“நான் ஒத்துக்கிறது இருக்கட்டும். என்ன சொல்லி எங்கத்தையைக் கல்யாணம் பண்ணிங்க? இத்தன வருஷம் உங்கள பேசினாலும் என் அத்த மேலதான் கோவம். வீட்ல ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே தாத்தா ஒத்துக்கலனாலும் அப்பா எதாவது பண்ணியிருப்பார். இந்த அத்த ஏன் அவசரப்பட்டுச்சு? அப்படியென்னதான் உன் சித்தப்பா ஸ்பெஷல்னு சரோவ கூட பேசியிருக்கேன். ஆனா எங்கத்த மேல தப்பில்லை. கட்டாயப்படுத்தி அவங்களை கல்யாணம் பண்ணியிருக்கீங்க.”
சக்தி கோபத்தைக் கட்டுப்படுத்தி பேசினான். சித்ரஞ்சனுக்கு இப்படி சிறியவர்கள் கூட தன் செயலை பேசும்போது மிகுந்த வருத்தமாக இருந்தது. அப்போது அந்த நேரத்தில் நியாயமாகத் தோன்றியது, சித்ரஞ்சனுக்குத் தெரியவில்லை சில விஷயங்கள் எல்லாம் எந்த நேரத்திலும் அநியாயமே!
அதுவும் இத்தனை தெளிவாக சக்தி தன் மீதான குற்றத்தை சொல்ல, இவனுக்கு எப்படி தெரியும் என்ற கேள்வியும் உள்ளே குடைந்தது. ஆனாலும் கேட்கவில்லை. என்றாவது ஒரு நாள் தெரியத்தானே போகிறது என்ற எண்ணம்.
மகள் காதலித்தால் திருமணமாகிவிட்டது என்று ஏற்கும் மனநிலையில் நிச்சயம் வசுந்த்ரா வீட்டினர் கிடையாது. அத்தனை சுதந்திரம் கொடுத்து வளர்த்த பின் இப்படி செய்ததே அவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்க, எப்படி ஏற்பார்கள்?
சித்ரஞ்சனுக்கும் மனைவியை தான் என்னதான் நன்றாக பார்த்தாலும் அவள் குடும்பம் ஒதுக்கியது வேதனை. அதுவும் அவன் காதலால், அவன் தவறால் அவள் தண்டனை அனுபவிக்கிறாள்.
ஆரம்பத்தில் வசுந்த்ராவோடு திருமணம் முடிந்துவிட்டது என்ற உரிமை கொடுத்த உவகை நிறைய இருந்தது. நாட்கள் கடக்க வசுந்த்ராவோடு வாழ முடியாமல் போகுமோ என்ற அச்சம், தன் அன்பை வசுந்த்ராவுக்குப் புரிய வைக்க அத்தனை முயற்சிகள் என்று போராட்டமே, எப்படியோ ஆறு மாதங்கள் வரை தேவைக்குக் கூட பேசாத வசுந்த்ரா, பின் மனது வைத்து கொஞ்சம் பேச, சித்ரஞ்சன் கொஞ்சி பேசி என்று கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு புரிதல். அவர்கள் அன்யோன்மாக வாழ நினைக்கவே ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆனது. பிறகு அது நீடித்து நிலைக்க வேண்டும் என்ற பேராவல்.
வசுந்த்ரா சித்ரஞ்சனை புரிந்து பிரியம் காட்டினாலும் ஆரம்ப காலம் அடிக்கடி வந்து அவளை கோபம் கொள்ளச் செய்யும். வார்த்தைகள் வெடிக்கும்! சித்ரஞ்சனும் சில நேரம் சீறி, பின் காதல் மீகி மீறி என்று தினம் தினம் தக்காளி விலை போல் தாறுமாறாகவே சென்றது அவர்கள் வாழ்வு.
என்னவொன்று எத்தனை சண்டையிட்டாலும் பேசினாலும் வசுந்த்ராவும் சித்ரஞ்சனும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்ததுமில்லை, விட்டிருந்ததுமில்லை.
மனைவியோடு இணக்கமாக வாழ்வதே சித்ரஞ்சனுக்கு சாதனையாக இருக்க, மாமனார் வீட்டோடு சேர எல்லாம் அப்போது எண்ணமில்லை. அவர்களோடு சேர நினைத்து அங்கேயும் ஒதுக்கி இங்கு அப்பாவும் ஒதுக்கிவிட்டால் தங்களுக்கு யாருமில்லாமல் போய்விடுமே என்ற பயம்.
அதைவிட லட்சுமணன் மீது நிறைய பயம். முன்பு பெண் கேட்கவே பயந்தவனுக்கு இப்போது உங்கள் பெண்ணின் விருப்பமின்றி திருமணம் செய்தேன் என்று எப்படி சொல்ல முடியும்?
தனக்காக இத்தனை செய்யும் மனைவிக்கு தான் இதை கூட செய்யாவிட்டால் எப்படி என்ற பிரியமே சித்ரஞ்சனை மாமனாரிடம் பேசத் தூண்டியது. தூண்டுதலோடு இருந்தவன் சக்தி சரோஜினி விஷயம் தெரியவும் துவண்டுவிட்டான். இவன் அமைதி உடன்படிக்கை போடலாம் என்று நினைத்தால் அவன் வீட்டுப்பெண் அடுத்த போருக்கு அல்லவா வேலை பார்த்துவிட்டாள்.
“சக்தி! நான் செஞ்சது தப்புதான்” என்று சித்ரஞ்சன் ஒத்துக்கொண்டாலும் சக்தி இரங்கவில்லை.
“ஹலோ மாமா! நீங்க செஞ்சது தப்புதான். என்ன ஒத்துக்கிட்டா மட்டும் இல்லைன்னு ஆகிடுமா? இல்லை நான் நீங்க செஞ்சது தப்பா சரியான்னு கேட்டேனா?” என்றான் எரிச்சலாக.
‘என் பொண்டாட்டி மாதிரி ஆமான்னு சொன்னாலும் பேசுறான் இல்லைனு சொன்னாலும் பேசுறான். நான் பேசாமயே இருக்கேன்’ என்று சித்ரஞ்சன் பேசாமல் இருக்க
“உங்கள சொல்லி என்ன பண்றது? எங்கத்தைக்கு எங்க போச்சு அறிவு?” என்று சக்தி வார்த்தைகளை கோபத்தில் கோர்த்தான்.
பேசாமல் இருக்க வேண்டும் என்ற முடிவு பேசாமல் இருக்க, சித்ரஞ்சன் மனைவியை சொன்னதும் பொங்கிவிட்டான்.
“வசுவை பேசாத” என்றவனின் குரல் உயர்ந்திருக்க
“எங்கத்தையை நான் பேசுவேன்” என்று சக்தி பதில் சொன்னான்.
“என் பொண்டாட்டியை நீ பேசக்கூடாது! அவ மேல எந்த தப்புமில்லை” என்ற சித்ரஞ்சன் சக்தியை முறைத்தான்.
“உங்களை கல்யாணம் பண்ணினதே தப்புதான்” என்று சக்தி சொல்ல
‘அடப்பாவி பயலே!’ என்றுதான் சித்ரஞ்சன் பார்த்தான்.
“எங்க தாத்தா ஒரே பொண்ணோட கல்யாணத்தைப் பத்தி எவ்வளவு கனவு கண்டிருப்பார். எங்கப்பா தங்கச்சிக்கு எப்படியெல்லாம் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைச்சிருப்பார். எங்கத்த கல்யாணம் பண்ணும் புது டிரஸ் போடலாம், ஸ்கூல் லீவ் போடலாம்னு எவ்வளவு ஆசையோட இருந்திருப்பேன். எல்லாத்தையும் கெடுத்துட்டு..” சக்தி ஆரம்பத்தில் சொல்லவும் குற்றவுணர்ச்சியில் கேட்ட சித்ரஞ்சன் கடைசியில் சிரித்துவிட
“கொஞ்சம் கூட பீல் பண்ணாம சிரிக்கிறீங்க? எங்கத்தயை சொல்லணும்.” சக்தி கடுப்போடு சொன்னான்.
“உங்களுக்கு இருக்கு கச்சேரி! நான் எங்க தாத்தா, அப்பா மாதிரி எல்லாம் டீசண்ட் கிடையாது” என்று சக்தி சொல்லவும் சண்டை என்றால் வேட்டியை மடித்துக்கொண்டு அரிவாளோடு சண்டைக்கு நிற்கும் அவன் மாமனார் லட்சுமணன் மனக்கண்ணில் தோன்றினார்.
‘டீசன்சின்னா என்னனு இவன் டிக்ஷனரில பார்த்ததே இல்ல போல’ சித்ரஞ்சன் மருமகனை மனதில் திட்டினான்.
“சக்தி! ப்ளீஸ். நானே உங்க தாத்தா கிட்ட வந்து பேசுறேன்.” என்று சித்ரஞ்சன் பொறுமையாக சொல்ல,
“பார்க்கிறேன் அந்த அதிசயம் என்னைக்கு நடக்குதுனு” சக்தி நக்கலடித்தான்.
எப்படியோ அத்தை மேல் தவறில்லை என்று தெரிந்தால் போதுமென்ற எண்ணம்.
“விருப்பம்ன்றது ரெண்டு பக்கமிருந்தாதான் அது காதல். கட்டாயப்படுத்தினா அது காதலாகாது! கட்டாயம்தான்! என்ன காரணமோ அத்த இதுவரைக்கும் உங்களோட இருக்கு. அதனால உங்ககிட்ட பொறுமையா பேசுறேன். எங்கத்த நிஜமா உங்களோட சந்தோஷமா இருக்காங்களா?” சக்தி சந்தேகமாகக் கேட்க சித்ரஞ்சனுக்கு சுருக்கென்றது.
கட்டாயமாக எப்படி காதல் வரும்? மனைவி சந்தோஷமாக இருக்கிறாளா என்ற கேள்வியே அவன் காதல் மீது அடிக்கடி கேள்வி கேட்க வைக்கும். அவளுக்கும் என்னை மிகவும் பிடிக்குமா என்ற எண்ணம் சோதிக்கும். சித்ரஞ்சனின் கசங்கிய முகம் பார்த்த சக்தி
சக்தி அப்படியே அறையை விட்டு கிளம்ப நினைத்தவன் மீண்டும் சித்ரஞ்சன் பக்கம் திரும்பி,
“இந்த விஷயம் எனக்கு எப்படி தெரியும்னு கேக்கலயே” என்றவன்
“லாலா சொன்னான்” என்றதும் சித்ரஞ்சன் அதுவரை கூட இயல்பாக கேட்டவன் சட்டென்று இருக்கையை விட்டு எழுந்துவிட்டான்.
“லாலா?” என்று அதிர்ச்சியில் அவன் சக்தியைப் பார்க்க
“உங்க அண்ணன் மகன் லாலாதான். என்னோட பெஸ்ட் ப்ரண்ட் மாமா” என்றதும்
“டேய்! என்னடா சொல்ற? எப்படி?” என்ற சித்ரஞ்சனுக்கு நம்பவே முடியவில்லை.
“இதென்னா பெரிய வம்பாயிருக்கு? சரோவ லவ் பண்ணினா எப்படின்னு கேட்குறீங்க? லாலாவோட ப்ரண்ட் ஆன எப்படினு கேட்குறீங்க? இவருக்கு மட்டும் சரியா பேசாத அத்தை மேல லவ் வருமாம், நியாயமா மாமா?” என்று நியாயம் கேட்டவன்
“எத வேணும்னாலும் விட்டுடுவேன். ஆனா கட்டாயப்படுத்தித் தாலி கட்டிட்டு அத காதல்னு சொல்லி உங்க அண்ணன் பசங்க ரெண்டும் எங்க சித்தப்பா பெரிய காதல் மன்னனு சொல்லும் பாருங்க. இனிமே அப்படி சொல்லட்டும் வச்சிக்கிறேன்” என்ற சக்தி சித்ரஞ்சனின் பதிலை எதிர்ப்பார்க்காமல் சென்றுவிட்டான்.