சித்ரஞ்சனுக்கு லாலா எப்படி நட்பானான் என்று புரியவில்லை. அதுவும் தன் விஷயம் சொல்லுமளவு நெருக்கமான சினேகிதமா? தலையே சுற்றியது.
இரவு வீடு சென்றவன் முகம் யோசனையையும் சோர்வையும் காட்ட, வசுந்த்ரா கேட்டதற்கும் ஒழுங்காக பதிலில்லை.
“என்னாச்சு ரஞ்சன்? ஏதோ யோசிச்சிட்டு இருக்கீங்க?” என்று வசுந்த்ரா மீண்டும் மீண்டும் கேட்க சித்ரஞ்சன் எல்லாம் சொல்லிவிட்டான்.
“உங்களை யார் சக்திகிட்ட சொல்ல சொன்னா? அவன் என்ன பெரிய மனுஷனா?” என்று வசுந்த்ராவும் திட்ட
“அடியே! அவனுக்கு நான் சொல்லல, லாலா சொன்னானாம். லாலாவும் அவனும் பெஸ்ட் ப்ரண்ட்ஸாம்” என்றதும் வசுந்த்ராவுக்கு நம்பவே முடியவில்லை. வியப்பில் விரிந்த கண்களோடு கணவனை பார்த்து
“எப்படிங்க? சின்ன வயசுல ஒன்னா சேர்ந்து கூட விளையாட மாட்டானுங்க. சண்டை போட்டு நம்ம சமாதானம் பண்ணுவோம்” என்று கேட்க
“எப்படினு கேட்டதுக்குத்தான் உன் அண்ணன் மவன் என்னை பேசுறான்” சுணக்கமாக சொன்ன சித்ரஞ்சனிடம்
“அது எப்படி சுதந்திர விலாசம் டிசைனே இப்படி இருக்கு. நேராவே ஒரு விஷயம் செய்றதில்லை. எல்லாத்திலேயும் திருட்டுத்தனம். உங்களை மாதிரியே இந்த பசங்களும் இருக்காங்க.. அதுவும் பக்கத்து வீட்லயே லவ், ப்ரண்ட்ஷிப் எப்படி இப்படி?” வசுந்த்ரா வம்பாகக் கேட்டாள்.
“ஏன் சொல்ல மாட்ட? நாங்களாம் பாசத்துக்குக் கட்டுப்பட்டவங்க. எங்க விருப்பத்தையும் விட்டுக்கொடுக்க முடியாம வீட்டையும் மீற முடியாம எப்படியோ சொதப்பி…அப்புறம் என்ன கேட்ட பக்கத்து வீட்டு மேலயே லவ்வு ப்ரண்ட்ஷிப்பா? எங்கப்பா படிக்கணும், மார்க் எடுக்கணும்னு சொல்லி எங்கயும் போக விட மாட்டார். வீடே கதின்னு கிடக்குறவங்களுக்கு பக்கத்து வீடே பாரீனாட்டம்தான் தெரியும்” என்று சித்ரஞ்சன் குமுற
“அப்போ ஊரை சுத்த விட்டிருந்தா என்னை பார்த்திருக்க மாட்டீங்க?” வசுந்தரா கணவனை குறுகுறுவென பார்த்தாள்.
“இப்போ நான் ஆமான்னு சொல்லணுமா இல்லைனு சொல்லணுமா வசு?” என்று சித்ரஞ்சன் கேட்க வசுந்த்ராவுக்கு சிரிப்பு வர சத்தமாக சிரித்தாள்.
சித்ரஞ்சன் முகம் தெளியாமல் இருக்க
“என்னாச்சு?” என்றாள் மீண்டும்.
“இல்லை. சக்தி பேசினதை நினைச்சேன், நம்ம பகத்’கூட நாளைக்கு என்னை இப்படித்தான் பார்ப்பான் இல்ல வசு. எனக்கு நிஜமா தெரியல வசு, ஒரு பொண்ணை கூட வச்சுக்கணும்னா அவளை கன்வின்ஸ் பண்ணனும், அவ கன்செண்ட் எதிர்ப்பார்க்கணும்னு அறிவில்ல எனக்கு. கல்யாணம், தாலி கட்டிட்டா போதும்னு தற்குறியா இருந்துட்டேன்.”
சித்ரஞ்சன் கண்கள் கலங்க சொன்னான்.
“இப்போ அறிவு வந்திடுச்சு இல்ல, அது போதும். தூங்குங்க ரஞ்சன்” என்று வசுந்த்ரா அவன் கையைப் பிடித்துக்கொண்டாள். சித்ரஞ்சன் எப்படியாவது மனைவியை அவள் தந்தையோடு பேச வைக்க வேண்டும், லட்சுமணன் எத்தனை அடித்தாலும் விடக்கூடாது என்று உறுதியாக நினைத்தபடி உறங்கினான்.
அடுத்த நாள் சித்ரஞ்சன் வேலைக்குச் சென்றுவிட்டான். பகத் பள்ளி சென்றிருக்க, சரோஜினி உடல் நலமில்லாமல் இருக்க விடுமுறை எடுத்திருந்தாள்.
பத்து மணி போல் திலகர் வீட்டில் இருந்தவர்களை அழைத்து,
“நம்ம சரோஜினிக்கு திருத்துறைப்பூண்டி’ல ஒரு வரன் வந்திருக்கு. இந்த பையனோட தாத்தாவும் சுதந்திர போராட்டத்துல கலந்துக்கிட்டவராம்” என்றதும்
“வேண்டாம் தாத்தா” என்று சரோஜினி மறுக்கும் முன் சொன்னது லாலா.
“என்ன?” என்று வாஞ்சிநாதன் மகனை பார்க்க,
திலகர் உடனே “நீதானடா இவளை சீக்கிரம் கல்யாணம் கட்டி அனுப்பணும் சொன்ன?” என்று கேட்டவர் “பையன் நம்ம சரோவுக்குப் பொருத்தமா இருப்பான்” என்றார்.
‘என் நண்பன் வருத்தமாகிடுவான் பெருசு’ என்ற லாலா அருகே நின்ற தங்கையிடம் ‘ஏண்டி என் நண்பனோட காதல் என்ன கறிவேப்பிலையா?’ என்று முணுமுணுத்தான்.
சரோஜினியின் கலவரமான முகம் பார்த்து வசுந்த்ரா கணவனுக்கு அலைப்பேசியில் அழைத்தாள். சித்ரஞ்சன் எடுக்கவில்லை.
“இந்தா சரோஜினி நீ பையன் போட்டோ பார்” என்று திலகர் நீட்ட, சரோஜினியின் கைகள் நீளவில்லை. அவளுக்கும் சக்திக்கும் சண்டைதான். அதற்காக வேறு யாரையும் நினைக்கும் அளவுக்கெல்லாம் அவள் காதல் காணாமல் போகவில்லை.
மகள் வாங்காமல் இருக்கவும் வாஞ்சி நாதன்
“தாத்தா நீட்டுறார்ல வாங்கு சரோ” என்று சொல்ல
“தாத்தா! எனக்கு சக்தியைத்தான் பிடிச்சிருக்கு. நானும் அவனும் லவ் பண்றோம்” என்று சரோஜினி பட்டென்று விஷயத்தை சொல்லிவிட்டாள். உள்ளுக்குள் அத்தனை பதட்டம், நடுக்கம் ஓடினாலும் காதல் என்ன தவறா என்ற எண்ணம். என் விருப்பத்தை கூட சொல்லவில்லை என்றால் என்ன வாழ்வு என்ற கோபம் ஒரு தைரியம் தர பட்டென்று காதலை கொட்டிவிட்டாள்.
அவ்வளவுதான்! யாரும் சரோஜினி சக்தியைக் காதலிக்க கூடுமென்று நினைக்கவில்லை. வாஞ்சி நாதன் அதிர்ச்சியில்
“என்ன சொன்ன? எந்த சக்தி?” என்று கத்த
“நம்ம லட்சுமணன் தாத்தா பேரன், பாஸ்கர் மாமா பையன் சக்திவேல். அவரைத்தான் சொல்றேன்” என்று மகள் தெளிவுப்படுத்த, வாஞ்சி நாதனுக்குக் கோபம்.
“என்ன தைரியம் உனக்கு? எங்க கிட்டயே அவனை லவ் பண்றேன் சொல்லுவ?” என்று பளாரென்று சரோஜினியின் கன்னத்தில் அறைந்தார்.
வசுந்த்ரா உடனே “மாமா, என்ன பண்றீங்க? சக்தியைக் காதலிக்கிறது என்ன அவ்வளவு பெரிய தப்பா?” என்று கேட்க
“இங்க பாரும்மா நீ இதுல தலையீடாத.” என்று வசுந்த்ராவிடம் கத்தினார்.
“டேய் வாஞ்சி! அந்த புள்ளை கிட்ட என்ன பேசுற? சின்ன பொண்ணுன்னு செல்லம் கொடுத்து வளர்த்தா அவன் பேரனையே லவ் பண்றேனு சொல்லுவியா? எத்தன நாளா நடக்குது இது? எல்லாம் உன் சித்தப்பன் புத்தி இல்ல..” என்று திலகரும் திட்ட
“பொறுமையா அவ சொல்றதைக் கேளுங்களேன்” என்று அஞ்சம்மா பேத்திக்கு ஆதரவாகப் பேச
“நீ வாய மூடு! அவன் வீட்டுப்படியேறி நான் பேச போகணுமா? சின்னப்புள்ளைக்குப் புத்தி சொல்லாம என்ன பேசுற? நம்ம கௌரவம், சுதந்திர விலாசத்தோடு பெயர் என்னவாகுறது?” திலகர் மனைவியைத் திட்டினார்.
“யார் என்ன சொன்னாலும் சரி நான் சக்தியைத் தவிர யாரையும் கட்டிக்க மாட்டேன், மாட்டேன்!” என்று சரோஜினி அடமாக சொல்லவும் வாஞ்சி நாதன் யோசிக்கவில்லை. என்னமோ மகள் இப்படி செய்வாள் என்று எதிர்ப்பார்க்கவில்லை. வந்த கோபத்தில் சரோஜினியின் கன்னங்கள் இரண்டிலும் மாறி மாறி அடிக்க, வசுந்த்ரா கணவனுக்கு அழைத்தாள். சித்ரஞ்சன் கலெக்டரோடு ஒரு சந்திப்பில் இருந்தவன் எடுக்கவில்லை.
சரோஜினி அடிவாங்கியும்
“அடிச்சாலும் நான் உங்க பேச்சைக் கேட்கமாட்டேன்” என்று அழுகையோடு கத்தினாள். லாலாவுக்குத் தங்கையைப் பார்க்க பாவமாக இருக்க
“அப்பா! விடுங்கப்பா” என்று அவரை இழுத்தான்.
“வாயை வச்சிட்டு சும்மா இருடி” சித்ரா மகளை அடக்க, அங்கே ஒரே களேபரம்தான்.
பக்கத்து வீடு வரை சத்தம் கேட்டது. சசிகலா எட்டிப்பார்த்தபடி நின்றார். கல்லூரி முடிந்து மதியம் வீடு வந்த பாஸ்கர் மனைவியிடம்
“என்னடி அங்க வேடிக்கை?” என்று குரல் கொடுக்க
“காலையில இருந்து ஒரே சத்தமா இருக்கு.. என்ன பிரச்சனை தெரியலங்க” என்று காம்பவுண்ட் சுவர் பக்கம் நின்று கவனித்தார்.
“அடுத்த வீட்டு பிரச்சனையைக் கவனிக்காம நீ ஒழுங்கா உள்ள வா” என்று அதட்டி மனைவியை அழைத்துப்போனார் பாஸ்கர்.
இரவு சித்ரஞ்சன் வீடு வரவும் வசுந்த்ரா நடந்ததெல்லாம் சொல்ல, சரோஜினியைப் பார்க்க போனான். ஏற்கனவே காய்ச்சல் கண்டிருந்தவள் இன்னும் துவண்டிருந்தாள். உறக்கத்திலிருந்தவளை தொந்தரவு செய்யாமல் வெளியே வந்தவன்
“உனக்குக் கொஞ்சமாச்சும் அறிவிருக்கா அண்ணே” என்று வாஞ்சி நாதனிடம் சண்டைக்குப் போக, மீண்டும் சிறிது நேரம் அங்கே கூச்சல்.
சக்தி இரவு தாமதமாக வீடு வந்தவனுக்கு இந்த விஷயம் தெரியவில்லை. லாலாவும் வீட்டை கவனித்தவன் நண்பனுக்கு இதனை சொல்லவில்லை. அந்த இரவு அப்படியே கடந்து போக, காலையில் வெடித்தது கன்னிவெடி!
சரோஜினி வழக்கம்போல் எழுந்து தண்ணீர் பிடித்தாள். சக்தியும் அவன் வீட்டில் நின்று தண்ணீர் பிடித்தவன் கொலுசொலியில் திரும்பிப் பார்க்க, சரோஜினி குடத்தில் நீர் நிரப்பி உள்ளே கொண்டு செல்ல அடிவைக்க
“சரோஜினி” என்று அதிர்ச்சியில் அழைத்தான் சக்தி.
சரோஜினியின் கண்கள் சிவந்து, இரு கன்னத்திலும் அடிவாங்கிய தடமிருக்க அவன் அழைக்கவும் திரும்பினாள்.
“என்னடி ஆச்சு?” என்று கேட்டதுதான் போதும், சரோ அவனோடு சண்டை என்பதெல்லாம் மறந்து
“அப்பா அடிச்சிட்டார்” என்றாள் அழுகையோடு.
“என்ன அடிச்சாரா?” என்று லுங்கியை மடித்துக் கட்டினான் சக்தி.
“எதுக்கு அடிச்சார்?”
“உன்னை லவ் பண்றேன் சொன்னேன். அதுக்கு அடிச்சார்” என்றதும் சக்தி எதையும் யோசிக்கவில்லை. கையில் இருந்த குடத்தை கீழே வைத்தவன் விறுவிறுவென்று அவன் வீட்டு கேட்டைத் திறந்து சுதந்திர விலாசத்துக்குள் நுழைந்தான்.
“சக்தி” என்று சரோ புரியாமல் பார்க்க
“வா சரோ” என்று அவள் கையில் இருந்த குடத்தை இறக்கியவன் அவள் கைப்பற்றி
“தாத்தா! மாமா, மாமா” என்று கத்தினான்.
“டேய் லாலா” என்று அவன் கத்தலில் சுதந்திர விலாசம் வெளியே வர
“என்ன தைரியமிருந்தா என் பேத்தி கையைப் பிடிப்ப?” என்று திலகர் சக்தியைத் திட்ட
“உங்க பேத்தியை நான் விரும்புறேன். அவளைத்தான் கட்டிப்பேன், ஏன் சுதந்திர நாட்லயும் சுதந்திர விலாசத்திலயும் ஒரு பொண்ணும் பையனும் விரும்ப கூட சுதந்திரம் கிடையாதா?” என்று கேட்டான்.
“டேய்” என்று வாஞ்சி நாதன் சக்தியை அடிக்க வர
“மாமா! என்ன பார்த்திட்டு இருக்கீங்க? டோமஸ்டிக் வயலெண்ஸ்க்கு என்ன தண்டனைனு உங்கண்ணனுக்கு சொல்லலயா? இப்படி அடிச்சு வச்சிருக்கார், ஒரு வார்த்தை கேட்கல நீங்க எல்லாம்? அப்படியென்ன உங்களை விட இவ பெரிய தப்பு செஞ்சிட்டா” என்று அண்ணன் பக்கத்தில் நின்ற சித்ரஞ்சனை கேட்டான் சக்தி.
“அய்யயோ சித்தப்பா சிக்கிட்டார்” என்று லாலா அலற
“டேய்! பழச பேசாத. உனக்கு என் பேத்தியைக் கட்டி வைக்க முடியாது போடா” என்று திலகர் தீர்மானமாக சொல்ல
“பழச பேசக்கூடாதா? எங்க அப்பா உப்பு எடுத்தார், காந்தி கூட காபி குடிச்சார்னு நீங்க சொல்றதெல்லாம் என்ன புதுசா? இவ என்ன காதலிச்சானு உங்க பெரிய மவன் இப்படி அடிச்சிருக்கார் சரி, காதலிக்கவே இல்லாத பொண்ணை கட்டாயப்படுத்தி தாலி கட்டியிருக்காரே உங்க சின்ன மவன் அவருக்கு என்ன தண்டனை?” என்று சக்தி கோபமாகக் கேட்டான்.
எல்லாரும் புரியாமல் பார்க்க “என்னடா சொல்ற?” என்று திலகர் சக்தியிடம் கேட்க
“என்ன கேட்காதீங்க? உங்க புள்ளையைக் கேளுங்க” என்று எரிச்சலாக சொன்னவன்
“இனிமே யாராச்சும் சரோ மேல கை வைங்க, அப்புறம் இருக்கு உங்களுக்கெல்லாம்” என்று சரோஜினியின் கையை விட்டவன்
“அடிச்சா என்கிட்ட சொல்லாம அழுவியா?” என்று திட்டி
“டேய் லாலா! இவளை பார்த்துக்க” என்று விட்டுப்போனான்.
“இவளுக்கு என்ன தைரியம்?” என்று வாஞ்சி நாதன் மகளை மீண்டும் அடிக்க பாய, திலகர் மகனை தடுத்தார்.
“இருடா, அந்த சக்தி பய ஏதோ சொன்னானே?” என்று திலகர் மறக்காமல் சித்ரஞ்சனையும் வசுந்த்ராவையும் பார்த்துக் கேட்டார்.
“சொல்லும்மா, உன் விருப்பமில்லாம இவன் தாலி கட்டினானா? காரணமில்லாம அவன் கத்திட்டு போகல” என்று சொல்ல வசுந்த்ரா திணறி நின்றாள்.
“உண்மைதான்பா! வசுந்த்ரா என்னை காதலிக்கல. நானேதான் அவளை கட்டாயப்படுத்தி தாலி…” என்று சித்ரஞ்சன் சொன்ன கணம் இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி அறை விழுந்தது.
“மாமா” என்று வசுந்த்ரா தடுக்க செல்ல, திலகரோ அவர் வேட்டியில் இருந்த பச்சை நிற வாரை(பெல்ட்) உருவி மகனை விளாசினார்.