி நாதன் கடுப்பானார்.
“அதுக்கு உன் பேரன் எதாவது பரீட்சை எழுது நல்ல உத்யோகத்துக்குப் போகணும். ஏதோ பத்தாயிரம் பதினைஞ்சாயிரத்துக்குக் க்ளாஸ் எடுத்துட்டு மெட்ராஸ்ல சுத்திட்டு இருக்கான். இங்க இருந்தா நம்ம கேள்வி கேட்போம்ல, அங்க போய் ஒரு வருஷத்துக்கு மேல ஆச்சு, என்ன ஆனான்?” என்றார் கோபமாக. அதே கோபத்தில் எழுந்து போய்விட,
“இப்போ உன்னை நான் பொண்ணு பார்க்க சொன்னேனா டா?” என்று சின்ன மகனைத் திட்டினார் திலகர். சித்ரஞ்சன் பதில் பேசாமல் நிற்க,
“உன்னை மாதிரி இல்லடா என் பேரன். அவ நல்ல பையன், வீட்ல சொல்றதைக் கேட்பான். என் பெயரைக் காப்பாத்துவான். அவனை கல்யாணம்னு சொல்லி அவன் படிக்கிறதைக் கெடுக்காத. வந்துட்டான் பொண்ணு பார்த்துருக்கேன்னு…” என்று துண்டைத் தோளில் உதறிப்போட்டுக் கொண்டு சென்ற அப்பாவை பாவமாக பார்த்தி நிற்க, தன்னைத் துளைக்கும் பார்வையில் திரும்பினான் சித்ரஞ்சன். வசுந்த்ரா சிரிப்பை அடக்கிக்கொண்டு நிற்க,
“சிரிச்சிடுடி” என்றவனுக்கும் சிரிப்பு வந்தது.
“என்ன செய்றது வசு?” என்று சித்ரஞ்சன் யோசனையாக மனைவியைப் பார்க்க,
“எல்லாத்துக்கும் அவசரமா? இன்னிக்குத்தான் சொல்லியிருக்கீங்க, ரெண்டு மூணு நாள் போகட்டும்” என்றாள்.
இரண்டு நாட்கள் எல்லாம் தேவைப்படவில்லை. வாஞ்சிநாதன் அன்றிரவே உணவு முடியவும் வாசலில் நின்று அலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்த தம்பியின் முன் நின்றார்.
“ஏதோ பொண்ணு பார்த்திருக்கேன் சொன்னியே? காட்டுடா” என்று கேட்க, சித்ரஞ்சனும் தன் அலைப்பேசியை நீட்டினார்.
“அப்பா இன்னும் அந்த பய வேலை வாங்குவானு நம்பிட்டு இருக்கார்டா, இப்பவாச்சும் வயசிருக்கு. இன்னும் ரெண்டு மூணு வருஷம் போயிடுச்சுன்னா அதுவுமில்ல, அப்பவும் இவன் இப்படியே வேலையில்லாம இருந்தா எப்படி பொண்ணு அமையும்? இப்போ இந்த பொண்ணு ராசி வேலை கிடைச்சா நல்லதுதானே?” என்றபடி வாஞ்சி நாதன் கண்ணாடியை சரி செய்து ஜூம் செய்து உதயாவைப் பற்றிய விவரங்களைப் பார்த்தார்.
“பாரேன் டா. பொம்பள புள்ளைங்க எப்படி படிச்சிருக்கு? நம்ம சரோவை எஞ்சினியரிங் படினு சொன்னா எங்க கேட்டா அவ?” என்று தன் பிள்ளைகளைப் பற்றிய கவலையோடு கண்கள் உதயாவின் மற்ற விவரங்களைப் பார்வையிட, அவர் விழிகளில் பாராட்டாக ஒரு பாவனை.
“பரவாயில்லடா, அப்பா இல்லாம இந்த பொண்ணு படிச்சு நல்ல நிலமையில இருக்கு. ஏண்டா என்னை விட அதிக சம்பளம் வாங்குற பொண்ணு எப்படி நம்ம பயலைக் கட்டிக்க ஒத்துக்கும்? நீ நல்லா விசாரிச்சியா?” என்று கேட்டதும் சித்ரஞ்சன் முறைத்தார்.
அவருக்கும் அண்ணனுக்கும் இருந்த வயதின் இடைவெளி காரணமாக அன்பு, மரியாதையிருந்தாலும் ஒட்டுதலிருந்ததில்லை, தம்பியோடே தலைமுறை இடைவெளியோடு இருக்கும் வாஞ்ச நாதனுக்குப் பிள்ளைகளிடம் சொல்லவா வேண்டும்? சித்ரஞ்சனுக்கு அப்படியில்லை. அவனின் பன்னிரெண்டு வயதில் லாலா பிறந்தான். அதனால் அவர்களிடம் ஒரு நெருக்கமுண்டு. அண்ணன் மகனை அப்படி பேசவும் சட்டென்று,
“நீயெல்லாம் அப்பாவா ண்ணா? நம்ம பையனை நம்மளே குறைச்சு சொல்லலாமா? எத்தன பசங்கள நான் பார்க்கிறேன் தெரியுமா? காலேஜ், ஸ்கூல் கூட முடிக்காதவங்க கூட கஞ்சா, தண்ணீ, தம்முனு சுத்துறானுங்க. நம்ம பையன் நம்ம பேச்சுக் கேட்டு நடக்கிறான். என்ன நம்ம வீட்ல ஆசைப்பட்ட வேலை இன்னும் கிடைக்கல, இதே கெட்ட பழக்கத்தோட இருந்திருந்தா அதெல்லாம் இல்லாம இருந்தாலே போதும்னு சொல்லியிருப்ப” என்றான் சித்ரஞ்சன் கோபத்தோடு.
எல்லாமிருந்தாலும் இல்லாததைக் கண்டு ஏக்கம் கொள்வது, ஏசுவதுதானே இயல்பாகிப்போகிறது?
“வெட்டியாவா இருக்கான்? பசங்களுக்குக் க்ளாஸ் எடுக்கிறான் தானே? என்னமோ நீ வேலைக்குச் சேர்ந்த உடனே ஆயிரமாயிரமா சம்பாரிச்ச மாதிரி பேசுற? உன் முதல் சம்பளம் விட லாலா சம்பளம் அதிகம், இதே அவன் முழு நேர வேலையா செஞ்சா நல்லா சம்பாதிப்பான். நான் பணமே வேண்டாம், முக்கியமில்லைனு சொல்லல, அதுக்காக சின்ன பையன் அவன், நம்மளே மதிக்கலன்னா அவன் மனசு கஷ்டப்படாதாண்ணா?” சித்ரஞ்சன் வருத்தமாகக் கேட்க, வாஞ்சிக்கு மட்டும் மகனை வஞ்சிக்க ஆசையா என்ன?
“எனக்கு மட்டும் அவனை பேசணும்னு என்ன ஆசையாடா? ஊர்ல பார்க்கிறவன் எல்லாம் பய என்ன பண்றானு கேட்கிறானுங்க, அவன் வயசு பசங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகுது, பொண்ணுங்க எல்லாம் செட்டில் ஆகும்போது என் புள்ள என்னவான்னோன்னு பயமாயிருக்காதா? அப்பா பேச்சு கேட்டு எக்ஸாம் படிக்க சொன்னேன், அது வரலன்னா இப்போ வாடா வேற வேலை சேர்த்து விடுறேன்னா கேட்க மாட்டேங்கிறான். உனக்கு ஒரு அப்பனா என் கவலை புரியலடா..” என்று பெருமூச்சு விட்ட வாஞ்சி
“நான் ஏன் பொண்ணுக்கு சம்மதமா கேட்டேனா நம்ம பய வாழ்க்கைடா, நாளை பின்ன அவன் சம்பாத்யம் வச்சோ, வேலை வச்சு குறையா பேசக் கூடாது. இந்த பொண்ணுக்கு இன்னும் நல்ல வரன் வரும், அப்படியிருக்க நம்ம பையனுக்கு ஓகே சொன்னா நாலும் யோசிக்கணுமில்ல” என்றார்.
கைகளை உயர்த்தி நெட்டிமுறித்த சித்ரஞ்சன், “நீ அப்படி வரியாண்ணா? அது இந்த பொண்ணு நல்ல பொண்ணு, படிப்பு, வேலையெல்லாம் இருந்தாலும் பெருசா சீர் செய்ய முடியாது. வேற வரன் பார்த்தா நகை நட்டு நெறைய எதிர்ப்பார்ப்பாங்க இல்லையா? பொண்ணுக்கு அம்மா மட்டும்தானே, நல்ல வரனா இருந்தா கல்யாணம் முடிச்சிரலாம் பார்க்கிறாங்க. எங்க அப்பா வேண்டாம் சொல்லிட்டாரே?” என்று அண்ணனை பார்க்க, வாஞ்சியோ அப்பாவை நான் பார்த்துக்கிறேன் என்றுவிட்டார்.
பிறகென்ன? காதல் லா லா லா கல்யாண லா லாவாக மாறியது.
கல்யாண ஏற்பாடுகள் நடக்க, லாலாவுக்கு நாட்கள் நெருங்க நெருங்க நேசம் கூடுவதற்குப் பதில் நடுக்கம் கூடியது. மொட்டை மாடியில் யோசனையாக நின்றவன் அருகில் சத்தம் கேட்டுப் பார்க்க சித்ரஞ்சன் நின்றான்.
“என்னடா உதயா கிட்ட பேசிட்டு இருக்கியா? டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்று சிரிக்க, அவன் சிரிப்பின் பிரதிபலிப்பு லாலாவிடமில்லை.
சித்ரஞ்சன் புரியாமல் பார்க்க, “முன்னாடி நான் மட்டும்தான், இப்போ உதயாவையும் நான் பார்க்கணும். என்னமோ டென்ஷனா இருக்கு, கல்யாணம்னு சந்தோஷப்பட முடியல… பயமா இருக்கு.” என்று கலக்கமாகப் பேச, சித்தப்பாவுக்குத் தாங்கவில்லை.
லாலாவின் தோளில் ஆதரவாகக் கைப்போட்ட சித்ரஞ்சன்,
“பயப்படாதடா! நிறைய பசங்க ஏங்குற விஷயம் உனக்குக் கிடைச்சிருக்கு. உன்னை உனக்காக நேசிக்கிற ஒரு பொண்ணு. வேலைல்லாம் நாளைக்கே கிடைச்சிரும், ஆனா இந்த டைம் திரும்பி வராது, நானெல்லாம் பயந்து அவசரப்பட்டு தப்புப் பண்ணி எங்களுக்குக் கல்யாண நாள்னாலே நல்ல மெமரீஸ் இல்ல. இப்படி யோசிடா இத்தனை நாள் நீ வீட்டுக்கு வந்தா தனியா இருந்திருப்ப, இப்ப உனக்கே உனக்குனு ஒருத்தி, உன்னோட எல்லாத்தையும் ஷேர் பண்ணிப்பா. உனக்குப் பிடிச்ச பொண்ணோட கல்யாணம், வாழ்க்கை நல்லாயிருக்கும்டா. சித்தப்பா அனுபவஸ்தன் சொல்றேன் கேட்டுக்கோ, உனக்குக் கஷ்டம் சந்தோஷம் எல்லாம் சொல்றதுக்கு ஒரு பெட்டர் ஹாஃப். உதயா கிட்ட பேசு, பெட்டரா இருக்கும்” என்று தோளில் தட்டிச் சென்றுவிட, அவனும் பேசினான்.
இன்னும் மூன்று நாட்களில் திருமணம். உதயா அன்று இரவு இரெயிலில் பயணப்பட இரெயில் நிலையத்தில் காத்திருந்தாள். லாலாவின் அழைப்பு வர, தானாக தோன்றிய புன்னகையோடு தள்ளிச் சென்று “சொல்லுங்க லாலா” என்றவள் குரலில் பல வருடங்கள் கழித்து ஒரு துள்ளல். காதலித்தவனை கரம் பிடிக்கப்போகும் களிப்பு எல்லாம் கொட்டிக்கிடக்க, லாலா கேட்ட கேள்வியில் அத்தனையும் காணாது போனது.
“என்ன கேட்டீங்க?” என்று புரியாமல் மீண்டும் கேட்க
“உனக்குப் பல்லி, கரப்பான் பூச்சி பார்த்து பயமெல்லாம் இல்லைதானே?” என்றான் மீண்டும்.
“இப்போ எதுக்கு இந்த கேள்வி?” உதயா எரிச்சலாகக் கேட்க
“அப்போ என் கற்புக்குக் கியாரண்டி இருக்கும். எத்தன படத்துல பார்த்திருக்கேன், பல்லி, கரப்பான் பூச்சியெல்லாம் பார்த்து பயந்து ஹீரோயின் கத்தி, ஹீரோ காப்பாத்த வந்து அப்புறம் சம்திங் சம்திங் நடக்கிறதை. அதான் சேஃப்டிக்குக் கேட்டேன் உதயா” என்றதும் உதயாவுக்குச் சிரிப்பும் கோபமும் சேர்ந்தே வந்தது.
“லாலா” என்று பல்லைக் கடிக்க
“கோவப்படாத நிலா. வேலை கிடைக்கிற வரைக்கும் நம்ம காதல் கட்டுப்பாட்டோட இருக்கணும். புரிஞ்சதா? கல்யாணம் ஆகிடுச்சுனு லிபர்டி எடுக்கக் கூடாது!” என்றான் தீவிரமாக.
“கவலைப்படாதீங்க! உங்க கற்புக்கு எந்த சேதாரமும் ஆகாது.” என்றாள் கடுப்பாக.
“அவ்வளவுதான், சரி டிரெயின் வந்துடுச்சா? எந்த பெர்த்?” என்று விசாரிக்க
“எனக்கும் அம்மாவுக்கும் எஸ் 1 ல 19, 20. மத்தவங்க எல்லாம் நாளைக்கு வருவாங்க, தாமு அங்கிள் வீட்ல ப்ளைட்ல வருவாங்க ” என்றதும்
“19 20 அஹ்ஹ்.. ம்ம் காந்தியோட நான் வயலென்ஸ் மூவ்மெண்ட் அஹ் இந்தியன் காங்கிரஸ் அடாப்ட் பண்ணின வருஷம். குட்!” என்றவனின் பேச்சில்
“இப்போ நான் வயலெண்ட்டா மாறிடுவேன்” என்று உதயா கத்த, லாலா சிரித்தவன்
“விடு நான் டென்ஷன்ல என்னமோ பேசிட்டேன். காலையில நிலாவைப் பார்க்க வரேன்” என்று சொல்ல, உதயா முகத்தில் அப்போதுதான் புன்னகை மீண்டும் வந்தது.
லாலா, உதயாவின் திருமணம் சிறப்பாக நடந்தது. இரவு உறவுகள் சிலருக்கு டவுனில் அறைகள் கொடுக்கப்பட்டிருக்க, சுதந்திர விலாசத்தில் வீட்டினர் மட்டுமிருந்தனர்.
உதயா லாலாவுக்காக அறையில் காத்திருக்க, லாலாவின் அறை மாடிக்கு மாற்றப்பட்டு சித்ரஞ்சனுக்கு லாலாவின் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. போனின் சார்ஜர் எடுக்க தன் பழைய அறைக்கு லாலா வர, அப்பா அம்மாவிடம் பேசியதைக் கேட்டவனுக்கு திருமணத்தின் உற்சாகம் வடிய, முகம் வாடியது. அத்தனை நாளும் அப்பா எப்படி திருமணத்திற்கு ஒத்துக்கொண்டார் என்ற கேள்வி இருந்தாலும் எப்படியோ ஒத்துக்கொண்டார் என்ற நிம்மதி இருந்தது. இப்போது எப்படி என்று தெரிய அது தூரப்போனது.
“எப்படியோ இந்த பயலுக்குக் கல்யாணம் முடிஞ்சிடுச்சு. நம்ம மருமக மாதிரி பொண்ணு கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும், என்னடி நகை நட்டுப் பெருசா போடலனு உன் அண்ணி சொன்னாங்கனு பேசுற? நம்ம மகனுக்குப் பொண்ணு கொடுத்ததே பெருசு, லட்ச ரூபாக்கு மேல சம்பாதிக்கிற பொண்ணு, அப்பா இல்லாம இந்த அளவு முன்னேறி வந்திருக்கு. அதைப் பாராட்டாம சும்மா நகை கம்மி, அது கம்மினு பேசாத” என்று மனைவியை அடக்க, அது உதயாவுக்கான பாராட்டாக இருந்தாலும் லாலாவுக்கான பரிகாசமாக நினைத்தான்.
அதே எண்ணத்தோடு அறைக்கு வந்தவன் உதயாவிடம் எதுவும் பேசாமலிருக்க, உதயா அவன் கவலை புரியாது
“நான் கட்டுப்பாடெல்லாம் மீற மாட்டா, நீங்க கவலைப்படாதீங்க” என்று மெல்ல சொல்ல, லாலாவுக்கு அவள் பேச்சில் முதலில் திகைப்பு வந்தாலும் பின் சிரித்துவிட்டான்.
ஆனால் கட்டுப்பாட்டோடு எப்படி காதலையும் திருமண வாழ்வையும் கொண்டு போவது என்று தெரியாது அன்றே திண்டாட தொடங்கினான்.