“நீயும் அந்த வெட்டிப்பயலும் ப்ரண்டா இருந்தா என்ன இல்லன்னா எனக்கென்னடா?” சரோஜினியும் கோபமாகப் பேசினாள். என்னை சமாதானம் செய்யும் எண்ணமின்றி என்னை பேசுகிறான் என்ற கோபம், ஏமாற்றம்.
“லாலாவ வெட்டிப்பயன்னு சொன்ன பிச்சிடுவேன்” என்று சக்தி முறைக்க
“ஒஹ், அப்போ அவன் என்னை வேண்டாம்னு சொன்னான். என்னை அவ்வளவு கிண்டல் பண்ணினா உன் ப்ரண்ட். அப்போ அப்படியே பல்லைக்காட்டிட்டு நின்ன”
“எது விளையாட்டு? உன் ப்ரண்டை வெட்டிப்பயன்னு சொன்னா பொசுக்குனு கோவம் வருது. இத்தனைக்கும் அவன் என் அண்ணன். ஆனா என்னை அவன் பேசினப்ப மட்டும் கோவம் வரல. இல்லை இப்போ என் பேச்சை விளையாட்டா எடுக்க வேண்டிதானே? என்ன எல்லாம் பேசினான் அந்த பய? உன் அழகுக்கும் அறிவுக்கும் உனக்கு ஜில்லாவுல எல்லாரும் பொண்ணு கொடுக்க நிக்கிறாங்கன்னு சொன்னானே?” சரோஜினி கோபத்தில் மூச்சு வாங்க பேசினாள். கண்கள் கலங்கிட
“விளையாட்டுக்குக் கூட என்னை நீ விட்டுக்கொடுக்க கூடாதுனு நான் நினைச்சேன் சக்தி. விஷயத்தை சொல்லிட்டு உன் ப்ரண்ட் என்ன நினைப்பான்னுதான் நீ பார்த்த, நான் என்ன முட்டாளா?”
“அடியே! இதெல்லாம் ஒரு விஷயமா? நானும் அவனும் சின்ன வயசுல இருந்தே ப்ரண்ட்ஸ். காலேஜ்ல கூட நாங்க அவ்வளவு க்ளோஸ். அப்போ அவன்கிட்ட இத்தனை நாள் சொல்லல, இதுல உன் அண்ணன் வேற அப்போ நான் அவனைதானே யோசிப்பேன். அவன் கூட பழகி அவன் தங்கச்சியை லவ் பண்ணிட்டு சொல்லாம இருந்தா தப்பில்லையா?”
“அப்போ நீ நான் லாலா தங்கச்சின்றதால என்னோட பேசின?”
“இதுக்கு உண்மையை சொன்னா உனக்குக் கசக்குமே, பரவாயில்லையா?” சக்தி கோபத்தை நக்கலாக வெளிப்படுத்தினான்.
“போடா!” என்று சரோஜினி கோபமாக கிளம்பிவிட்டாள். சக்தி சமாதானம் செய்ய பார்க்க, அவள் நின்றால்தானே. அந்த நேரம் பேருந்து வர சரோஜினி டாட்டா சொல்லிவிட்டாள்.
சக்திக்கு இதெல்லாம் பெரிய விஷயமாகப்படவில்லை. அதைவிட சரோஜினி மீது அதிருப்தி. சின்ன வயதிலிருந்து ஒற்றையாய் வளர்ந்தவனுக்கு அண்ணன் தங்கை, தம்பியோடு இருப்பவர்களைப் பிடிக்கும். அவனே லாலாவுக்குத் தங்கை பிறந்து இருக்கிறாள் என்று தெரிந்த அன்று
“அம்மா! எனக்கு எப்போ தங்கச்சி பாப்பா வரும்” என்று மாவரைத்துக் கொண்டிருந்த சசிகலாவிடம் கேட்க அவருக்கு அதிர்ச்சியில் பேச்சு வரவில்லை.
“என்னடா கேட்ட?” என்று அவர் புரியாமல் மகனை பார்க்க
“அந்த லாலாவுக்குத் தங்கச்சி பாப்பா பொறந்து இருக்கும்மா, எனக்கு எப்போம்மா பாப்பா வரும்?” என்று ஆவலாகக் கேட்கும் மகனிடம் என்ன சொல்வார்?
“போய் படிடா. அவனுக்குத் தங்கச்சி இருந்தா உனக்கும் இருக்குமா?” என்று திட்ட
“அவனுக்கு மட்டும் இருக்கு. எனக்கில்ல” என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்ய மாவை அரைத்து முடிக்கும் முன்பே மகன் முதுகில் தோசைப்போட்டார் சசிகலா.
“தாத்தாஆஆ” என்று லட்சுமணனிடம் அலறிக்கொண்டு போக அவர் பேரனை சமாதானம் செய்ய, அவன் எதற்கு அடிவாங்கினான் என்று சொன்னதும் மகனை அழைத்தவர்
“பாஸ்கர், உன் மவன் என்னமோ கேட்கிறான் பாரு” என்று சொல்ல
“என்ன வேணும் சக்தி” என்று அழும் மகனை பக்கத்தில் அழைத்து கண்களைத் துடைத்துவிட்டு பாஸ்கர் கேட்டார்.
“அந்த லாலாவுக்குத் தங்கச்சி பாப்பா வந்திருக்காம்பா, அதான் எனக்கும் வேணும்னு கேட்டா அம்மா அடிச்சிடுச்சு” சக்தி அழுகையோடு சொல்ல பாஸ்கர் தந்தையைப் பார்க்க லட்சுமணன் சிரிப்போடு நகர்ந்துவிட்டார்.
அதன்பின் தந்தை தன்னை சமாதானப்படுத்தியதெல்லாம் நினைக்க சக்திக்கு இப்போதும் சிரிப்பு. அப்படியிருக்க அண்ணனோடு இணக்கமாக இல்லாமல் இவள் இப்படி பேசுகிறாளே என்று சரோஜினி மீது மனத்தாங்கல். சக்தி உடன்பிறந்தார் உட்பூசல் அறியவில்லை.
********************
அன்று சக்தி எஸ்.பி அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது. எஸ்.பியும் ஏடி.எஸ்.பியும் ஒன்றாக பேசியபடி வர உண்மை தெரிந்த பின் சித்ரஞ்சனை பார்க்க சக்திக்கு வாய்ப்புக் கிட்டவில்லை. இன்று பார்க்கவும் சக்திக்கு சரியான கோபம். இதில் வசுந்த்ராவும் மகனோடு கணவன் வீடு வந்து சேர்ந்துவிட்டார்.
அவனுக்குக் கொடுத்த வேலையை முடித்தவன் சித்ரஞ்சன் அறைக்கதவைத் தட்ட,
“கம் இன்” என்று குரல் கொடுத்தான் சித்ரஞ்சன். உள்ளே நுழைய பார்த்தால் அரிச்சந்திரன் இருந்தான். சுதந்திர விலாசத்தின் பங்காளி அவன். சித்ரஞ்சனுக்கு பங்காளி வீட்டு அண்ணன் மகன்.
“டேய் போலிஸ் நீ இங்க என்ன பண்றடா?” அரி புன்னகையோடு சக்தியை விசாரிக்க
“கோர்ட்ல கொட்டாவி விட்டுட்டு இல்லாம இங்க என்ன பண்றீங்கன்னு நான்தான் அத்தான் உங்களை கேட்கணும். போலிஸ்னு சொல்லிட்டு இங்க என்ன பண்றன்னு கேட்டா..” சக்தி கிண்டலாகக் கேட்டான்.
“அடிங்க! இங்க போஸ்டிங் மாத்திட்டாங்கன்னு சொல்லாம என்ன பேசுறான் பாருங்க சித்தப்பா” என்று சித்ரஞ்சனிடம் சொன்ன அரி
“உட்காரேன் சக்தி.” என்றான். சக்தி சித்ரஞ்சனை பார்க்க
“உட்கார் சக்தி” என்று சித்ரஞ்சனும் சொல்ல சக்தி உட்காரவில்லை.
அரி உட்கார்ந்திருந்த நாற்காலியின் அருகே நின்றவன் ஓரவிழியால் சித்ரஞ்சனை பார்த்தபடி
“இப்போ எஸ்.பி’ கூப்பிட்டிருக்கார். வந்து உங்களை பேசிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு சென்றான்.
சித்ரஞ்சனுக்குப் புரியவில்லை. யார் சொல்லியிருப்பார்கள்? வசுந்த்ரா நிச்சயம் சொல்லியிருக்க மாட்டாள் என்று தெரியும். லாலா தானே அன்று அறை முன் நின்றான். அவனாக இருக்குமோ? இல்லையே அவன் இவனோடு பேசி பார்த்ததில்லையே. லாலா சரோஜினியிடம் சொல்லி சரோ இவனிடம் சொல்லியிருப்பாளா? சரோவுக்குத் தெரிந்திருந்தால் நிச்சயம் என்னை கேட்காமல் இருக்க மாட்டாளே. இவன் புத்திசாலின்னு தெரியும் அவளோ க்ளவரா இவன்? என்று சித்ரஞ்சனை யோசிக்க வைத்தான் சக்திவேல்.
சித்ரஞ்சனுக்கு ஆகாத வீட்டோடு காதல் வருவதெல்லாம் கூட இயல்பான விஷயம். வரலாற்று பரீட்சையில் வரலாறான லாலா-சக்தியின் நட்பின் கதை பாவம் சித்தப்பா அறியவில்லை.
சக்திக்கும் சரோவுக்கும் சண்டை என்றறிருந்த லாலா தங்கையை சமாதானம் செய்ய பார்த்தான்.
“என்னடி பிரச்சன உனக்கு? சக்தி பாவம். பேசாம என் ப்ரண்டை இம்சை பண்றியாம்”
“அவன் பாவம்னா நான் யாருடா?” என்று அண்ணனிடம் சரோஜினி கத்தினாள்.
“ஆத்தாடி! காதல் வந்தா நம்ம யாருனு கூட மறந்திடுமா? உன் நிலைமை கவலைக்கிடம்தான் டா சக்தி” என்றதும்
“லாலா! வெறுப்பேத்தாம போ. ஆனா கேடிடா அண்ணா நீ. எங்க முன்னாடி சண்டை போடுற மாதிரி போட்டுட்டு அதுவும் உன்னை அவன் அடிச்சான்னு நான் போய் அவனை கேட்டேன். நீங்க எல்லாரையும் ஏமாத்திட்டு இருந்திருக்கீங்க..” என்றாள் எரிச்சலான குரலில்.
“சரி சொல்லு எப்படி அவனோட ப்ரண்ட் ஆன?” என்று எப்படி இப்படி ஒரு நட்பு என்று கேட்க லாலா லாலாலா பி.ஜி.எம்’மோடு அவனுக்கு சக்தியோடு நட்பு உண்டான கதையை சொல்ல சப்பென்றானது சரோஜினிக்கு.
“அடச்ச! இதானா? நான் கூட இரண்டு பேரும் இந்த சீன் போடுறதுக்கு பெரிய கதையிருக்கும் நினைச்சா. ஆன்சர் தெரியாத உனக்கு அவன் ஆன்சர் சொன்னதும் அப்படியே ஆரூயிர் நண்பனாகிட்டானா?” என்று கிண்டல் செய்ய
“ஹேய்! என்ன ஓவரா பேசுற? நம்ம ரெண்டு வீட்டுக்கும் சண்டை. அவனோட நானும் பேசுறதில்லை. நானா இருந்தா கூட தப்பா ஆன்சர் சொல்லியிருப்பேன், சக்தி அப்படியில்லை. ஆமா நீ சுத்துறியே உன் ப்ரண்ட்ஸ் அவளுங்களுக்கெல்லாம் அர பாட்டில் ரத்தம் குடித்தியா? உயிர்த்தோழி’ன்னு உருட்டுறதில்லை. எங்க ப்ரண்ட்ஷிப் பார்த்தா எளக்காரமா உனக்கு?” என்று திட்டியவன்
“அப்போ உனக்கு சக்தி வேண்டாமா?” என்று சரோஜினியிடம் கேட்க
“வேண்டாம் போடா. உன் ப்ரண்ட்க்குதான் பொண்ணுங்க க்யூவுல நிக்கிறாங்க சொன்னியே.”
“அவனுக்குப் பொண்ணு கிடைக்கும்தான், இருந்தாலும் கூடப்பொறந்துட்ட அவனை விட்டா உனக்கு வேற ஒருத்தன் கிடைக்க மாட்டானே டி. அதான் யோசிக்கிறேன்” என்றதும் கையில் கிடைத்த பாட்டிலை தூக்கி லாலா மேல் வீசிட, குனிந்து தப்பித்தான் லாலா.
“லாலா! இங்க வா” என்று திலகர் குரல் கொடுக்க
“பாதகத்தி! உன்னை அப்புறம் பேசிக்கிறேன்.” என்று தங்கையை முறைத்தபடி சென்றான் லாலா.
அடுத்த நாள் திலகர், வாஞ்சிநாதன் இருவரும் வீட்டிலிருந்தவர்களை அழைத்தனர்.
“நம்ம சரோஜினிக்கு திருத்துறைப்பூண்டி’ல ஒரு வரன் வந்திருக்கு. இந்த பையனோட தாத்தாவும் சுதந்திர போராட்டத்துல கலந்துக்கிட்டவராம்” என்றதும்
“வேண்டாம் தாத்தா” என்று சரோஜினி மறுக்கும் முன் சொன்னது லாலா.
“என்ன?” என்று வாஞ்சிநாதன் மகனை பார்க்க,
திலகர் உடனே “நீதானடா இவளை சீக்கிரம் கல்யாணம் கட்டி அனுப்பணும் சொன்ன?” என்று கேட்டவர் “பையன் நம்ம சரோவுக்குப் பொருத்தமா இருப்பான்” என்றார்.
‘என் நண்பன் வருத்தமாகிடுவான் பெருசு’ என்ற லாலா அருகே நின்ற தங்கையிடம் ‘ஏண்டி என் நண்பனோட காதல் என்ன கறிவேப்பிலையா?’ என்று முணுமுணுத்தான்.
சரோஜினியின் கலவரமான முகம் பார்த்து வசுந்த்ரா கணவனுக்கு அலைப்பேசியில் அழைத்தாள். சித்ரஞ்சன் எடுக்கவில்லை.
சிறிது நேரத்தில் சுதந்திர விலாசத்தில் வன்முறை வெடித்திருந்தது. சித்ரஞ்சன் வந்தபோது வீடே கலாட்டாவாகி இருந்தது. அதைவிட அடுத்த நாள் காலையில் உள் நாட்டு பிரச்சனையாக இருந்தது இரு நாட்டு பிரச்சனை போல் மாறியது.