“சரோ” என்று சக்தி அழைக்க, சரோஜினி காதில் வாங்கவே இல்லை. சக்தியும் கத்தியழைத்து மற்றவர் கவனம் பெற விரும்பாதவன் அமைதியாக போனவளை பார்த்து நின்றான்.
லாலா நண்பன் முகம் பார்த்து
“குந்தாணி கோச்சுக்கிட்டா போலடா” என்று சொல்ல
“சரியாகிடுவா விடு” என்ற சக்தியைக் கண்டுகொள்ளாது லாலா தங்கை பின் சென்றான்.
“ஏய் சரோ! நில்லு” என்று லாலா கத்த, சரோஜினியின் நடை நிற்கவில்லை. வேக நடையிட்டு சரோஜினியின் முன் நின்ற லாலா
“சக்தி கூப்பிட கூப்பிட பேசாம வர? எனக்கும்தான் ஷாக், நான் இப்படியா பண்றேன். வா சரோ” என்றான்.
“நீயும் நானும் ஓன்னா?” என்று சத்தமாகக் கேட்டவள், பின் குரலை தாழ்த்தி
“ஆனா ரெண்டு பேரும் மகா நடிகன்கள்டா. ப்ராடு பசங்க” என்றாள்.
“அதை நடிகையர் திலகம் நீ சொல்றியா?” நக்கலாகக் கேட்ட அண்ணனை முறைத்தாள் சரோஜினி. லாலாவுக்கு அதிர்ச்சியிருந்தாலும் என் நண்பனோடு என் உறவு என்றைக்கும் நிலைக்கும் என்ற ஆனந்தம். சரோஜினியின் மனநிலையோ வேறு! என்னை சக்திக்கு ஐந்து வருடமாகத் தெரியும், நான் அவன் காதலி! என்னிடம் ஏன் சொல்லவில்லை. அதுவும் என் அண்ணனைப் பற்றி. நான் முக்கியமில்லையா? என்று கேள்விகள் மட்டும் அவளுக்குத் துணையாக நின்றன.
இப்போதும் கூட அவன் வராமல் நிற்க சரோஜினிக்கு கட்டுப்படுத்த முடியாத கோபம்.
“காதலை மறைக்குறது எல்லாரும் பண்றதுதான், அதை ஊருக்கே சொல்லணும்னு ஒன்னும் அவசியமில்லை. என்னைக்கு சொல்லணுமோ அப்போ சொல்லிப்போம். ஆனா ப்ரண்ட்ஷிப்பே மறைச்சிட்டு நீயெல்லாம் பேசாதடா லாலா” என்று சரோஜினி அண்ணனை பேச
“அப்படியென்ன காதல்’னா பெருசு. நட்புக்கும் மூணு எழுத்து, காதலுக்கும் மூணு எழுத்துதான். எப்போ இருந்து சக்தி உன்னை லவ் பண்றான்? அவன் எனக்கு அஞ்சாங்க்ளாஸ்ல இருந்து ப்ரண்ட். பெருசா பேசுறா காதல்னு, எனக்கும் அவனுக்குமான ப்ரண்ட்ஷிப் கூட எங்க விஷயம். உனக்கு உன் காதல் பெருசுன்னா எனக்கு என் ப்ரண்ட்ஷிப் பெருசு. எல்லாம் இந்த சக்தி பயல சொல்லணும், முன்னாடியே சொல்லியிருந்தா என் நண்பனை காப்பாத்தியிருப்பேன்”
லாலா வார்த்தை விட
“இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகல, போயும் உன் நண்பனை காப்பாத்திக்க. எனக்கு அந்த இடியட் வேண்டாம்” என்ற சரோஜினி கிளம்பிவிட்டாள்.
லாலா எரிச்சலான முகத்தோடு மீண்டும் கடைக்கே வந்தான்.
“என்னடா சொல்றா உன் தங்கச்சி?” சக்தி நெட்டிமுறித்தபடி கேட்க
“உன் காதலினு சொல்லு, சரியான இம்சை” என்றான் லாலா.
“அவள நான் பார்த்துக்கிறேன், நீ டென்ஷன் ஆகாத” என்ற சக்தி புன்னகையோடு
“ஆனாலும் லவ் யூ டா லாலா” என்று நண்பனை தோளோடு சேர்த்தணைத்தான் சக்தி.
“நீ என்ன தப்பா நினைப்பியோன்னு நான் எத்தன நாள் கவலைப்பட்டிருக்கேன் தெரியுமா? தேங்க்ஸ்’டா” என்று உணர்ந்து சொல்ல
“அடச்சீ! இதுக்குத்தான் இந்த பொண்ணுங்க சகவாசம் கூடாதுனு சொல்றது.. மாப்ள நீ சரோ பத்தி என்கிட்ட சொல்லாத மாதிரி என்னை பத்தியும் அவகிட்ட சொல்லாம இருந்திருக்க, அந்த நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு” என்றதும் சக்தி சிரித்தான்.
“இருந்தாலும் கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்” சக்தியைப் பார்த்து லாலா நக்கலாக சொல்ல
“டேய் ரொம்ப பண்ணாத! பாவம் சரோ. அவளுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். உனக்குத் தெரியல மச்சான் அது ஒரு தனி பீல்! ஒரு மாதிரி சரோ என்னை பார்க்கிறப்ப .. ச்ச.. போலிஸா போய்ட்டேன் மச்சான். போயட்டா இருந்திருந்தா கவிதையா கொட்டியிருப்பேன்”
“நீ கவிதை கொட்டுறது இருக்கட்டும், உன் ஆசை காதலி உன்னை வேண்டாம்னு சொல்லிட்டு போறா. நீ என்னடான்னா காதல்னா என்னன்னு எனக்குக் க்ளாஸ் எடுக்கிற” லாலா சிரிப்பை அடக்கி சொல்ல
“மச்சான் இதெல்லாம் அடிக்கடி எங்களுக்குள்ள முட்டிக்கிறதுதான். ஒரு விஷயத்துல உன் தங்கச்சி உன்னை மாதிரி. அவளால ரொம்ப நாள் என்னோட பேசாம இருக்க முடியாது. நான் பேசினா பேசிடுவா” என்று சக்தி காதல் பலூனில் காற்று போனது தெரியாமல் கதையளந்தான்.
“என்னமோ போடா. இந்த காதல் எல்லாம் எனக்குப் புரியாத டிபார்ட்மெண்ட். எக்ஸாம்க்கும் ரிசல்ட்டும் நடுவுல இந்த லாலா வாழ்க்கை லாலா பாடிட்டு இருக்கு.” என்றான் சோர்வாக.
“நீ உனக்குப் பிடிக்கலன்னா இந்த எக்ஸாம்க்கு எல்லாம் ப்ரிபேர் பண்றத விட்டு வேற வேலை பாருடா. உன் தாத்தா பேச்சு கேட்டு இப்படி பிடிக்காததை செய்யாத” சக்தி நண்பனுக்கு அறிவுரை சொல்ல
“சக்தி! முன்னாடி பிடிக்காமதான் இருந்தது. ஆனா இப்போ நான் கவர்மெண்ட் வேலை வாங்கலன்னு வை.. என் தாத்தா விட எனக்கே என் மேல மரியாதையில்லாம போயிடும்டா.” லாலா குரல் இறங்க பேச, சக்தி உடனே
“லாலா! அதெல்லாம் நீ நல்லா பண்ணிடுவ. உனக்குன்னு ஒரு நாள் வரும்டா. அன்னிக்கு என் மச்சான் மாஸா இருப்பான்” சக்தி உற்சாகமாக சொல்ல, லாலாவுக்கு அந்த வார்த்தைகள் உத்வேகம் கொடுத்தன.
அவனும் வருடாவருடம் வரும் தேர்வுகள் அத்தனையும் எழுதுகிறான். முதலில் அந்த தேர்வுகளுக்கு எப்படி படிக்க வேண்டும் என்று புரியவே இரண்டு ஆண்டுகள் முடிந்திருக்க, அதன்பிறகு பல முறை எழுதி சில முறை தோற்று என்று போகிறது அவன் வாழ்க்கை. கடைசியாக எழுதிய தேர்வில் கூட நேர்முகத்தேர்வு வரை சென்று தேர்ச்சி பெறவில்லை. பிறகு அதனால் உண்டான அயர்ச்சியிலிருந்து மீண்டு மீண்டும் முயற்சி எடுத்து தேர்ச்சி பெற வேண்டும் என்று நினைப்பதற்குள் பரீட்சையே வந்துவிடுகிறது.
சிறிது நேரம் பேசிவிட்டு சக்தியும் லாலாவும் கிளம்பினர்.
சக்தி அன்றிரவு வீடு சென்றதும் சரோஜினிக்கு அழைக்க சரோஜினி சக்தியின் அழைப்பைப் பார்த்ததும் எப்போதும் பட்டாம்பூச்சியாக சிறகடிப்பவள் இன்று பட்டென்று அதனை துண்டித்தாள். சக்தி மீண்டுமொரு முறை முயன்றவன் அவள் எடுக்கவில்லை என்றதும் குறுஞ்செய்தி அனுப்பினான்.
“சரோ! உன்கிட்ட சொல்லாம இருந்தது தப்புதான். கொஞ்சம் என்கிட்ட பேசுடி. நான் சொல்றேன்” என்று அனுப்ப சரோஜினி பார்த்தாலும் பதில் அனுப்பவில்லை.
“ஓகே, உனக்குக் கோவம் போச்சுன்னா அப்போ கூப்பிடு” என்று சக்தியும் அவளை தொந்தரவு செய்யவில்லை.
அது கூட சரோஜினிக்குத் தொந்தரவாக இருந்தது. நான் பேசவில்லை என்றாலும் இவன் பேசமாட்டான். என் கோபம் ஒன்றுமே இல்லை என்று எப்போதும் சக்தி என்ன செய்தாலும் பெரிதாக நினைக்காது, எதிர்ப்பார்ப்பில்லாது, சட்டென மாறிப்போகும் சரோஜினியின் அறிவு இன்று லாலாவுக்கு சக்தி அத்தனை நெருக்கம் என்று அறிந்தபின் கோபம் கொண்டது.
உரிமையுணர்வு தலைதூக்கியது. நட்பை விட காதல் பெரிது என்று நாட்டாமை செய்தது நங்கை மனம். வீட்டில் ஆண்பிள்ளை என்று அண்ணனுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் சிறு வயதிலிருந்தே அவளை காயப்படுத்தியிருக்க, சக்தியும் தன்னை கண்டுகொள்ளாது லாலாவை சமாதானம் செய்தது சரோஜினிக்குப் பிடிக்கவில்லை. அதைவிட இத்தனை நாட்களாக அண்ணனுடன் நட்பாக இருப்பதை சொல்லவில்லை. அதுதான் என் மீதான நம்பிக்கையா? என்று பொங்கினாள்.
சக்தியும் இரண்டு நாட்கள் அவளுக்கு அவகாசம் கொடுத்து காத்திருக்க, சரோஜினி அவனிடம் பேசவில்லை. சக்திக்கும் என்னமோ போல் இருக்க அவளுக்கு அலைப்பேசியில் தொடர்ந்து அழைத்தான். சரோவுக்கும் தன் கோபத்தை கொட்டினால் பரவாயில்லை என்ற நிலை.
இருவரும் உணவகம் ஒன்றுக்குச் செல்ல, சரோஜினி பேசாமல் இருந்தாள்.
“சரோசாவுக்கு இன்னும் கோவமா?” சக்தி கேட்க, சரோஜினி பதில் சொல்லாமல் அவன் காலை மிதித்தாள்.
“என்னடி இப்போ தப்பு பண்ணிட்டேன்? நம்ம காதல் பத்தி யார்கிட்டயும் சொல்லக் கூடாதுனு நீதானே சொன்ன? அதை காப்பாத்தினேனா இல்லையா? அது மாதிரி நேத்துதானே அண்ணன் தங்கச்சி ரெண்டு பேர்கிட்டயும் விஷயத்த சொன்னேன். நம்ம காதல்’ல நம்ம ப்ரைவசின்னா எங்க ப்ரண்ட்ஷிப்பும் அப்படித்தான்.”
சக்தி பொறுமையாக சரோஜினிக்கு சொல்ல முயன்றான். சரோஜினி சரவெடியாக இருந்தாள்.
“என்ன பேசுற? அவனும் நானும் ஒன்னா? நான் உனக்கு ஸ்பெஷல் இல்லையா சக்தி?”
“இந்த கேள்விக்கு முன்னாடியே பதில் சொல்லிட்டேன். என்னோட எல்லா ப்ரண்ட்ஸ் பத்தியும் உனக்கு நான் சொல்லணும்னு இல்லை”
“எல்லா ப்ரண்ட்ஸ் பத்தி சொல்லணும்னு இல்லை. ஆனா அந்த ப்ரண்ட் என் அண்ணனா இருந்தா நீ சொல்லியிருக்கணும். நான் உனக்கு முக்கியமானவ இல்ல அப்போ?”
“சரோஜினி! இப்படி கேட்டு என்னை வெறுப்பேத்தாத. சின்ன புள்ளத்தனமா பண்ணாத சரோ. உன்கிட்ட நான் இதை எதிர்ப்பார்க்கல. அவன் உன் அண்ணன்தானே? நாங்க ப்ரண்ட்ஸா இருந்தா நீ சந்தோஷப்படணும். இப்பவே இப்படி கேட்கிற, நாளைக்கு கல்யாணமானது எங்கம்மா முக்கியமா நீ முக்கியமான்னு பஞ்சாயத்து வைப்ப போலடி” என்றான் எரிச்சலாக.